Wednesday 13 November 2013

சொல்ல தான் நினைத்தேன்

சொல்ல தான் நினைத்தேன்...
எனக்கு பிடித்ததை எல்லாம்
உன் அம்மாவுக்கு இது பிடிக்கும்
உன் தந்தைக்கு இது பிடிக்கும்
தங்கைக்கு இது பிடிக்கும் 
எனக்கு இதெல்லாம் பிடிக்கும்
என வாசித்த பட்டியலின் நீளம்
பார்த்தவுடன்
எனக்கு பிடித்ததை சொல்லாமலே
இருந்துவிட்டேன்..
இவ்வளவு பேருக்கு பிடித்தது
தெரியும் உனக்கு
என்னுடைய விருப்பம் தெரியாமலா
போய்விடும் என்று.........

ஆனால் சில நாள் கழித்த பின்
தான் தெரிந்தது நான்
உன்னையும் உன்னை சார்ந்தோரையும்
திருப்திபடுத்த உன் வீடு வந்தேன் என்று
சரி என்றாவது புரிந்து கொள்வாய்
என்று ஏக்கத்திலேயே நாட்கள்
நகர்ந்து செல்ல
இப்போது உன் வீட்டாரின் விருபத்தோடு
நம் குழந்தைகளின் விருப்பமும்
சேர்ந்து கொள்ள
என் விருப்பம் என்னவென்ரே
தெரியாமல் போய்விட்டது

விருப்பமே இல்லாமல் இல்லையே
அது மறந்து தானே போய் இருந்தது
மறைந்து போகவில்லையே..
என்றோ ஒரு நாள் விரக்தியின்
உச்ச கட்டத்தில் அது வெடித்து வெளியே வர
அன்று பதறுகிறாய் ....
என் சீற்றம் கண்டு...
ஆனால் என் சீற்றம் நீ
சீண்டாமல் போனதால் என்று
அப்போதும் உணரமாட்டாய்............
இல்லறம் குலைக்க வந்ததாய்
என்னை தான் ஏசுவாய்..............