Tuesday 4 May 2021

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

 பண்பாட்டு அசைவுகள் (அறியப்படாத தமிழகம் & தெய்வங்களும் சமூக மரபுகளும்)

ஆசிரியர்: தொ. பரமசிவன். காலச்சுவடு பதிப்பகம் .
மிகவும் தொன்மையான மொழியான தமிழின் ஆதிக்கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமென்பது நமது வேர்களை தேடி கண்டடைகின்ற குதூகலம் தரவல்லது.
நாம் ஒரு பொருட்டாக கருதாதில் கூட வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிந்துள்ளன என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்களின் கட்டுரை வாயிலாக தான் அறிய முடியும்.
சங்க இலக்கியம் காலம் தொட்டு தமிழர்களின் பண்பாடு, சமண மதத்திற்கு சென்று, பின் பக்தி இயக்கமாக சைவமும் வைணவமும் செழித்தோங்க, சமண மதம் சந்தித்த சரிவும், பரத்தமை உருவான விதம், சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், விஜயநகர பேரரசு செலுத்திய ஆதிக்கம், அதன் விளைவாக தெலுங்கர்கள் குடியேற்றம், அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்டவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என விரிவாக பேசுகிறது
இந்தநூல் வாசிக்க வாசிக்க தமிழர் பண்பாடு எது என்பது குறித்த ஐயம் பலமாக எழுகிறது. பண்பாட்டின் எச்சங்கள் ஆங்காங்கு இன்றும் நடைமுறையில் இருந்தாலும், உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனித்த அடையாளத்தை கிட்டத்தட்ட அழித்தே வருகிறது எனலாம்.
சிறுதெய்வ வழிபாடு மட்டுமே தமிழர்களின் வாழ்வியலாக இருந்த நிலையில், பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய விதமும், அது பல இடங்களில் சிறு தெய்வ வழிபாட்டை தனக்குள் இணைத்து கொண்ட விதம் குறித்தும் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவற்றை மேற்கோள் காட்டி ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக முற்றிலும் அழியாமல், சூழலுக்கு தக்க தங்கள் பண்பாட்டில் சில கூறுகளை மாற்றிக்கொண்டு பயணித்திருக்கிற
தமிழர்களின் உணவு, உடை, வாழ்வியல் , அவர்களின் சடங்குகள், வழிப்பாட்டு முறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் போது எழும் வியப்பு இந்நூல் முழுவதும் விரவியிருக்கிறது.
ஒரு பெண் விதவையானால் பெண்ணின் சகோதரன் அவளுக்கு கோடித்துணி போர்த்தும் வழக்கமொன்று இன்று வரை நடைமுறையில் உண்டு. கோவையில் மட்டும் இச்சடங்கு இன்று வரை வித்தியாசமாக நடப்பதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கைம்பெண் ஆனவளின் கையில் அவளது சகோதரன் நூல் நூற்கும் தக்களியையும் கொஞ்சம் பஞ்சையும் கொடுத்து, “கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டு பஞ்சு இருக்கு, நூறு வயசுக்கும் நூற்று பிழைச்சுக்கோ ” என்று சொல்லும் வழக்கம் இருக்காம்.
இது போல நிறைய இன்றும் மறையாமல் இருக்கும் சடங்குகள் குறித்தும் , பார்ப்பனரல்லாதோரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ மதம் எப்படி உருமாறியது, பார்ப்பனீயம் எப்படி அதனை உள்ளிழுத்துக்கொண்டது. திராவிடம் மக்களின் பண்பாட்டில் செய்த மாற்றம் என பலவற்றை ஆசிரியர் தொகுத்திருக்கிறார்.
இப்போது நாம் பண்பாடு, கலாச்சாரம் என பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் மூலத்திலிருந்து எந்தளவு உருமாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்’.
Like
Comment
Share

5 Co

No comments:

Post a Comment