Tuesday 4 May 2021

வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக்

 வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக் – காலச்சுவடு பதிப்பகம் – தமிழில் ஜி. குப்புசாமி

வெண்ணிறக் கோட்டை கதை மிக சிக்கலானது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதை. தனக்குள் இருக்கும் மற்றொருவரை அல்லது மற்றவருக்கும் இருக்கும் தன்னை எதிர்கொள்வது தான் கதையின் மையக்கரு. ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் படித்த போது எதிர்கொண்ட அதே ஒட்டா தன்மையை இந்த வெண்ணிறக் கோட்டை வாசிக்கும்போதும் எதிர்கொண்டேன். அவரின் பனி நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விடாப்பிடியாக இந்நாவலை இறுதி பக்கம் வரை படித்து முடித்தேன்.
பனி போல சுவராஸ்யம் இல்லை என்றாலும், அகத்தின் இருண்மையை தேடும் மனதுக்கு வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தாலும், கதையினூடாக ஆங்காங்கு தெறிக்கும் சின்ன சின்ன பொறிகள் நாவலுக்குள் உள்ளே இழுப்பதும் வெளியே தள்ளுவதுமான உணர்வை ஏற்படுத்துகின்றன. என்னளவில் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் இல்லை.
பனி நாவல் வாசிப்பின் போது தெரிந்து கொண்டு துருக்கியின் வரலாறு கதைக்களத்துக்குள் நுழைய உந்துதலாக இருந்தாலும், கதை 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிப்பதால் அந்தக்காலத்திற்குள் கொஞ்சம் தடுமாறி தான் புக வேண்டியுள்ளது. வெனீஸ் நகரிலிருந்து ஆராய்ச்சிக்காக கடல் பயணம் மேற்கொள்ளும் ஒருவன் துருக்கியர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான். மருத்துவமும், வானவியலும் தெரிந்தவன் என்பதால், இஸ்தான்புல் பாஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறான். அனைத்து அடிமைகளை போல முதலில் கட்டிட வேலைக்கும், இன்ன பிற அடிமை வேலைகளும் செய்யும் அவன் ஒருநாள் பாசாவின் உடல்நிலை பாதிக்கப்பட அவருக்கு சிகிச்சையளித்து நன்மதிப்பை பெறுகிறான். தொடர்ந்து சுல்தானின் திருமண வைபவம் ஒன்றிற்காக இதுவரை யாருமே பார்த்திராத வாண வேடிக்கையை நடத்துவதற்காக, அவனை துருக்கியின் வானவியில் அறிஞனான ஹோஹா என்பவனிடம் ஒப்படைக்கிறார்கள்.
உருவத்தில் தன்னை ஒத்து இருக்கும் ஹோஹாவுக்கும் இவனுக்கும் அதன்பின்னர் ஏற்படும் ஒட்டலும் விலகலும், ஒட்ட முடியாமையும், விலக முடியாமையும் என கதை வெவ்வேறு படிநிலைகளுக்கும் பிரவேசிக்கிறது. கதை இவ்விருவரை மையப்படுத்தியே. பெண் கதாப்பாத்திரங்களே கிடையாது. கதை நகர இவ்விருவரும் கூட மனதில் இருந்து நகர்ந்து, மனதின் இருண்மைகளுக்குள் ஆழமாக ஊடுருவ தொடங்குகிறது.
ஹோஹாவும், ஆராய்ச்சியாளனும் (கதை நெடுகிலும் ஆராய்ச்சியாளன் ”அவனாக” தான் வருகிறான். பெயர் கிடையாது) வேறு வேறானவர்களா அல்லது இருவரும் ஒருவரே வா என்று குழப்பம் வருகிறது. கடைசி அத்தியாயம் வரை வாசித்தாலும் இந்த குழப்பம் வாசகனை நாவல் நெடுகிலும் சுழற்றி அடித்துக்கொண்டே இருக்கும்.
சுல்தானுக்கு நெருக்கமாக மாறும் ஹோஹா புதிய ஆயுதம் ஒன்றை தயாரிக்க முயல்வதும், அதற்கு ஆராய்ச்சியாளனின் அறிவை கைக்கொள்ள தொடங்கினாலும், வெளியில் அவனை மறுத்து வருகிறான. ஆனால் அவர்களறியாமல் இருவருக்குள் நடக்கும் மாற்றங்களும், அதை உணரத்தொடங்குதலும் தான் நாவலின் மைய இழை.
இதனிடையே அப்போது துருக்கியில் பரவும் ப்ளேக் நோய் இருவருக்குள்ளும் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஒரு கட்டத்தில் அதன் பொருட்டு தப்பி ஓடும் அவன் சுதந்திரமாக உணர்ந்தாலும், மீண்டும் ஹோஹாவிடம் சரணடைய விரும்புகிறான். மனதின் முரண்களை ஒவ்வொரு இடங்களிலும் ஆசிரியர் அவ்விருவர் வாயிலாக வாசகனுக்கு கடத்திக்கொண்டே இருக்கிறார். ஒட்டு மொத்த நாவலிலுமே மனதின் முரண்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆண் பெண்ணாக தான் இருக்க வேண்டுமென்று இல்லை, தனித்த இருவர் ஒருவருக்குள் ஒருவர் அகத்தால் ஊடுருவும் போது என்னவெல்லாம் நடக்கும். மனதின் விகாரங்களை அப்படியே எழுத்தின் மூலம் கொண்டு வருதல் சாத்தியமா, இருவரும் எழுதி எழுதி கிழித்துப்போட்டாலும், ஒருவரை ஒருவர் அந்த எழுத்தின் வாயிலாக அறிந்துக்கொண்டு அவர்களாகவே மாற முற்பட்டாலும், அந்த எழுத்து இல்லாத ஏதோ ஒரு மர்ம்ம் இருவரையும் வெறுத்துக்கொண்டே நேசிக்க செய்கிறதே அது என்ன? ஒருவரை வெறுத்துக்கொண்டே நேசிப்பதென்பது தன்னைத்தானே அறிந்துகொள்ளும் முயற்சியா? ஆனால் நாவலின் பல இடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும். நாவலின் சுவராஸ்யத்தினால் அல்ல, நம்மை நாம் அறிந்து கொள்ளும் சுவராஸ்யத்தில்.
ஒரு மனிதனின் அறிவு, மதம், பழக்கவழக்கங்கள், நாகரிகம், கருத்தியல் அனைத்தும் அவன் வாழும் சூழலினால் கட்டமைக்கப்பட்டே நான் உருவாகிறது. ஆனால் அது தான் நாமா, அல்லது உண்மையில் நாம் யார் என்று நமக்குள் நடக்கும் அகப்போராட்டத்தையும் நாவல் பேசுகிறது.
வெனீஸில் கிருத்துவ மத நம்பிக்கைகளில் பிறந்து வளர்ந்த ஒருவன், அதற்கு சம்மந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் பல ஆண்டுகள் வாழவேண்டிய கட்டாயத்தில் அவனது அடையாளம் எப்படி மாறிப்போகிறது. முதலில் எப்படியாவது அங்கிருந்து தப்பி தன்னுடைய நாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் அவன், ஆரம்பத்தில் கொலை செய்தாலும் மதம் மாற முடியாது என்பவன் கடையில் ஒரு துருக்கியனாக மதமாற்றமடைந்து வாழ்கிறான்.
இந்நாவல் அகத்தை கீறி தன்னை தான் பார்த்து கொள்வதற்கானது மட்டுமே. அதுவே வாசகனை எளிதில் சோர்வடையவும் செய்யக்கூடும்.
மா கோ

0 Co

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

 பண்பாட்டு அசைவுகள் (அறியப்படாத தமிழகம் & தெய்வங்களும் சமூக மரபுகளும்)

ஆசிரியர்: தொ. பரமசிவன். காலச்சுவடு பதிப்பகம் .
மிகவும் தொன்மையான மொழியான தமிழின் ஆதிக்கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமென்பது நமது வேர்களை தேடி கண்டடைகின்ற குதூகலம் தரவல்லது.
நாம் ஒரு பொருட்டாக கருதாதில் கூட வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிந்துள்ளன என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்களின் கட்டுரை வாயிலாக தான் அறிய முடியும்.
சங்க இலக்கியம் காலம் தொட்டு தமிழர்களின் பண்பாடு, சமண மதத்திற்கு சென்று, பின் பக்தி இயக்கமாக சைவமும் வைணவமும் செழித்தோங்க, சமண மதம் சந்தித்த சரிவும், பரத்தமை உருவான விதம், சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், விஜயநகர பேரரசு செலுத்திய ஆதிக்கம், அதன் விளைவாக தெலுங்கர்கள் குடியேற்றம், அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்டவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என விரிவாக பேசுகிறது
இந்தநூல் வாசிக்க வாசிக்க தமிழர் பண்பாடு எது என்பது குறித்த ஐயம் பலமாக எழுகிறது. பண்பாட்டின் எச்சங்கள் ஆங்காங்கு இன்றும் நடைமுறையில் இருந்தாலும், உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனித்த அடையாளத்தை கிட்டத்தட்ட அழித்தே வருகிறது எனலாம்.
சிறுதெய்வ வழிபாடு மட்டுமே தமிழர்களின் வாழ்வியலாக இருந்த நிலையில், பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய விதமும், அது பல இடங்களில் சிறு தெய்வ வழிபாட்டை தனக்குள் இணைத்து கொண்ட விதம் குறித்தும் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவற்றை மேற்கோள் காட்டி ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக முற்றிலும் அழியாமல், சூழலுக்கு தக்க தங்கள் பண்பாட்டில் சில கூறுகளை மாற்றிக்கொண்டு பயணித்திருக்கிற
தமிழர்களின் உணவு, உடை, வாழ்வியல் , அவர்களின் சடங்குகள், வழிப்பாட்டு முறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் போது எழும் வியப்பு இந்நூல் முழுவதும் விரவியிருக்கிறது.
ஒரு பெண் விதவையானால் பெண்ணின் சகோதரன் அவளுக்கு கோடித்துணி போர்த்தும் வழக்கமொன்று இன்று வரை நடைமுறையில் உண்டு. கோவையில் மட்டும் இச்சடங்கு இன்று வரை வித்தியாசமாக நடப்பதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கைம்பெண் ஆனவளின் கையில் அவளது சகோதரன் நூல் நூற்கும் தக்களியையும் கொஞ்சம் பஞ்சையும் கொடுத்து, “கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டு பஞ்சு இருக்கு, நூறு வயசுக்கும் நூற்று பிழைச்சுக்கோ ” என்று சொல்லும் வழக்கம் இருக்காம்.
இது போல நிறைய இன்றும் மறையாமல் இருக்கும் சடங்குகள் குறித்தும் , பார்ப்பனரல்லாதோரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ மதம் எப்படி உருமாறியது, பார்ப்பனீயம் எப்படி அதனை உள்ளிழுத்துக்கொண்டது. திராவிடம் மக்களின் பண்பாட்டில் செய்த மாற்றம் என பலவற்றை ஆசிரியர் தொகுத்திருக்கிறார்.
இப்போது நாம் பண்பாடு, கலாச்சாரம் என பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் மூலத்திலிருந்து எந்தளவு உருமாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்’.
Like
Comment
Share

5 Co