Monday 25 April 2022

பாதி இரவு கடந்து விட்டது


அமிதபா பக்‌ஷியின் ஆங்கில நாவலை பாதி இரவு கடந்து விட்டது என சுபத்ரா தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நவாப் கால மாங்கே ராம் என்கிற மல்யுத்த வீரனின் வாழ்க்கையில் இருந்து கதை தொடங்கி, அவன் மகன் பர்சாதி, ராம்தாஸ் என முடிகிறது.மல்யுத்தம் குறித்து பெருமிதமும், அதன் மீது அளப்பரிய காதலும் கொண்ட அப்பாவியான மாங்கே ராமை, கால சூழல், லாலா மோதி சந்த் என்ற பணக்காரர் குடும்பத்துக்குள் அடியாளாகவும், விசுவாசமான வேலைக்காரனாகவும் உழல வைக்கிறது.

கதையை எழுதிய அமிதபா பக்‌ஷி பற்றி தெரியவில்லை. ஆனால் அவர் ராமாயணத்தின் வைத்திருந்த மையல் தெரிகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை கதையாக வரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஜமீன்காலம், பின் ஆங்கில ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த காலம், அதன் பின் 70கள் வரையான அரசியல், ஆன்மீகம், இலக்கியம், அகவயம், புறவயம் அனைத்தையும் வாழ்வியல் வழியாக பதிவு செய்ய முனைந்திருக்கிறார். ஆனால் அதிக ஆன்மீகம் மற்றும் ராமனின் அருமை பெருமைகள் விளக்கத்தாலும் பல இடங்களில் கதை மையத்தில் இருந்து விலகி செல்கிறது.

முதல் பகுதியில் லாலா மோதிசந்தில் ஆரம்பித்து அவரது வாரிசுகள், அதற்கடுத்த தலைமுறை என ஒரு பணக்கார வியாபார குடும்பம், மாங்கே ராம், அவனை தொடந்து, அவன் மகன், பேரன் பரம்பரை பரம்பரையான விசுவாச வேலைக்காரனாக என்னென்ன அடைகிறார்கள், என்னென்ன இழக்கிறார்கள். அதில் மல்யுத்த வீரனான மாங்கே ராம் கம்பீரத்தை தனது பண பலத்தால் நுட்பமாக அடித்து ஒடுக்கும் லாலா, ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மாங்கே அந்த ஒடுக்குதலை பெண்கள் விவகாரத்தில் செலுத்தி எவ்வாறு தணித்து கொள்கிறான்.

கடைசியில் வயதாகி படுத்த படுக்கையாக கிடக்கும்போதும் அவன் மருமகளிடம் தகாத முறையில் நடந்து அவளால் கத்தி குத்துக்கும் ஆளாகி இறுதியில் இறக்கிறான். அதற்கு பின் அந்த மருமகள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்படுவதை பிற்பகுதியிலும் ஆசிரியர் அழகாக பொருத்தியிருக்கிறார்.

கதையை முழுதுமாக இரண்டாம் பகுதி தாங்கி பிடிக்கிறது. இந்நாவலில் எனக்கு பிடித்த பகுதியும் கூட, சுபத்ராவின் மொழிப்பெயர்ப்பில் அந்த வாக்கியங்கள் வழியாக கடத்தப்பட்டிருக்கும் நுட்பமான உணர்வுகள் தான் என்னால் இந்நாவலை முழுதாக வாசிக்கவைத்தது. அதில் கதையில் லாலா மோதி சந்தின் இரண்டாம் மகனாக வரும் திவான் சந்தின் மீது அவனது அண்ணி ஸ்வர்ணதாவுக்கு ஏற்படும் ஈர்ப்பை, “ அவன் மீது தனக்கும் இயல்பானதும் மறுக்கப்பட்டதுமான ஒரு வகை ஈர்ப்பு இருக்கிறதென்பதை ஒப்புக்கொண்டாள்”என்ற வரிகளின் வழியாக அழகாக நமக்குள் கடத்தியிருப்பார். இதே போல அவளது தோழி கமலாவிற்கும் அவளுக்குமிடையே இருக்கும் நட்பிற்கு பின் ஒளிந்திருக்கும் போட்டி பொறாமையை அகதிறப்பாக ஆசிரியர் காட்டியிருப்பதை அதன் உணர்வு மாறாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.

அதேபோல இளவயது விதவையான கமலாவின் உணர்வுகளை, திவான்சந்தின் மீது அவளுக்கு ஏற்படும் காதல் உணர்வை , தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிந்த அவள், ஒருபோதும் அடைய முயல தேவையில்லாத பொருளின் மீது தான் கொண்டிருக்கும் விருப்பம், அதை சுதந்திரமாக நேசிக்கும் வாய்ப்பை தருகிறது என காதலுக்கான வேறு ஒரு விளக்கத்தை ஆசிரியர் கூறியிருப்பார்.

காதலின் இருப்பு ஒரு பெண்ணிடம் ஏற்படுத்துகிற உணர்வுகளும், அது கட்டுப்படுத்தஇயலாமல் பெருகி, வெளிப்படுகிற விதம் கண்டிப்பாக ஆபத்தாய் முடியும் என்பதையும் வாசித்த போது, நமது காதல் உணர்வுடன் பொருத்தி பார்க்க முடியாமல் கடக்க முடியாது.

ஸ்வர்ணலதா, கமலா, சகுந்தலா, திவான்சந்த் இவர்கள் வாழ்வியலை சொல்லும் பகுதிகளில் நிறைய அகதிறப்புகளை நிகழ்த்திய ஆசிரியர், அதன் பின் துளஸிதாஸர் ராமாயணத்தின் மீது கொண்ட மோகத்தை சொல்லவே அதிக பக்கங்களை எடுத்து கொண்டார்.

அதன் பின் தொடர்ந்த கதை குறிப்பாக கடிதங்களில் எல்லாம் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன உணர்வு. ஆசிரியர் நிறைய பக்கங்களை எழுதாமல் தவிர்த்து சுருக்கியிருக்கலாம். அதிலும் லாலாவின் மரணபடுக்கையின் போது நடக்கும் ராம பாராயணம் எல்லாம் இரக்கமே இல்லாமல் பல பக்கங்கள் நீள்கிறது. மொழியின் உதவியால் தான் நாவலை முழுக்க வாசிக்க முடிந்தது.

நாவல்: பாதி இரவு கடந்து விட்டது

ஆசிரியர்: அமிதபா பக்‌ஷி

தமிழில் : சுபத்ரா

Like
Comment
Share

0