Tuesday 22 August 2017

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரனின் “ நெடுஞ்சாலை” ஒரு வாழ்வியலை அதன் இயல்போடு சொல்லி சென்றிருக்கிறது. நாவலின் மாந்தர்கள் நம் அன்றாட வாழ்வில் கடந்து போகிறவர்கள் தான் என்ற போதிலும், அவர்களின் தொழில் சார்ந்த பின்புலம் பற்றி பெரிதாக நமக்கு தெரியாது. அத்தகைய ஒரு பின்புலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சில வருடங்கள் முன்பு வரை இவ்வளவு தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு கிடையாது, திருவள்ளுவர், பெரியார், சோழன், தீரன் என இவர்களை நம்பியே தான் மக்களின் வெளியூர் பயணங்கள் இருக்கும்.  பெரியார்ல வந்துட்டுருக்கேன், சோழன்ல போயிட்டுருக்கேன், டிடிசில சென்னைக்கு டிக்கட் போட்டிருக்கேன் என்பது போன்று பேருந்துகளாக மனதில் பதியாமல் போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் சர்வ சாதாரணமாக மக்கள் வழக்கில் புழங்கியது. இப்போது தனியார் பஸ்களின் பெருக்கமும், ஸ்லீப்பர், A./c உள்ளிட்ட வசதிகளும், உலகமயமாக்கலுக்கு பின்னர் நடுத்தர மக்கள் கையில் புரள ஆரம்பித்துவிட்ட பணமும் அரசு போக்குவரத்து கழகத்தை கொஞ்சம் மறக்க செய்து வருகிறது எனலாம்.

ஆனால் இவையெல்லாம் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தை நம்பி இருந்த காலகட்டத்தில் அவை எவ்வாறு இயங்கின, அவற்றில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன, என்ன மாதிரி சிக்கல்களை எதிர்கொண்டார்கள், அதில் பணிபுரிந்தவர்களின் பின்புலமும் கனவும், அவர்களின் வாழ்வியலும் எவ்வாறு இருந்தது, இருந்திருக்கும். நிரந்தர தொழிலாளர்கள் தவிர்த்து சி.எல் என்ற கேட்டக்கிரியில் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று பார்ப்பதற்கு நம்மை டீசல் நெடி மணக்கும் பெரியார் டெப்போவுக்குள் கூட்டி செல்கிறார்.

தொழில் முறை வார்த்தைகள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தபோதிலும், மனிதர்களின் சிக்கல்களை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, நெடுஞ்சாலையில் வழுக்கி ஓடும் வெண்ணையாய் கதை தங்கு தடையின்றி பாய்கிறது. கொத்தனாராக பணிபுரிந்து, மெக்கானிக்கல் ஐடிய முடித்து பெரியாரில் அப்ரண்டீஸ்சாக பணிபுரிந்த அனுபவத்தில் சி.எல்லாக சேரும் அய்யனார், தந்தை செட்டி மளிகை கடை வைத்து, ஓரளவு பணம் புழங்கும் குடும்பமாக இருந்தாலும், அரசு உத்தியோகம் கவுரவம் என சி.எல் கண்டக்டராக பணிக்கு சேரும் தமிழரசன், ட்ராக்டர் வண்டி ஓட்டும் ஏழைமுத்து சி.எல் டிரைவராக மூவரும் பெரியார் போக்குவரத்து கழகத்தில் ஒரே நேரத்தில் சேருகிறார்கள். சி.எல் என்பது தற்காலிக பணி. பணி நிரந்தரம் ஆகும் வரை ஏவும் அத்தனை வேலையையும் செய்து, கிட்டத்தட்ட கொத்தடிமைகளுக்கு நிகரான ஒரு வாழ்க்கை, எப்போது வேண்டுமானாலும் வேலை பறி போகும் அபாயம் என அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தையாய் வேலை. அவ்வளவையும் நிரந்தர பணி பெறுவதற்காக பொறுத்து கொள்கிறார்கள்.

அந்த வேலையிலும் தமிழுக்கு மலரும் காதல் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனை, ஏழைமுத்துவுக்கு குடும்பம் அம்மா, மனைவி சண்டைகள், இதனிடையே தெரிந்த பெண் ஒருவளின் குடும்ப விவகாரத்தில் தலையிட அதனால் சந்திக்கும் பிரச்சனை, இதனால் இருவரின் வேலையும் முடங்க, தமிழ் மளிகை கடை நோக்கியும், ஏழைமுத்து ட்ராக்டர் ஓட்டவும் திரும்புகிறார்கள்.

மெக்கானிக்கலான அய்யனாரோ இடையில் அவன் பழுது பார்த்த வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பத்து நாட்கள் போல வீட்டில் வேலையில்லாமல் முடங்குகிறான். ஆனால் வேலை இல்லாமல் இருப்பதை சொல்லவும் முடியாமல், வீட்டை விட்டு கிளம்பும் அவன் கொத்தனாராக இருந்த போது பார்த்த சந்திரா என்ற பெண்ணை சந்திக்க, அவளுடன் மீண்டும் கொளுத்து வேலைக்கு செல்கிறான். சந்திரா மூலம் ஆசிரியர் அந்த பெண்ணின் எதார்தத வாழ்வியலை பதிவு செய்திருக்கிறார்.

கணவன் விட்டு சென்றுவிட, இரண்டு குழந்தைகளுடன் சந்திரா மிக சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் வாழ்க்கை, வேறு தளத்தில் இயங்கும் பெண்களின் மன உறுதிக்கும், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் அவர்களின் ஆற்றலையும் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை எப்படி சொல்வது. அதுவும் அய்யானாருக்கும் அவளுக்குமான உறவு, மிக சகஜமாக பாலியலை எந்த வித கட்டுக்குள்ளும் கொண்டு வராமல், சுதந்திரமாக அனுபவித்து, கைக்கொடுத்து பிரிந்து செல்லும் சந்திரா கதாப்பாத்திரம் மனதுக்குள் கிளர்த்திய சிந்தனைகள் ஏராளம்.  

அய்யனார் தற்காலிகமாக நீக்கப்பட்டாலும், மீண்டும் சி.எல்லாக தொடர அனுமதிக்கப்பட, பெரியாரை மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிட்ட தமிழும், ஏழைமுத்துவும் தங்கள் லைசன்சை திரும்ப பெறுவதற்காக மீண்டும் பெரியார் டெப்போவுக்கு வருகிறார்கள். அப்போது அவசர ஸ்பெஷல் வண்டியை ஓட்ட ஆள் இல்லை என லைசன்ஸ் பெற வந்தவர்களை ஒரு இத்துப்போன பஸ்சுக்கு ட்ரைவராகவும், கண்டக்டராகவும் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். மிக மோசமான நிலையில் இருக்கும் அந்த வண்டியை வைத்துக்கொண்டு தமிழும், ஏழையும் படும் பாடு, இந்தப்பக்கம் அந்த வண்டியின் நிலை அறிந்த அய்யனாரின் தவிப்பு, அந்த வண்டி பக்கத்து ஊர் திருவிழா ட்ரிப் அடித்து நல்லபடியாக ஷெட்டுக்கு திருமப வேண்டும் என்று பதைபதைப்புடன் காத்திருக்க, அந்த வண்டி மக்கள் கூட்டம் காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்படுகிறது.

தமிழும் ஏழையும் அந்த வண்டியுடன் போராடி சென்னை சென்று , மீண்டு வண்டியை விருத்தாசலம் சேர்ப்பார்களா என்ற பதைபதைப்பு புத்தகத்தை கீழே வைக்க விடாமல் செய்தது. அதுவும் விருத்தாசலம் டூ சென்னை ட்ரிப்பில் அரசு போக்குவரத்து ட்ரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்குகள், உயரதிக்காரிகளில் ஆரம்பித்து டீசல் பிடிப்பவர் வரை நிரந்தர ஊழியர்களின் நிலை, சி.எல்லாக பணிபுரிபவர்களின் நிலை, வண்டிகளின் பராமாரிப்புகளில் காட்டப்படும் அலட்சியம் என்று போக்குவரத்து துறையில் நடக்கும் அத்தனையையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

நாவல் முழுதும் பகடிகள், ஊர் மக்களின் எள்ளல், டிரைவர் கண்டக்டர்கள், மெக்கானிக்கலின் வாழ்க்கைகளின் சுவராஸ்யமான சம்பவங்கள் , அவர்களின் துன்பியல் சம்பவங்களை கூட நாவலில் பகடி நடையில் தான் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஆம் அந்த மக்களின் வாழ்வில் இப்படி அனைத்தையும் லகுவாக எடுத்துக்கொள்ள பழகவில்லை என்றால்,  மனப்பிறழ்வுடன் தான் உழல வேண்டி வரும்…..


நாவலை வாசித்து முடிக்கும்போது, ஒரு போக்குவரத்து கழக டெப்போவை விட்டு வெளியே வந்தது போன்ற உணர்வு. அவ்வளவு எளிமையான வார்த்தைகளால், சாமானியர்களுக்கு அதிக அறிமுகமில்லாத ஒரு களத்தில் உலவ விட்டிருக்கிறார் வாசகரை…

1 comment:

  1. விரிவான அறிமுகம். வாசிக்கத்தூண்டுகிறது.

    எளிய மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும்
    ஒரிரு எழுத்தாளர்களில் கண்மணி குணசேகரன் குறிப்பிடத்
    தகுந்தவர்.

    பெரும்பான்மையானவர்கள் வாசித்தாவது அவர்களைக்
    கொண்டாடவேண்டும்.

    ReplyDelete