Monday 7 September 2020

தாண்டவராயன் கதை

 

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின்  ஆதி பூர்வ குடியில் கதை ஆரம்பிக்கிறது அங்கிருந்து பல்கலைப்பழகம் வரும் பெண்ணான எலினார், கணிதத்தில் வல்லவனும், சாகசத்தில் விருப்பம் உள்ளவனுமான ட்ரிஸ்ட்ராம் என்பவன் மீது ஏற்படும் காதலால் ஊர் எல்லையில் இருக்கும் சாபக்காட்டிற்கு சென்று பார்வையை தொலைக்கிறாள். அவள் பார்வை பறிபோனதற்கு காரணம் தான் என்று மருகும் ட்ரிஸ்ட்ராம் அவளை மணந்து கொண்டு அவள் கண் பார்வை திரும்ப கிடைக்க முயற்சி மேற்கொள்கிறான். அதன் ஒரு பகுதியாக  ப்ரான்ஸில் பாரீஸில் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை மேற்கொள்ள  எலினாரும் ட்ரிஸ்ட்ராமும் வருகிறார்கள். அப்போது அங்கு ப்ரெஞ்ச் புரட்சி வெடிக்கிறது. அங்கே எதிர்ப்பாராதவிதமாக பிரெஞ்ச் அரசாங்கத்திடம் உதவி எதிர்ப்பார்த்து வரும் திப்பு சுல்தான் அரசு அனுப்பி வைத்திருக்கும் இந்தியர்களை சந்திக்கிறார்கள்

இதனிடையே ப்ரெஞ்ச் புரட்சியின் தீவிரமடைய, எலினாருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரும் இறந்து போக இங்கிலாந்து திரும்புகிறார்கள்.. அதன் பின் சில வருடங்கள் கழித்து கிழக்கிந்திய கம்பெனியின் கணக்கு வழக்கை சரிப்பார்ப்பதற்காக அனுப்ப்படும் குழுவில் ட்ரிஸ்ட்ராமும் இந்தியா வருகிறான். திப்புவின் அதிகாரத்திலிருக்கும் மைசூர் பகுதிகளும் அதை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகள் என கர்நாடக மற்றும் தமிழ்மாநில பரப்பையும் அதன் வனப்பகுதிகளையும் சுற்றி கதையை விரித்தெடுக்கிறார் 

கதை ட்ரிஸ்ட்ராம் ராயக்கோட்டை வந்த பின் தான் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுக்கிறது. எழுத்து நடையும் வாசகன் மேல் சற்றே கருணையை காட்டியிருக்கிறது அல்லது வாசகனை தன்னுள் வாரி சுருட்டி கொள்கிறது. மாயாஜாலமென விரியும்  கதையில் புனைவின் உச்சத்தை ஆசிரியர் தொட்டிருப்பதோடு வாசகனையும் அந்த புனைவிற்குள் இழுத்து பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார்.  அடுத்தடுத்து புதிர்களாக அடுக்கி அந்த புதிர்களையும் ஒவ்வொன்றாக விடுவித்து கொண்டே வரும் சாகசம் வாசகனை கட்டி போட்டுள்ளது. இடையிடையே இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடந்திருக்கா சாத்தியமிருக்குமா என்ற சிந்தனையே கூட அற்றுப்போய் வேறு ஒரு உலகத்திற்குள் வாசகனை மிதக்க விட்டுள்ளார். அதிலும் கோணய்யன் மற்றும் தாண்டவராயன் கதையை நாட்டார் புராண கதையின்  எழுத்து நடையை அதன் வாசிப்பனுபவத்தை வாசிப்பதன் மூலம் மட்டுமே உணர முடியும்.

அதிகார மையத்தால் அள்ளி வீசப்படும் வராகன்களுக்காக அவர்கள் ஏவும் கட்டளைகளை சிரமேற்று கங்காணிகளாக மாறி பூர்வகுடிகளை அழித்தொழித்தும், அடிமைகளாக அவர் தம் ரத்தத்தை உறிஞ்சும் மனித இனம் உலகெங்கும் ஒரே முகத்தை கொண்டுள்ளதை நாவல் பேசுகிறது. சேரிப்பெண்ணாக வரும் கெங்கம்மாவாக இருக்கட்டும், ஆங்கில சிப்பாய்களால் வன்புணரப்ட்டு வாழ்க்கையை தொலைக்கும் செல்லியாகட்டும், பூசாரியால் வேசியாகும் பெண்ணாகட்டும் காலம் காலமாக ஆண்களின் அதிகார வேட்கைக்கும், மதத்தை கொண்டு மக்களை கட்டிப்போடும் மடாதிபதிகளுக்கும் பலியாகும் பெண்களின் துயரம் ஒரே மாதிரியாக தான் இந்த நூற்றாண்டு வரை தொடர்கிறது. அதிலும் கெங்கம்மா மூலமாக கீழ்நிலையில் இருக்கும் பெண்களை இந்த சமூகம் யார் வென்றாலும் தோற்றாலும் தங்களை சாக்கடைகளாக வைத்துகொள்வதில் யாரும் சளைத்தவர்களில்லை என்னும் உண்மையை பதிவு செய்திருக்கிறார். 

இந்த கதையின் முக்கிய திருப்பமாக வரும் நீலவேணியின் பாதையும் அதை தொடர்ந்து கதைக்குள் விரிந்து கொண்டே செல்லும் கதைக்களமும் துப்பறியும் சாகஸ கதை போல தோன்றினாலும், கதையை விரித்தெடுத்திருக்கும் முறையில் இது சாகஸத்தையும் தாண்டி வேறொரு எல்லைக்கு வாசகனை கொண்டு சேர்க்கிறது. இந்த கதையினூடாக எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலாகட்டும், கதையின் ஊடாக ஆசரியர் பதிவு செய்திருக்கும் சமூக பார்வையாகட்டும் புனைவு என்ற ஒற்றை வார்த்தைக்குள் சுருக்கிவிடாத முடியாதபடி செய்துள்ளன,

ஆசிரியரே முடிச்சுகளால் கதையை பின்னி பின் அதனை ஒவ்வொன்றாக அழகாக விடுவித்தாலும், கதையில் புரியாத புதிராக சில எஞ்சி விடுகிறது. அதே போல எலினாரின் கண் நோய்க்கான மருந்து கடைசியில் ட்ரிஸ்ட்ராமுக்கு கிடைத்த்தா? அல்லது ட்ரிஸ்ட்ராமும் பார்வையிழந்தானா? போன்ற பல கேள்விகளின் சிடுக்குகள் அப்படியே நிற்கின்றன. புத்தகம் முடித்த பின் மேலும் பக்கங்கள் இருக்க கூடுமா என்ற ஐயப்பாட்டில் புத்தகத்தின் பக்கங்களை பார்த்தால் சரியாக தான் இருந்தது. ஏனோ அவ்வளவு விரிவாக எழுதி வந்த ஆசிரியர் இறுதியில் ஆதி முடிச்சை அவிழ்க்காமல் அப்படியே விட்டார் என்று தெரியவில்லை.

ஒரே நாவலில் இவ்வளவு விஷயங்களை ஆசிரியர் பொதித்து வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும்., ஏன் வாசகனை கதைக்குள் நுழைய விடாமல் திணறடிக்கும் எழுத்து நடையை ஆசிரியர் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை.. முற்றுப்புள்ளியே இல்லாத நீள நீள வார்த்தைகள் பத்திகளாகவும், பக்கங்களாகவும் நீள்வது கொடுக்கும் அயர்வு ஒருபுறம் என்றால், மறுபுறம் அடைப்புகுறிக்குள் ஒரு கதையையே சொல்லி முடிப்பதுவும் என்ன மாதிரியான எழுத்து பாணி என புரியவில்லை. இந்த நாவலின் எழுத்து நடை சற்று இலகுவாக இருந்திருந்தால், பல வாசகர்களை சென்றடைந்திருக்கும். இக்கதையின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதுடன், ஒரே மூச்சில் இதை பற்றி சொல்ல முடிவது எனக்கு சாத்தியப்படாத்தால், இந்நாவலை பற்றி இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.