Monday 27 March 2017

சமூக வலைத்தளத்தில் பெண்கள்

சமூக வலைத்தளம் பெண்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் பல நல்லவை, அதிலும் குறிப்பாக ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகளவில் (வதந்தியும் கூட :P)  சென்று சேர்கிறது. அதுவும் தனிமையில் இருக்கும் பெண்களுக்கு Fb மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். ஆனால் நாம் லேசாக சறுக்கினால் மிகப்பெரிய மன உளைச்சலை கொடுப்பதும் இது தான்.  இன்றைய இளைய தலைமுறை பெண்கள் மத்திம வயது பெண்களை விட அழகாகவே சமூக வலைத்தளத்தை கையாளுகிறார்கள்.

ஆனால் மத்திம வயதில், பிள்ளைகள் ஓரளவு வளர்ந்துவிட்டு தங்கள் உலகத்துக்குள் நுழையும்போது அவர்களை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்டு வந்த பெண்கள் ஒரு மிகப்பெரும் வெறுமையை உணர்வார்கள். உடல்  தோற்றத்தில் இயற்கையாய்  நிகழும் மாற்றங்கள், ஹார்மோன்களின் மாற்றத்தினால் நிகழும் உளவியல் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் கழிவிரக்கமும் பெரிதும் பாதிப்பதால் நிலைகுலைந்து போகின்றனர் பல பெண்கள். பெரும்பாலான பெண்கள் மனம்விட்டு பேசகூட யாரும் இல்லாமல் புழுங்கிகொண்டிருக்கும் சூழ்நிலையில் யார் மூலமோ அல்லது குடும்பத்தினர் மூலமோ சமூக வலைத்தளத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள்.

பேசுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பெண்களின் இன்பாக்ஸ்கள் ஆண்களால் தட்டப்படும்போது, அவர்களை எதை நோக்கி நகர்கிறோம் என்று அறியாமலே செல்கின்றனர்.

சாட்டிங் சரி, தவறு என்ற பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பல பெண்கள் இந்த சாட்டிங் என்ற விஷயத்தை கையாள தெரியாமல் பல விபரீத சிக்கலுக்குள் சிக்கி கொள்வதுடன் அதனால் மன நிம்மதியை இழக்கிறார்கள். சில பெண்கள் என்னுடன் பகிர்ந்ததின் அடிப்படையில் சில விஷயங்களை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு பெண் நான் ஜோவியலாக பேசுபவள் மேம், அதே போல தான் பேசினேன், ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் He cracked my mind, I don’t know whr I slipped, அதன் பின் என்னால் நார்மலாக இருக்க முடியவில்லை. மிக அழகான குடும்பம், சொந்த பிஸினஸ் ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இதிலிருந்து மீள வழி தெரியவில்லை என்றார்.

வேறு ஒரு பெண், காபி சாப்பிட கூப்பிட நான் சென்றேன், அதை பற்றி தவறாக என் உறவினரிடம் எல்லாம் சொல்லி எனக்கு வீட்டில் ஏகப்பிரச்சனை என்றார்.  மற்றோருவர் சாட்டிங்கில் இருக்கும் போது ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சமயத்தில் பகிர்ந்து கொண்ட விஷயத்தை வைத்து மிரட்டுவதாக கூறினார். இவர்கள் அனைவருமே எந்த உள்நோக்கமுமின்றி பழகிய போதும் அது ஏதோ ஒரு இடத்தில் தவறியிருக்கிறது. இதில் அந்த ஆண் மேல் தவறு, இந்த பெண் மேல் தவறு என்பதை எல்லாம் தாண்டி நாம் சாட்டிங் செய்ய, நமது பிரச்சனைகளை பகிர தேர்ந்தெடுக்கும் நட்பு, அது ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி இங்கு தான் அறிமுகமாகிறார்கள் என்றால், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கள் பாலியல் தேவைக்காக தான் வருகிறார்கள் என்கிற அபத்தங்கள் அதிகம் என்பதால், நாம் தேர்ந்தெடுக்கும் நட்புகளையும், நமது தேடலில் உள்ள தெளிவையும் பொறுத்தே அனைத்தும் அமையும்.  ஒரு விஷயத்தை பெண்கள் தெளிவாக புரிந்து கொண்டாலே பல சிக்கலில் விழாமல் தப்பிக்கலாம். நமது பிரச்சனையை கேட்கும் அனைவராலும் அதனை புரிந்து கொள்ளவோ, உணரவோ முடியாது என்ற புரிதலை ஏற்படுத்தி கொள்வது அவசியம்.

பெண்கள் பேச்சால் அதிகம் ஈர்க்கப்படுவதால், மிக எளிதில் வார்த்தைகளை நம்பிவிடுகின்றனர். வார்த்தைகளுக்கு பின் இருக்கும் உண்மையின் நம்பகத்தன்மையை பற்றி சந்தேகிக்காமல் இருந்துவிடுவதால் பல சிக்கல்களில் சிக்கி கொள்கிறார்கள். கணவனுக்கு தெரியாமல் பணம் கொடுத்து அதனால் சிக்கலுக்குள் சிக்கிகொண்ட பெண்களும் உண்டு. ஆண்கள் ஏமாந்ததாகவும் கூறி பெரிய பஞ்சாய்த்துகள் நடந்தது. இதில் தவறு இருவர் பேரிலும் தான்.. பண விவகாரங்கள் நெருங்கிய உறவினர்களிடம் கூட பகையை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்க, அதிக பழக்கமில்லாத, இன்னும் சொல்லப்போனால் நேரில் பார்த்திராதவர்களுக்கு கூட எதன் அடிப்படையில் பணம் கொடுக்கிறார்கள் என்பது பெரிய புதிர். இதனால் பணம் மட்டுமல்லாமல் தங்கள் நிம்மதையையும் தொலைத்த பெண்களும் உண்டு.

நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும். பெரும்பாலான ஆண்கள் பெண்ணிடம் பேசுவதில் உண்டாகும் கிளர்ச்சிக்காக பேசுகிறார்களே தவிர, எந்த கமிட்மெண்டுக்குள்ளும், சிக்கி கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களும் அந்த கிளர்ச்சி தேவைப்படுவதால் தான் பேசுகிறார்கள் என்றாலும், அதை அவர்களாலேயே ஒத்துக்கொள்ள முடியாது. ஆழ்மனதில் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் கற்பு, ஒழுக்கம் சாந்த நெறிமுறை அவர்களை ஒத்துக்கொள்ள வைக்காது. இதனால் பெண்கள் செண்டிமெண்ட், காதல், என்று ஏதாவது புனித பிம்பத்திற்குள் தங்கள் ஈர்ப்பையும் கிளர்ச்சியையும் பொதித்து வைப்பதால் வெகு எளிதில் சிக்கலுக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பொறுப்புகள் பற்றிய பேச்சுகளில் ஆண்கள் கழுவுகிற மீனில் நழுவிகிற மீனாக தான் பேசுவார்கள். அனைத்து ஆண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. தோழமையாக பகிர்வதற்காக நட்புகளை தேடுகிற ஆண்களும் உண்டு என்றாலும் அது வெகு சிலரே. வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்று நுழையும் ஆண்கள் பெண்ணிடம் பேசுவது கிளர்ச்சிக்காக தான் என்பதை தெளிவாக  உணர முடியாத பெண்கள் அவர்களின் அன்பான ஒன்றிரண்டு வார்த்தைகளில்யே சிக்கிக்கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அடுத்து டெலி செக்ஸ் (இது பற்றி விரிவாக பதிய வேண்டும் என்றாலும் நீளம் கருதி சுருக்கமாக) என்ற கட்டத்துக்குள் நகரும் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இயற்கையில் ஆண் பெண் உறவு, கற்பனையில் இருப்பது போல எல்லா தருணங்களும் அமையாது. பாலியல் உறவு உடல் சார்ந்து மட்டுமல்லாமல், மனம், குடும்பம்,  பாதுகாப்பு, ஆரோக்கியம் இவை அனைத்தும் சார்ந்தே அமையும். இது பற்றிய புரிதல் பெண்களுக்கு அவசியம். சில ஆண்களால் மிகைப்படுத்தி சொல்லப்படுகின்ற டெலி செக்ஸ், வார்த்தைகளை நம்பி நன்றாக செல்லும் குடும்ப வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்கி கொள்ளும் பெண்கள் இழப்பது என்னவென்று தெரியாமலே இழக்கிறார்கள்.





Menopause - 2

ஹார்மோனல் இம்பாலன்ஸ்  காரணமாக Pre menopause, Peri menopause & PCOD , இதில் முதல் இரண்டு  நிலைகளில் பிரச்சனைகள் மனரீதியானது அதிகம். அதன் காரணமாக உடலில்  ஏற்படும் குளறுபடிகள். முட்டையிலிருந்து கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததால் என்ற கேள்விக்கு பதில் தெரியாதது போல,  மனரீதியான பிரச்சனைகளால் உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து உடல் சோர்வாகிறதா? அல்லது  உடல் ரீதியான பிரச்சனைகளால் மனம் பாதிக்கப்பட்டு சோர்வாகிறதா என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முதல் மையக்காரணம் கிட்டத்தட்ட நமது பதினான்கு வயதில் இருந்து உருவாகி வரும் சினைமுட்டைகள், அதன் காரணமாக உடலில் ஏற்படும் மாதாந்திர சுழற்சி தன்னுடைய சேவையை நிறுத்தி கொள்ள ஆரம்பிப்பதே ஆகும். எனவே சினை முட்டைகள் உருவாக காரணமான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஸ்ட்ரோஜன் ஹார்மோர்ன் இரண்டும் அதீதமாக சுரப்பது அல்லது சரியான அளவில் சுரக்காமல் இருப்பது. சொல்லப்போனால் ரோலர் கோஸ்டர் போல ஹார்மோர்ன் உற்பத்தி ஏறி இறங்குவது என்கின்றனர் மருத்துவர்கள். அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல, உதிரப்போக்கு நிற்கபோவதை நமக்கு அலாரம் அடித்து நமது உடல் தெரியப்படுத்துகிறது என்று கூறலாம்.

இத்தகைய ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சிக்கு இது தான் காரணம் என்று மருத்துவர்களால் அறுதியிட்டு கூறமுடியாத போதும், இன்றைய ஸ்ட்ரெஸ்சான வாழ்க்கை முறை மிக முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இன்னொன்று ஹெரிடிட்டி மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிக்கும் போது இருந்த பிரச்சனைகள் மகளுக்கு வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அம்மாவுக்கு இல்லாமல் கூட மகளுக்கு இருக்கலாம், காரணம் தற்போதைய ஸ்ட்ரெஸ்.

கூட்டுக்குடும்ப சிதைவு  ப்ரீ மெனோபாஸ் காலகட்டத்தை கடக்கும் பெண்களுக்கு பேரிழப்பு என்று சொல்லுவேன். இந்த வயது பெண்கள் பெரும்பாலோருக்கு டீன் ஏஜ் குழந்தைகள் இருக்கும் காலம். இயற்கையாகவே இந்த டீன் ஏஜ் பருவத்தில் தான் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமிடையே கொஞ்சம் பிரச்சனைகள் முளைவிட தொடங்கும், மெனோபாஸில் இருக்கும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது அந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாக ஏற்பட்டு உறவில் விரிசல் ஆரம்பிக்கும்.

மற்றொரு பக்கம் மெனோபாஸை கடக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் இருந்தால், அவர்கள் படிப்பிற்காகவோ, வேலை நிமித்தமாகவோ, அல்லது திருமணம் செய்து கொண்டோ பிரிந்து செல்லும் சூழல் வரலாம்.. இதனால் ஏற்படும் தனிமையும் வெறுமையும் வேறு வகை பிரச்சனையாக இந்த வயது பெண்களை பிடித்து ஆட்டி வைக்கிறது.

வாழ்க்கையில் மிக சாதாரணமாக கடந்து வந்த விஷயம் கூட பயமும் பதட்டமும் உடையதாக மாறி நாம் எதிர்பார்க்காதவிதமாக அலைகழிக்கும். சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாக தோன்றும். இது எனக்கு நேர்ந்திருக்கிறது. என்னுடைய ஆவேசத்தை பின்னால் யோசித்து பார்த்தால் நாம் தானா என்று தோன்றினாலும், அந்த நேரத்தில் அவுட் பர்ஸ்ட்டை கைகொள்வது எளிதல்ல.

வேலைக்கு செல்லும் பெண் சோர்வு, மட்டும் வேறு சில அசெளகரியங்களை அனுபவிக்கிறாள் எனும்போதும், வேலையே ஒருவிதத்தில் ஸ்ட்ரெஸ் மற்றும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து காக்கிறது. இதை நான் என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். ஆரம்பத்தில் உடல் நிலை படுத்தியதில் வீட்டிலுள்ளவர்கள் வேலையை விட சொல்லி வற்புறத்த நான் வேலையை விட்டேன். ஒன்றிரண்டு வருடம் சும்மாவும் இருந்தேன். ஆனால் அது எனக்கு கூடுதல் ஸ்ட்ரெஸ்சாக தான் அமைந்தது. அதனால் மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினேன். ஒரு கமிட்மெண்ட், பொறுப்பும் இந்த நேரத்தில் என்னை பல தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து விடுதலை பெற செய்கிறது. அதனால் உடல் நிலைக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தாத வரை வேலையை விடுவதை பற்றி தீர யோசித்து முடிவெடுக்கவும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக அக்கம் பக்கமும் இல்லாமல், வீட்டில் அதிக வேலை சுமையும் இல்லாமல் இருப்பவர்கள் அதிகளவில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பார்க்கும் டிவி தொடர்கள் அவர்களின் எதிர்மறை எண்ணத்தையும், கழிவிரக்கத்தையும், பழி உணர்ச்சியும் தூண்டுவதாக தான் இருக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம் உங்களை எந்த விஷயம் பாதிக்கிறதோ அதிலிருந்து முழு முற்றாக வெளியே வந்து விடுங்கள். சில நேரஙக்ளில் டிவி தொடர்களில் வரும் சம்பவங்கள் கூட நீங்கள் என்றோ மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தி உங்களை முழு முற்றாக அலைக்கழிக்கும். எவ்வளவு முயன்றாலும் சில எண்ண சுழற்சியில் இருந்து வெளிவர முடியாமல், மீண்டும் மீண்டும் மனம் அதற்குள்ளேயே நிற்கும். மிக ஜாக்கிரதையாக உங்களை நீங்கள் உற்று கவனித்து உங்களை பாதிக்கும் விஷயத்திலிருந்து வந்துவிடுங்கள்.

மேலும் அந்த மாதிரி ஒரு எண்ண சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டு வெளி வர முடியாமல் நீங்கள் தத்தளிக்கும்போது சட்டென எழுந்து மொட்டை மாடி போன்ற நல்ல காற்றோட்டமான இடத்திற்கோ, இல்லை உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயில் அல்லது அதிகமாக மக்கள் கூட்டமுள்ள ஏதோ ஒரு கடை செல்லுங்கள். விண்டோ ஷாப்பிங் அல்லது, கடற்கரை நான் தேர்ந்தெடுப்பேன். தனிமையில் நீண்ட நேரம் உட்கார, அந்த எண்ண சுழற்சியும், அதனால் ஏற்பட்ட கொதிப்பும் மெல்ல மெல்ல விடைபெறுவதை உங்களால்  உணர முடியும். நான் உணர்ந்திருக்கிறேன்.

என் தோழி ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்வது ஒரு விதத்தில் ஆசுவாசமாக இருக்கிறது. எவருடனும் பேச பழக பிடிக்கவில்லை, நான் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு தனித்தே இருக்கிறேன் என்கிறார். ஆனால், தனிமை கழிவிரக்கமாக மாறி தற்கொலை எண்ணம் வரை கொண்டு போகும் எனவே  தனிமையில் இருந்தாலும் உங்களை நீங்கள் வேறு எதிலாவது முழுமையாக ஈடுபடுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அது உங்களுக்கு பிடித்தமான விஷயமாக தேர்ந்தெடுத்து கொள்வதும் உங்கள் பொறுப்பு. நான் புத்தக வாசிப்பை தேர்ந்தேடுத்தேன்.

ஹார்மோர்ன் மாத்திரைகள் எடுக்கும்போது அதற்கான பக்கவிளைவுகளும் கண்டிப்பாக உண்டு. மருத்துவர்கள் இதனை சொல்லியே தான் தருகிறார்கள். ஆனால் சித்த மருத்துவத்தில் ஹார்மோர்ன் மாத்திரைகள் இல்லாமல் மனரீதியான பதட்டம் குறைக்கவும், ஹார்மோர்ன்கள் சீராக சுரக்கவும், மாதாந்திர உதிரப்போக்கு சீராக வருவதற்கும் மருந்து மாத்திரைகள் தருகிறார்கள். அது பக்க விளைவுகள் இல்லாமல் ஓரளவுக்கு எனக்கு நல்ல பலன் தந்தது. மருத்துவர்களை கவனமாக தேர்ந்தேடுக்க வேண்டியது இதில் முக்கியம்.


மைக்ரேன் என்னும் தலைவலி கொடிய அரக்கனாக நம்மை பந்தாடும். இந்த மைக்ரேன் எனக்கு இருபது வருடங்களுக்கு மேலாக இருப்பதால் இதனுடன் கொஞ்சம் பரிச்சயமாகிவிட்டதால் முன்னேற்பாடாக சில ஏற்பாடுகளை செய்து தவிர்க்க முயற்சிப்பேன். அப்படியும் மாதவிலக்கும் ஆரம்பிக்கும் முன் வரும் வலி மாத்திரைகளுக்கு எல்லாம் போக்கு காட்டி இரண்டு அல்லது மூன்று தினங்கள் விருந்தினராக இருந்து படுத்தி எடுத்து விட்டு தான் செல்லும். ஓய்வு மட்டுமே இந்த தலைவலிக்கு தீர்வாக இருந்திருக்கிறது. உங்கள் மனதை பாதிக்கும் அல்லது உங்களுக்கு எரிச்சல் மூட்டுபவர்களை இந்த நாட்களில் கூடுமானவரை தவிருங்கள், அல்லது அவர்களிடம் எந்த பேச்சும் கொடுக்காமல் இருங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவும், சாத்துக்குடி ஜூஸ் சர்கரை, ஐஸ் சேர்க்காமல் இரண்டும் நல்ல பலனை கொடுத்தது எனக்கு. எவ்வளவு முன் ஜாக்கிரைதயாக இருந்தும், சில நேரங்களில் தலைவலியில் தப்பிக்காமல் இருக்க முடியாது. நமக்கு ஒவ்வாத விஷயங்கள் அத்தனையும் வரிசைகட்டி அரங்கேறி நம்மை டென்ஷனாக்கி விட்டு தான் செல்லும்.. J

எனக்கு முகத்தில் வந்து நர்த்தனமாடிய பரு மிகப்பெரும் சோர்வை தந்தது. பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்து ஆங்கில, சித்தா, ஆயூர்வேதிக் என அனைத்து முறைகளையும் பின்பற்றினேன். ஒருகட்டத்தில் ரோட்டில் பார்ப்பவர்கள், என்னுடன் பயணிப்பவர்கள் எல்லாம் என் முகத்தின்  கரும்புள்ளிகளை பார்த்து டிப்ஸ் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையும் செய்தும் எதற்கும் பருக்கள் குறையவே இல்லை. இறுதியாக ஆப்பிள் சிடிகர் வினிகர் (organic with mother) ஆன்லைனில் வாங்கினேன். ஏனென்றால் ஆர்கானிக் எனக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் கிடைக்கவில்லை. இந்த வினிகரை ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு தண்ணீர் கலந்து பஞ்சில் தோய்த்து தாடைப்பகுதிகளிலும், கன்னத்திலும் போட அதன் வீரியம் ஓரளவு குறைந்தது. இது எந்த மருத்துவத்திலும் எனக்கு கூறப்படவில்லை. நானாக நண்பர்கள் அனுபவத்தின் மூலமும், இணையத்தில் இது பற்றி தகவல்கள் திரட்டியும் முயற்சித்தேன். ஓரளவு பலன் கிடைத்தது. இதை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய இடத்தில் இந்த வினிகரை தடவி, பாதிப்பில்லை என்றால் தொடரலாம்.  குறிப்பாக இந்த காலகட்டங்களில் மேக்கப்பை தவிர்த்து விடவும். பவுடர் கூட போடாமல் இருத்தல் நலம். டாக்டர் பரிந்துரைக்கும் பேஸ் வாஷ் மட்டும் உபயோகிக்கவும்.

இந்த ப்ரீ மெனோபாஸ் நான்கு வருடங்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் அல்லது அடுத்த மாதமே கூட சரியாகலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். ஆங்கில மருத்துவரே பரிந்துரைப்பது யோகாவும், உடற்பயிற்சியும். அதுமட்டுமல்லாமல் லைப் ஸ்டைல், உணவு பழக்கம் மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என்கின்றனர். மருத்துவர்களுடன், உங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தை எளிதில் கடந்துவிடலாம். மருத்துவரிடம் ஆலோசனை செல்லும்போது குடும்பத்தினரை அழைத்து செல்வதுடன், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனம் திறந்து குடும்பத்தினரிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

அனைத்தையும் விட மிக முக்கியமானது, உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் நீங்கள் காட்டும் அக்கறை மட்டுமே இந்த மெனோபாஸை கடக்க உதவும்.. உடற்பயிற்சி, யோகாவை சோம்பல் இல்லாமல் செய்தால் இந்த ப்ரீ மெனோபாஸை எளிதில் முறியடித்துவிடலாம். பெண்கள் எவ்வளவோ தடைகளை தாண்டிவிட்டோம். இதனை தாண்ட மாட்டோமா.. சியர்ஸ்..


கமலி பன்னீர்செல்வம்

Menopause - 1

நாற்பது நெருங்கும் அல்லது நாற்பதை கடக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அதே நேரம் கடுமையான காலகட்டத்தை கடக்கிறார்கள். மெனொபாஸ்சுக்கு முந்தைய இந்த காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எல்லா பெண்களும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்பது தான் சிக்கலே. அதனால் பிரச்சனைகளுக்கு தகுந்த மருத்துவம் எடுத்து கொள்வது தான் சரியான வழி.

உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் மிக சாதாரணமாக இந்த மெனோபாஸை கடப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் மெனொபாஸ்சுக்கு முந்தைய நிலையான (PMS) & (PCOS, PCOD)  என்கிற நிலையை கடக்கும் பெண்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். என்னுடைய இந்த கட்டுரை அத்தகைய பெண்களுக்கானது. அத்தகைய நிலையை கடந்து வருவதாலும், அதுபோன்ற நிலையை கடக்கும் பெண்கள் பலருடன் பேசியதிலும் அவர்கள் பிரச்சனைகளையும் சேர்த்தே எழுத முயற்சிக்கிறேன். கண்டிப்பாக யாருக்காவது உதவக்கூடும்.

முதலில் PMS -  அதாவது ப்ரீ மெனோபாஸ்  - முப்பதுகளின் இறுதியில் ஆரம்பிக்கும் இது சிலருக்கு நாற்பதுக்கு மேல் தொடங்கலாம். இந்த வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள், கால் வலியாக இருக்கலாம், அல்லது தலைவலி, முதுகுவலி, பசியின்மை, திடிரென்று அதிக உதிரப்போக்கு, உதிரப்போக்கு கண்ணில் படும் ஆனால் முதல் மூன்று நாட்கள் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று நான்காம் ஐந்தாம் நாள் அதீத உதிரம் என்று பிரச்சனை சிறியதாக ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் கவனமெடுத்து ஒரு இரண்டு மாத மாதாந்திர ப்ரீயட்ஸை நோட் செய்யவும். இது தவிர அதீத மூட் ஸ்விங் உணரலாம். திடீரென்று காரணமே இல்லாமல் சந்தோசமாக பாடி ஆட வேண்டும் என்ற உணர்வோ அல்லது அதீத எரிச்சலோ, கோவமோ ஒன்றின் முடிவில் இன்னொன்று என்று சட்டென உணர்ச்சிகள் மாறி மாறி ஆட்கொள்ளலாம்.

எந்த மருத்துவரை சந்திக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெளிவாக கூறுங்கள். வயதை எக்காரணம் கொண்டும் குறைக்காதீர்கள்.  சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன், அல்லது பிரீயட்ஸ் நடக்கும் போது நீங்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளை  முதலிலேயே கூறினால் தான் மருத்துவரால் டயாக்னைஸ் செய்ய முடியும். இல்லை உங்களுக்கு PMS இருப்பதை டாக்டர் உணரவே நாட்கள் பிடிக்கும்.

அதுபோல பருக்கள் இதனை ஆங்கில மருத்துவர்கள் Acne என்கிறார்கள். இந்த பருக்கள் சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் போது வந்து, பிரியட்ஸ் முடிந்தவுடன் மறையும் பருக்களாக இருக்காது. தாடைகளில் அதிகளவும், கன்னத்திலும் நீங்கள் எதிர்பார்காத, இன்னும் சொல்ல போனால் நீங்கள் டீன் ஏஜில் கூட அனுபவித்திராத அளவு இருக்கும். இதற்கு ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்வதை விட, இந்த வயதில் இருக்கும் பெண்கள், ஒரு நல்ல கைனாகலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்வது நல்லது. ஏனென்றால் எனக்கு முதலில் பரு வந்தபோது ஸ்கின் டாக்டரை தான் கன்சல்ட் செய்தேன். அவர் அதற்கான மருந்துகளை கொடுக்க பின் பக்கவிளைவுகள் என்று நகர்ந்தது தனி கதை.

இந்த பருக்கள், உங்கள் கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கு உருவாகும் கட்டிகளால் கூட இருக்கலாம். ஆரம்பத்திலேயே கைனகாலஜிஸ்ட் இது குறித்து பரிசோதனைகள் செய்யும் போது ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் கர்ப்பபையை காப்பாற்றி கொள்ளலாம். உங்களுக்கு கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டல் உடனடியாக எந்த ஸ்பெலிஸ்ட்டை பார்த்தாலும் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்யவும்.

-       சாதாரணமாக பீரியட்ஸ் சமயத்தில் வரும் வயிற்றுவலி, கால்வலி, முதுகு வலி  லேசாக இருந்தாலும் பொருட்படத்தாமல் கடப்பவர்களுக்கு வலி அதிகரிக்கும். வலியே தெரியாதவர்கள் கூட வலியை உணருவார்கள்.

-       ஹார்மோனலின் தாறுமாறான சுழற்சி காரணமாக பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் தலைவலி ஆரம்பித்து  பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் வரை இருக்கும் தலை வலி, உதிரப்போக்கு ஆரம்பித்தவுடன் நின்றுவிடும்.

-       சிலருக்கு மார்பில் பாரத்தை சுமப்பது போன்ற வலியிருக்கும். கட்டிகள் தென்பட வாய்ப்புண்டு. அது கேன்சர் கட்டி என்று அலற வேண்டாம். சாதாரண கட்டிகளாக கூட இருக்க வாய்ப்புண்டு. ஆனால் மருத்துவரிடம் செக் செய்ய வேண்டியது அவசியம். எனக்கு ஒன்றிரண்டு கட்டிகள் இருந்தது. மருத்துவர்கள் சோதித்து பயப்பட தேவையில்லை என கூற பின் அவை கரைந்தும்போனது. பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்  மார்பை, சில நேரங்களில் அதன் காம்பை தொட்டால் கூட வலி தாங்க முடியாததாக இருக்கும்.  நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போல தோன்றும். இதுவும் பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

-       சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் முன்னர் ஒன்று அதீதமாக பசிக்கும், இல்லை சாப்பிடவே பிடிக்காது. பீரியட்ஸ் முடியும் வரை இந்த மனநிலை தொடரும்.

-       பாலியல் சார்ந்த உணர்வும் அதீதம், வெறுப்பு இரண்டு நிலைக்கும் மாறி மாறி பயணிக்கும்.

-       சாதாரணமாகவே நீங்கள் கோவப்படுபவர், கொஞ்சம் சென்ஸிடிவ் என்றால் இந்த காலகட்டம் உங்களை  அதீத கோவத்துக்கும், உணர்ச்சி குவியலுக்கும் கொண்டு செல்லும். உங்கள் குடும்பத்தினரையும் டாக்டரை கன்சல்ட் செய்யும் போது அவசியம் அழைத்து செல்லவும்.

-       மூட் ஸ்விங்க்ஸ் & டிப்ரஷன், இரண்டும் சேர்ந்து ஆட்டிபடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் ஒரு சுழல் போல உங்களை உள்ளிழுக்கும். நீங்கள் போராடினாலும் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வருவது இயலாததாக இருக்கும், உங்கள் மனதை மாற்ற மிகுந்த போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வாய் விட்டு கதறி அழ வேண்டும் என்ற உணர்வு சந்தர்ப்பத்தை எதிர்பபார்த்து காத்திருக்கும். ஒன்று யாரையாவது வார்த்தைகளால் காயப்படுத்த முயற்சிப்பீர்கள், அல்லது உங்களை நீங்களே தேவையில்லாத எண்ணங்களால் காயப்படுத்தி கொள்வீர்கள். ஸ்ட்ரஸ் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். PCOD & PCOS இரண்டு நிலையிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

-       பீரியட்ஸ் தாறுமாறாக வரத்தொடங்கும் மாதத்தில் இருமுறை, அல்லது நாற்பது, நாற்பதைந்து நாட்கள் என்ற இடைவெளியில் வருவதுடன், உதிரப்போக்கும் அதிகளவில் இருக்கும். கிட்டதத்ட்ட அது வரை சமச்சீரான உதிரப்போக்கை சந்தித்த பெண்கள் மன ரீதியாக பீதியடைவதுடன், உடல் ரீதியாக சோர்ந்து போவார்கள்.

-       இரத்த அழுத்தமும், படபடப்பும் அதிகரிப்பதுடன், இரவில் ஏஸியிலும் வியர்த்து கொட்டி எழுவீர்கள். சில நேரங்களில் தூக்கம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

-       ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சியால், உதிரப்போக்கு  மட்டுமன்றி, இரத்ததில் சர்க்கரை அளவும், ரத்த கொதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அம்மாவுக்கு இருந்தால் உங்களுக்கு வர வாய்ப்பிருப்பதால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமிது.  

-       கிட்டத்தட்ட இருபது வயதிலிருந்து நாற்பது வரை பருக்கள் வராமல் இருந்தவர்கள் முகத்தில் தாறுமாறாக பருக்கள் வந்தால் கண்டிப்பாக அது ஹார்மோர்ன் சுழற்சியால் என்பதால் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்தல் நலம்.

முதலில் ஒரு நல்ல கைனாகாலஜிஸ்டை கன்சல்ட் செய்து உங்கள் பிரச்சனைகளை தெளிவாக பட்டியலிடுங்கள். மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டியிருக்கும். ஆயூர்வேதம், சித்தாவிலும் (PMS) க்கும் அதனால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் மருத்துவம் உண்டு.

கண்டிப்பாக ஒரு ஸ்கேனும், (inculdued vaginal Scan) அவசியம். அதுபோல Pap Smear டெஸ்ட் வலியாக இருந்தாலும் செய்து கொள்ளுங்கள். ஓரளவு ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை கண்டறிய உதவும்.

என் பிரச்சனைகள் குறித்து ஓரளவு தெரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இதனால் நான் அடைந்த வலிகளும், இழந்தவைகளும் அதிகம். என்னை போல பிரச்சனையை சந்திக்கும் ஒரு தோழியும் சொன்னார் அவருக்கும் டயாக்னைஸ் செய்யவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதென்று. நான் இதனை எழுத காரணம் வாசிக்கும் பெண்கள் தங்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து கொள்ள உதவும், ஆண்கள் அத்தகைய காலகட்டத்தை கடக்கும் பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள உதவும் என்பதற்காக தான்…

கமலி பன்னீர் செல்வம்.


================= 

சிலுவையில் தொங்கும் சாத்தான்.


சிலுவையில் தொங்கும் சாத்தான். -  கூகி வா தியாங்கோ – கென்ய எழுத்தாளர். தமிழில் - அமரந்த்தா – சிங்கராயர்

இந்நூல் ஆசிரியர் ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் இருந்த போது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

இடது சாரி இலக்கியத்தை பேசும் இந்த புத்தகம், காலனி ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றாலும், இன்றும் அவர்களின் கீழ் தான் இருக்கிறோம் என்பதை பற்றி பேசுகிறது. ஆப்ரிக்கா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதையும், அவர்கள் விடுதலை என்பதை பெயரளவில் வழங்கிவிட்டு, முதலாளித்துவம் மூலம் நம் மக்களின் வியர்வையை, உழைப்பை நம்மவர்களே உறிஞ்சுவதை, நம் மக்களாலேயே நாம்  சுரண்டுப்படுவதை பற்றி தெளிவாக கூறுகிறது.

வரியங்கா என்ற பெண்ணின் மூலம் தொடங்கும் கதை அவளைமையப்படுத்தி நகர்கின்றது. நைரோபியில் ஸ்டெனோவாக வேலை பார்க்கும் அவள் முதலாளியின் சுகர் கேர்ளாக (ஆசைநாயகியாக) இருக்க மறுத்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுகிறாள். காதலனிடம் சென்று தான் சுகர் கேர்ளாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டதை தெரிவிக்க, அவன் அவளை கீழ்தரமான வார்த்தைகளால் திட்டுகிறான். அவள் சிறுவயதிலேயே பரிசு பொருட்களுக்காக கிழவனுடன், உறவு வைத்து கொண்டு பிள்ளை பெற்றவள் தானே, உன் முதலாளியிடமும் இருந்துகொண்டு பலருடன் தொடர்பு வைத்திருந்திருப்பாய். அது தெரிந்ததால் தான் முதலாளி வேலையை விட்டு நீக்கியிருப்பான் என கூசாமல் சொல்கிறான். மனம் நொந்து தனது சொந்த ஊருக்கு போக முடிவெடுத்து மன உளைச்சலுடன் தெருவில் மயங்கி சரியும் அவளை ஒருவன் காப்பாற்றுகிறான். அவன் விடைபெறும்போது சாத்தானின் விருந்திற்கான‌ அழைப்புக்கான நோட்டீஸ் ஒன்றை கொடுத்து செல்கிறான். அந்த விருந்து அவள் சொந்த ஊரான இல்மொராக்கில் நடக்கிறது. 

அந்த நோட்டீஸில் ந‌வீன‌ திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன‌ ஏழு நிபுண‌ர்க‌ளைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடப்பதாக பகிங்கிரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விழாவில் கலந்து கொள்ள அடிப்படை தகுதிஒரு முறையாவ‌து கோடிக்க‌ண‌க்கில் திருடி இருக்க‌ வேண்டும் என்று அச்சிடப்பட்ட காகிதத்தை கண்டு வரீயங்கா திகைக்கிறாள். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று குழப்பமும், சந்தேகமுமாக அது பொய்யாக தான் இருக்கும் என நினைத்து அதை தனது கைப்பையில் போட்டு விட்டு ஊருக்கு போக ஆயுத்தமாகிறாள்.

மட்டாட்டுவில் (பயணிகளை ஏற்றி செல்லும் வாகனம்) தனது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறாள் வரியங்கா. அவளுட‌ன், முதூரி என்கிற முதியவர் ஒருவரும், ஆங்கில படைக்கு எதிராக போராடிய பெண்ணான‌ வ‌ங்காரியும், க‌ல்லூரியில் நாட்டுப்புற‌ இசை ப‌ற்றி ப‌டிக்கும் மாண‌வ‌னான‌ க‌த்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராயும் பயணிக்கின்றனர். மாட்டுடாவை ஓட்டும் டிரைவராக முவாரா.  இவர்களின் கலந்துரையாடலில்‌‌ கென்ய‌ விடுத‌லை போராட்ட‌ வரலாற்றையும், விடுத‌லைக்கு பின்னான‌ நிலையையும் பேசப்படுகிறது. இந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே கென்ய விடுதலை போராட்டம் பற்றி தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தூய்ரியா பணக்கார ஆப்ரிக்க குடும்பத்தில் பிறந்தாலும், கென்ய மக்கள், கென்ய முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் மனப்பாங்கு உள்ளவனாக இருக்கிறான். மண்ணின் இசையை மீட்டெடுக்க வேண்டி பூர்வகுடிகளின் இசையை ஆராய்கிறான். இந்த மாட்டுடாவில் பயணிக்கும் அனைவரும் சாத்தான் விருந்துக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அந்த விருந்தில் நவீன திருடன் கிரீடம் சூட்ட வந்திருக்கும், மக்களை சுரண்டும் பெருமுதலாளிகள் (நவீன திருடர்கள்) தாங்கள் எப்படியெல்லாம் மக்களிடம் இருந்து உழைப்பை, பணத்தை சுரண்டுகிறோம் என்பதை எல்லாம் விரிவாக கூறுகிறார்கள். பிரிட்டிஷ் விட்டு சென்ற ஆட்சிக்கு பிரதிநிதியாக மாறி தங்கள், பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். இவர்களின் சொத்துகள், இவர்களுக்கு இருக்கும் கார்கள், பங்களாக்கள், மனைவிகள், சுகர் கேர்ள்ஸ்,  மூலம் தெரியப்படுத்துகின்றனர்.

அந்த நவீன திருடர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை பதிவு செய்கிறது. நாமும் சுரண்டப்படும் ஒரு வர்க்கம் என்பதை வாசிக்கும் போது உணரமுடிகிறது. ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மை வாசிப்பவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ப்ரிட்டிஷ் காலனி மதத்தை துணைக்கு வைத்து மக்களை எப்படி சிந்திக்க விடாமல் மழுங்கடித்தது என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதமும், ஆங்கிலேயர்கள் சுரண்டும் வரை சுரண்டிவிட்டு எஞ்சியதை சுரண்ட, தனது கூலியாட்களை நியமித்து சென்றிருப்பதையும் முகத்தில் அறைந்தாற் போல எழுதியிருக்கிறார் ஆசிரியர். கென்யாவை எடுத்துவிட்டு இந்தியாவை அந்த இடத்தில் பொருத்தி பார்த்தால், அதே அழிவு நம்மிடையேயும் அவர்கள் நிகழ்த்தியிருப்பதை உணர முடியும். இந்த நூல் பேசும் அரசியல் முக்கியமானது. முதலாளித்துவத்துக்கு அடிமையாகிபோய் கிடக்கும் மக்களின் உணர்வுகளை மதம் எப்படி எழ விடாமல் பார்த்து கொள்கிறது என்பதை தெளிவாக பேசுகிறது.
அரசியல் தவிர்த்து பெண்ணின் நிலையை பார்த்தால், அவள் மீதான பாலியல் சுரண்டல், தேசம் கடந்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதை தான் வரீயங்கா, வங்காரி கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.  

வங்காரி திருடர்கள் நடத்தும் விருந்துக்கு போலீசாரை கூட்டிவர அவள் கலகம் செய்ய முயற்சிப்பதாக கைது செய்யப்படுகிறாள். அதிகார வர்க்கம் என்பது சில்லறை திருடர்களை பிடிக்கவே, பெரும் திருடர்களுக்கு அவை சாமரம் வீசுகிறது என்பதை வங்காரி கைதின் மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறர். நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நிற்பது போல தோன்றினாலும், அது ஆளும்வர்க்கத்தின் கைப்பாவை தான் என்பதை வங்காரி கைதின் மூலம் ஆசிரியர் மறைமுகமாக சொல்கிறார். போராளியாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை வங்காரி கதாப்பாத்திரம் மூலம் சொல்கிறார் ஆசிரியர்.

சிறுமியில் இருந்து இளம்பெண்ணாக மாறும் நேரத்தில் வரீயங்கா மனதில் சிறகடிக்கும் கனவுகளும், கற்பனைகளும், கள்ளம்கபடமில்லா அவள் குழந்தைத்தனமும் உலகம் முழுதும் உள்ள பெண்களுக்கான பதின் பருவ உணர்வு. அவளின் ஆசை, அவளது  உள்ளத்தை பற்றி கவலை இல்லாமல், அவளின் இளமையால் ஈர்க்கப்படும் பணக்கார கிழவன் ஒருவன் ஆசை வார்த்தைகளால் அவளுக்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதாக பகட்டான உலகத்தை காட்டுகிறான். அந்த பகட்டில் மயங்கும் வரீயங்கா பணக்காரனின் படுக்கையறை விளையாட்டு பொம்மையாக தான் ஆக்கப்படுவது தெரியாமல் அவனுடன் சந்தோஷமாக நாட்களை கடத்துகிறாள். விளைவு எஞ்ஜினீயரிங் கனவில், படிப்பில் முதல் மாணவியாக வரும் அவள் படிப்பின் மீது நாட்டம் குறைந்து கேளிக்கையில் நாட்டம் கொள்கிறாள். அவனால் கர்பமாகிறாள். அவள் கர்பமானவுடன் காணாமல் போகிறான், போகும் போது அவளை எளிதில் எவருக்கும் இணங்க கூடிய க்ரீந்தி என்று சொல்லி செல்கிறான்.

மனமுடைந்து தற்கொலைக்கு இருமுறை முயற்சிக்க இருமுறையும் காப்பாற்றப்படுகிறாள். அப்பா அம்மாவிடம் தங்கி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுக்கிறாள். அம்மாவிடமே குழந்தையை வளர்க்கிறாள். யதார்த்த உலகம் புரிபட கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வருகிறாள். கடுமையாக படித்தாலும் முன்பு போல முடியாமல் செகரட்ரி வேலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு வேலையை தேடி கொள்கிறாள். அப்போது ஒரு இளைஞன் மீது மீண்டும் காதல் வயப்படுகிறாள். அவன் படிப்பு செலவுக்கு பணம் தருகிறாள் தன் சம்பாத்தியத்தில், அவனின் வார்த்தைகள் மீண்டும் அவளுக்குள் காதல் மலர செய்கிறது. ஆனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டதும், அவளின் ஆரம்ப கால கதை தெரிந்த அவன் அவளை க்ரீந்தி (பலருடன் உறவு கொள்பவள்) என்று சொல்லி புறக்கணிக்கிறான்.

இந்த கதையெல்லாம் தன்னுடன் பயணிக்கும் கத்தூர்யாவிடம் கூறுகிறாள். பின் எதற்காக அவனிடம் கூறினோம் என்று தன்னை தானே ஆச்சரியத்துடன் கேட்டு கொள்கிறாள். கத்தூர்யாவுக்கும் வரீயங்கா மீது ஒரு அன்பு மலர்கிறது. அவள் மெல்ல மெல்ல போராடி தனது பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கிறாள். தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்த வரீயங்கா, போராடி பொறியியல் படிக்கிறாள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்கிறாள். கந்தூர்யவுடன் மலரும் அன்பு அவர்களுக்கிடையேயான உறவு மிக யதார்த்தமாக உணர்வு தளத்தில் அழகாக நிகழ்கிறது. கந்தூர்யா யார் என்று தெரியுமிடம் கதையின் மற்றொரு திருப்பம்.  

இறுதியில் வரியங்கா சிறுவ‌ய‌தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய‌ வயதான‌ ப‌ண‌க்கார‌னை கொல்வ‌துடன் நாவ‌ல் முடிகின்ற‌து.

இடதுசாரி சிந்தனைகளும், முதலாளித்துவத்துக்கு எதிரான சிந்தனையும் நாவல் ஒரு சேர பேசுகிறது. மக்கள் பயத்தையும், உழைப்பையும் மூலதனமாக கொண்டு சுரண்டும் வர்க்கம் வளருவதையும், சுரண்டப்படும் வர்க்கம் மதம், விசுவாசம், என்று ஏதோ ஒன்றில் கட்டுண்டு கிடப்பதும் பற்றியும் வாசிக்கும் போது உணர முடிகிறது.

சிலுவையில் தொங்கும் சாத்தான் கதையே மறைமுகமாக அழகிய குறியீடை தாங்கி வருகிறது என்பதை கதையை வாசித்துவிட்டு தலைப்பை வாசிக்கும்போது உணர முடிகிறது. சினுவ அச்சிபியின் சிதைவுகள், ஆப்ரிக்க மக்களிடம் கிருஸ்துவ மதம் எப்படி நுழைந்தது என்பதை பதிவு செய்தது. கூகி வா தியாங்கோவின் இந்த படைப்போ மதத்தை கையில் எடுத்து கொண்டு ஆப்ரிக்காவில் காலடி எடுத்து வைத்த காலனி அரசு, மதத்தின் பெயரால் மக்களை அடிமையாக்கி மழுங்கடித்ததையும், தங்கள் ஆதிக்கத்தை விட்டு போனாலும், மறைமுகமாக அம்மக்களிடம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதையும் பேசுகிறது.