Monday 13 June 2022

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

 

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். ஆசிரியர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இவரின் தனிமையில் நூறு ஆண்டுகள் வாசிக்க முயற்சி செய்து பாதி கூட தாண்ட முடியவில்லை. அந்தளவு கடினமாக இருந்தது. இவர் எழுதிய இந்த நாவல் 95 பக்கங்களே கொண்ட குறுநாவல் என்பதால் வாசிப்போம் என்று ஆரம்பிக்க, பெயரில் ஆரம்பித்து, சூழல் வரை கதைக்குள் உட்புகுவது கடினமாக இருந்தது. அதற்கு காரணம் இந்த ஆசிரியரின் எழுத்து நடையா அல்லது மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கலா எதுவென்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

இது க்ளாஸிக் வகை என எதன் அடிப்படையில் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு பெண் திருமணத்திற்கு முன் கன்னி தன்மை இழந்துவிட்டதை, அவள் கணவன் முதலிரவில் அறிந்து கொண்டதால் அவளை அவள் தாய் வீட்டிற்கு அந்த நள்ளிரவே அனுப்பி வைக்க, அந்த பெண்ணை அவள் வீட்டில் உள்ளோர் யார் காரணம் எனக்கேட்க சந்தியாகோ நாஸர் என்கிறாள்.

தன் குடும்பத்திற்கு அவமானம் தேடி தந்த சந்தியாகோவை கொல்வதற்காக அப்பெண்ணின் இரட்டை சகோதரர்கள் அவனை கொலை செய்கிறார்கள். அவனை கொலை செய்யப்போவதை முன்பே பலர் அறிந்திருந்தும், அவன் சாவை தடுக்க முடியாமல் ஏதேதோ தற்செயல் நிகழ்வுகள் நடக்கிறது .

அவன் தான் கன்னித்தன்மை இழக்க காரணம் என்பதும், அவள் ஏன் அவன் பெயரை சொன்னால் என்பதும் தெரியவில்லை. அனைத்திற்கும் மேலாக எந்த கணவன் (அவனை அவள் திருமணம் ஆகும் வரை காதலிக்கவே இல்லை) அவளை தாய் வீட்டிற்கு திருமணமான அன்றே அனுப்பி வைக்கிறானோ, அவனை உயிருக்கு உயிராக காதலித்து 2000க்கு மேலான கடிதம் எழுதி அவனுடன் 27 வருடங்கள் கழித்து இணைகிறாள்.

நடப்பது நடந்தே தான் தீரும் என்ற எளிய விதியை கூற ஆசிரியர் ஏன் இப்படி ஒரு கடினமான எழுத்து நடையை மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. இதை மர்ம நாவல் என்றும் வகைப்படுத்த முடியவில்லை. எழுத்து நடையில் கையாளப்பட்டிருக்கும் உத்தி ஆசிரியரின் தனித்தன்மையாக கூட இருக்கலாம். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையை முற்றிலும் ஏறகட்ட தான் இந்நாவல் உதவியது.

Tuesday 7 June 2022

என் பெயர் சிவப்பு

 

 

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக். இந்த புத்தகத்தை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் வாசிப்பதற்காக எடுத்தேன். ஆனால் நாவலின் கடினத்தன்மையும், அதன் களமும், காலசூழலும், என்னை நாவலுக்குள் நுழைய விடவில்லை. எனவே புத்தகத்தை தூக்கி தூர வைத்துவிட்டேன். ஓரானின் பனி நாவலை என் மகன் பரிசாக தர அதை வாசிக்க அந்த புத்தகத்தின் மூலம் ஆசிரியர் எனக்குள் வெளிச்சமிட்டு காட்டிய அகத்திறப்புகள் அவர் எழுத்தின் மீது காதலை கொடுத்தது. இன்றும் பனி நாவலை நான் வாசித்த சிறந்த நாவல்களுள் ஒன்று என்று கூறுவேன். பனியின் கதை மாந்தர்களான இஃபெக், கா, கடிபே, நீலம் என பலரும் உறைந்து போயுள்ளனர்.

அந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும், ஓரானின் எழுத்தின் மீதான காதலும் என் பெயர் சிகப்பை மீண்டும் வாசித்தே தீர வேண்டும் என்ற உந்துதலை தந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான நேரமும் மனமும் இப்போது தான் கை கூடியது. நான் எதிர்ப்பார்த்த அகத்திறப்புகள் இந்நாவலில் கிடைக்கவில்லை என்பதுடன், புத்தகத்தை முடிக்க ரொம்ப சிரமமாக இருந்தது. பாதியிலேயே நிறுத்திவிடலாம் என்று பலமுறை தோன்றிய போதும், எழுத்தாளரின் எழுத்துநடையின் மீதிருந்த காதல் தான் முழுவதும் வாசிக்க வைத்தது.

பதினாறாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகர இஸ்லாமிய நுண்ணோவியர்களின் உலகம் தான் நாவலின் மையக்கரு. ஓவியங்களின் புதிய முயற்சிகளை புகுத்தும் ஒரு சாராரும், அது மரபுக்கு எதிரானது, கடவுளை நிந்திக்கும் செயல் என்றும் அவர்களுக்குள்ளாகவே பிளவுப்பட்டு, மரபை நேசிப்பவர்கள் புதிய முயற்சிகளை ஆதரிப்பவர்களை கொலை செய்வது, இறுதியில் கொலைக்காரன் பிடிபடுவதும் என்று நாவல் பதினாறாம் நாற்றாண்டின் துருக்கி, இஸ்தான்புல் நகரத்துக்கு நம்மையும் இழுத்து செல்கிறது.

துருக்கியின் வரலாறை ஓரளவாவது படித்திருந்தால் தான் ஓரான் பாமுக்கை எளிதில் உள்வாங்க முடியும், பனி நாவலிலேயே இது ஒரளவு பிடிப்பட்டிருந்தாலும், பதினாறாம் நூற்றாண்டுக்குள் பயணி ப்பது சற்று கடினமாக தான் இருந்த்து. காரணம் நுண்ணோவிய உலகம். ஓவியம் பற்றிய அரிச்சுவடி கூட தெரியாத எனக்கு பக்கம் பக்கமாக நீளும், ஓவியக்குறிப்புகள், சித்திர சுவடிகள், நிறங்கள், அதன் நுட்பங்கள் எல்லாம் பெரும் ஆயாசத்தை தந்தன. எளிய நடை மொழிப்பெயர்ப்பு மட்டுமே இந்நாவலுக்குள் ஓரளவாவது தட்டு தடுமாறி பயணிக்க செய்தது.

ஒரு ஓவியத்திற்கான குறியீடுகள், விதிமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு பின்னுள்ள மதத்தின் பற்று அல்லது தீவிரத்தன்மையும், அதனை விட்டு சற்றே விலக முற்படுபவர்களுக்கு நேரும் முடிவுகள் நம்மை திகிலடைய செய்கின்றன.. இஸ்லாம், புனித குரான், நபிகள், தீர்ப்பு நாள், இறையுணர்வு பக்தியாக அல்லாமல் அச்சமாக நெஞ்சில் ஆழமாக விதைக்கப்படுவது என பலவற்றை ஓரான் நமக்குள் கடத்தியிருக்கிறார்.

நான் பிரேதம் என கிணற்றுக்குள் கொலை செய்ய்ப்பட்டு கிடப்பவனின் குரலாக தொடங்கும் நாவல் அவனை கொலை செய்தவனை கண்டுபிடிக்கும் வரை அந்நாவலின் வரும் மாந்தர்கள் ஏன் நுண்ணோவிய சித்திரம் குரலாக கூட நாவல் முழுமையும் ஒலிக்கிறது.

கருப்பு என்கிற மனிதன் பல ஆண்டுகள் கழித்து தனது காதலி ஷெகூரேவை சந்திக்க வருகிறான். அவன் காதலியின் தந்தை எனிஷ்டே தான் மரபு ஓவியங்களில் இருந்து அப்போதைய நவீன ஓவியங்கள் மீது காதல் வயப்பட்டு சுல்தானின் உதவியுடன் நுண்ணோவியர்களை காசுக்காக மரபு மீறிய ஓவியங்களை வரைய சொல்கிறார். இதன் காரணமாக வசீகரன் என்பவனும், அவனை தொடர்ந்து அவ்வொவியங்களை காசுக்காக வரைய செய்த எனிஷ்டேவும் கொல்லப்படுகின்றனர்.

ஷெகூரே ஏற்கனவே திருமணமாகி, போருக்கு சென்ற கணவர் திரும்பாமல் இருக்க, கணவர் வீட்டில் கணவரின் தம்பி ஹசனிடமிருந்து தப்பிக்க தந்தை வீட்டில் தனது இரு குழந்தைகளுடன் அடைக்கலமாகிறாள். அப்போது அவளின் நினைவாக திரும்பி வரும் கருப்பு அவளை திருமணம் செய்ய துடிக்கிறான். ஹஸனும் அவளை அடைய துடிக்கிறான். இருவரின்பாலும் ஈர்ப்பும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதும், தந்தையின் மரணத்திற்கு பின் கருப்பை நிபந்தனையுடன் திருமணம் செய்துக்கொள்ளும் செகூரே, அதன் பின்னும் பாதுகாப்பின்மை காரணமாக குழப்பத்துடனே இருப்பதும், அவளின் உணர்வுகளை ஆசிரியர் மிக நுட்பமாக கூறியிருக்கிறார்.

இந்த புத்தகம் இருவரை மிக ஈர்க்கலாம். ஒன்று ஓவியத்தின் மீதும் பண்டைய ஓவிய கலையின் மீது ஈடுபாடு உடையவர்களையும், இரண்டாவது துருக்கியின் பண்டைய வரலாறை கலை வடிவாக தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பவர்களையும். மற்றவர்கள் இதை முழுமையாக வாசிப்பது கடினம் என்றே நினைக்கிறேன். எனக்கு இஸ்லாமிய மதத்தின் தொன்மையையும், அது மனிதர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் பின் புலத்தையும் புரிந்து கொள்ள உதவியது.

நாவல் – என் பெயர் சிகப்பு, ஆசிரியர் – ஓரான் பாமுக், தமிழில் – ஜி. குப்புசாமி, பதிப்பகம் – காலச்சுவடு.

Monday 25 April 2022

பாதி இரவு கடந்து விட்டது


அமிதபா பக்‌ஷியின் ஆங்கில நாவலை பாதி இரவு கடந்து விட்டது என சுபத்ரா தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நவாப் கால மாங்கே ராம் என்கிற மல்யுத்த வீரனின் வாழ்க்கையில் இருந்து கதை தொடங்கி, அவன் மகன் பர்சாதி, ராம்தாஸ் என முடிகிறது.மல்யுத்தம் குறித்து பெருமிதமும், அதன் மீது அளப்பரிய காதலும் கொண்ட அப்பாவியான மாங்கே ராமை, கால சூழல், லாலா மோதி சந்த் என்ற பணக்காரர் குடும்பத்துக்குள் அடியாளாகவும், விசுவாசமான வேலைக்காரனாகவும் உழல வைக்கிறது.

கதையை எழுதிய அமிதபா பக்‌ஷி பற்றி தெரியவில்லை. ஆனால் அவர் ராமாயணத்தின் வைத்திருந்த மையல் தெரிகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை கதையாக வரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஜமீன்காலம், பின் ஆங்கில ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த காலம், அதன் பின் 70கள் வரையான அரசியல், ஆன்மீகம், இலக்கியம், அகவயம், புறவயம் அனைத்தையும் வாழ்வியல் வழியாக பதிவு செய்ய முனைந்திருக்கிறார். ஆனால் அதிக ஆன்மீகம் மற்றும் ராமனின் அருமை பெருமைகள் விளக்கத்தாலும் பல இடங்களில் கதை மையத்தில் இருந்து விலகி செல்கிறது.

முதல் பகுதியில் லாலா மோதிசந்தில் ஆரம்பித்து அவரது வாரிசுகள், அதற்கடுத்த தலைமுறை என ஒரு பணக்கார வியாபார குடும்பம், மாங்கே ராம், அவனை தொடந்து, அவன் மகன், பேரன் பரம்பரை பரம்பரையான விசுவாச வேலைக்காரனாக என்னென்ன அடைகிறார்கள், என்னென்ன இழக்கிறார்கள். அதில் மல்யுத்த வீரனான மாங்கே ராம் கம்பீரத்தை தனது பண பலத்தால் நுட்பமாக அடித்து ஒடுக்கும் லாலா, ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மாங்கே அந்த ஒடுக்குதலை பெண்கள் விவகாரத்தில் செலுத்தி எவ்வாறு தணித்து கொள்கிறான்.

கடைசியில் வயதாகி படுத்த படுக்கையாக கிடக்கும்போதும் அவன் மருமகளிடம் தகாத முறையில் நடந்து அவளால் கத்தி குத்துக்கும் ஆளாகி இறுதியில் இறக்கிறான். அதற்கு பின் அந்த மருமகள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்படுவதை பிற்பகுதியிலும் ஆசிரியர் அழகாக பொருத்தியிருக்கிறார்.

கதையை முழுதுமாக இரண்டாம் பகுதி தாங்கி பிடிக்கிறது. இந்நாவலில் எனக்கு பிடித்த பகுதியும் கூட, சுபத்ராவின் மொழிப்பெயர்ப்பில் அந்த வாக்கியங்கள் வழியாக கடத்தப்பட்டிருக்கும் நுட்பமான உணர்வுகள் தான் என்னால் இந்நாவலை முழுதாக வாசிக்கவைத்தது. அதில் கதையில் லாலா மோதி சந்தின் இரண்டாம் மகனாக வரும் திவான் சந்தின் மீது அவனது அண்ணி ஸ்வர்ணதாவுக்கு ஏற்படும் ஈர்ப்பை, “ அவன் மீது தனக்கும் இயல்பானதும் மறுக்கப்பட்டதுமான ஒரு வகை ஈர்ப்பு இருக்கிறதென்பதை ஒப்புக்கொண்டாள்”என்ற வரிகளின் வழியாக அழகாக நமக்குள் கடத்தியிருப்பார். இதே போல அவளது தோழி கமலாவிற்கும் அவளுக்குமிடையே இருக்கும் நட்பிற்கு பின் ஒளிந்திருக்கும் போட்டி பொறாமையை அகதிறப்பாக ஆசிரியர் காட்டியிருப்பதை அதன் உணர்வு மாறாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.

அதேபோல இளவயது விதவையான கமலாவின் உணர்வுகளை, திவான்சந்தின் மீது அவளுக்கு ஏற்படும் காதல் உணர்வை , தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிந்த அவள், ஒருபோதும் அடைய முயல தேவையில்லாத பொருளின் மீது தான் கொண்டிருக்கும் விருப்பம், அதை சுதந்திரமாக நேசிக்கும் வாய்ப்பை தருகிறது என காதலுக்கான வேறு ஒரு விளக்கத்தை ஆசிரியர் கூறியிருப்பார்.

காதலின் இருப்பு ஒரு பெண்ணிடம் ஏற்படுத்துகிற உணர்வுகளும், அது கட்டுப்படுத்தஇயலாமல் பெருகி, வெளிப்படுகிற விதம் கண்டிப்பாக ஆபத்தாய் முடியும் என்பதையும் வாசித்த போது, நமது காதல் உணர்வுடன் பொருத்தி பார்க்க முடியாமல் கடக்க முடியாது.

ஸ்வர்ணலதா, கமலா, சகுந்தலா, திவான்சந்த் இவர்கள் வாழ்வியலை சொல்லும் பகுதிகளில் நிறைய அகதிறப்புகளை நிகழ்த்திய ஆசிரியர், அதன் பின் துளஸிதாஸர் ராமாயணத்தின் மீது கொண்ட மோகத்தை சொல்லவே அதிக பக்கங்களை எடுத்து கொண்டார்.

அதன் பின் தொடர்ந்த கதை குறிப்பாக கடிதங்களில் எல்லாம் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன உணர்வு. ஆசிரியர் நிறைய பக்கங்களை எழுதாமல் தவிர்த்து சுருக்கியிருக்கலாம். அதிலும் லாலாவின் மரணபடுக்கையின் போது நடக்கும் ராம பாராயணம் எல்லாம் இரக்கமே இல்லாமல் பல பக்கங்கள் நீள்கிறது. மொழியின் உதவியால் தான் நாவலை முழுக்க வாசிக்க முடிந்தது.

நாவல்: பாதி இரவு கடந்து விட்டது

ஆசிரியர்: அமிதபா பக்‌ஷி

தமிழில் : சுபத்ரா

Like
Comment
Share

0

Friday 16 July 2021

ஆயிரம் சூரிய பேரொளி

 A thousand splendid suns என்ற காலித் ஹுசைனியின் நாவல், ஆயிரம் சூரியப் பேரொளி என ஷகிதா அவர்களால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

மத்திம வயதில் இருக்கும் பலரும் ஆப்கானிஸ்தானில் தாலிபனால், ஆப்கன் மக்களுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரங்களை செய்திகளாக நம் பதின் வயதிலோ, இளவயதிலோ செய்திகளாக கேள்விப்பட்டு கடந்திருப்போம். அந்த ஆப்கானிஸ்தானையும், அம்மண்ணின் மாந்தர்களையும் மனக்கண்ணில் தனது படைப்பின் மூலம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்,
மிக தொன்மையான நாகரீகம் கொண்ட ஆப்கானிஸ்தானில் கலாச்சார சுவடுகளில் பலவும் அழிந்து போய்விட்டன. இயற்கை வளத்துக்கு பஞ்சமில்லாத நாடு என்பதாலேயே அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், அவர்கள் அரசியல் சூழ்ச்சிக்கும் இரையாகி, தன் மக்களை பலிகொடுத்த நாடு. மன்னராட்சி முடிவுக்கு வந்தபோது சோவியத் கட்டுப்பாட்டில் வந்து பின்னர் நாட்டில் நடைபெற்ற புரட்சியினால் சோவியத் படைகள் விரட்டியடிக்கப்பட்டு , ஆப்கனின் பூர்வக்குடிகளாக இருந்த பல்வேறு இனக்குழுவினருக்கு ஆட்சி பொறுப்பு கைமாறியது. அதில் முக்கியமானவர்களான முஹாஹிதின்களும், தாலிபன்களும் மதத்தின் பெயரால் தன் சொந்த இனமக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் உலகையே ஆப்கானிஸ்தான் என்ற பெயரை அதிர்ச்சியோடும், பயத்தோடும் உச்சரிக்க வைத்தது.
போர் என்றாலே அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான். அதிலும் மதத்தின் பெயரால் பிற்போக்குதனங்களை கட்டவிழ்த்துவிடும் பாஸிஸ்டுகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கும்போது அங்கு பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? மரியம், லைலா என்ற இரு பெண்களின் மூலமாக அதனை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
மரியம் என்ற பெண்ணின் குழந்தைப்பருவத்தில் தொடங்குகிறது கதை. மூன்று மனைவிகளை உடைய ஜலீல் என்பவருக்கு வேலைக்காரி ஒருவள் மூலம் பிறக்கும் மரியம் முறைகேடாக பிறந்த பெண் என்ற காரணத்தினால் அவள் தாயை இழந்தது முதல் அலைக்கழிக்கப்பட்டு, பல சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கிறாள். பதினைந்து வயதில் 45 வயதான ரசூல் என்பவனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
ஒரு குழந்தை பிறந்தால் அதனை கொண்டு தனது வாழ்வின் வெறுமையை துடைத்தெறி விடலாம் என்று கனவு காணும் மரியத்துக்கு தொடர் கருக்கலைதலும் அதனால் கணவனின் ஏச்சு பேச்சுக்கும், அடி உதைக்கும் பழகி வேறு கதியன்றி அவனுடனே குடும்பம் நடத்தி வருகிறாள். அதே பகுதியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவரின் மகள் லைலா தாயாரின் மனநிலை பாதிப்பால், அன்புக்கு ஏங்கும் குழந்தையாக ,அவள் வயதையுடைய கன்னிவெடியால் ஒரு காலை இழந்த தாரிக் என்பவனின் ஸ்நேகத்தால் மகிழ்ச்சியாக குழந்தை பருவத்தை கழிக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி சோவியத்தின் படைகள் விலகி உள்நாட்டு கலவரங்களால் பறிக்கப்படுகிறது.
குழந்தையான லைலா பதினான்கு வயது பெண்ணாக தாரிக்கின் நட்பு காதலாக விரிகிறது. உள்நாட்டு கலவரத்தால் தாரிக் தனது பெற்றோருடன் நாட்டை விட்டு வெளியேற இறுதியாக லைலாவிடம் விடைபெற வருகிறான். இனி தன் காதலனை பார்க்கவே முடியாதோ என்ற பரிதவிப்பில் மருகி தவிக்க, இருவருக்கிடையே ஆறுதலும், தன்னம்பிக்கையுமாக தொடங்கும் உடையாடல் இருவரின் இணைதலில் முடிகிறது.
இதற்கிடையே நாட்டின் ஆட்சி முஜாஹிதன்களிடமிருந்து தாலிபன்கள் கைகளுக்கு ஆட்சி செல்ல, முன்பில்லாத வகையில் பசி பஞ்சம் ஒரு பக்கமும், தாலிபன்களின் சட்டத்திட்டங்களால், வன்முறையும், கொலைகளும் தலைவிரித்தாடுகிறது. முதலில் தனது மகன்கள் உயிர் தியாகம் செய்த நாட்டை விட்டு வெளியேற மறுத்து வரும் லைலாவின் தாய், நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கிறாள்.
அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, லைலாவின் வீட்டை ஏவுகணை தாக்க, அவளது பெற்றோர் தாக்கப்பட, குற்றுயிராக லைலா உயிர்பிழைக்கிறாள். அவளை ரசூல் தனது வீட்டுக்கு கொண்டு வந்து மரியம் உதவியோடு அவளை காப்பாற்றுகிறான். அதற்கு மாறாக அவளையே மணமுடிக்க அவன் செய்யும் செயல்களும், வயிற்றில் தாரிக்கின் வாரிசு உருவாகியிருப்பதை உணரும் லைலா, அந்த திருமணத்திற்கு சம்மதிப்பதும், அதனால் மரியம் அவளின் எதிரியாக, பின் லைலாவின் மீது வாஞ்சை ஏற்பட இருவருக்குள்ளும் நட்பு மலர்வதும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஒருமுறை லைலாவும், மரியமும் குழந்தையுடன் தப்பிக்க முயற்சிக்க, அவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்ப வர ரசூலிடம் பெறும் அடி உதைகளும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளும் கதறி அழவைக்கின்றன. தாலிபன்களின் காட்டாட்சியில் பெண்கள் ஒரு உயிராக கூட மதிக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அடைந்த வேதனைகளும், மருத்துவம் என்பது அதிலும் பிரசவம் என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையாக நடந்திருக்கிறது என்பதை வாசிக்கும்போது மனம் பதைக்கிறது. அத்தகைய கொடுமையான ரசூலிடமிருந்து இருவரும் எப்படி தப்புகின்றனர். மரியமின் முடிவு, லைலாவின் புதுவாழ்வு தொடக்கம், அதனைத்தொடர்ந்து அரங்கேறும் மாற்றங்கள் என நாவல் நீள்கிறது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால, பார்க்கப்போனால் நம் சமகால ஆப்கானிஸ்தான் அரசியலை இரண்டு பெண்கள் வாழ்வியல் மூலம் ஆசிரியர் கட்டமைத்திருக்கும் விதம் அலாதியானது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஆப்கன் மக்கள் அனைவரும் மரணத்தாலும், தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த துயரத்தாலும், பட்டினியாலும் அடைந்த துயரங்கள் அனைத்தையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆசிரியர் இரண்டு பெண்கள் வாயிலாக ஒரளவு அதனை நமக்கு கடத்த முயன்றிருக்கிறார். ஷாஹிதாவின் எளிய மொழிப்பெயர்ப்பினால் நம்மாலும் மரியத்தின் துயரத்தையும், வலியையும் உணர முடிகிறது.
தற்போதைய ஆப்கன் சுதந்திர தேசமாகி, ஒரளவுக்கு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் துயரங்கள் துடைத்தெறியப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.. தாரிக் போன்ற ஒரு சில ஆண்களால் சில லைலாக்கள் பிழைத்திருக்ககூடும், மற்றவர்கள்??????
Like
Comment
Share

Tuesday 4 May 2021

வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக்

 வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக் – காலச்சுவடு பதிப்பகம் – தமிழில் ஜி. குப்புசாமி

வெண்ணிறக் கோட்டை கதை மிக சிக்கலானது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதை. தனக்குள் இருக்கும் மற்றொருவரை அல்லது மற்றவருக்கும் இருக்கும் தன்னை எதிர்கொள்வது தான் கதையின் மையக்கரு. ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் படித்த போது எதிர்கொண்ட அதே ஒட்டா தன்மையை இந்த வெண்ணிறக் கோட்டை வாசிக்கும்போதும் எதிர்கொண்டேன். அவரின் பனி நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விடாப்பிடியாக இந்நாவலை இறுதி பக்கம் வரை படித்து முடித்தேன்.
பனி போல சுவராஸ்யம் இல்லை என்றாலும், அகத்தின் இருண்மையை தேடும் மனதுக்கு வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தாலும், கதையினூடாக ஆங்காங்கு தெறிக்கும் சின்ன சின்ன பொறிகள் நாவலுக்குள் உள்ளே இழுப்பதும் வெளியே தள்ளுவதுமான உணர்வை ஏற்படுத்துகின்றன. என்னளவில் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் இல்லை.
பனி நாவல் வாசிப்பின் போது தெரிந்து கொண்டு துருக்கியின் வரலாறு கதைக்களத்துக்குள் நுழைய உந்துதலாக இருந்தாலும், கதை 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிப்பதால் அந்தக்காலத்திற்குள் கொஞ்சம் தடுமாறி தான் புக வேண்டியுள்ளது. வெனீஸ் நகரிலிருந்து ஆராய்ச்சிக்காக கடல் பயணம் மேற்கொள்ளும் ஒருவன் துருக்கியர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான். மருத்துவமும், வானவியலும் தெரிந்தவன் என்பதால், இஸ்தான்புல் பாஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறான். அனைத்து அடிமைகளை போல முதலில் கட்டிட வேலைக்கும், இன்ன பிற அடிமை வேலைகளும் செய்யும் அவன் ஒருநாள் பாசாவின் உடல்நிலை பாதிக்கப்பட அவருக்கு சிகிச்சையளித்து நன்மதிப்பை பெறுகிறான். தொடர்ந்து சுல்தானின் திருமண வைபவம் ஒன்றிற்காக இதுவரை யாருமே பார்த்திராத வாண வேடிக்கையை நடத்துவதற்காக, அவனை துருக்கியின் வானவியில் அறிஞனான ஹோஹா என்பவனிடம் ஒப்படைக்கிறார்கள்.
உருவத்தில் தன்னை ஒத்து இருக்கும் ஹோஹாவுக்கும் இவனுக்கும் அதன்பின்னர் ஏற்படும் ஒட்டலும் விலகலும், ஒட்ட முடியாமையும், விலக முடியாமையும் என கதை வெவ்வேறு படிநிலைகளுக்கும் பிரவேசிக்கிறது. கதை இவ்விருவரை மையப்படுத்தியே. பெண் கதாப்பாத்திரங்களே கிடையாது. கதை நகர இவ்விருவரும் கூட மனதில் இருந்து நகர்ந்து, மனதின் இருண்மைகளுக்குள் ஆழமாக ஊடுருவ தொடங்குகிறது.
ஹோஹாவும், ஆராய்ச்சியாளனும் (கதை நெடுகிலும் ஆராய்ச்சியாளன் ”அவனாக” தான் வருகிறான். பெயர் கிடையாது) வேறு வேறானவர்களா அல்லது இருவரும் ஒருவரே வா என்று குழப்பம் வருகிறது. கடைசி அத்தியாயம் வரை வாசித்தாலும் இந்த குழப்பம் வாசகனை நாவல் நெடுகிலும் சுழற்றி அடித்துக்கொண்டே இருக்கும்.
சுல்தானுக்கு நெருக்கமாக மாறும் ஹோஹா புதிய ஆயுதம் ஒன்றை தயாரிக்க முயல்வதும், அதற்கு ஆராய்ச்சியாளனின் அறிவை கைக்கொள்ள தொடங்கினாலும், வெளியில் அவனை மறுத்து வருகிறான. ஆனால் அவர்களறியாமல் இருவருக்குள் நடக்கும் மாற்றங்களும், அதை உணரத்தொடங்குதலும் தான் நாவலின் மைய இழை.
இதனிடையே அப்போது துருக்கியில் பரவும் ப்ளேக் நோய் இருவருக்குள்ளும் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஒரு கட்டத்தில் அதன் பொருட்டு தப்பி ஓடும் அவன் சுதந்திரமாக உணர்ந்தாலும், மீண்டும் ஹோஹாவிடம் சரணடைய விரும்புகிறான். மனதின் முரண்களை ஒவ்வொரு இடங்களிலும் ஆசிரியர் அவ்விருவர் வாயிலாக வாசகனுக்கு கடத்திக்கொண்டே இருக்கிறார். ஒட்டு மொத்த நாவலிலுமே மனதின் முரண்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆண் பெண்ணாக தான் இருக்க வேண்டுமென்று இல்லை, தனித்த இருவர் ஒருவருக்குள் ஒருவர் அகத்தால் ஊடுருவும் போது என்னவெல்லாம் நடக்கும். மனதின் விகாரங்களை அப்படியே எழுத்தின் மூலம் கொண்டு வருதல் சாத்தியமா, இருவரும் எழுதி எழுதி கிழித்துப்போட்டாலும், ஒருவரை ஒருவர் அந்த எழுத்தின் வாயிலாக அறிந்துக்கொண்டு அவர்களாகவே மாற முற்பட்டாலும், அந்த எழுத்து இல்லாத ஏதோ ஒரு மர்ம்ம் இருவரையும் வெறுத்துக்கொண்டே நேசிக்க செய்கிறதே அது என்ன? ஒருவரை வெறுத்துக்கொண்டே நேசிப்பதென்பது தன்னைத்தானே அறிந்துகொள்ளும் முயற்சியா? ஆனால் நாவலின் பல இடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும். நாவலின் சுவராஸ்யத்தினால் அல்ல, நம்மை நாம் அறிந்து கொள்ளும் சுவராஸ்யத்தில்.
ஒரு மனிதனின் அறிவு, மதம், பழக்கவழக்கங்கள், நாகரிகம், கருத்தியல் அனைத்தும் அவன் வாழும் சூழலினால் கட்டமைக்கப்பட்டே நான் உருவாகிறது. ஆனால் அது தான் நாமா, அல்லது உண்மையில் நாம் யார் என்று நமக்குள் நடக்கும் அகப்போராட்டத்தையும் நாவல் பேசுகிறது.
வெனீஸில் கிருத்துவ மத நம்பிக்கைகளில் பிறந்து வளர்ந்த ஒருவன், அதற்கு சம்மந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் பல ஆண்டுகள் வாழவேண்டிய கட்டாயத்தில் அவனது அடையாளம் எப்படி மாறிப்போகிறது. முதலில் எப்படியாவது அங்கிருந்து தப்பி தன்னுடைய நாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் அவன், ஆரம்பத்தில் கொலை செய்தாலும் மதம் மாற முடியாது என்பவன் கடையில் ஒரு துருக்கியனாக மதமாற்றமடைந்து வாழ்கிறான்.
இந்நாவல் அகத்தை கீறி தன்னை தான் பார்த்து கொள்வதற்கானது மட்டுமே. அதுவே வாசகனை எளிதில் சோர்வடையவும் செய்யக்கூடும்.
மா கோ

0 Co

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

 பண்பாட்டு அசைவுகள் (அறியப்படாத தமிழகம் & தெய்வங்களும் சமூக மரபுகளும்)

ஆசிரியர்: தொ. பரமசிவன். காலச்சுவடு பதிப்பகம் .
மிகவும் தொன்மையான மொழியான தமிழின் ஆதிக்கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமென்பது நமது வேர்களை தேடி கண்டடைகின்ற குதூகலம் தரவல்லது.
நாம் ஒரு பொருட்டாக கருதாதில் கூட வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிந்துள்ளன என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்களின் கட்டுரை வாயிலாக தான் அறிய முடியும்.
சங்க இலக்கியம் காலம் தொட்டு தமிழர்களின் பண்பாடு, சமண மதத்திற்கு சென்று, பின் பக்தி இயக்கமாக சைவமும் வைணவமும் செழித்தோங்க, சமண மதம் சந்தித்த சரிவும், பரத்தமை உருவான விதம், சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், விஜயநகர பேரரசு செலுத்திய ஆதிக்கம், அதன் விளைவாக தெலுங்கர்கள் குடியேற்றம், அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்டவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என விரிவாக பேசுகிறது
இந்தநூல் வாசிக்க வாசிக்க தமிழர் பண்பாடு எது என்பது குறித்த ஐயம் பலமாக எழுகிறது. பண்பாட்டின் எச்சங்கள் ஆங்காங்கு இன்றும் நடைமுறையில் இருந்தாலும், உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனித்த அடையாளத்தை கிட்டத்தட்ட அழித்தே வருகிறது எனலாம்.
சிறுதெய்வ வழிபாடு மட்டுமே தமிழர்களின் வாழ்வியலாக இருந்த நிலையில், பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய விதமும், அது பல இடங்களில் சிறு தெய்வ வழிபாட்டை தனக்குள் இணைத்து கொண்ட விதம் குறித்தும் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவற்றை மேற்கோள் காட்டி ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக முற்றிலும் அழியாமல், சூழலுக்கு தக்க தங்கள் பண்பாட்டில் சில கூறுகளை மாற்றிக்கொண்டு பயணித்திருக்கிற
தமிழர்களின் உணவு, உடை, வாழ்வியல் , அவர்களின் சடங்குகள், வழிப்பாட்டு முறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் போது எழும் வியப்பு இந்நூல் முழுவதும் விரவியிருக்கிறது.
ஒரு பெண் விதவையானால் பெண்ணின் சகோதரன் அவளுக்கு கோடித்துணி போர்த்தும் வழக்கமொன்று இன்று வரை நடைமுறையில் உண்டு. கோவையில் மட்டும் இச்சடங்கு இன்று வரை வித்தியாசமாக நடப்பதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கைம்பெண் ஆனவளின் கையில் அவளது சகோதரன் நூல் நூற்கும் தக்களியையும் கொஞ்சம் பஞ்சையும் கொடுத்து, “கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டு பஞ்சு இருக்கு, நூறு வயசுக்கும் நூற்று பிழைச்சுக்கோ ” என்று சொல்லும் வழக்கம் இருக்காம்.
இது போல நிறைய இன்றும் மறையாமல் இருக்கும் சடங்குகள் குறித்தும் , பார்ப்பனரல்லாதோரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ மதம் எப்படி உருமாறியது, பார்ப்பனீயம் எப்படி அதனை உள்ளிழுத்துக்கொண்டது. திராவிடம் மக்களின் பண்பாட்டில் செய்த மாற்றம் என பலவற்றை ஆசிரியர் தொகுத்திருக்கிறார்.
இப்போது நாம் பண்பாடு, கலாச்சாரம் என பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் மூலத்திலிருந்து எந்தளவு உருமாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்’.
Like
Comment
Share

5 Co