Wednesday 26 November 2014

ருஷ்ய சிறுகதைகள் தொகுப்பு

ருஷ்ய அமர இலக்கிய வரிசை " சோவியத் சிறுகதைகள்" தொகுப்பு வாசித்தேன். பெரிய பெரிய நாவல்கள் கொடுக்கும் தாக்கத்தை கவிதை போலும் சில சிறுகதைகள் கொடுத்துவிடுகின்றன... ஒவ்வொரு கதையும் வாசித்து முடித்த பின் அதன் தாக்கத்திலிருந்து வெளி வர அதிக நேரம் பிடித்தது. அந்த தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அதில் இரண்டு கதைகள் சுமார் ரகம் என்னளவில்.. மற்ற ஆறு கதைகளும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது..

பரீஸ் கர்பாதவ் எழுதிய " வெள்ளரி நிலத்தின் பிள்ளை பேறு" சிறுகதை. அவ்வளவாக மருத்துவ வசதி இல்லாத ஒரு தீவில் ஒரு பெண்ணுக்கு பிள்ளை பேறு சிக்கலாக ரேடியோ மூலம் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் சொல்ல ஒரு அனுபவமில்லா மருத்துவர் ரேடியோ மூலம் வரும் உத்தரவை கொண்டு பிரசவம் பார்க்கிறார். கதை நடந்த காலக்கட்டத்துக்கு நம்மால் செல்ல முடிவது தான் எழுத்தின் வெற்றி.

வ்லேந்தீன் கத்தாயேவ் எழுதிய "எங்கள் பிதாவே" சிறுகதை. பாசிஸ்டுகள் கொடுமையால் ஒரு யூத தாயும் மகனும் நகரம் முழுதும் தங்களை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று சுற்றுவதும். கடைசியில் போகுமிடம் தெரியாமல் ஒரு பூங்காவில் தங்கி குளிரால் விறைத்து காலை பிணமாக இருவரும் அள்ளி வண்டியில் போடப்படுவதுடன் கதை முடிந்து இருக்கும். காலை அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒலிக்கும் பரலோகத்தில் இருக்கும் பிதாவே அவர்கள் பிணமாக வண்டியில் தூக்கி போடும் போதும் ஒலிக்கும்..மனதை பிசைய செய்தது. இந்த கதை கொடுக்கும்  தாக்கத்தில் இருந்து வெளிவருவது ரொம்ப கடினம்..

அலெக்சேய் தல்ஸ்தோய் எழுதிய ருஷ்ய இயல்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. போரில் தன் முகத்தை சிதைத்து கொண்ட ஒருவன் அவன் வீட்டுக்கு வருகிறான். ஆனால் தன் தாயிடம் பிள்ளை என்று அறிமுகபப்டுத்தி கொள்ளாமல் அவன் நண்பன் என்று சொல்லி கொண்டு ஒரு நாள் தங்குகிறான். அவன் காதலியிடமும் அவ்வாறே. ஆனால் அவனால் பொய்யாக இருக்க முடியவில்லை.. ராணுவத்துக்கே திரும்பி விடுகிறான். அவன் தாய் எழுதும் ஒரு கடிதம் அவனை உலுக்க அதன் பின் தாயும் காதலியும் அவனுடன் வந்து இணையும் கதை "ருஷ்ய இயல்பு" மட்டுமல்ல. உணர்வுபூர்வமான அம்மா, காதலியின் உணர்வுகள் எல்லா நாடுகளிலும் ஒன்று தான் என்று சொல்லாமல் சொல்லியது..

கன்ஸ்தாநதீன் பவுஸ்தோவ்ஸ்கய் எழுதிய இசைஞரின் பரிசு ஒரு இசை கலைஞரின் காதலை கவிதையாக சொல்கிறது.

யூரிய நகீபன் எழுதிய "கமரோவ்" ஒரு நான்கு வயது சிறுவனின் உலகத்துக்குள் உலவி ரசிக்கும் ஆசிரியர் நம்மையும் அந்த சிறுவனின் உலகத்துக்கு அழைத்து சென்று விடுகிறார். கதை வாசித்து முடித்த பின்னும் "கமரோவ்" உங்களுடன் என்றும் பயணிப்பான்.

செர்கெய் அந்தோனவ் எழுதிய காலையும் ஒரு காதல் கதை.

அந்திரேய் பிளதோனளின் எழுதிய என்ஜின் ட்ரைவர் பற்றிய கதை உளவியல் சார்ந்த கதை. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் வாசித்தேன்.

பரீஸ் பொலிவோய் எழுதிய காதல் கதை. உள்ளுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் எப்போதும் முட்டி கொண்டே இருக்கும் இருவரில் அந்த ஆண் அடிப்பட்டு கிடக்கும் போது அந்த பெண் கதறி அழும்போது அவர்களின் காதல் அவர்களுக்கே தெரிவது என்று வழக்கமான கதையை அழகிய நடையில் சொல்லி இருக்கிறார்.

No comments:

Post a Comment