Monday 23 March 2015

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - புத்தகம் ஒரு பார்வை




“பதினெட்டாம் நூற்றாண்டின் மழை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. உயிர்மை வெளியீடு. இருபத்தி ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் சிறுகதை, மாலிக்கபூர், புத்தன் இறங்காத குளம் என்ற மூன்று சிறுகதைகள் தவிர மற்ற கதைகள் அனைத்துமே அன்றாட சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகளில் நாம் அன்றாடம் கடக்கும் சில விசித்திர விஷ்யங்கள், நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் விசித்திரங்கள் குணங்கள் என்று தான் நீள்கிறது.

“ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவிற்கும் சம்பந்தமில்லை என்னும் சிறுகதை இயந்திர வாழ்க்கைக்குள் சுயம் தொலைத்த பெண் ஒரு நாள் எல்லாம் உதறி காலை முதல் மாலை வரை தன விருப்பபடி வாழும் வாழ்வு பற்றிய கதை. அனேகமாக எல்லாருக்குள்ளும் ஒரு சிந்தாமணி ஒளிந்து இருக்கிறாள், இல்லை வெளியே வரமுடியாமல் புதைந்து போயிருக்கிறாள் என்பதை இக்கதை வாசித்து முடித்த போது உணர முடிந்தது.

நம்மில் ஒருவன் வாசித்து முடித்த போது புத்தகத்தை தூக்கி கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டேன். அதற்கு அடுத்த கதைக்குள் போக முடியவில்லை.. அந்தளவு மனதை பாதித்தது தன்னையே விற்றுகொள்ள முன்வரும் ஒருவனும், அவனை வாங்க வரும் மனிதர்களும், விற்று கொள்ள முன்வருபவனின் தனிமையில் உள்ள குமுறலும், அவன் சாப்பிட்ட கம்பளி பூச்சிகள் எல்லாம் சமூகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருப்பது போன்று ஒரு அசூயை வந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை கதை கிளாஸ் வகை. கிருஸ்துவ மதத்தை பரப்ப வரும் ஒருவன் காட்டில் வாழும் பூர்வ குடியினரிடம் எப்படியாவது கிருஸ்துவ மதத்தை பரப்புவேன் என்று சபதமெடுத்து வந்து அங்கு வாழும் முதுவ இனத்தவரிடம் எதுவும் பரப்ப முடியாமல் காட்டின் வளத்தில் பிரமித்து தன்னையே கரைத்து கொள்ளும் ஆங்கிலேயே மத போதகர்  வலேசா என்பவனின் கதை.


கூந்தலில் எரிந்த நெருப்பு என்னும் சிறுகதையை வேறு ஒரு கதை தொகுப்பில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்..

விசித்ரி கதை தான் அதிக துக்கத்துகுள்ளாக்குகிறது. பனிரெண்டு வயதில் நிர்வாணமாக கத்தி கொண்டு ஊருக்குள் ஓடிவரும் ஒரு பெண் அதன் மனசிதைவு அடைய துணி பொட்டலமாக தன்னை ,முழுதும் துணிகளாலேயே (இருவது முப்பது  ஆடைகள் வரை )  மூடிக்கொண்டு துணி பொட்டலமாக எந்த நேரத்திலும் அவிழ்க்காமல் இறுக துணியை பற்றி கொள்ளும் பெண்ணின் கதை. அந்த சம்பவத்தின் காரணம் தேடி சந்தேகமாக நிறைய பேரை யூகித்து கடைசியில் யாரால் அந்த கதி என்று அறியவே முடியாமல் போகும் பெண்ணை பற்றிய கதை. “காமம் தனிநபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை, அது ஒரு புதைசுழல், என்று ஆசிரியர் முடித்திருக்கிறார். இந்த விசித்ரி போல எத்தனை விசித்ரிகளோ என்று எண்ணாமல் புத்தகத்தை மூட முடியவில்லை..

நான் ஒரு சில கதைகள் பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன். இருபத்தி ஏழு கதைகளும் வெவ்வேறு வகை கதைகள் வாசித்து முடிக்கும் போது நம்மை சுற்றி உள்ள மனிதர்களை அவர்களின் செயல்களை இன்னும் கொஞ்சம்  உன்னிப்பாக பார்ப்போம் என்றே தோன்றுகிறது..

Saturday 21 March 2015

நான் ஆண்

காரணங்கள் இன்றி
வெறுமனே பார்வை இன்பத்துக்கு
அறைக்குள் அடிக்கடி வரவழைப்பேன்
பெருகும் உதிர போக்கால்
காலும் இடுப்பும் உளைந்து அதிகம் எழ முடியாமல்
அழுத்தும் உன் சோர்வை பற்றி எனக்கென்ன அக்கறை

நான் ஆண்

உள்ளே நுழைந்த உன்னை உட்கார சொல்லாமல்
வாய் கடித சாராம்சத்தை சொல்ல
பார்வையாலே மேலும் கீழும் மேய்வேன்
அறை அல்மாரியினுள் இருக்கும் கோப்பு ஒன்றை
மேலே எம்பியோ கீழே குனிந்தோ தேட சொல்லி
உன் வளைவு நெளிவை வெறிப்பேன்
நான் ஆண்

தேடி எடுத்து வரும் கோப்பை
கையில் தருகையில் கைவிரல் தீண்டுவேன்.
கணினியில் தகவல் தேட சொல்லி
அருகமர்ந்து கோப்பை திருப்புவது போல
இடுப்பை முழங்கையால் உராய்வேன்
கணினிக்குள் தகவல் தேடுவது போல
மெல்ல கழுத்தோடு உராய்ந்து வாசம் பிடித்து
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து
நேர் பார்வையாகவே என் விரசத்தை வெளியிடுவேன்
நான் ஆண்

பணி நேரம் முடிந்த பின்னும் பணி இருப்பதாக சொல்வேன்
நேரமாகிவிட்டால் காரில் இறக்கிவிடுகிறேன் என்பேன்
காரில் போகும்போது மேலதிகாரி எல்லாம் அலுவலகத்தில்
பக்கத்தில் அமர் என கதவை திறந்துவிடுவேன்
சீட் பெல்ட்டை மாட்டிவிடுகிறேன் என்று
மார்பை லேசாய் உராய்ந்திடுவேன்
கியர் மாற்றும் சாக்கில் தொடையில்
பட்டும் படாமல் உரசிடுவேன்
நான் ஆண்

லேசாக முறைத்தாலோ
எரிச்சலை பார்வையில் வெளிப்படுத்தினாலோ
சரியாக வேலை செய்யவில்லை
வேலைக்கு வந்தால்
எல்லாமும் தான் எதிர்கொள்ள வேண்டும்
எதுக்கு வேலைக்கு வருகிறீர்கள்
வீட்டில் சமைத்து பிள்ளைகள் பார்க்க வேண்டியது தானே
என்பேன்.
நான் ஆண்...

ஒற்றை சொல்

தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க
மெல்ல பின்னிருந்து கழுத்தை கட்டி
கன்னம் தடவி, மூக்கை நிமண்டி,
உதடு கிள்ளி
உன் கவனம் கலைத்து
மெல்ல என் கை பிடிக்கும் தருணத்தில்
காதை கடித்து
சட்டென ஓடிடும் விளையாடடுததனம் உண்டு,


தோள் சாய்ந்து
மடியில் கிடந்து
கைவிரல் கொண்டு
நெஞ்சு முடி அலைந்து
உன்னழகை பருகி
உன் கண் பார்த்து
மெல்ல கரைந்து போகும்
காதலும் உண்டு


உணர்வின் உச்சத்தில்
நகைச்சுவை சொல்லி
நீ இயங்க மறந்து துள்ளி சிரித்து
"உனக்கு விவஸ்த்தையிருக்கா
எப்போ என்ன பேசணும்னு" என
தலையில் தட்டி சிரிக்க
உன் செல்ல கோபம் ரசிக்கும்
குறும்புத்தனம் உண்டு


புற உலகின் பிரச்சனைகளால்
தாங்கவியலா துயரில்
உடைந்திருக்கும் பொழுதுகளில்
என்னுள் உன்னை புதைத்து
நானிருக்கிறேன் என
தைரியம் சொல்லி
தேற்றும்
தாய்மையும் உண்டு..


இருவரும் இணைந்து நடந்திடும் பொழுதுகளில்
முன்னால் செல்லும் பெண்ணின்
நீண்ட சடையின் பின்னல் அழகை ரசிக்க
விரைந்து அந்த பெண்ணிடம் சென்று
உன் பார்வையை விளக்கி
நீ திருதிருவென விழித்து அசடு வழிய
உன் வெட்கம் ரசிக்கும்
தோழமையும் உண்டு.


எல்லாம் இருந்தும்
கோவத்தில் சொல்லும்
நெஞ்சை அறுக்கும் ஒற்றை சொல்லில்
நத்தையாய் சுருங்கும் மனம்
உணர்வுகளை
தன்னுள் புதைத்து கொண்டு
ஆமையின் ஓடு போல
கடினமாகிவிடுகிறது.

Wednesday 4 March 2015

பா. சிங்காரம் - கடலுக்கு அப்பால்

பா. சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி இரண்டு நூல்களும் எனது பார்வையில். முதலில் “ கடலுக்கு அப்பால்” நாவல் பற்றி சொல்லி விடுகிறேன்.

இந்த இரு நாவல்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவை பதிவு செய்யும் வரலாற்று புனைவு என்று கூட சொல்லலாம். இரண்டு நாவல்களும் தனித்தனியாக படிப்பதை விட ஒன்றாக படிக்கும்போது இன்னும் கொஞ்சம் எளிதில் புரிபடலாம். எழுத்து நடை ஆயாசமாக தான் இருந்தது ஆரம்பத்தில் வாசிக்க. அந்த கால கட்டத்துக்குள் நுழைய இருக்கும் சிரமம் தான். இரண்டாம் உலக போர் பற்றிய புத்தகங்கள் வாசித்தவர்க்ளால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர் தொடர்புடைய நிகழ்வுகளுக்குள் எளிதில் புகுந்து விட முடியும். நான் மிகுந்த சிரமத்த்துடன் தான் வாசித்தேன். அப்படி சிரமத்துடனாவது வாசிக்க தூண்டியது வித்தியாசமான எழுத்து நடை, கதைக்களம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், அந்த மாந்தர்கள் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே.

நேதாஜி படையில் பணியாற்றிய இளைஞர்கள், இரண்டாம் உலக போரில் ஜப்பானின் வீழ்ச்சி அதனால் ஏற்பட்ட பின்னடைவால் நேதாஜி ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இளைஞர்களின் நிலை தான் கதையின் பின் புலம் இரண்டு கதைகளிலுமே.

கடலுக்கு அப்பாலில் இரண்டாம் உலக போர் நெருக்கடிகளிலும் செல்லையாவின் மனதில் மலரும் காதலை பற்றி அழகாக சொல்கிறது அந்த கால சூழ்நிலையில் அவனுக்கு ஏற்பட்ட காதலும் அது நிறைவேறாமல் போவதன் காரணமும் அக்கால மனித வாழ்வை மனிதர்களின் மனநிலையை விரிவாக கூறுகிறது.. பெண்ணின் தகப்பனாரான முதலாளியான வானாயீனா செல்லையாவை தன் மருமகனாக ஆக்கி கொள்ளலாம் என்ற நினைப்புடன் அவனை தன்னுடன் பினாங்குக்கு கூட்டி வருகிறார். ஆனால் புரட்சி செல்லையாவை ஈர்க்க முதலாளியின் சொல்லை மீறி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருகிறான். நேதாஜியின் திடீர் மரணம், ஜப்பானின் பின்னடைவு காரணமாக ராணுவத்திலிருந்து வெளியேறி மீண்டும் முதலாளியிடம் சேருகிறான் மரகதத்தை மணக்கும் ஆசையுடன்.
முதலாளியான வானாயீனாவால் இராணுவத்தில் சேர்ந்து உடை, நடை மாற்றி கொண்ட அவனை ஏற்று கொள்ள மனம் வரவில்லை. தம் தொழிலுக்கு தேவையான பணிவு அவனிடம் இல்லாததால் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழில் நசிந்து விட கூடும் என்று அஞ்சி வேறொருவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார் பெண்ணுக்கும் மனைவிக்கும் இதில் உடன்பாடில்லாத போதும். மரகதம் செல்லையாவை காதலித்தாலும் தன்னால் குடும்பத்தை விட்டு வெளியே வர முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்கிறாள்.

இருவரும் சந்திக்கும் இடமும், காதலில் உருகி இணைய முடியாது என்பது தெரிந்து அடையும் மனவேதனையும், கலக்கும், கண்ணீரும், காதலும் அவ்வளவு அழகாக அந்த கால காதலர்களின் மனநிலையை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்கிறது.

செல்லையாவின் நண்பனாக வரும் மாணிக்கம் இடையிடையே பேசும் இலக்கிய விவாதங்கள் அவன் மூலம் சொல்லும் தத்துவ விசாரங்கள் எல்லாம் அருமை. மரகதம் கப்பலேறி திருமணத்துக்காக போனவுடன் மனமுடைந்து வரும் செல்லையா தனக்குள் பேசி தன்னை தேற்றி கொள்ளும் இடத்தில் வரும் எழுத்து மிக யதார்த்தம்.

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பத்தில்லை என்ற வரியுடன் முதல் நாவல் முடிவு முடிவு பெற்றிருக்கும்.

பா. சிங்காரம் - புயலிலே ஒரு தோணி - ஒரு பார்வை



புயலிலே ஒரு தோணி பா. சிங்காரத்தின் இரண்டாவது நாவல், கடலுக்கு அப்பால் கதையின் நீட்சி என்று கூட இந்த கதையை சொல்லலாம். இந்நாவல் வாசிக்கும் முன் சிங்காரத்தின் முன்னுரையை வாசித்தல் அவசியம் அப்போது புழங்கிய வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் விளக்கங்கள் கொடுத்திருப்பார். ஓரளவு நாவல் புரிபட இது உதவுகிறது.

சாதாரண குமாஸ்தாவாக இந்தோனிசியாவில் நடக்கும் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக அறிமுகமாகும் பாண்டியன் என்பவனிடம் இருந்து கதை தொடங்குகிறது.

இந்தோனிசியாவில் ஆரம்பிக்கும் கதை பிரிட்டிஷ் படையை எதிர்த்து ஜப்பான் படை உள்ளே நுழைய அவர்களை வரவேற்கும் அந்த நகர மக்கள் ஆட்சி சண்டையால் பாதிக்கப்படும் மக்கள் அங்கு நடக்கும், கொள்ளை, வன்புணர்வு என்று ஒரு போர் கால காட்சியை சிங்காரம் விவரிக்கும் விதம் எங்கு போர் நடந்தாலும் என்ன நடக்கும் என்பதை உணர முடிகிறது.. பார்வையாளனாக அதை பார்க்கும் பாண்டியன் மனதில் “ கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு என்று யோசித்து கொண்டே சங்க காலத்தில் கூலவாணிகன் சாத்தன் எழுதிய “ மாதவர் நோன்பும், மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இன்றால் என்ற காட்சி கண் முன் விரிவதை பார்த்து கொண்டே கடக்கிறான்..

கலவரத்தை கொலை கொள்ளையை தடுக்க ஜப்பான் ராணுவம் ஐவரின் தலையை வெட்டி கொள்ளை அடித்த பொருட்கள் எல்லாம் வரவில்லை என்றால் இந்த ஐவரின் கதி தான் என்று பொது இடத்தில் பார்வைக்கு வைக்கின்றனர்.

போரின் காரணமாக வியாபாரம் நடக்கும் தெரு மந்த நிலையை நோக்கி நகர்கிறது. பாண்டியன் பினாங் நோக்கி செல்ல முடிவெடுக்கிறான். இதற்கிடையில் அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசும் போது அலசப்படும் சங்க இலக்கியங்கள் அந்த புலவர்கள் குறித்தான விமர்சனங்கள் எல்லாம் கண்டிப்பாக வேறு கோணத்தில் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்கள் விவாதத்தின் ஒரு வரி, தமிழகத்தின் மான வீரப் பரம்பரை பற்றிய உன் கருத்து விபரீதமானது, தமிழ் உணர்வு கொண்ட எந்த தமிழனும் ஏற்கமாட்டான் என்று ஒருவர் கூற  “ விபரீதம் அல்ல, உண்மை, தமிழ், வீரம், தமிழ் நாகரிகம் என்பதெல்லாம் நம் புலவர்களின் தோப்பி மயக்கத்தில் தோன்றிய வெறும் கற்பனையாக இருக்கலாம் என தோன்றுகிறது என்று பாண்டியன் மறுக்கிறான்.

அதன் பின் வேசையர் பற்றிய உரையாடல், அவர்க்ளுடனான உறவு மூலம் ஆணுக்கு பெண் மீதான அந்த கால மதிப்பீடுகளை உணர முடிகிறது.

பினாங் பயணமாகிறான் பாண்டியன். கப்பலில் கூட வருபவர்களுடன் பேச்சும் அவர்கள் கதையுமாக கடல் பயணம் செல்கிறது. இதில் பணத்தை பற்றி வரும் பத்திகள் எல்லாம் எக்காலாத்துக்கும் பொருந்தும். பாண்டியன் கப்பலின் மேற்பரப்பில் நின்று கடலை வெறித்து கொண்டே போர் முடிந்தவுடன் முதல் கப்பலில் மதுரைக்கு போய்விட வேண்டும் என்று நினைக்க அவன் மனத்திரையில் மதுரையில் சின்னமங்கலத்தில் சிறுவயதில் அவன் வாழ்ந்த நாட்கள் விரிகிறது.. அந்த இடத்தில் மதுரை சின்னமங்கலம் இரண்டு அத்தியாயங்களில் ஆசிரியரின் எழுத்து நடை அனாயசம் அதை வாசித்து தான் ரசிக்க முடியும். இவனின் சிந்தனையை கடற்கூத்து கொலைக்கிறது. கடலில் புயலை கப்பலில் இருந்து எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று அக்காட்சிகள் நம் கண் முன் விரிகிறது. ஒரு வழியாக பத்திரமாக பினாங் வந்து சேர்கிறான்.

பின் அங்கு சில நண்பர்களை சந்தித்துவிட்டு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். அங்கிருக்கும் தமிழ் பேரவையில் நண்பர்கள் சந்திப்பும் விவாதங்களும் என்று நகர்கிறது கதை.

பாண்டியன் இந்திய தேசிய ராணுவ பயிற்சியில் சேர்ந்து அங்கு நடப்பது என கதை வேறு ஒரு தளத்துக்கு நகர்கிறது. கொரில்லா பயற்சி பெறும் பாண்டியன் ராணுவ வீரர்களுக்குள் நடக்கும் உள் கலவரங்கள் வெளி விவகாரங்கள் நேதாஜியிடம் இருந்து அழைப்பு வர அவர் பொருட்டு ஒரு கொலையை நிகழத்தி கொடுத்து அவரிடம் நற்பெயரும் பாராட்டும் பெறுகிறான். முழுக்க முழுக்க இந்திய தேசிய ராணுவம் அப்போதைய அரசியல் கொலைகள், போர் கால சூழல் என வழுவி செல்கிறது  பின் பாண்டியன் ஒரு புரட்சி கூட்டத்துக்கு போர் பயிற்சிகள் சொல்லி தருகிறான். ஒரு கட்டத்தில் எல்லாம் விட்டு ஊருக்கு கப்ப்லேறிவிட முடிவு செய்கிறான். ஆனால் எதிர்பாராதவிதமாக குண்டடிப்படுகிறான். இறக்கும் தருவாயில் அவன் மன கண் முன் வந்து போகும் நினைவுகளை ஆசிரியர் சொல்லி இருக்கும் விதம் க்ளாஸ். முழு நாவலையும் ஆங்கிலத்தில் டெவலப்பிங் தி ஹிண்ட்ஸ் பாணியில் சொல்லி இருப்பார்... அருமையான இடம் அது.

நெஞ்சுத் தொண்டை உருண்டுருண்டு பாதாள வெற்றுவெளி பாழ்வெளி காயம் குருதிவெளி, பாழ்வெளி பினாங் ரஜூலா நாகப்பட்டினம், மதுரை சின்னமங்கலம் சந்தை வேப்பண்ணை மருக்கொழுந்து கடக்டவண்டி, ஆளுயரப் பொரி உருண்டைக் கூடை, புழுதி வட்டக் குடுமி, பழுக்காக் கம்பி வெட்டி, சாக்கு புகையிலை, ஓடியா ராசா ஓடியா போனா வராது பொழுது விழுந்தா சிக்காது, அம்மன் கோயில் பொட்டல் பால் நிலவு சடுகுடு, நான்டா ங்கோபபன்டா நல்ல தம்பி பேரன்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரேண்டா, மதுரை இம்பீரியல் சினிமா, தெற்குவெளிவீதி வியாபாரி வீடு மஞ்சனக்காரத் தெரு, குயவர் பாளையம் ஒண்ணாம் நம்பர், சந்து “ஞே இவட நோக்கே மெடான் மொஸ்கி ஸ்ட்ராட், பிலேதொன் ஸ்ட்ராட் ஆயிஷா தங்கத் தந்தப் பளிங்குப்பட்டு “ சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா யுத்தம் கொள்ளை ஐந்து தலைகள் அர்னேமியா ஆறு, ரோல்ஸ் லாயர் டில்டன் தொங்கான புயல் பினாங் மாணிக்கம் நான்யாங் ஹோட்டல் நீசூன் கோத்தா பாலிங் ஜாராங் பலவேசமுத்து ரக்பீர்லால் சிறை களிகுஸ்மான் விலாசினி யாசமாக்கி நேதாஜி “ விதித்த கடமையை வலுவின்றி நிறைவேற்றினாய் பினாங் நடராஜன், சூலியா தெரு சுந்தரம் “ அண்ணே காப்பாத்துங்கண்ணே பேங்காங் ரேசன் தீர்க்கதரசி மெடான் ஆயிஷா தங்கையா காடு சண்டை கங்கசார் ஊர் ஊர் ஊர் பதக்கம் நரக் ஸ்ட்ராட் குடின் டில்டன் ஆ என்ன விபரீதமான சந்திப்பு நெஞ்சு தொண்டை மூச்சு நான் நான் நான் புல் மரம் புல் விலங்கு நிலம் நீர் நெருப்பு வளி வான் அண்ட பிண்ட சராசரங்கள் நான் நான் நானேஏஏஏ ...............................

மொத்த கதையயும் இந்த் கடைசி பத்திக்குள் அழகாக வார்த்தை குறியீடுகளாக அடுக்கி இருக்கும் இடம் அசத்தல்.