Wednesday 11 October 2017

பிள்ளை கடத்தல்காரன் - அ,முத்துலிங்கம்.

அ.முத்துலிங்கத்தின் “பிள்ளைகடத்தல்காரன்” சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.  இருபது சிறுகதைகள் இதில் இலையுதிர் காலம் என்ற ஒரு சிறுகதை மட்டும் வேறு தொகுப்பில் படித்திருக்கிறேன். மற்றவை எல்லாம் முதல் முறை வாசிப்பு தான். அவரது எழுத்தில் எனக்கு பிடித்த விஷயம் உலகில் பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் செய்த அனுபவங்களை, மிக எளிமையாகவும், அங்கத சுவை குறையாமலும் வாசகனுக்கு தருபவர். அதனாலேயே இவரது எழுத்துகள் எனக்கு பிடிக்கும்.  இந்த சிறுகதை தொகுப்பும் நிறைவையே தந்தது.

இயக்கம் பற்றியும், ஈழ மக்களின் துயர் பற்றியும் இவர் எழுத்துகள் பேசவில்லை என்று இவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அந்த இயக்கங்கள் பற்றிய சிறு சிறு ரசனையான கூறுகளை சிறுகதையாக முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் இவர் எழுத்தில் உணர முடியும். அதுபோல இயல்பான சம்பவங்களை நுணுக்கமாக கவனித்து அதை கதையாக வடிக்கும் இவர் அந்த கதையை விவரிக்கும் போது, ஊடாக ஓடும் சில வரிகளில் தெறிக்கும் இலக்கிய சுவை அநாயசமானது. இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளில் பலவும் நாம் அன்றாடம் கடக்கும் சம்பவங்கள் தான், உப்பு சப்பில்லாத அதிக சுவராஸ்யமற்ற சம்பவங்களை கூட இவ்வளவு சுவையாக சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

அதுபோல நம் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாத தருணங்கள் பற்றியும், அதை சாதாரணமாக கடந்து வந்ததையும் அலட்டல் இல்லாமல் அவர் முன்வைக்கும் விதமும் பிடிக்கும். 

பிழிய பிழிய அழவைக்கும் சோகம் இவர் கதைகளில் இருக்காது, ஆனால் அங்கத சுவையின் ஊடாக போகிற போக்கில் ஒரு சுமையை நம் இதயத்தில் வைத்துவிட்டு போகிற லாவகம் இவர் எழுத்தில் நான் வியப்பது. கடினமான இலக்கியத்திற்குள் தலை கொடுக்கும் முன் ஒரு நல்ல ஸ்டார்ட் அப்பாக நான் முத்துலிங்கத்தை கையில் எடுப்பேன். நான் பார்த்தே யிராத கனடாவின் குளிர் பிரதேசங்களுக்கும், பாகிஸ்தான் மக்களின் வீடுகளுக்கும், ஆப்ரிக்க மக்களின் வெள்ளை மனசுக்குள்ளும், சென்று வந்த ஒரு புத்துணர்வு கிடைக்கும். அதே போல இலங்கை மக்களின் பழக்க வழக்கங்களும், புலம் பெயர்ந்து பல இடங்களுக்கு சென்று விட்ட போதும் தொடரும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் , அனைத்தையும் விட அந்த  அழகு இலங்கை தமிழையும் நுகரும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி அலாதியானது.

அந்த வகையில் இந்த கதை தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும், உன்னுடைய கால அவகாசம் இப்போது தொடங்குகிறது  (திகில் கதை ஆசிரியருக்கு கை கூடவில்லை ) கதை தவிர மற்றவை அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தவை.



Sunday 8 October 2017

கீழை நாட்டு கதை தொகுப்பு - மார்கெரித் யூர்ஸ்னார்

கீழை நாட்டு கதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. அனைத்துமே நாடோடிக்கதைகள். மார்கெரித் யூர்ஸ்னார் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் செவி வழி கதைகளில் புனைவு கலந்த எழுத்து. ”தலை வெட்டப்பட்ட காளி” கதையில் இருக்கும் தத்துவம் அழகியல் தாண்டி அந்த கதை எழுத்தாளர் மீது ஒரு சறுக்கலை கொடுத்தது. அங்கும் ஜாதிய மனம் இங்கை விட மோசமாக இருந்ததா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. தலை வெட்டப்பட்டு முண்டமாக இருக்கும் காளியின் உடல் நரகத்தினுள் தொலைந்து போக தேவர்கள் அத்தலையை விபச்சாரி ஒருவரின் உடலோடு பொருத்துகிறார்கள்

ஆனாலும் காளி, இந்திரனின் தேவலோகத்தில் ஆட்சிபுரியத் திரும்பிச் செல்லவில்லை. காரணம் விலைமகளுக்கான பழைய நினைவுகளே தெய்வீகத் தலை பொருத்தப்பட்டிருந்த அவளுடைய உடலுக்குள் வளைய வந்து கொண்டிருந்தன அதனைத்தொடர்ந்து காளி மிகவும் பயங்கரமாக உக்கிரமாக மாறுகிறாள். இந்நிலையில் காளியின் செயல்கள் பற்றிய வருணனைகள் தான் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறமற்ற மனநிலையை பறை சாற்றுகிறது.

காளியை பற்றி வருணனையில், அவள் அருவருப்பாக இருக்கிறாள். கீழ்ச்சாதியினரிடமும், பிற்படுத்தப்பட்டோரிடமும் உறவு கொண்டதால் தன்னுடைய தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்தை அவள் இழந்து விட்டிருந்தாள். தொழுநோயாளிகளால் முத்தமிடப்பட்ட அவளுடைய முகத்தில் நட்சத்திரப் பொருக்குகள் தோன்றியிருந்தன. கடுங்குளிரினால் குளிக்காமலேயே இருந்த ஒட்டக ஓட்டிகளின் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். பார்வையிழந்த பிச்சைக்காரர்களின் பூச்சிகள் மண்டிய படுக்கைகளில் படுக்கிறாள். பிராமணர்களின் தழுவல்களிலிருந்து விலகி சவங்களைக் கழுவும் பணியைச் செய்யும் பகல் வெளிச்சத்தை மாசுபடுத்தும் அருவருப்பூட்டும் இனத்தைச் சேர்ந்த வறியவர்களின் அணைப்பைத் தேடிச் செல்கிறாள். இப்படியாக தான் நீளுகிறது. 

காளி சாமானிய மக்களின் ஊர்தெய்வமாக, எல்லை தெய்வமாக போற்றி கொண்டாடப்படும் நாட்டில் காளி பற்றி சிறுவயதில் நான் கேள்விப்பட்ட செவி வழி கதைகள் ஏராளம், ஆனால் இந்த கதையில் வரும் தத்துவார்த்த சிந்தனைகள் அனைத்துமே மிக நன்றாக இருந்தாலும், காளியின் செயல்களை ஒப்பீடு செய்திருக்கும் அனைத்தும் ஜாதிய வன்மமாக தான் உணர முடிகிறது. இந்த தொகுப்பில் பல கதைகள் செவி வழி நாடோடிக்கதைகள் தான் என்பதால், அவர் செவி வழி கேட்ட புனைந்ததாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி செவி வழி என்றால், இந்தியாவின் ஜாதிய சிந்தனை கீழை நாடுகள் வரை பரவியிருக்கும் விதத்தை இதன் மூலம் வராலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தான் பார்க்கிறேன். 

சர்ச்சைக்குரிய இந்த கதையை தவிர்த்து எனக்கு பிடித்த மீதி இரண்டு கதைகளை மட்டும்  கீழே கூறியிருக்கிறேன்.. “இளவரசர் ஜெங்கியின் கடைசிக் காதல்” என்னும் கதை ஒரு பெண்ணின் மாறாக்காதலையும் இறுதியில் அவள் அடையும் ஏமாற்றத்தையும் பேசுகிறது.

நாயகனான இளவரசர் ஜெங்கி காதல் இளவரசனாக வலம் வருகிறார், ஏகப்பட்ட மனைவிகள், ஆசை நாயகிகள் என்று இருப்பதால் அவரால் ஒருவரின் காதலையும் நுணுக்கமாக உள்வாங்கவோ, நினைவுக்கு கொண்டு வரவோ முடியவில்லை. ஐம்பது வயதாகும் போது முதுமை வேறு சிந்தனையை தர தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மலையில் தான் கட்டி வைத்திருக்கும் குடிலுக்கு சென்றுவிடுகிறார். சிறிது வருடங்களில் எல்லாம் உலகத்துடனான தனது தொடர்பை முற்றிலும் துண்டித்து கொள்கிறார்.

ஆன்மீக புத்தகங்கள் தனிமை என்று இருக்கும் அவரை அவரது ஆசை நாயகியில் ஒருவரும், அவரை மிகவும் நேசிப்பவளுமான பெண் அவருடன் கடைசி காலத்தில் அவருக்கு பணிவிடை செய்து அவருடன் காலம் கழிக்க பிரியப்படுகிறாள். அப்போதாவது தன்னை மட்டும் நேசித்து, தான் அவரை நேசிக்கும் காதலை புரிந்து கொள்வார் என. முதல் முறை பயணித்து அவரின் இருப்பிடம் அடைய, பழைய நினைவுகளை கிளறியதற்காக அவர் கடிந்து அவளை விரட்டிவிடுகிறார். இதனிடையே அவரின் பார்வை மெல்ல மெல்ல மங்குகிறது.

அவர் குடிலில் எப்படியாவது புகுந்து அவருடன் எஞ்சிய காலத்தை கழிக்க முடிவெடுக்கும்பெண் ஒரு குடியானவளாக வேஷம் போட்டு அவரின் குடிலை அடைகிறாள். பார்வை முற்றிலும் மங்காத அவர் , இரவில் தனிமையில் அவள் அழகில் அடைக்கலமாகிறார். பின்னர் அவர் தவறு உரைக்க அவளை விரட்டி விடுகிறார். ஆனாலும் அவள் சென்ற பின் அவருள் இருந்த காதல் உணர்வுகள் தகிக்க தொடங்குவதால், தனிமை வெறுக்கிறது. பார்வையும் முற்றிலும் போய்விடுகிறது.

இப்போது அந்த பெண் வேறு ஒருவனின் மனைவியாக வேடம் போட்டு, புனித யாத்திரை போகப்போவதாக ஒரு இரவு தங்க அனுமதி கேட்கிறாள். இளவரசர் அனுமதிக்க அவள் பாடுகிறாள் அந்த குரலில் உணர்ச்சிவசப்படும் அவர் அந்த பெண்ணிடம் மீண்டும் உறவு கொள்கிறார். அவளை போகவிடாமல் தன்னுடன் தங்க வைத்து கொள்கிறார். அவள் அவருக்கு பணிவிடை செய்து தங்குகிறாள்.

இறக்கும் தருவாய் வருகிறது இளவரசனுக்கு. அப்போது அவர் அவளிடம் தன் வாழ்வில் வந்த போன அனைத்து பெண்களை பற்றியும் கூறுகிறார். அவள் குடியான பெண் வேடம் தரித்து வந்ததை கூட நினைவு கூறும் அவருக்கு ஆசை நாயகியாக இருந்த அவளது பெயர் மட்டும் நினைவுக்கு வரவில்லை.. அவள் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அவரிடம் தன்னுடைய பெயரை கூறி அவளை நினைவில்லையா, அவளை பற்றி கூறுங்கள் என்கிறாள். ஆனால் அதற்குள் இளவரசர் இறந்துவிடுகிறார்.

அந்த பெண் வெடித்து அழுவதாக , தன் தலை முடியை எல்லாம் பிய்த்து காற்றில் பறக்க விடுகிறாள் என கதை முடிகிறது. இந்த கதையில் வரும் கவித்துவமான வரிகள் , அழகியல் எல்லாம் சான்ஸே இல்லை….


அடுத்த கதை ஸ்ரீ ராம் மொழிப்பெயர்த்தது. இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் அவர் மொழிப்பெயர்ப்பு தான். ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும். கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதிய”உயிர் தப்பிய வாங்-ஃபோ” சிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம். ஆனால் நீ தூரிகையில் காண்பிக்கும் உலகம், என்னுடைய உடைமகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது. கதை நெடுகிலும் வரும் இலக்கிய வர்ணனைகளும், ஒப்புமை வார்த்தையழகும் மனதை அள்ளுகிறது.  

மார்கோவின் சிரிப்பு, மரணத்தின் பால், மோகினிகளை நேசித்த மனிதன் ஆகிய கதைகளை வாசிக்கும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது. அவை செவி வழி கதைகள் என்று. ஏனென்றால் கிட்டத்தட்ட இதே போன்று கதைகள் நமது வட்டார கதைகளாக வேறு வேறு பெயரில் நம்மிடையே உலவியவை தான்.. ஆசிரியரின் எழுத்து நடையும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் உவமைகளும், அதிலுள்ள இலக்கிய சுவையும் மனதை கவர்கிறது.

Wednesday 4 October 2017

உயிர் தப்பிய வாங்-ஃபோ - ப்ரெஞ்ச் சிறுகதை

ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும்.  கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதியஉயிர் தப்பிய  வாங்-ஃபோசிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம்.  ஆனால் நீ  தூரிகையில் காண்பிக்கும்  உலகம், என்னுடைய உடைமைகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது.  



Tuesday 22 August 2017

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரனின் “ நெடுஞ்சாலை” ஒரு வாழ்வியலை அதன் இயல்போடு சொல்லி சென்றிருக்கிறது. நாவலின் மாந்தர்கள் நம் அன்றாட வாழ்வில் கடந்து போகிறவர்கள் தான் என்ற போதிலும், அவர்களின் தொழில் சார்ந்த பின்புலம் பற்றி பெரிதாக நமக்கு தெரியாது. அத்தகைய ஒரு பின்புலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சில வருடங்கள் முன்பு வரை இவ்வளவு தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு கிடையாது, திருவள்ளுவர், பெரியார், சோழன், தீரன் என இவர்களை நம்பியே தான் மக்களின் வெளியூர் பயணங்கள் இருக்கும்.  பெரியார்ல வந்துட்டுருக்கேன், சோழன்ல போயிட்டுருக்கேன், டிடிசில சென்னைக்கு டிக்கட் போட்டிருக்கேன் என்பது போன்று பேருந்துகளாக மனதில் பதியாமல் போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் சர்வ சாதாரணமாக மக்கள் வழக்கில் புழங்கியது. இப்போது தனியார் பஸ்களின் பெருக்கமும், ஸ்லீப்பர், A./c உள்ளிட்ட வசதிகளும், உலகமயமாக்கலுக்கு பின்னர் நடுத்தர மக்கள் கையில் புரள ஆரம்பித்துவிட்ட பணமும் அரசு போக்குவரத்து கழகத்தை கொஞ்சம் மறக்க செய்து வருகிறது எனலாம்.

ஆனால் இவையெல்லாம் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தை நம்பி இருந்த காலகட்டத்தில் அவை எவ்வாறு இயங்கின, அவற்றில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன, என்ன மாதிரி சிக்கல்களை எதிர்கொண்டார்கள், அதில் பணிபுரிந்தவர்களின் பின்புலமும் கனவும், அவர்களின் வாழ்வியலும் எவ்வாறு இருந்தது, இருந்திருக்கும். நிரந்தர தொழிலாளர்கள் தவிர்த்து சி.எல் என்ற கேட்டக்கிரியில் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று பார்ப்பதற்கு நம்மை டீசல் நெடி மணக்கும் பெரியார் டெப்போவுக்குள் கூட்டி செல்கிறார்.

தொழில் முறை வார்த்தைகள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தபோதிலும், மனிதர்களின் சிக்கல்களை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, நெடுஞ்சாலையில் வழுக்கி ஓடும் வெண்ணையாய் கதை தங்கு தடையின்றி பாய்கிறது. கொத்தனாராக பணிபுரிந்து, மெக்கானிக்கல் ஐடிய முடித்து பெரியாரில் அப்ரண்டீஸ்சாக பணிபுரிந்த அனுபவத்தில் சி.எல்லாக சேரும் அய்யனார், தந்தை செட்டி மளிகை கடை வைத்து, ஓரளவு பணம் புழங்கும் குடும்பமாக இருந்தாலும், அரசு உத்தியோகம் கவுரவம் என சி.எல் கண்டக்டராக பணிக்கு சேரும் தமிழரசன், ட்ராக்டர் வண்டி ஓட்டும் ஏழைமுத்து சி.எல் டிரைவராக மூவரும் பெரியார் போக்குவரத்து கழகத்தில் ஒரே நேரத்தில் சேருகிறார்கள். சி.எல் என்பது தற்காலிக பணி. பணி நிரந்தரம் ஆகும் வரை ஏவும் அத்தனை வேலையையும் செய்து, கிட்டத்தட்ட கொத்தடிமைகளுக்கு நிகரான ஒரு வாழ்க்கை, எப்போது வேண்டுமானாலும் வேலை பறி போகும் அபாயம் என அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தையாய் வேலை. அவ்வளவையும் நிரந்தர பணி பெறுவதற்காக பொறுத்து கொள்கிறார்கள்.

அந்த வேலையிலும் தமிழுக்கு மலரும் காதல் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனை, ஏழைமுத்துவுக்கு குடும்பம் அம்மா, மனைவி சண்டைகள், இதனிடையே தெரிந்த பெண் ஒருவளின் குடும்ப விவகாரத்தில் தலையிட அதனால் சந்திக்கும் பிரச்சனை, இதனால் இருவரின் வேலையும் முடங்க, தமிழ் மளிகை கடை நோக்கியும், ஏழைமுத்து ட்ராக்டர் ஓட்டவும் திரும்புகிறார்கள்.

மெக்கானிக்கலான அய்யனாரோ இடையில் அவன் பழுது பார்த்த வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பத்து நாட்கள் போல வீட்டில் வேலையில்லாமல் முடங்குகிறான். ஆனால் வேலை இல்லாமல் இருப்பதை சொல்லவும் முடியாமல், வீட்டை விட்டு கிளம்பும் அவன் கொத்தனாராக இருந்த போது பார்த்த சந்திரா என்ற பெண்ணை சந்திக்க, அவளுடன் மீண்டும் கொளுத்து வேலைக்கு செல்கிறான். சந்திரா மூலம் ஆசிரியர் அந்த பெண்ணின் எதார்தத வாழ்வியலை பதிவு செய்திருக்கிறார்.

கணவன் விட்டு சென்றுவிட, இரண்டு குழந்தைகளுடன் சந்திரா மிக சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் வாழ்க்கை, வேறு தளத்தில் இயங்கும் பெண்களின் மன உறுதிக்கும், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் அவர்களின் ஆற்றலையும் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை எப்படி சொல்வது. அதுவும் அய்யானாருக்கும் அவளுக்குமான உறவு, மிக சகஜமாக பாலியலை எந்த வித கட்டுக்குள்ளும் கொண்டு வராமல், சுதந்திரமாக அனுபவித்து, கைக்கொடுத்து பிரிந்து செல்லும் சந்திரா கதாப்பாத்திரம் மனதுக்குள் கிளர்த்திய சிந்தனைகள் ஏராளம்.  

அய்யனார் தற்காலிகமாக நீக்கப்பட்டாலும், மீண்டும் சி.எல்லாக தொடர அனுமதிக்கப்பட, பெரியாரை மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிட்ட தமிழும், ஏழைமுத்துவும் தங்கள் லைசன்சை திரும்ப பெறுவதற்காக மீண்டும் பெரியார் டெப்போவுக்கு வருகிறார்கள். அப்போது அவசர ஸ்பெஷல் வண்டியை ஓட்ட ஆள் இல்லை என லைசன்ஸ் பெற வந்தவர்களை ஒரு இத்துப்போன பஸ்சுக்கு ட்ரைவராகவும், கண்டக்டராகவும் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். மிக மோசமான நிலையில் இருக்கும் அந்த வண்டியை வைத்துக்கொண்டு தமிழும், ஏழையும் படும் பாடு, இந்தப்பக்கம் அந்த வண்டியின் நிலை அறிந்த அய்யனாரின் தவிப்பு, அந்த வண்டி பக்கத்து ஊர் திருவிழா ட்ரிப் அடித்து நல்லபடியாக ஷெட்டுக்கு திருமப வேண்டும் என்று பதைபதைப்புடன் காத்திருக்க, அந்த வண்டி மக்கள் கூட்டம் காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்படுகிறது.

தமிழும் ஏழையும் அந்த வண்டியுடன் போராடி சென்னை சென்று , மீண்டு வண்டியை விருத்தாசலம் சேர்ப்பார்களா என்ற பதைபதைப்பு புத்தகத்தை கீழே வைக்க விடாமல் செய்தது. அதுவும் விருத்தாசலம் டூ சென்னை ட்ரிப்பில் அரசு போக்குவரத்து ட்ரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்குகள், உயரதிக்காரிகளில் ஆரம்பித்து டீசல் பிடிப்பவர் வரை நிரந்தர ஊழியர்களின் நிலை, சி.எல்லாக பணிபுரிபவர்களின் நிலை, வண்டிகளின் பராமாரிப்புகளில் காட்டப்படும் அலட்சியம் என்று போக்குவரத்து துறையில் நடக்கும் அத்தனையையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

நாவல் முழுதும் பகடிகள், ஊர் மக்களின் எள்ளல், டிரைவர் கண்டக்டர்கள், மெக்கானிக்கலின் வாழ்க்கைகளின் சுவராஸ்யமான சம்பவங்கள் , அவர்களின் துன்பியல் சம்பவங்களை கூட நாவலில் பகடி நடையில் தான் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஆம் அந்த மக்களின் வாழ்வில் இப்படி அனைத்தையும் லகுவாக எடுத்துக்கொள்ள பழகவில்லை என்றால்,  மனப்பிறழ்வுடன் தான் உழல வேண்டி வரும்…..


நாவலை வாசித்து முடிக்கும்போது, ஒரு போக்குவரத்து கழக டெப்போவை விட்டு வெளியே வந்தது போன்ற உணர்வு. அவ்வளவு எளிமையான வார்த்தைகளால், சாமானியர்களுக்கு அதிக அறிமுகமில்லாத ஒரு களத்தில் உலவ விட்டிருக்கிறார் வாசகரை…

Tuesday 8 August 2017

" கிருஷ்ணப்பருந்து” - ஆ.மாதவன்


”கிருஷ்ணப்பருந்து” ஆ.மாதவனின் படைப்பு. ஏற்கனவே இவரின் சிறுகதையின் மொத்த தொகுப்பையும் வாசித்துவிட்ட நிலையில், கிருஷ்ணப்பருந்து அவரின் க்ளாஸ் படைப்பு என்று கூற வாசித்து முடித்தேன். இதை ஒரு குறு நாவல் என்றோ, சற்றே பெரிய சிறுகதை என்றோ கூறலாம்.  வட்டார வழக்கு, மலையாள தமிழில் மனதை அள்ளியது. மாதவனி கதையின் மையமான அதே சாலை கடை பகுதி, இந்த கதையில் சற்றே தள்ளி அந்த சாலைக்கடையை ஒட்டியுள்ள தோப்பு விளை என்னும் பகுதியையும், அதில் வசிக்கும் மனிதர்களையும் சுற்றி கதை நீளுகிறது. கதையின் மையம் மனித மனதில் உறைந்து கிடக்கும் காமவிகாரம் பற்றியது தான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதத்தில் மாதவன் தனித்து தெரிகிறார்.

மனித மனதில் உறைந்துகிடக்கும் காமம், மேலோட்டமாக அவனால் கண்டடையா முடியா ஆழத்தில் தன்னை புதைத்துகொண்டிருப்பது போல தோன்றினாலும், சில கண நேரங்களில் விஷ்வரூபமெடுத்து வெளிப்படும்போது அனைத்து கட்டுகளையும் உடைத்து விடுகிறது.

சுவாமி தான் நாவலின் நாயகன். மத்திம வயதை கடந்து கிட்டத்தட்ட ஐம்பது வயதில் இருக்கும் அவனை சுற்றியே கதை நகருகிறது. தாத்தா, அப்பாக்கள் எல்லாம் ஏகப்பட்ட பரம்பரை சொத்துகள் காரணமாக மைனர் குஞ்சுகளாக, ஆட்டம் போட அந்த சொத்தின் எஞ்சிய பகுதிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழ்க்கை வாழ்கிறான் நாயகன்.

தோப்பு விளையை சுற்றியுள்ள தென்னந்தோப்பு அதில் கிடைக்கும் வருவாய், அந்த விளையிலேயே இருக்கும் ஒரு சிறிய கோவில், அதை சுற்றி வசிக்கும் வசதியற்றவர்கள். அங்கிருக்கும் வீடுகள் மற்றும் தோப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் அதுவே போதுமென்று, புத்தகங்களுடன் வாழ்கிறார்.

மனைவி இறந்துவிட , ஏற்கனவே அப்பாவின் காமகளியாட்டத்தை நேரில் பார்த்ததால்,  தான் அப்படியல்லாமல் நெறியான ஒரு யோக வாழ்க்கையை வைராக்கியமாக வாழ்கிறார். மனைவியுடன் முழுமையான உறவில் இருந்தும், அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. இந்த நேரத்தில் வேலப்பன் என்னும் ஏழு வயது சிறுவன் ஒருவன் அடைக்கலமாக சுவாமியின் வீட்டுக்கு வருகிறான். அந்த வீட்டில் ஒருவனாக சுவாமியை குரு போல ஏற்றுக்கொள்கிறான். அவருடனே வளைய வருகிறான்.

வேலப்பன் வளர்கிறான், அவனை நல்ல இடத்தில் பணிக்கு அமர்த்துகிறார் சுவாமி. அவனுக்கு ராணி என்ற பணக்கார பெண்ணுடன் காதல் வர பல எதிர்ப்புகளுக்கிடையில் அவர்களுக்கு மணம் முடித்து வைக்கிறார். ராணி பணம் அந்தஸ்து அனைத்தையும் உதறி அந்த தோப்பு வளையில் வேலப்பனுடன் குடியேறுகிறாள்.

ஒரு நாள் சுவாமியின் வீட்டில் பார்க்கும் பெண்ணின் அரை நிர்வாணச்சிலை ஒன்றை பார்த்து வேலப்பன் துணுக்குறுகிறான். அவனின் சகவாச தோஷம் அவனை சுவாமியை பற்றிய வேறு கோணத்தை சிந்திக்க வைக்கிறது. அந்த சவகாச தோசத்தால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். குடி அவனை மேலும் வக்கிரமாக சிந்திக்க வைக்கிறது. வளர்கிறான். பால் சொஸைட்டியில் பதவிகள் கிடைக்கின்றன வேலப்பனுக்கும் ஆனால் சிறு பொறியென விழுந்த சுவாமியை  பற்றிய சந்தேகமும், வளர்கிறது. அவருடன் தன் மனைவி ராணியையும் சம்மந்தப்படுத்தி சந்தேகப்பட்டு அவளுடனும் சண்டையிடுகிறான்.

சுவாமி போல பிம்பம் அமைத்து வளைய வந்தாலும், உள்ளுக்குள் காமம் அவரை கீழே இழுக்கிறது. ஒரு கட்டத்தில் ராணியின் பால் இவர் மனம் மையல் கொள்ளுகிறது. காமத்தில் மனம் தகிக்கிறது. ராணி இவரை சுவாமியாக நினைத்து யதார்த்தமாக பழகுகிறாள், வேலப்பன் சண்டையிடும்போதெல்லாம் முறையிடுகிறாள் சுவாமியிடம்.

ஒரு பந்தின்போது அடிப்பட்டு கிடக்கும் சுவாமிக்கு ராணி பணிவிடை செய்கிறாள். அவரை தொட்டு தூக்கி அவள் உதவி செய்ய, நீண்ட நாட்களாக பெண்ணின் ஸ்பரிசம் படாமல் இருந்தவருக்குள் இருக்கும் காம உணர்வுகள் தகிக்க தொடங்குகிறது. உடல் நலம் தேற தொடங்க, ராணி நீங்க இந்த தாடியெல்லாம் மழிச்சுட்டா மாப்பிள்ளை போல இருப்பீங்க என்று கூறிய வார்த்தைகள் அவரை இழுக்க தாடியெல்லாம் எடுத்து ராணி மீது கடும் மையல் கொள்கிறார்.

அப்போது வேலப்பன் குடிபோதையில் கலவரம் ஒன்றில் போலீசாரை கொலை செய்ய முயற்சிக்க, கைது செய்யப்படுகிறான். கட்சியாட்கள் என பலரும் முயற்சித்தும் அவனை வெளியில் கொண்டு வர முடியவில்லை. சுவாமி நினைத்தால் முடியும் என்று சொல்ல ராணி சுவாமியிடம் கதறுகிறாள். ஆனால் சுவாமி மறுக்கிறார். இதனிடையே தன் உளக்கிடக்கை அரசல் புரசலாக ராணியிடம் தெரிவிக்க, தன்னை தர ஆயுத்தமாகிறாள் ராணி.

சுவாமியை நெருங்கி அவரின் மேல் சாய்ந்து அவரின் நெருப்பை தணிக்க முடிவு செய்து அவரிடம் சிருங்காரம் ஆரம்பிக்கும் ராணி எப்படியாவது வேலப்பனை வெளியே கொண்டு வர கோரிக்கை வைக்கிறாள். பொறி தட்டியது போல சுவாமி உலும்பி எழுகிறார். ராணியை விட்டு வெளியேறுகிறார் வேலப்பனை மீட்பதாக என கதை முடிகிறது.

இறுதி முடிவு திணிக்கப்பட்டதாக தான் தோன்றுகிறது. ராணி மீது அவ்வளவு தகிக்கும் காமத்தை சுமந்தலையும் , அவளுக்காக தனது யோக பிம்பத்தை உடைத்தெறியும் சுவாமி இறுதியில் ராணியை உதறி செல்வது செயற்கையான முடிவாக தான் தோன்றியது. அந்த கட்டத்தில் வந்து மனம் மாறுவது சாத்தியமற்றதாக தான் தோன்றுகிறது.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட சுவாமி - ராணி இறுதி உரையாடலுக்கு முன்பு வரை கிருஷ்ணப்பருந்து ஒன்று வருகிறது. அந்த கிருஷ்ணப்பருந்தின் குறியீடு மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் காம விகாரம் தான். மனித மனதின் நெருக்கடிகடிகள், அகச்சிக்கல்கள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க அதன் அடியில் காமம் ஒளிந்து கொண்டிருக்கும், கிருஷ்ணப்பருந்து உயரத்தில் பறக்கும் போதும் அதன் வெண்மையை பார்க்க முடியும் என்றாலும், அருகில் வரும் போது இன்னும் தெளிவாகவே பார்க்கலாம். காம விகாரமும் அப்படியே தான் என்பதாக ஆசிரியர் கூற முனைந்திருக்கிறாரோ..



Tuesday 13 June 2017

ஆ. மாதவனின் - சிறுகதை தொகுப்புகள்

கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்கு பிறகு , தற்போது ஆ. மாதவனின் சிறுகதை தொகுப்பை முழுவதுமாக வாசித்தேன். ஒரே மூச்சில் எழுத்தாளரின் படைப்புகளை வாசிக்கும்போது, அந்த எழுத்து மிகவும் வசீகரமானதாக இருந்துவிட்டால், வாசகனுக்கு திகட்டாத விருந்து தான். அந்த வகையில் மாதவனின் தொகுப்பை கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக மெல்ல மெல்ல ரசித்து உள்வாங்கி திளைத்தேன்.. வாசித்து முடித்த பின் பத்மநாப கோயில் குளத்தையும், அந்த சாலைக்கடையையும் பார்க்க மனம் ஏக்கங் கொள்கிறது.

நாவலில் எப்போதும் எழுத்தாளர்களுக்கான ஸ்பேஸ் நிறைய இருக்கும். கதைக்களத்தை பற்றிய விவரணைகளுக்கு நிறைய இடமிருக்கும். ஒரு கதாபாத்திரத்துடன் வாசகனை ஒன்றச்செய்ய அகச்சிக்கல்களையும், புறசிக்கல்களையும் விஸ்தாரமாக ஆலாபனை செய்யலாம், தத்துவ விசாரங்களை அடுக்கலாம். இன்னும் இன்னும் நிறைய வெளிகள் இருக்கும்.
ஆனால் சிறுகதைகளுக்குள் இவ்வளவையும் இதன் வீரியம் குறையாமல் கொண்டு வரமுடியுமா என்றால் நான் வாசித்ததில் வெகு சொற்ப ஆசிரியர்களே அதை நடத்தியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த சிறுகதை தொகுப்பில் ஆ. மாதவன் வெகுவாக ஈர்க்கிறார் எழுத்து நடையால்.

மாதவனின் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் போது அந்த மலையாள வட்டார தமிழ் வழக்கு நெஞ்சை அள்ளுகிறது. கதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு அருகில் உள்ள சாலைக்கடை என்ற ஒரு தெருவையும், அங்குள்ள வணிகர்கள், அந்த சாலைக்கடையில் உலவும் எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்வியல் முறை, அவர்களின் சிக்கல்கள், இதனூடாக அப்போதைய காலகட்டம் பற்றியே பேசினாலும், அந்த காலகட்டம் வாசகன் கண் முன் விரிகிறது. அந்த சாலைக்கடை தெருவில் வசிப்பவர்களை சுற்றியே கதைகள் நீளுகிறது. துளி கூட சலிப்பு தட்டாமல்.

மாதவன் அழகியலாக வார்த்தைகளை மலையாளம் கலந்த தமிழில் கோர்த்திருக்கிறார் என்றாலும், எந்த வார்த்தையும் துருத்திக்கொண்டு இல்லாமல் கதை வழக்கோடு இயைந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக கதை கதையாக வாசிக்க சாலைக்கடை மனிதர்களுடன் இரண்டற கலந்து உலவி வந்தது போன்ற உணர்வு. சிறுகதைகளுக்குள் வாசகனை இந்த அளவு கடத்த முடியுமா என்ற பிரமிப்பு வாசித்து முடித்த பின்னும் அகலவில்லை. மனிதர்கள் மட்டுமன்றி, அந்த தெருவில் சுற்றி திரிந்த நாயை பாச்சியாக்கி, பசுவை கோமதியாக்கி, பூனைக்கென்று இரண்டு கதைகளும் ஒதுக்கி, அந்த வாயில்லா ஜீவன்களின் உணர்வுகளில் ஒன்றச்செய்து, வாசிக்கும்போதே அவைகளுடனும் நமக்கு ஒரு சுகந்த நட்பு விரிகிறது.

மூட சொர்க்கம் கதையில் மிக நுட்பமாக பாலியல் அக சிக்கல்கள் ஏற்படுத்தும் புறசிக்கல்களை பதியும் ஆசிரியர். நாயனம் கதையில் இறந்து போனவர் தனது சவ ஊர்வலத்திற்கு நாயனம் வேண்டும் என்று கூறியிருக்க, அவரின் அந்திம ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் படும் அவஸ்தையும், ஒருவழியாக நாயனத்துக்கு ஏற்பாடு செய்து வர நடக்கும் கூத்தும் அந்த கதையில் தெறிக்கும் நகைச்சுவையும் அந்த கதை முடிந்திருக்கும் விதமும் தெளிவு.

காளை என்ற கதையில் வரும் பாப்பி கதாபாத்திரம் அந்த கதையை ஆசிரியர் நகர்த்தியிருக்கும் விதம் , ஒரு முதிர் கன்னி(!), அதே வீட்டில் அப்பாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக சினிமா சென்று வரும் அவள் தங்கையும். அவர்கள் வீட்டுக்கு வரும் குஞ்ஞி என்கிற வேலை செய்கிற பெண் என்று இந்த மூன்று பெண்களை வைத்து நகரும் கதை. மிக பவ்யமாக வீட்டோடு இருக்கும் பெண் சட்டென்று ஏதோ ஒரு தருணத்தில் சோரம் போவதை, அதை கூட கனவுப்படலம் போல அழகாக முகச்சுளிப்பில்லாமல் எழுதியிருப்பார்.

பண்பாடு என்ற கதையில் ஒரு அழுகி சீழ் பிடித்த நோயாளி பிச்சைக்காரியை கூட விட்டுவைக்காத ஆணின் பண்பாட்டை படிக்கும்போது கொஞ்சம் திக்கென்று தான் இருக்கிறது.

ஒரு விபச்சார பெண்ணை கூட்டி வந்து மூன்று நண்பர்கள் விடிய விடிய புணர்ந்து, அவள் இறந்தவிட குப்பை குழிக்கு எருவாக எடுத்து செல்லும் பட்டாணி அதனை ஒருவருக்கும் தெரியாமல் மூடி மறைத்தாலும், பட்டாணியின் மரணமும், அதற்கு நிகராக அவன் அனுபவிக்கும் மனவேதனைகளும், இளம் ரத்தத்தில் எந்த அநியாயத்தையும் செய்ய துணியும் ஒருவனின் வாழ்வு அந்திமத்தில் எவ்வாறாக இருக்கும் என்பதை எட்டாவது நாள் கதையில் சொல்லியிருக்கிறார். பாவத்தின் சம்பளம் கதை பாவத்துக்கு பரிகாரம் தேடுகிறது என்றால் , தூக்கம் வரவில்லை கதை பேசும் அறமோ தாயையே விஷம் வைத்து கொல்வதற்கு பின் இருக்கும் நியாயத்தை வாசகனின் பார்வைக்கு முன் வைக்கிறது.

விரும்பியே அந்நிய ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்ணிலிருந்து, காசுக்காக உடலை விற்கும் பெண், ஆனைசந்தம் கதையில் மலையாளம் பேசும் ஒருவனை மணந்து கொள்ளும் தமிழ் பிராமின பெண் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களின் காதல் வழியாக அப்போதைய அரசியல் மற்றும் சமூக நிலை, பொருந்துவது போல தோற்றம் அளித்த பொருந்தாமல் போகும் காதல் திருமணங்களின் முடிவு பற்றி நச்சென சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மிக அடக்க ஒடுக்கமாக அனைவராலும் பார்க்கப்படும் பெண் சட்டென ஒரு நாளில் வேறாக மாறுவதையும், அதை ஜீரணிக்க முடியாத சமூகத்தை விஸ்வரூபம் கதை மூலமும் வெளிப்படுத்தியிருக்கும் மாதவன், பெண் கதாபாத்திரங்கள் வழியாக விவரித்திருக்கும் உலகம் அந்த காலக்கட்ட பெண்களின் நிலையை பேசுகிறது.

நாற்றம் கதையிலும், நாலு மணி கதையிலும் மறைமுகமாக அகசிக்கலை பேசியிருக்கிறார். இந்திய குணம் என்ற கதையில் நாகரீக உடையணிந்த ஒருவர் செய்யும் சில செயல்களால் மனம் குமுறும் ஒருவர் அதை எதிர்கொள்ள அதைவிட கீழ்தரமாக ஒரு செயலை செய்துவிட்டு சுய அலசலில் ஈடுபடும் மனிதனை பேசுகிறது என்றால், இலக்கியம் பேசி என்ற கதை ஏமாற்றுபவர்களின் சாமர்த்தியம் எந்த காலத்திலும் தொடர்ந்து வருவதை பதிவு செய்கிறது.

அந்த காலகட்டத்தில் யானைக்கால் வியாதி விரவி இருந்ததை மாதவன் தனது சில கதாபாத்திரங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

தமிழும், மலையாளமும் கலந்த ஒரு கலந்து கட்டிய பண்பாட்டு கலாச்சாரக்கூறை மாதவனின் எழுத்துலகம் பேசுகிறது. அதன் அழகியல் நம்மையும் அதன் ஆழத்துக்குள் இழுத்து செல்கிறது. கதைக்காக மாதவன் தேர்ந்தெடுத்திருக்கும் மாந்தர்ககள் நம் அன்றாட வாழ்வில் வேறு வேறு ரூபத்தில் காணக்கிடைக்கிறவர்கள் தான். பெரும்பாலும் அவர்களை வாழ்வில் கடந்து தான் வந்திருப்போம், ஆனால் அவர்களை எந்தளவு கூர்ந்து உள்வாங்கி இருக்கிறார் ஆசிரியர் எனும்போது பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

சில கதைகளில் இலக்கிய வர்ணணைகள், உவமைகள் அதிகமிருப்பது போல, கொஞ்சம் மரபின் நீட்சியோ என்று தோன்றினாலும் சில உவமைகளை நான் வெகுவாக ரசித்தேன். அதில் நீரின் மேல் பாசியை விலக்கிவிட்டு தலைமுழுக இறங்குவது போல , கள்ளத்தனம் தீயின்மேல தவமாக , என்ற வரியை எடுத்தாண்டிருக்கும் இடம், கதையையும் மீறி வார்த்தையின் அழகியல் இறுக பற்றிக்கொள்கிறது. இது போல பல இடங்களில் மாதவன் எடுத்தாளும் உவமைகள் ஆங்காங்கு அள்ளித்தெளித்தது போல விரவி இருப்பதால், சில கதைகளில் எட்டிப்பார்க்கும் அயர்ச்சியை சட் சட்டென நீர்க்க செய்கிறது.

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக புதுமைப்பித்தனை சொல்வார்கள், ஆனால் மாதவன் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை வடிவமாக கதையை வார்த்தெடுத்திருக்கும் விதத்தில் தவிர்க்கவே முடியாத எழுத்தாளர். இவரின் சிறுகதை தொகுப்பை வாசித்தவர்கள் அவரின் கதையை, எளிதில் கடக்க முடியாத அவரின் கதை மாந்தர்களை, சாலைதெருவை, சிறுகதையில் அவர் புகுத்தியிருக்கும் அநாயசமான தனித்துவமான எழுத்து நடையை எளிதில் கடக்க முடியாது. வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.

மனசை அள்ளும் மாதவனின் மலையாளத்தமிழை ருசிக்க ஒரு முறையாவது மாதவனின் எழுத்தில் மூழ்கி எழவேண்டும்.


Saturday 3 June 2017

குல்சாரி - சிங்கிஸ் ஐத்மாதவ்



குல்சாரி  - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு – ரஷ்ய எழுத்தாளர் – சிங்கிஸ் ஐத்மாதவ். தமிழில் – ரா. கிருஷ்ணையா.

சிங்கிஸ்சின் ”முதல் ஆசிரியர்” நாவல் நான் வாசித்த முதல் படைப்பு. அதன் பின்னர் சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று வாசித்தேன். ரஷ்ய இலக்கியத்துக்கே உரித்தான அக உணர்வுகளை பேசினாலும், இவரின் படைப்புகளில், ரஷ்யாவின் அந்தக்கால அரசியல்  மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காண முடியும். அதுவும் ரஷ்ய புரட்சிக்கு பின் கம்யூனிசம் எழுந்ததையும், கம்யூனிஸ ஆட்சி நடத்திய மாற்றங்கள். அதன் விளைவுகள் அனைத்தையும் ஒரு சாமானியனின் பார்வையில் அதே நேரம்  மிக ஆழமாக பதிந்து செல்கிறார் ஆசிரியர்.

ரஷ்ய எழுத்துகளில் ஸ்டெப்பி புல்வெளியின் வாசத்தையும், உயிரை உறைய வைக்கும் பனியின் ஜில்லிப்பையும், வசந்தத்தையும், உணர முடியும். அநேக ரஷ்ய எழுத்தாளர்கள் மிக அழகாக வாசகனை அவர்களின் எழுத்துகள் வாயிலாக ரஷ்யாவிற்குள் கடத்துவார்கள். சிங்கிஸ் கூடுதலாக அப்போதைய அரசியல் நிலைக்கும் வாசகனை கடத்துகிறார்.

கதை ஆரம்பித்து சற்று நேரம் தனது இறுதி மூச்சுக்கு  போராடும் குல்சாரி என்ற குதிரையின் பார்வையிலேயே கதை பிரயாணிக்கிறது. அழகிய பந்தய குதிரையாக அதை வளர்க்கும் தானாபாய், அதை பிரிய நேருவது, பின் அவனின் வயோதிக காலத்தில் அவனிடம் பார வண்டி இழுக்கும் குதிரையாக குல்சாரி திரும்பி வருவது. குல்சாரி குட்டியாக இருந்ததில் இருந்து தள்ளாடி விழும் இந்த இடைப்பட்ட காலத்துக்குள் தானாபாய் வாழ்க்கை, போருக்கு பின்னான கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபோது நடந்தவை அனைத்தும் சமரசமின்றி தானாபாயின் நினைவுகள் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

கம்யூனிஸ கொள்கையில் ஈடுபாடுள்ள தானாபாய், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராகிறான். போரில் ஈடுபட்டு, தனது கிராமத்துக்கு திரும்பியவனை அவனது நண்பனான சோரோ குதிரை மந்தை பார்க்கும் பொறுப்பை ஒப்படைக்கிறான். கூட்டுப்பண்ணை அமைத்து அனைத்தையும் பொதுவுடைமையாக்கி அதில் வரும் வருமானத்தை அனைவரும் பங்கிடுவது என்று சோசலிச கொள்கைகள் முன்னிறுத்தியே யாவும் நடந்தாலும், கொள்கைகள், கருத்துகள் தனிமனிதராக கடைப்பிடிக்கபடுவது போல ஒரு நிறுவனமாக மாறும்போது கடைப்பிடிக்க முடியாமல் போவது. அதிகார பதவி போட்டிகள், அதற்காக நடக்கும் ஆள் கவிழ்ப்புகள் என்று தனி மனித சுயநலம்  மெல்லிய கண்ணுக்கு தெரியாத கரையானாக வளர்ந்து நேர்மையானவர்கள் தண்டிக்கப்படுவது ஆகியவற்றின் வாயிலாக கூறப்படும் அரசியல் அனைத்து கட்சிகளுக்குமானது. ஒரு கட்சியோ, நிறுவனமோ மிக நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டாலும், அதில் நிர்வாகம் செய்பவர்கள்  அந்த நோக்கத்தையே மடைமாற்றி அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுவதை சிங்கிஸ் பதிவு செய்திருக்கிறார்.

குட்டியான குல்சாரி மீது தனிப்பாச பிணைப்பு உண்டாகிறது தானாபாய்க்கு, அதை நன்கு பழக்குகிறார். குல்சாரியால் அவருக்கு பல வெற்றிகள் கிட்டுகிறது. ஒரு விதவை காதலி கிடைக்கிறாள். பின்னர் அவளை பிரியவும் செய்கிறார். குதிரையின் புகழ் பரவ அதை அடைவதில் போட்டி ஏற்படுகிறது. அதை கட்சி அலுவலுக்காக வலுக்கட்டாயமாக கூட்டி செல்கின்றனர். தன் உயிரே தன்னை விட்டு பிரிவது போல துடித்துப்போகிறார் தானாபாய். அந்த குதிரை அதிகாரிகள் லாயத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தாலும், கட்டுகளை அறுத்துக்கொண்டு தனது மந்தைக்கு அடிக்கடி திரும்புகிறது. இதனால் அதன் ஆண்மை நீக்கப்படுகிற கொடுமையும் நடக்கிறது. அதைக்கண்டு துடித்து போகிறார் தானாபாய்.

பின்னர் நண்பர் சோரோவின் வற்புறுத்தலால் ஆட்டு இடையை மேய்ப்பாளர் பொறுப்பை ஏற்கிறார். மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார். அவர் படும் கஷ்டங்கள் புரியாமல் அவரை பார்வையிட்டு அவரிடம் விசாரிக்க வரும் மேலதிகாரியிடம் சண்டையிட்டதற்காக கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். இதற்குள் நடக்கும் அரசியல் எல்லா காலத்துக்கும் எல்லா கட்சிக்கும் பொருந்தும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக, அதனை நேசிப்பவனாக, பதவி சுகத்துக்கு ஆசைப்படாமல் கொள்கைக்காக உயிரையே கொடுத்து உழைக்கும் அடிமட்ட தொண்டர்கள் தான் ஒரு கட்சியின் பலம் என்றாலும், அவர்களுக்கு பரிசாக கிடைப்பதென்னவோ அவமானங்களும், தண்டனைகளும் தான். தன் இளமை, உழைப்பு அனைத்தையும் நேசித்த கட்சிக்காக தாரை வார்த்து இறுதியில் வெறுமையை மட்டுமே சந்திக்கும் தானாபாய்கள் மீது வாஞ்சையும் பரிதாபமும் ஒரு சேர எழுகிறது.

நண்பன் சோரோ இறக்கிறான். அவன் கடைசியாக தானாபாயை பார்க்க துடிக்க அவன் மீது இருந்த வெறுப்பில் பார்க்காமல் தவிர்க்கும் தானாபாய், சோரோ இறந்தபின் கதறுகிறான். அதன்பின் வெற்று வாழ்க்கை வாழ்கிறான் தானாபாய்.  இறுதியில் பிழைக்க தெரியாதவன் என்று பலராலும் எள்ளி நகையாடப்பட்டு மருமகளாலும் இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறான்.

நான் இதுவரை வாசித்த சிங்கிஸ் நாவல்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு  அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும், சிங்கிஸின் கதை மாந்தர்களாக வரும் பெண்கள், மிகுந்த தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக தான் இருக்கிறார்கள். அவ்வகையில் இதில் தானாபாய் மனைவியாக வருபவரும், காதலியாக வருபவரும் இருவேறு மெச்சூர்ட் பெண் கதாப்பாத்திரங்கள்.

குல்சாரி வாசிக்கும்போது குல்சாரி மீது எழும் அபரிதமான வாஞ்சையும், அது இறக்கும் போது தானாபாய்க்கு மட்டுமல்ல, நமக்குள் ஏற்படும் இனம்புரியாத விடுதலையும் கதை முழுமையும் தாங்கி நிற்கிறது. இனி எங்கு குதிரையை பார்த்தாலும் குல்சாரி மனக்கண்ணில் வந்து போகும், விலங்கு பண்ணை நாவலில் வரும் பாக்சர் என்னும் குதிரை நீண்ட நாட்கள் என் நினைவை ஆக்ரமித்திருந்தது. அந்த வரிசையில் இப்போது குல்சாரியும் சேர்ந்து கொண்டது.




Monday 27 March 2017

சமூக வலைத்தளத்தில் பெண்கள்

சமூக வலைத்தளம் பெண்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் பல நல்லவை, அதிலும் குறிப்பாக ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகளவில் (வதந்தியும் கூட :P)  சென்று சேர்கிறது. அதுவும் தனிமையில் இருக்கும் பெண்களுக்கு Fb மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். ஆனால் நாம் லேசாக சறுக்கினால் மிகப்பெரிய மன உளைச்சலை கொடுப்பதும் இது தான்.  இன்றைய இளைய தலைமுறை பெண்கள் மத்திம வயது பெண்களை விட அழகாகவே சமூக வலைத்தளத்தை கையாளுகிறார்கள்.

ஆனால் மத்திம வயதில், பிள்ளைகள் ஓரளவு வளர்ந்துவிட்டு தங்கள் உலகத்துக்குள் நுழையும்போது அவர்களை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்டு வந்த பெண்கள் ஒரு மிகப்பெரும் வெறுமையை உணர்வார்கள். உடல்  தோற்றத்தில் இயற்கையாய்  நிகழும் மாற்றங்கள், ஹார்மோன்களின் மாற்றத்தினால் நிகழும் உளவியல் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் கழிவிரக்கமும் பெரிதும் பாதிப்பதால் நிலைகுலைந்து போகின்றனர் பல பெண்கள். பெரும்பாலான பெண்கள் மனம்விட்டு பேசகூட யாரும் இல்லாமல் புழுங்கிகொண்டிருக்கும் சூழ்நிலையில் யார் மூலமோ அல்லது குடும்பத்தினர் மூலமோ சமூக வலைத்தளத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள்.

பேசுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பெண்களின் இன்பாக்ஸ்கள் ஆண்களால் தட்டப்படும்போது, அவர்களை எதை நோக்கி நகர்கிறோம் என்று அறியாமலே செல்கின்றனர்.

சாட்டிங் சரி, தவறு என்ற பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பல பெண்கள் இந்த சாட்டிங் என்ற விஷயத்தை கையாள தெரியாமல் பல விபரீத சிக்கலுக்குள் சிக்கி கொள்வதுடன் அதனால் மன நிம்மதியை இழக்கிறார்கள். சில பெண்கள் என்னுடன் பகிர்ந்ததின் அடிப்படையில் சில விஷயங்களை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு பெண் நான் ஜோவியலாக பேசுபவள் மேம், அதே போல தான் பேசினேன், ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் He cracked my mind, I don’t know whr I slipped, அதன் பின் என்னால் நார்மலாக இருக்க முடியவில்லை. மிக அழகான குடும்பம், சொந்த பிஸினஸ் ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இதிலிருந்து மீள வழி தெரியவில்லை என்றார்.

வேறு ஒரு பெண், காபி சாப்பிட கூப்பிட நான் சென்றேன், அதை பற்றி தவறாக என் உறவினரிடம் எல்லாம் சொல்லி எனக்கு வீட்டில் ஏகப்பிரச்சனை என்றார்.  மற்றோருவர் சாட்டிங்கில் இருக்கும் போது ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சமயத்தில் பகிர்ந்து கொண்ட விஷயத்தை வைத்து மிரட்டுவதாக கூறினார். இவர்கள் அனைவருமே எந்த உள்நோக்கமுமின்றி பழகிய போதும் அது ஏதோ ஒரு இடத்தில் தவறியிருக்கிறது. இதில் அந்த ஆண் மேல் தவறு, இந்த பெண் மேல் தவறு என்பதை எல்லாம் தாண்டி நாம் சாட்டிங் செய்ய, நமது பிரச்சனைகளை பகிர தேர்ந்தெடுக்கும் நட்பு, அது ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி இங்கு தான் அறிமுகமாகிறார்கள் என்றால், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கள் பாலியல் தேவைக்காக தான் வருகிறார்கள் என்கிற அபத்தங்கள் அதிகம் என்பதால், நாம் தேர்ந்தெடுக்கும் நட்புகளையும், நமது தேடலில் உள்ள தெளிவையும் பொறுத்தே அனைத்தும் அமையும்.  ஒரு விஷயத்தை பெண்கள் தெளிவாக புரிந்து கொண்டாலே பல சிக்கலில் விழாமல் தப்பிக்கலாம். நமது பிரச்சனையை கேட்கும் அனைவராலும் அதனை புரிந்து கொள்ளவோ, உணரவோ முடியாது என்ற புரிதலை ஏற்படுத்தி கொள்வது அவசியம்.

பெண்கள் பேச்சால் அதிகம் ஈர்க்கப்படுவதால், மிக எளிதில் வார்த்தைகளை நம்பிவிடுகின்றனர். வார்த்தைகளுக்கு பின் இருக்கும் உண்மையின் நம்பகத்தன்மையை பற்றி சந்தேகிக்காமல் இருந்துவிடுவதால் பல சிக்கல்களில் சிக்கி கொள்கிறார்கள். கணவனுக்கு தெரியாமல் பணம் கொடுத்து அதனால் சிக்கலுக்குள் சிக்கிகொண்ட பெண்களும் உண்டு. ஆண்கள் ஏமாந்ததாகவும் கூறி பெரிய பஞ்சாய்த்துகள் நடந்தது. இதில் தவறு இருவர் பேரிலும் தான்.. பண விவகாரங்கள் நெருங்கிய உறவினர்களிடம் கூட பகையை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்க, அதிக பழக்கமில்லாத, இன்னும் சொல்லப்போனால் நேரில் பார்த்திராதவர்களுக்கு கூட எதன் அடிப்படையில் பணம் கொடுக்கிறார்கள் என்பது பெரிய புதிர். இதனால் பணம் மட்டுமல்லாமல் தங்கள் நிம்மதையையும் தொலைத்த பெண்களும் உண்டு.

நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும். பெரும்பாலான ஆண்கள் பெண்ணிடம் பேசுவதில் உண்டாகும் கிளர்ச்சிக்காக பேசுகிறார்களே தவிர, எந்த கமிட்மெண்டுக்குள்ளும், சிக்கி கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களும் அந்த கிளர்ச்சி தேவைப்படுவதால் தான் பேசுகிறார்கள் என்றாலும், அதை அவர்களாலேயே ஒத்துக்கொள்ள முடியாது. ஆழ்மனதில் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் கற்பு, ஒழுக்கம் சாந்த நெறிமுறை அவர்களை ஒத்துக்கொள்ள வைக்காது. இதனால் பெண்கள் செண்டிமெண்ட், காதல், என்று ஏதாவது புனித பிம்பத்திற்குள் தங்கள் ஈர்ப்பையும் கிளர்ச்சியையும் பொதித்து வைப்பதால் வெகு எளிதில் சிக்கலுக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பொறுப்புகள் பற்றிய பேச்சுகளில் ஆண்கள் கழுவுகிற மீனில் நழுவிகிற மீனாக தான் பேசுவார்கள். அனைத்து ஆண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. தோழமையாக பகிர்வதற்காக நட்புகளை தேடுகிற ஆண்களும் உண்டு என்றாலும் அது வெகு சிலரே. வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்று நுழையும் ஆண்கள் பெண்ணிடம் பேசுவது கிளர்ச்சிக்காக தான் என்பதை தெளிவாக  உணர முடியாத பெண்கள் அவர்களின் அன்பான ஒன்றிரண்டு வார்த்தைகளில்யே சிக்கிக்கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அடுத்து டெலி செக்ஸ் (இது பற்றி விரிவாக பதிய வேண்டும் என்றாலும் நீளம் கருதி சுருக்கமாக) என்ற கட்டத்துக்குள் நகரும் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இயற்கையில் ஆண் பெண் உறவு, கற்பனையில் இருப்பது போல எல்லா தருணங்களும் அமையாது. பாலியல் உறவு உடல் சார்ந்து மட்டுமல்லாமல், மனம், குடும்பம்,  பாதுகாப்பு, ஆரோக்கியம் இவை அனைத்தும் சார்ந்தே அமையும். இது பற்றிய புரிதல் பெண்களுக்கு அவசியம். சில ஆண்களால் மிகைப்படுத்தி சொல்லப்படுகின்ற டெலி செக்ஸ், வார்த்தைகளை நம்பி நன்றாக செல்லும் குடும்ப வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்கி கொள்ளும் பெண்கள் இழப்பது என்னவென்று தெரியாமலே இழக்கிறார்கள்.





Menopause - 2

ஹார்மோனல் இம்பாலன்ஸ்  காரணமாக Pre menopause, Peri menopause & PCOD , இதில் முதல் இரண்டு  நிலைகளில் பிரச்சனைகள் மனரீதியானது அதிகம். அதன் காரணமாக உடலில்  ஏற்படும் குளறுபடிகள். முட்டையிலிருந்து கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததால் என்ற கேள்விக்கு பதில் தெரியாதது போல,  மனரீதியான பிரச்சனைகளால் உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து உடல் சோர்வாகிறதா? அல்லது  உடல் ரீதியான பிரச்சனைகளால் மனம் பாதிக்கப்பட்டு சோர்வாகிறதா என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முதல் மையக்காரணம் கிட்டத்தட்ட நமது பதினான்கு வயதில் இருந்து உருவாகி வரும் சினைமுட்டைகள், அதன் காரணமாக உடலில் ஏற்படும் மாதாந்திர சுழற்சி தன்னுடைய சேவையை நிறுத்தி கொள்ள ஆரம்பிப்பதே ஆகும். எனவே சினை முட்டைகள் உருவாக காரணமான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஸ்ட்ரோஜன் ஹார்மோர்ன் இரண்டும் அதீதமாக சுரப்பது அல்லது சரியான அளவில் சுரக்காமல் இருப்பது. சொல்லப்போனால் ரோலர் கோஸ்டர் போல ஹார்மோர்ன் உற்பத்தி ஏறி இறங்குவது என்கின்றனர் மருத்துவர்கள். அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல, உதிரப்போக்கு நிற்கபோவதை நமக்கு அலாரம் அடித்து நமது உடல் தெரியப்படுத்துகிறது என்று கூறலாம்.

இத்தகைய ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சிக்கு இது தான் காரணம் என்று மருத்துவர்களால் அறுதியிட்டு கூறமுடியாத போதும், இன்றைய ஸ்ட்ரெஸ்சான வாழ்க்கை முறை மிக முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இன்னொன்று ஹெரிடிட்டி மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிக்கும் போது இருந்த பிரச்சனைகள் மகளுக்கு வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அம்மாவுக்கு இல்லாமல் கூட மகளுக்கு இருக்கலாம், காரணம் தற்போதைய ஸ்ட்ரெஸ்.

கூட்டுக்குடும்ப சிதைவு  ப்ரீ மெனோபாஸ் காலகட்டத்தை கடக்கும் பெண்களுக்கு பேரிழப்பு என்று சொல்லுவேன். இந்த வயது பெண்கள் பெரும்பாலோருக்கு டீன் ஏஜ் குழந்தைகள் இருக்கும் காலம். இயற்கையாகவே இந்த டீன் ஏஜ் பருவத்தில் தான் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமிடையே கொஞ்சம் பிரச்சனைகள் முளைவிட தொடங்கும், மெனோபாஸில் இருக்கும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது அந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாக ஏற்பட்டு உறவில் விரிசல் ஆரம்பிக்கும்.

மற்றொரு பக்கம் மெனோபாஸை கடக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் இருந்தால், அவர்கள் படிப்பிற்காகவோ, வேலை நிமித்தமாகவோ, அல்லது திருமணம் செய்து கொண்டோ பிரிந்து செல்லும் சூழல் வரலாம்.. இதனால் ஏற்படும் தனிமையும் வெறுமையும் வேறு வகை பிரச்சனையாக இந்த வயது பெண்களை பிடித்து ஆட்டி வைக்கிறது.

வாழ்க்கையில் மிக சாதாரணமாக கடந்து வந்த விஷயம் கூட பயமும் பதட்டமும் உடையதாக மாறி நாம் எதிர்பார்க்காதவிதமாக அலைகழிக்கும். சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாக தோன்றும். இது எனக்கு நேர்ந்திருக்கிறது. என்னுடைய ஆவேசத்தை பின்னால் யோசித்து பார்த்தால் நாம் தானா என்று தோன்றினாலும், அந்த நேரத்தில் அவுட் பர்ஸ்ட்டை கைகொள்வது எளிதல்ல.

வேலைக்கு செல்லும் பெண் சோர்வு, மட்டும் வேறு சில அசெளகரியங்களை அனுபவிக்கிறாள் எனும்போதும், வேலையே ஒருவிதத்தில் ஸ்ட்ரெஸ் மற்றும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து காக்கிறது. இதை நான் என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். ஆரம்பத்தில் உடல் நிலை படுத்தியதில் வீட்டிலுள்ளவர்கள் வேலையை விட சொல்லி வற்புறத்த நான் வேலையை விட்டேன். ஒன்றிரண்டு வருடம் சும்மாவும் இருந்தேன். ஆனால் அது எனக்கு கூடுதல் ஸ்ட்ரெஸ்சாக தான் அமைந்தது. அதனால் மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினேன். ஒரு கமிட்மெண்ட், பொறுப்பும் இந்த நேரத்தில் என்னை பல தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து விடுதலை பெற செய்கிறது. அதனால் உடல் நிலைக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தாத வரை வேலையை விடுவதை பற்றி தீர யோசித்து முடிவெடுக்கவும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக அக்கம் பக்கமும் இல்லாமல், வீட்டில் அதிக வேலை சுமையும் இல்லாமல் இருப்பவர்கள் அதிகளவில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பார்க்கும் டிவி தொடர்கள் அவர்களின் எதிர்மறை எண்ணத்தையும், கழிவிரக்கத்தையும், பழி உணர்ச்சியும் தூண்டுவதாக தான் இருக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம் உங்களை எந்த விஷயம் பாதிக்கிறதோ அதிலிருந்து முழு முற்றாக வெளியே வந்து விடுங்கள். சில நேரஙக்ளில் டிவி தொடர்களில் வரும் சம்பவங்கள் கூட நீங்கள் என்றோ மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தி உங்களை முழு முற்றாக அலைக்கழிக்கும். எவ்வளவு முயன்றாலும் சில எண்ண சுழற்சியில் இருந்து வெளிவர முடியாமல், மீண்டும் மீண்டும் மனம் அதற்குள்ளேயே நிற்கும். மிக ஜாக்கிரதையாக உங்களை நீங்கள் உற்று கவனித்து உங்களை பாதிக்கும் விஷயத்திலிருந்து வந்துவிடுங்கள்.

மேலும் அந்த மாதிரி ஒரு எண்ண சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டு வெளி வர முடியாமல் நீங்கள் தத்தளிக்கும்போது சட்டென எழுந்து மொட்டை மாடி போன்ற நல்ல காற்றோட்டமான இடத்திற்கோ, இல்லை உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயில் அல்லது அதிகமாக மக்கள் கூட்டமுள்ள ஏதோ ஒரு கடை செல்லுங்கள். விண்டோ ஷாப்பிங் அல்லது, கடற்கரை நான் தேர்ந்தெடுப்பேன். தனிமையில் நீண்ட நேரம் உட்கார, அந்த எண்ண சுழற்சியும், அதனால் ஏற்பட்ட கொதிப்பும் மெல்ல மெல்ல விடைபெறுவதை உங்களால்  உணர முடியும். நான் உணர்ந்திருக்கிறேன்.

என் தோழி ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்வது ஒரு விதத்தில் ஆசுவாசமாக இருக்கிறது. எவருடனும் பேச பழக பிடிக்கவில்லை, நான் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு தனித்தே இருக்கிறேன் என்கிறார். ஆனால், தனிமை கழிவிரக்கமாக மாறி தற்கொலை எண்ணம் வரை கொண்டு போகும் எனவே  தனிமையில் இருந்தாலும் உங்களை நீங்கள் வேறு எதிலாவது முழுமையாக ஈடுபடுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அது உங்களுக்கு பிடித்தமான விஷயமாக தேர்ந்தெடுத்து கொள்வதும் உங்கள் பொறுப்பு. நான் புத்தக வாசிப்பை தேர்ந்தேடுத்தேன்.

ஹார்மோர்ன் மாத்திரைகள் எடுக்கும்போது அதற்கான பக்கவிளைவுகளும் கண்டிப்பாக உண்டு. மருத்துவர்கள் இதனை சொல்லியே தான் தருகிறார்கள். ஆனால் சித்த மருத்துவத்தில் ஹார்மோர்ன் மாத்திரைகள் இல்லாமல் மனரீதியான பதட்டம் குறைக்கவும், ஹார்மோர்ன்கள் சீராக சுரக்கவும், மாதாந்திர உதிரப்போக்கு சீராக வருவதற்கும் மருந்து மாத்திரைகள் தருகிறார்கள். அது பக்க விளைவுகள் இல்லாமல் ஓரளவுக்கு எனக்கு நல்ல பலன் தந்தது. மருத்துவர்களை கவனமாக தேர்ந்தேடுக்க வேண்டியது இதில் முக்கியம்.


மைக்ரேன் என்னும் தலைவலி கொடிய அரக்கனாக நம்மை பந்தாடும். இந்த மைக்ரேன் எனக்கு இருபது வருடங்களுக்கு மேலாக இருப்பதால் இதனுடன் கொஞ்சம் பரிச்சயமாகிவிட்டதால் முன்னேற்பாடாக சில ஏற்பாடுகளை செய்து தவிர்க்க முயற்சிப்பேன். அப்படியும் மாதவிலக்கும் ஆரம்பிக்கும் முன் வரும் வலி மாத்திரைகளுக்கு எல்லாம் போக்கு காட்டி இரண்டு அல்லது மூன்று தினங்கள் விருந்தினராக இருந்து படுத்தி எடுத்து விட்டு தான் செல்லும். ஓய்வு மட்டுமே இந்த தலைவலிக்கு தீர்வாக இருந்திருக்கிறது. உங்கள் மனதை பாதிக்கும் அல்லது உங்களுக்கு எரிச்சல் மூட்டுபவர்களை இந்த நாட்களில் கூடுமானவரை தவிருங்கள், அல்லது அவர்களிடம் எந்த பேச்சும் கொடுக்காமல் இருங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவும், சாத்துக்குடி ஜூஸ் சர்கரை, ஐஸ் சேர்க்காமல் இரண்டும் நல்ல பலனை கொடுத்தது எனக்கு. எவ்வளவு முன் ஜாக்கிரைதயாக இருந்தும், சில நேரங்களில் தலைவலியில் தப்பிக்காமல் இருக்க முடியாது. நமக்கு ஒவ்வாத விஷயங்கள் அத்தனையும் வரிசைகட்டி அரங்கேறி நம்மை டென்ஷனாக்கி விட்டு தான் செல்லும்.. J

எனக்கு முகத்தில் வந்து நர்த்தனமாடிய பரு மிகப்பெரும் சோர்வை தந்தது. பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்து ஆங்கில, சித்தா, ஆயூர்வேதிக் என அனைத்து முறைகளையும் பின்பற்றினேன். ஒருகட்டத்தில் ரோட்டில் பார்ப்பவர்கள், என்னுடன் பயணிப்பவர்கள் எல்லாம் என் முகத்தின்  கரும்புள்ளிகளை பார்த்து டிப்ஸ் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையும் செய்தும் எதற்கும் பருக்கள் குறையவே இல்லை. இறுதியாக ஆப்பிள் சிடிகர் வினிகர் (organic with mother) ஆன்லைனில் வாங்கினேன். ஏனென்றால் ஆர்கானிக் எனக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் கிடைக்கவில்லை. இந்த வினிகரை ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு தண்ணீர் கலந்து பஞ்சில் தோய்த்து தாடைப்பகுதிகளிலும், கன்னத்திலும் போட அதன் வீரியம் ஓரளவு குறைந்தது. இது எந்த மருத்துவத்திலும் எனக்கு கூறப்படவில்லை. நானாக நண்பர்கள் அனுபவத்தின் மூலமும், இணையத்தில் இது பற்றி தகவல்கள் திரட்டியும் முயற்சித்தேன். ஓரளவு பலன் கிடைத்தது. இதை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய இடத்தில் இந்த வினிகரை தடவி, பாதிப்பில்லை என்றால் தொடரலாம்.  குறிப்பாக இந்த காலகட்டங்களில் மேக்கப்பை தவிர்த்து விடவும். பவுடர் கூட போடாமல் இருத்தல் நலம். டாக்டர் பரிந்துரைக்கும் பேஸ் வாஷ் மட்டும் உபயோகிக்கவும்.

இந்த ப்ரீ மெனோபாஸ் நான்கு வருடங்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் அல்லது அடுத்த மாதமே கூட சரியாகலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். ஆங்கில மருத்துவரே பரிந்துரைப்பது யோகாவும், உடற்பயிற்சியும். அதுமட்டுமல்லாமல் லைப் ஸ்டைல், உணவு பழக்கம் மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என்கின்றனர். மருத்துவர்களுடன், உங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தை எளிதில் கடந்துவிடலாம். மருத்துவரிடம் ஆலோசனை செல்லும்போது குடும்பத்தினரை அழைத்து செல்வதுடன், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனம் திறந்து குடும்பத்தினரிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

அனைத்தையும் விட மிக முக்கியமானது, உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் நீங்கள் காட்டும் அக்கறை மட்டுமே இந்த மெனோபாஸை கடக்க உதவும்.. உடற்பயிற்சி, யோகாவை சோம்பல் இல்லாமல் செய்தால் இந்த ப்ரீ மெனோபாஸை எளிதில் முறியடித்துவிடலாம். பெண்கள் எவ்வளவோ தடைகளை தாண்டிவிட்டோம். இதனை தாண்ட மாட்டோமா.. சியர்ஸ்..


கமலி பன்னீர்செல்வம்

Menopause - 1

நாற்பது நெருங்கும் அல்லது நாற்பதை கடக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அதே நேரம் கடுமையான காலகட்டத்தை கடக்கிறார்கள். மெனொபாஸ்சுக்கு முந்தைய இந்த காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எல்லா பெண்களும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்பது தான் சிக்கலே. அதனால் பிரச்சனைகளுக்கு தகுந்த மருத்துவம் எடுத்து கொள்வது தான் சரியான வழி.

உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் மிக சாதாரணமாக இந்த மெனோபாஸை கடப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் மெனொபாஸ்சுக்கு முந்தைய நிலையான (PMS) & (PCOS, PCOD)  என்கிற நிலையை கடக்கும் பெண்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். என்னுடைய இந்த கட்டுரை அத்தகைய பெண்களுக்கானது. அத்தகைய நிலையை கடந்து வருவதாலும், அதுபோன்ற நிலையை கடக்கும் பெண்கள் பலருடன் பேசியதிலும் அவர்கள் பிரச்சனைகளையும் சேர்த்தே எழுத முயற்சிக்கிறேன். கண்டிப்பாக யாருக்காவது உதவக்கூடும்.

முதலில் PMS -  அதாவது ப்ரீ மெனோபாஸ்  - முப்பதுகளின் இறுதியில் ஆரம்பிக்கும் இது சிலருக்கு நாற்பதுக்கு மேல் தொடங்கலாம். இந்த வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள், கால் வலியாக இருக்கலாம், அல்லது தலைவலி, முதுகுவலி, பசியின்மை, திடிரென்று அதிக உதிரப்போக்கு, உதிரப்போக்கு கண்ணில் படும் ஆனால் முதல் மூன்று நாட்கள் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று நான்காம் ஐந்தாம் நாள் அதீத உதிரம் என்று பிரச்சனை சிறியதாக ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் கவனமெடுத்து ஒரு இரண்டு மாத மாதாந்திர ப்ரீயட்ஸை நோட் செய்யவும். இது தவிர அதீத மூட் ஸ்விங் உணரலாம். திடீரென்று காரணமே இல்லாமல் சந்தோசமாக பாடி ஆட வேண்டும் என்ற உணர்வோ அல்லது அதீத எரிச்சலோ, கோவமோ ஒன்றின் முடிவில் இன்னொன்று என்று சட்டென உணர்ச்சிகள் மாறி மாறி ஆட்கொள்ளலாம்.

எந்த மருத்துவரை சந்திக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெளிவாக கூறுங்கள். வயதை எக்காரணம் கொண்டும் குறைக்காதீர்கள்.  சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன், அல்லது பிரீயட்ஸ் நடக்கும் போது நீங்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளை  முதலிலேயே கூறினால் தான் மருத்துவரால் டயாக்னைஸ் செய்ய முடியும். இல்லை உங்களுக்கு PMS இருப்பதை டாக்டர் உணரவே நாட்கள் பிடிக்கும்.

அதுபோல பருக்கள் இதனை ஆங்கில மருத்துவர்கள் Acne என்கிறார்கள். இந்த பருக்கள் சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் போது வந்து, பிரியட்ஸ் முடிந்தவுடன் மறையும் பருக்களாக இருக்காது. தாடைகளில் அதிகளவும், கன்னத்திலும் நீங்கள் எதிர்பார்காத, இன்னும் சொல்ல போனால் நீங்கள் டீன் ஏஜில் கூட அனுபவித்திராத அளவு இருக்கும். இதற்கு ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்வதை விட, இந்த வயதில் இருக்கும் பெண்கள், ஒரு நல்ல கைனாகலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்வது நல்லது. ஏனென்றால் எனக்கு முதலில் பரு வந்தபோது ஸ்கின் டாக்டரை தான் கன்சல்ட் செய்தேன். அவர் அதற்கான மருந்துகளை கொடுக்க பின் பக்கவிளைவுகள் என்று நகர்ந்தது தனி கதை.

இந்த பருக்கள், உங்கள் கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கு உருவாகும் கட்டிகளால் கூட இருக்கலாம். ஆரம்பத்திலேயே கைனகாலஜிஸ்ட் இது குறித்து பரிசோதனைகள் செய்யும் போது ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் கர்ப்பபையை காப்பாற்றி கொள்ளலாம். உங்களுக்கு கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டல் உடனடியாக எந்த ஸ்பெலிஸ்ட்டை பார்த்தாலும் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்யவும்.

-       சாதாரணமாக பீரியட்ஸ் சமயத்தில் வரும் வயிற்றுவலி, கால்வலி, முதுகு வலி  லேசாக இருந்தாலும் பொருட்படத்தாமல் கடப்பவர்களுக்கு வலி அதிகரிக்கும். வலியே தெரியாதவர்கள் கூட வலியை உணருவார்கள்.

-       ஹார்மோனலின் தாறுமாறான சுழற்சி காரணமாக பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் தலைவலி ஆரம்பித்து  பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் வரை இருக்கும் தலை வலி, உதிரப்போக்கு ஆரம்பித்தவுடன் நின்றுவிடும்.

-       சிலருக்கு மார்பில் பாரத்தை சுமப்பது போன்ற வலியிருக்கும். கட்டிகள் தென்பட வாய்ப்புண்டு. அது கேன்சர் கட்டி என்று அலற வேண்டாம். சாதாரண கட்டிகளாக கூட இருக்க வாய்ப்புண்டு. ஆனால் மருத்துவரிடம் செக் செய்ய வேண்டியது அவசியம். எனக்கு ஒன்றிரண்டு கட்டிகள் இருந்தது. மருத்துவர்கள் சோதித்து பயப்பட தேவையில்லை என கூற பின் அவை கரைந்தும்போனது. பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்  மார்பை, சில நேரங்களில் அதன் காம்பை தொட்டால் கூட வலி தாங்க முடியாததாக இருக்கும்.  நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போல தோன்றும். இதுவும் பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

-       சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் முன்னர் ஒன்று அதீதமாக பசிக்கும், இல்லை சாப்பிடவே பிடிக்காது. பீரியட்ஸ் முடியும் வரை இந்த மனநிலை தொடரும்.

-       பாலியல் சார்ந்த உணர்வும் அதீதம், வெறுப்பு இரண்டு நிலைக்கும் மாறி மாறி பயணிக்கும்.

-       சாதாரணமாகவே நீங்கள் கோவப்படுபவர், கொஞ்சம் சென்ஸிடிவ் என்றால் இந்த காலகட்டம் உங்களை  அதீத கோவத்துக்கும், உணர்ச்சி குவியலுக்கும் கொண்டு செல்லும். உங்கள் குடும்பத்தினரையும் டாக்டரை கன்சல்ட் செய்யும் போது அவசியம் அழைத்து செல்லவும்.

-       மூட் ஸ்விங்க்ஸ் & டிப்ரஷன், இரண்டும் சேர்ந்து ஆட்டிபடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் ஒரு சுழல் போல உங்களை உள்ளிழுக்கும். நீங்கள் போராடினாலும் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வருவது இயலாததாக இருக்கும், உங்கள் மனதை மாற்ற மிகுந்த போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வாய் விட்டு கதறி அழ வேண்டும் என்ற உணர்வு சந்தர்ப்பத்தை எதிர்பபார்த்து காத்திருக்கும். ஒன்று யாரையாவது வார்த்தைகளால் காயப்படுத்த முயற்சிப்பீர்கள், அல்லது உங்களை நீங்களே தேவையில்லாத எண்ணங்களால் காயப்படுத்தி கொள்வீர்கள். ஸ்ட்ரஸ் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். PCOD & PCOS இரண்டு நிலையிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

-       பீரியட்ஸ் தாறுமாறாக வரத்தொடங்கும் மாதத்தில் இருமுறை, அல்லது நாற்பது, நாற்பதைந்து நாட்கள் என்ற இடைவெளியில் வருவதுடன், உதிரப்போக்கும் அதிகளவில் இருக்கும். கிட்டதத்ட்ட அது வரை சமச்சீரான உதிரப்போக்கை சந்தித்த பெண்கள் மன ரீதியாக பீதியடைவதுடன், உடல் ரீதியாக சோர்ந்து போவார்கள்.

-       இரத்த அழுத்தமும், படபடப்பும் அதிகரிப்பதுடன், இரவில் ஏஸியிலும் வியர்த்து கொட்டி எழுவீர்கள். சில நேரங்களில் தூக்கம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

-       ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சியால், உதிரப்போக்கு  மட்டுமன்றி, இரத்ததில் சர்க்கரை அளவும், ரத்த கொதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அம்மாவுக்கு இருந்தால் உங்களுக்கு வர வாய்ப்பிருப்பதால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமிது.  

-       கிட்டத்தட்ட இருபது வயதிலிருந்து நாற்பது வரை பருக்கள் வராமல் இருந்தவர்கள் முகத்தில் தாறுமாறாக பருக்கள் வந்தால் கண்டிப்பாக அது ஹார்மோர்ன் சுழற்சியால் என்பதால் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்தல் நலம்.

முதலில் ஒரு நல்ல கைனாகாலஜிஸ்டை கன்சல்ட் செய்து உங்கள் பிரச்சனைகளை தெளிவாக பட்டியலிடுங்கள். மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டியிருக்கும். ஆயூர்வேதம், சித்தாவிலும் (PMS) க்கும் அதனால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் மருத்துவம் உண்டு.

கண்டிப்பாக ஒரு ஸ்கேனும், (inculdued vaginal Scan) அவசியம். அதுபோல Pap Smear டெஸ்ட் வலியாக இருந்தாலும் செய்து கொள்ளுங்கள். ஓரளவு ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை கண்டறிய உதவும்.

என் பிரச்சனைகள் குறித்து ஓரளவு தெரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இதனால் நான் அடைந்த வலிகளும், இழந்தவைகளும் அதிகம். என்னை போல பிரச்சனையை சந்திக்கும் ஒரு தோழியும் சொன்னார் அவருக்கும் டயாக்னைஸ் செய்யவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதென்று. நான் இதனை எழுத காரணம் வாசிக்கும் பெண்கள் தங்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து கொள்ள உதவும், ஆண்கள் அத்தகைய காலகட்டத்தை கடக்கும் பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள உதவும் என்பதற்காக தான்…

கமலி பன்னீர் செல்வம்.


=================