Friday 16 July 2021

ஆயிரம் சூரிய பேரொளி

 A thousand splendid suns என்ற காலித் ஹுசைனியின் நாவல், ஆயிரம் சூரியப் பேரொளி என ஷகிதா அவர்களால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

மத்திம வயதில் இருக்கும் பலரும் ஆப்கானிஸ்தானில் தாலிபனால், ஆப்கன் மக்களுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரங்களை செய்திகளாக நம் பதின் வயதிலோ, இளவயதிலோ செய்திகளாக கேள்விப்பட்டு கடந்திருப்போம். அந்த ஆப்கானிஸ்தானையும், அம்மண்ணின் மாந்தர்களையும் மனக்கண்ணில் தனது படைப்பின் மூலம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்,
மிக தொன்மையான நாகரீகம் கொண்ட ஆப்கானிஸ்தானில் கலாச்சார சுவடுகளில் பலவும் அழிந்து போய்விட்டன. இயற்கை வளத்துக்கு பஞ்சமில்லாத நாடு என்பதாலேயே அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், அவர்கள் அரசியல் சூழ்ச்சிக்கும் இரையாகி, தன் மக்களை பலிகொடுத்த நாடு. மன்னராட்சி முடிவுக்கு வந்தபோது சோவியத் கட்டுப்பாட்டில் வந்து பின்னர் நாட்டில் நடைபெற்ற புரட்சியினால் சோவியத் படைகள் விரட்டியடிக்கப்பட்டு , ஆப்கனின் பூர்வக்குடிகளாக இருந்த பல்வேறு இனக்குழுவினருக்கு ஆட்சி பொறுப்பு கைமாறியது. அதில் முக்கியமானவர்களான முஹாஹிதின்களும், தாலிபன்களும் மதத்தின் பெயரால் தன் சொந்த இனமக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் உலகையே ஆப்கானிஸ்தான் என்ற பெயரை அதிர்ச்சியோடும், பயத்தோடும் உச்சரிக்க வைத்தது.
போர் என்றாலே அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான். அதிலும் மதத்தின் பெயரால் பிற்போக்குதனங்களை கட்டவிழ்த்துவிடும் பாஸிஸ்டுகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கும்போது அங்கு பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? மரியம், லைலா என்ற இரு பெண்களின் மூலமாக அதனை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
மரியம் என்ற பெண்ணின் குழந்தைப்பருவத்தில் தொடங்குகிறது கதை. மூன்று மனைவிகளை உடைய ஜலீல் என்பவருக்கு வேலைக்காரி ஒருவள் மூலம் பிறக்கும் மரியம் முறைகேடாக பிறந்த பெண் என்ற காரணத்தினால் அவள் தாயை இழந்தது முதல் அலைக்கழிக்கப்பட்டு, பல சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கிறாள். பதினைந்து வயதில் 45 வயதான ரசூல் என்பவனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
ஒரு குழந்தை பிறந்தால் அதனை கொண்டு தனது வாழ்வின் வெறுமையை துடைத்தெறி விடலாம் என்று கனவு காணும் மரியத்துக்கு தொடர் கருக்கலைதலும் அதனால் கணவனின் ஏச்சு பேச்சுக்கும், அடி உதைக்கும் பழகி வேறு கதியன்றி அவனுடனே குடும்பம் நடத்தி வருகிறாள். அதே பகுதியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவரின் மகள் லைலா தாயாரின் மனநிலை பாதிப்பால், அன்புக்கு ஏங்கும் குழந்தையாக ,அவள் வயதையுடைய கன்னிவெடியால் ஒரு காலை இழந்த தாரிக் என்பவனின் ஸ்நேகத்தால் மகிழ்ச்சியாக குழந்தை பருவத்தை கழிக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி சோவியத்தின் படைகள் விலகி உள்நாட்டு கலவரங்களால் பறிக்கப்படுகிறது.
குழந்தையான லைலா பதினான்கு வயது பெண்ணாக தாரிக்கின் நட்பு காதலாக விரிகிறது. உள்நாட்டு கலவரத்தால் தாரிக் தனது பெற்றோருடன் நாட்டை விட்டு வெளியேற இறுதியாக லைலாவிடம் விடைபெற வருகிறான். இனி தன் காதலனை பார்க்கவே முடியாதோ என்ற பரிதவிப்பில் மருகி தவிக்க, இருவருக்கிடையே ஆறுதலும், தன்னம்பிக்கையுமாக தொடங்கும் உடையாடல் இருவரின் இணைதலில் முடிகிறது.
இதற்கிடையே நாட்டின் ஆட்சி முஜாஹிதன்களிடமிருந்து தாலிபன்கள் கைகளுக்கு ஆட்சி செல்ல, முன்பில்லாத வகையில் பசி பஞ்சம் ஒரு பக்கமும், தாலிபன்களின் சட்டத்திட்டங்களால், வன்முறையும், கொலைகளும் தலைவிரித்தாடுகிறது. முதலில் தனது மகன்கள் உயிர் தியாகம் செய்த நாட்டை விட்டு வெளியேற மறுத்து வரும் லைலாவின் தாய், நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கிறாள்.
அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, லைலாவின் வீட்டை ஏவுகணை தாக்க, அவளது பெற்றோர் தாக்கப்பட, குற்றுயிராக லைலா உயிர்பிழைக்கிறாள். அவளை ரசூல் தனது வீட்டுக்கு கொண்டு வந்து மரியம் உதவியோடு அவளை காப்பாற்றுகிறான். அதற்கு மாறாக அவளையே மணமுடிக்க அவன் செய்யும் செயல்களும், வயிற்றில் தாரிக்கின் வாரிசு உருவாகியிருப்பதை உணரும் லைலா, அந்த திருமணத்திற்கு சம்மதிப்பதும், அதனால் மரியம் அவளின் எதிரியாக, பின் லைலாவின் மீது வாஞ்சை ஏற்பட இருவருக்குள்ளும் நட்பு மலர்வதும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஒருமுறை லைலாவும், மரியமும் குழந்தையுடன் தப்பிக்க முயற்சிக்க, அவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்ப வர ரசூலிடம் பெறும் அடி உதைகளும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளும் கதறி அழவைக்கின்றன. தாலிபன்களின் காட்டாட்சியில் பெண்கள் ஒரு உயிராக கூட மதிக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அடைந்த வேதனைகளும், மருத்துவம் என்பது அதிலும் பிரசவம் என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையாக நடந்திருக்கிறது என்பதை வாசிக்கும்போது மனம் பதைக்கிறது. அத்தகைய கொடுமையான ரசூலிடமிருந்து இருவரும் எப்படி தப்புகின்றனர். மரியமின் முடிவு, லைலாவின் புதுவாழ்வு தொடக்கம், அதனைத்தொடர்ந்து அரங்கேறும் மாற்றங்கள் என நாவல் நீள்கிறது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால, பார்க்கப்போனால் நம் சமகால ஆப்கானிஸ்தான் அரசியலை இரண்டு பெண்கள் வாழ்வியல் மூலம் ஆசிரியர் கட்டமைத்திருக்கும் விதம் அலாதியானது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஆப்கன் மக்கள் அனைவரும் மரணத்தாலும், தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த துயரத்தாலும், பட்டினியாலும் அடைந்த துயரங்கள் அனைத்தையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆசிரியர் இரண்டு பெண்கள் வாயிலாக ஒரளவு அதனை நமக்கு கடத்த முயன்றிருக்கிறார். ஷாஹிதாவின் எளிய மொழிப்பெயர்ப்பினால் நம்மாலும் மரியத்தின் துயரத்தையும், வலியையும் உணர முடிகிறது.
தற்போதைய ஆப்கன் சுதந்திர தேசமாகி, ஒரளவுக்கு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் துயரங்கள் துடைத்தெறியப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.. தாரிக் போன்ற ஒரு சில ஆண்களால் சில லைலாக்கள் பிழைத்திருக்ககூடும், மற்றவர்கள்??????
Like
Comment
Share