Monday 12 September 2016

மூக்கு - முகம்மது பஷீர்

வைக்கம் முஹம்மது பஷீரின் “மூக்கு” சிறுகதை தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரின் மதில்கள் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மலையாள எழுத்தாளரான பஷீரின் இந்த பதினாறு கதைகளை குளச்சல் மு.யூசுப் மொழிப்பெயர்த்துள்ளார். இவரின் எழுத்து நடையில் தோணிக்கும் ஹாஸ்யமும், அங்கதமும் தனி இலக்கிய சுவை கொண்டது. முதல் கதையான ஜென்ம தினம் படித்த போது எழுத்தாளரின் வறுமையும் அதை அவர் தனது பிறந்த நாளில் எதிர்கொண்ட விதத்தையும் கனமாக பதிவு செய்தாலும் அந்த சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை கதை முழுவதும் விரவியிருக்கிறது.

ஐசுக்குட்டி என்ற கதை ஒரு பெண்ணின் எளிய ஆசையான டாக்டர் வந்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையும், அதற்காக பிரசவ வலியை பொறுத்து கொண்டு அவள் செய்யும் பிடிவாதமும், டாக்டர் வந்து பிரசவம் பார்த்தால் செலவாகும் என அவள் கணவன் இறைஞ்சுவதும் ஆனால் அதை ஏற்காத ஐசுக்குட்டியின் பிடிவாதத்துக்கு பின் இருக்கும், பெருமையாக பிறரிடம் பீற்றிக்கொள்ள என்று சில பெண்கள் செய்யும் செயலின் பின் உள்ள மனநிலையை பஷீர் ஆழமாக பதிந்திருக்கிறார்.

அம்மா கதை கொஞ்சம் சுதந்திரத்துக்கு முன் இருந்த அரசியல் பின்ணணியுடன் பயணிக்கிறது. அப்போதைய இளைஞர்களுக்கு காந்தியின் மீதும், காங்கிரஸ் மீதும் இருந்த அபிமானம், தண்டி யாத்திரைக்காக கல்லூரி இளைஞர்கள் பலர் அடிபட்டது, அந்த நேரம் சுதந்திர தாகத்தால் எழுத்தாளரும் வீட்டுக்கு தெரியாமல் வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது. சிறை அனுபவம் என விரிகிற கதையில் சிறை தண்டனை முடிந்து சில நாட்கள் கழித்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைகிற அவருக்கு அவர் அம்மா சாப்பிட்டியா மோனே என்று சொல்லி தட்டு வைத்து சோறு பரிமாறுகிறாள். சாப்பிட்டு முடித்த பின் நான் இன்று வருவேன் என்று எப்படி தெரியும் என அம்மாவை கேட்க , அவர் அம்மா சர்வ சாதாரணமாக சோறும், குழம்பும் வச்சுகிட்டு தினமும் காத்திருப்பேன் என்று கூறுகிறார். காலங்கள் பல உருண்டோடிய  பின்னும் அந்த தாயிடம் இருந்து வரும் ஒற்றை வார்த்தை உன்னை பார்க்க வேண்டும் என்பதாக கதை முடிகிறது.

மதங்களையும் அவற்றின் மூடநம்பிக்கைகளையும் எள்ளல் செய்திருக்கிறார் புனித ரோமம் சிறுகதையில் . பால்ஷரீஃப் என்ற புனித ரோமம் ஒன்றை காண்பதற்காக இலட்சகணக்கான மக்கள் முண்டியடிப்பதையும் உருவ வழிபாடை நிராகரிக்கும் இஸ்லாத்தில் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சில விஷயங்கள் நடப்பதை பஷீர் விவரித்திருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார்.

பூவன்பழம் கதை என்னை பொறுத்தவரை ஆணாதிக்க கதை. இலக்கியம் அதிகம் ஆண்களால் படைக்கப்பட்டதாலோ என்னவோ அவர்களை அறியாமல் சில கதைகளில் அவர்களின் ஆதிக்க உணர்வை சில எழுத்தாளர்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். பெண் தன்னையறியாமல் அடிமைத்தனமே சுகம் என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கு பின் அவளை அப்படி நம்ப வைப்பதில் ஆண்களின் பங்கு பெரிதாக உள்ளதே என்று கூறலாம்.

திருமணமான இளம் மனைவியான ஜமீலா தனது கணவர் இரவு வீட்டுக்கு வரும்போது பூவன்பழம் வாங்கி வர சொல்கிறாள். கணவர் ஏதேதோ வேலைகளில் முதலில் மறந்துவிடுகிறார். பின்னர் நினைவுக்கு வர கடை கடையாக தேடுகிறார், ஆனால் பூவன்பழம் மட்டும் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த ஆரஞ்சு பழத்தை வாங்கிகொண்டு இரவு வீட்டுக்கு வருகிறார்.

வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட ஆரஞ்சு பழத்தை மூட்டை கட்டி பத்திரமாக பாதுகாத்து மனைவி தனியாக இருப்பாளே என்று மனைவியை காண அந்த ஆற்று வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து இறங்குகிறார். ஒருவழியாக மிகுந்த சிரமப்பட்டு வீட்டை அடையும் அவர் மனைவியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார். உணவிற்கு பின் பூவன்பழம் கிடைக்கவில்லை ஆரஞ்சு தான் கிடைத்தது என்கிறார். மனைவிக்கு கோவம் தான் கேட்டதை வாங்கி வரவில்லையே என்று எனவே அதை நீங்களே சாப்பிடுங்கள் என கூறி படுக்க சென்று விடுகிறார்.

இவர் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து இதை கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிடு என்கிறார். ஆனால் ஜமீலா நான் கேட்டது பூவன்பழம் என்கிறாள். கணவர் கெஞ்சி சாப்பிட சொல்ல மறுக்கிறாள். பின் தின்றே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார். ஜமீலா திங்கலேன்னா அடிச்சே திங்க வைப்பீங்களோ என முறைக்க கணவர் எதுவும் சொல்லாமல் பிரம்பு எடுத்துவந்து அடித்து திங்க வைக்கிறார். பின் அப்படி அடித்தற்காக வருத்தப்படுகிறார். அதன் பின்கிட்டத்தட்ட அவரின் அடிமை போலவே வாழ்ந்து அதன் மூலம் கணவரின் அன்பு கிடைக்க நிறைய பிள்ளைகளை பெற்று இறுதியில் இருவரும் கிழவர் கிழவியாகி இதை நினைத்து சிரித்து பார்ப்பதாக கதை முடிகிறது. கதையில் இலக்கிய சுவையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக என்னால் இந்த கதையை சிலாகிக்க முடியவில்லை. அடித்து புரிய வைக்கும் அன்பை ஏற்கும் பெண்ணை ஜீரணிக்க முடியவில்லை.

நீல வெளிச்சம் கதை எனக்கு மிக பிடித்த த்ரில்லர் கதை. கதை ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை அடுத்து அடுத்து என்று பக்கங்களை விட்டு கண்களை நகர்த்த முடியாமல் கட்டி போட்டிருந்தார் எழுத்து நடையிலும், கதையை விவரித்த பாணியிலும்.

புத்தக தலைப்பான மூக்கு கதையில் மக்களின் முட்டாள்தனத்தை பகடி செய்திருக்கும் விதம் எந்த காலத்துக்கும் பொருந்தும். ஏனோ இந்த கதை வாசித்தபோது பலருக்கு வழங்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டங்களும், திடீரென சிலர் பிரபலமாகும்போது நடக்கும் கூத்துகள் எல்லாம் மனக்கண்ணில் வந்தன. 

பர்ர்ர்ர் !!!! சிறுகதை சாதாரண கதை தான்.. பதின்பருவத்தில் ஒருவனுக்கு ஒரு பெண் மீது இருக்கும் மிகப்பெரும் பிரமை எப்படி உடைகிறது என்பதை சொல்லியிருக்கிறார் பஷீர்.. ஹாஸ்ய நடையில் ....

வைக்கம் முகம்மது பஷீரின் இலக்கிய நயமும், ஹாஸ்யமும் வாசித்து முடித்த பின்னும் கண்டிப்பாக மனதை விட்டு அகலாது. கடவுள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் அதே சமயத்தில் மனிதனின் கையறு நிலையும், தெயவத்திடம் சரணாகதி அடைவதையும் எந்த கொள்கைக்குள்ளும் இல்லாமல் அப்படியே சொல்லி இருக்கிறார். பெரும்பாலான கதைகள் ஆசிரியரின் வாழ்க்கை அனுபவங்கள் என்றாலும், அவர் பார்த்த அவரை பாதித்த விஷயங்களையும் பதிந்திருக்கிறார். முக்ம்மது பஷீர் என்கிற இலக்கியவாதியின் நல்ல அறிமுகமாக இந்த சிறுகதை தொகுப்பை சொல்லலாம் . இந்த தொகுப்புகள் மூலம் ஆசிரியர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், இவரின் எழுத்து நடையும் அனைத்தையும் பகடிக்குள் கைகொணர்ந்திருக்கும் வித்தையும், பஷீரை தேடி தேடி வாசிக்க தூண்டும்.....



Monday 5 September 2016

யூஜினி - பால்ஸாக்

"யூஜினி" பால்ஸாக் எழுதிய ப்ரெஞ்ச் நாவல். சி.சு. செல்லப்பா மொழி பெயர்த்தது. பிரான்ஸ் நாட்டின் கிராமத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மனிதர்களை கதை பேசுகிறது. கடினமாக இருந்தது அந்த காலகட்டத்து பிரான்ஸ் வாழ்க்கைமுறைக்குள் பிரவேசிக்க. முதலில் படிக்க ஆரம்பித்து கதைக்குள் புகமுடியாமல் திக்கி திணறிக்கொண்டிருந்தேன். ஆசிரியரின் நுணுக்கமான பல விவரணைகள் கொஞ்சம் அயர்ச்சியடைய வைத்தது. க்ராந்தே, க்ரான்சே, மதாம் க்ரான்சே, குருஷோ போன்ற கேரக்டர்களை யார் யார் என விளங்கிகொள்வதில் இருந்த சிரமம் காரணமாக..

க்ராந்தே சோமூரின் விவசாயி. மற்றும் மரபீர் பிப்பாய் வியாபாரத்துடன், திராட்சை பயிரிட்டு ஒயின் விற்பனை என நல்ல வருமானம் பார்த்தாலும் படுகஞ்சன். வீட்டில் ஏற்றும் மெழுகுவர்த்தியில் இருந்து சமைப்பதற்கு கொடுக்கும் பொருட்கள் வரை அளந்து கொடுப்பவன்.

மனைவி மற்றும் மகள் யூஜினி. இருவருக்கும் வீடு தாண்டிய உலகம் தெரியாது. தையல் வேலைப்பாடுகள் செய்வது, வழிபடுவது மற்றுமே பொழுதுபோக்கு. க்ராந்தே சொல்லுக்கு இருவருமே கீழ்படிந்து செல்பவர்கள்.யூஜினியின் சொத்துக்காக அவளை மணமுடிக்க பலரும் போட்டி போடுகிறார்கள். ஆனால் க்ராந்தே யாருக்கும் பிடிகொடுக்காமல் தவிர்த்து வருகிறார். யூஜினியின் பிறந்தநாள் வருகிறது. யூஜினியை மயக்க பரிசு பொருட்களுடன் அந்த ஊரில் உள்ள சிலர் தங்கள் பையனை அழைத்துகொண்டு விருந்துக்கு வருகிறார்கள்.

க்ராந்தேவின் நம்பிக்கையான வேலைக்காரி நானோ விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது பாரீஸ் நகரத்தில் இருந்து வருகிறான் சார்லஸஸ் என்ற க்ராந்தேவின் அண்ணன் மகன் அவனை பார்த்தவுடன் யூஜினி காதல்வயப்படுகிறாள் (ப்ரான்ஸில் ஒன்று விட்ட சகோதரனை மணக்கும் வழக்கமுண்டு) சார்லஸ் செல்லமாக பகட்டாக வளர்க்கப்பட்ட குழந்தை. அவன் தந்தை திவாலாகிவிட தம்பிக்கு ஒரு கடிதம் எழுதி தன் மகனுக்கு வழிகாட்ட சொல்கிறார்.அவனுக்கு திவாலானது தெரியாது நான் உயிருடன் இருக்கமாட்டேன் நீ தான் பொறுப்பு என க்ராந்தே எரிச்சலுறுகிறார். காலையில் பேசலாம் என வீட்டு பெண்களிடம் அவன் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்ய சொல்கிறார். காதலின் பரவசத்தில் யூஜினி தாயுடனும் வேலைக்காரியுடன் சேர்ந்த இயன்ற அளவு அழகாக்குகிறாள்.

முதல்முறை காதலில் விழும் பெண்ணின் பரவசத்தை நுணுக்கமாக விவரித்திருக்கும் விதமும் அதில் இருக்கும் இலக்கிய தெறிப்பும் அதன் பின் புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் செய்கிறது. கஞ்சனான க்ராந்தேவுக்கு இந்த ஏற்பாடுகள் எரிச்சலை தருகிறது. அவனை அப்புறப்படுத்த என்ன வழி என யோசிக்கிறார்.

மறுநாளே சார்லஸ் தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வருகிறது. குடும்பத்தாரிடம் அவனிடம் நான் வந்து சொல்லும்வரை சொல்ல வேண்டாம் என சொல்லி வெளியே செல்கிறார். அவனுக்கு பார்த்து பார்த்து செய்கிறாள் யூஜினி. அம்மாவும் வேலைக்காரியும் அவள் உணர்வை புரிந்து உதவுகிறார்கள். மகளின் காதல் வெறும்பயலுடன் என்பதை லோபி க்ராந்தேவால் ஏற்கமுடியவில்லை. சீக்கிரம் அப்பறப்படுத்த வேண்டும் என அதற்கான ஏற்பாடுகளை செய்துவர வீட்டுக்கு வந்து சார்லஸிடம் தந்தை இறந்ததையும் திவாலானதையும் சொல்கிறார்.

அழுது துடித்து துவள்கிறான். யூஜினி ஆறுதலில் ஆசுவாசமடைய முயற்சிக்கிறான் மெல்ல மெல்ல உண்மை சுட தான் செல்ல சீமான் இல்லை பொருளீட்ட வேண்டியதன் அவசியமும் பணம் இல்லாமல் பாரீஸ் செல்ல முடியாதென்பதை உணர்கிறான். அவன் ஏற்கனவே காதலிக்கும் பெண்ணிடம் உறவை தொடர முடியாது. பொருளீட்ட வெளிநாடு ப்ராயணம் செய்ய போவதாகவும் அதற்கான பணம் கூட இல்லாமல் இருக்கும் நிலையை சொல்லி கடிதம் எழுதுகிறான். அந்த கடிதத்தை பார்த்துவிடும் யூஜினி அவள் தந்தைக்கு தெரியாமல் தனது சேமிப்பை தருகிறாள். அதற்கு ஈடாக அவன் ஒரு தங்க பெட்டியை கொடுத்து பத்திரமாக வைத்துகொள் நான் சம்பாரித்து உன் பணத்தை கொடுத்து அதை பெற்று கொள்வேன் என்கிறான்.

யூஜினியின் அன்பும் காதலும் அவனுக்கு நம்பிக்கை எதிர்காலத்துக்கான பிடிப்பை தர அவளை காதலிக்கிறான் சாகாவரம் பெற்ற வார்த்தைகளால் யூஜினியின் மனம் முழுதும் நிறைகிறான். அவளுக்கு இரண்டு முத்தங்கள் வழங்குகிறான். அவர்கள் அதிலேயே ஒன்றாகியது போல யூஜினி மலர்கிறாள். சார்லஸ் காத்திருக்க சொல்லி விடைபெறுகிறான் யூஜினியின் ஆன்மாவை எடுத்துகொண்டு.

சார்லஸ் சென்ற சில மாதம் கழித்து மகள் தனது சேமிப்பை தாரைவார்த்தது தெரியவர மகளை தண்டிக்கிறார். அப்போது அவரின் சொத்து மதிப்பில் அது அற்ப தொகை எனும்போதும். ஆனால் காதலுக்காக தண்டனையை பொறுக்கிறாள். இதனால் யூஜினியின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். நாட்கள் செல்கின்றன தனிமையில் இருக்கும் யூஜினிக்கு அவன் வழங்கிய இரண்டு முத்தங்களும் அவனுடன் பேசியவை மட்டுமே துணையாக இருக்கிறது.

வருடங்கள் உருண்டோடுகிறது. சார்லஸ் பொருளீட்ட தொடங்க தன் ஆன்மாவின் அத்தனை நல்லதையும் இழக்கிறான் பணமே பிரதானமாக எல்லா நியாய தர்மமும் பின்னுக்கு போகிறது. பல பேர் பல தேசம் என சுற்றும் அவன் மனதில் யூஜினி என்ற பெண் புள்ளியாய் மறைகிறாள்.

க்ராந்தேவும் இறக்க கோடிக்கணக்கான சொத்துடன் தனியாகவே வாழ்கிறாள் வேறு யாரையும் ஏற்க மனமில்லாமல். சார்லஸ் அதிக பணத்துடன் திரும்பும்போது அந்தஸ்துக்கு தகுந்த நாகரீகப்பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். யூஜினிக்கு கடிதம் எழுதுகிறான் நாகரீக வாழ்க்கைக்கு யூஜினி சரிபட்டு வரமாட்டாள் என்றும் அந்த நேரத்தில் வயதில் உணர்ச்சியில் பேசியதை மறந்துவிட சொல்லி வேறொருவன் என்றால் இதை தெரிவிக்க கூட மாட்டான் என்றும் தான் கண்ணியமானவன் என்பதால் தெரிவிப்பதாகவும் அத்துடன் அவளிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருவதாக காசோலை இணைத்து அவன் பாதுகாக்க சொன்ன பெட்டியை தபாலில் அனுப்பிவிட சொல்கிறான். கண்ணீருடன் உள்ளுக்குள் உடைகிறாள் யூஜினி.

கடன்காரர்கள் தந்தை கடனை அடைக்க சொல்லி சார்லஸை நெருக்க திருமணம் நிற்கும் சூழல் வருகிறது. யூஜினி நம்பிக்கையான ஒருவரிடம் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் என் காதல் உணர்வு இறந்துவிட்டது ஆனால் ஒரு நல்ல நட்பாக இருப்பேன் என் சுதந்திரத்தில் தலையிடாமல் என் போக்கில் அனுமதிக்க வேண்டும் விருப்பமென்றால் திருமணம் என்கிறாள். சம்மதிக்கிறார். திருமணத்துக்கு முன் அவரை பாரீஸ் அனுப்பி சார்லஸ் கடனை அடைத்து ஒரு கடிதமும் அந்த பெட்டியும் அவரிடம் கொடுத்து சார்லஸிடம் ஒப்படைக்கிறாள். பின் இவள் திருமணம் செய்து கன்னியாகவே விதவையாகிறாள்.

தாய் இறக்கும்போது யூஜினியிடம் இறப்பில் தான் உண்மையான சந்தோஷமும் ஆன்மாவுக்கு விடுதலையும் என்று கூறி இறந்ததை உணர தொடங்குகிறாள். நல்ல காரியங்கள் செய்து தனிமைமில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்பதாக யூஜினியின் கதை முடிகிறது. 

ஆசிரியர் தத்துவங்களுக்குள் செல்லாமல் மனிதர்களின் பல்வேறு அகத்தை அப்பட்டமாக கண் முன் விரிக்கிறார். ஒரு கஞ்சனின் வாழ்க்கை, அவன் சிந்தனை,எண்ண ஒட்டம் , அவனின் நடவடிக்கைகள், இறக்கும் வரை அவன் வாழ்வு அனைத்தையும் க்ராந்தேவின் பாத்திரத்தில் ஆசிரியர் சொல்லியிருக்கும் விதத்தில் வாசித்து முடிக்கும்போது பிரமிப்பூட்டுகிறார். 

பிரெஞ்சு கிராம சூழலுக்குள்ளும் பெயர்களுக்குள்ளும் போராடி தான் உட்புக முடிகிறது. ஆனால் Wonderful feel. எல்லா இடங்களிலும் விரவி இருக்கும் சுயநலவாதிகளின் இயல்பும் பணத்தை கட்டி காக்கும் லோபி அதன் மீது கொண்ட பற்று பேராசையால் இறக்கும்வரை கணக்கு பண்ணியே அனுபவிக்காமல் பணத்தை எண்ணுவதை பெருகுவதை மட்டுமே சந்தோஷம் என நினைத்து கடைசி நிமிடம் வரை அவன் மன ஓட்டம் என கடினமான மனதின் நிலையை க்ராந்தே மூலமும். யூஜினியின் மூலம் காலம்காலமாக காதல் பெண்ணின் உணர்வுகளில் புரியும் மாயவித்தையை சொல்லியிருக்கும் விதம் க்ளாஸ். காதலுக்காக காதலிப்பவனின் வார்த்தைகளில் கரைந்து, அவனுக்காக 

எதையும் செய்ய துணியும் அதற்காக எதையும் இழக்க தயாராகும் மனம் பற்றி அவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். காதல் என்ற ஒன்று புகுந்தவுடன் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்று அந்த படபடப்பில் தூக்கம் இழக்கும் அவள் பின் துக்கத்தில் ஆற்றாமையில் கண்ணீரில். ஆனால் காதலிக்கும் முன் இருக்கும் அவளின் எந்த சிந்தனையுமில்லா தூக்கம் அதன் பின் இறப்பில் தான் பெண்ணுக்கு என்பதை அழகாக பதிவு செய்கிறார்.

உணர்வுகளை எந்த தத்துவ மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தாமல் அப்பட்டமாக எழுதியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் பால்ஸாக்.