Tuesday 28 April 2020

சேப்பியன்ஸ் - புத்தகம் ஒரு பார்வை


சேப்பியன்ஸ் நான் வாசித்த முதல் Non-fiction புத்தகம் என்று கூட சொல்லலாம். வால்கா முதல் கங்கை வரை நாவல் தாய் வழி சமூகமாக மனிதன் பரிணமத்தில் இருந்து பயணித்ததை பேசிய நாவல். நாவல் நமது நாட்டை பற்றி பேசிய நிலையில் சேப்பியன்ஸ் உலகத்தில் ஆதி மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்து தொடங்குகிறது. அதாவது விலங்காக இருந்து மனிதனாக பரிணமித்த்தில் இருந்து ஆரம்பித்து தற்போதைய அறிவியல் யுகம் வரை படிப்படியாக மனிதன் புவியில் நிகழ்த்திய மாற்றங்களை பதிவு செய்துள்ளது.

சுமார் 450  கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி உருவானதாக கூறும் ஆசிரியர் அதன் பின்னர் சுமார் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்ரிக்காவில் இப்போதிருக்கும் மனிதருக்கு முந்தைய இனமான ஹோமோ நியாண்டர்தாஸ், ஹோமோ எரெடெக்ஸ், ஹோமோ சோலோ என்ஸிஸ் உள்ளிட்ட மனித இனத்தின் பல்வேறு வகையினர் தோன்றியதாக கூறுகிறார். பின்னர் அவர்கள் மெல்ல பல்வேறு இடங்களுக்கு பரவுகின்றனர். அதன் பின் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் சேப்பியன்ஸ் என்று இப்போதிருக்கும் மனித குலத்தினர் தோன்றியதை ஆதாரபூர்வமாக விளக்குகிறார் ஆசிரியர்.

பின்னர் இந்த சேப்பியன்ஸ்க்கு ஏற்படும் அறிவுப்புரட்சியால் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து, சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவுக்கு வெளியே பரவ தொடங்குகின்றனர். இப்படி பரவ தொடங்கும் இவர்கள் தங்கள் அறிவால் பிற விலங்குகளை அழிப்பதுடன், தங்கள் மூதாதையர்களான நியாண்டர்தால் இனத்தவரையே பூண்டோடு அழித்ததாக கூறுகிறார். இப்படி பல்வேறு மனித இனத்தை அழிக்க இறுதியில் தற்போதுள்ள சேப்பியன்ஸ் இனம் ஆகிய நாம் மட்டுமே எஞ்சியிருக்கிறோம். அதன் பின் மனிதன் அறிவால் கண்டுபிடிக்கப்பட்ட விவசாயம் மனிதனை எவ்வாறு மாற்றியது அதனை தொடர்ந்து நிரந்தர குடியேற்றம் அதன் தொடர்ச்சியாக மன்னராட்சி என்று இப்போதிருக்கும் நிலை வரை அனைத்தையும் ஆசிரியர் நோவா ஹராரி விளக்கும் போது அடுத்தடுத்த பக்கங்களை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டே செல்ல முயலும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.


பணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், பேங்க என்ற நிறுவனத்தின் தொடக்கமும் தனி மனித மகிழ்ச்சி, மதங்கள் உருவான கதை குறித்த ஆசிரியரின் பார்வையும் உண்மையில் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய பக்கங்கள் எனலாம். எல்லாம் மாயை என்ற எண்ணம் நம் அனைவருக்கும் எப்போதாவது தோன்றும். இந்த புத்தகம் வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த புத்தகம் முழுவதுமே வரலாறு கட்டுரை வடிவில் இருப்பதால் இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலமே அது நமக்குள் ஏற்படுத்தும் திறப்புகளை உணர முடியும்.

குற்றமும் தண்டனையும் - நாவல் ஒரு பார்வை



தத்வஸ்கியின் வெண்ணிற இரவுகள் எனக்கு பிடித்த நாவல் என்பதுடன், குற்றமும் தண்டனையும் நாவலை பற்றி பல ஆளுமைகள் சிலாகித்தது கொடுத்த தாக்கத்தால் இந்த நாவலை சில வருடங்களுக்கு முன் வாசிக்க கையில் எடுத்தேன். ஆனால் ஏதேதோ காரணங்களால் முடியாமல் போக, இப்போது இந்த கொரானா முழு அடைப்பு நாட்களை வாசிக்க பயன்படுத்திக்கொண்டேன். மனிதர்களின் உளவியலை தெரிந்து கொள்வதில் எனக்கு சுவராஸ்யமுண்டு. தத்வஸ்கி மனிதனின் அகசிக்கலை அழகாக எழுதுவார் என்பதுடன், மனதின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதில் வல்லவர். இந்த நாவல் தொட்டிருக்கும் ஆழமும், இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் நுண்ணர்வுகளும் கையாளப்பட்டிருக்கும் வார்த்தைகளும், ஆங்காங்கு பளிச்சென மின்னல் வெட்டு போல திறந்து காட்டப்படும் நாவல் மாந்தர்களின் கதாபாத்திரங்களிலும் நம் அகத்தை தரிசிக்க வைப்பது தான் எழுத்தாளனின் வெற்றி. 

இந்நாவல் ஏழ்மை வறுமையில் உழலும் ஒரு மாணவன், வட்டிக்கு விடும் ஒரு கிழவியை கொலை செய்வதையும் அதன் பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் பேசுகிறது. கொலையும் அந்த கொலைக்கு முன்னும் பின்னும் ரஸ்கோல்னிகோவ் சந்திக்கும் மன உளைச்சல்களும் அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் தான் கதையின் மையச்சரடு.

வட்டிக்கு விட்டு வாழும் கிழவியை கொன்றுவிட்டு அவளிடம் இருந்து பணத்தை அபகரித்து எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்ட நினைக்கிறான். கிழவியை கொல்லப்போகும் போது எதிர்பாராதவிதமாக அவள் தங்கையையும் கொல்ல நேரிடுகிறது. கொலை செய்வது குறித்து அவனுக்குள் நடக்கும் நியாய தர்க்க விவாதங்களால் கிழவியை கொல்வதற்கு முன்பே இருதலைக்கொள்ளியாக தவிக்கும் அவன், கொலை நடக்கும்போதும் அதே மனச்சிக்கலில் தவிக்கிறான். ஆனாலும் எப்படியோ கொலையை செய்துவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பிக்கிறான். கொள்ளையடித்த பொருட்களை பத்திரப்படுத்திவிட்டு தன் அறைக்கு வந்து விழும் அவன் தனக்குள் நடக்கும் மனப்போராட்டத்தினால் உடல் நிலை பாதிப்படைகிறான். சுயநினைவற்று கிடக்கும் அவனை அவனது நண்பன் ரஸ்மிகின் கவனித்து கொள்கிறான்.

இந்நிலையில் அவன் தங்கை துனியா ஊரில் வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு, இறுதியாக தன் குடும்ப சூழல், மற்றும் சகோதரனின் நிலை காரணமாக லூசின் என்பவரை மணமுடிக்க நினைக்கிறாள். ஆனால் ரஸ்கோல்னிகோவ் தன் பொருட்டு தன் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்யாததை விரும்பாததுடன் தன் தாய் கடிதத்தில் எழுதியிருக்கும் சில வார்த்தைகளை கொண்டு லூசினை பார்க்காமலே வெறுக்கிறான். இதற்கிடையே துனியாவும் அவரது தாயாரும் மகன் இருக்கும் நகரத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருவதற்கு முன்பே நாயகனுக்கும், லூசினுக்குமான முதல் சந்திப்பு  மிக மோசமாக அமைய அகங்கார மனம் படைத்த லூசின், ரஸ்கோல்னிகோவை அவமானப்படுத்தி அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க நினைக்கிறான். ஆனால் அதற்குள்ளாக அவனின் அகங்கார குணமே துனியாவுடனான அவனது திருமண ஒப்பந்தம் முடிய காரணமாகிறது.

ஏற்கனவே மன உளைச்சலில் சிக்கி தவித்து தன்னை தானே துன்புறித்தி கொண்டு முடங்கி கிடக்கும் ரஸ்கோல்னிகோவ் தாயையும் சகோதரியையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தவிப்பை எரிச்சலாக்கி அவர்களை விட்டு விலகி ஓட எத்தனிக்கிறான். இதனிடையே ஒரு குடிகாரனின் குடும்பத்துடன் நாயகனுக்கு எதேச்சையாக ஏற்படும் தொடர்பு நாயகனை வேறு பாதைக்கு திருப்புகிற்து. அந்த குடிகாரனின் மகளான சோனியா தன் குடும்பத்தை காக்க விபச்சாரியாகிறாள். இந்நிலையில் குடிகாரன் இறந்துபோக, அவளுக்கும் நாயகனுக்கும் ஏற்படும் தொடர்பும், அவளை பார்த்த பிறகு நாயகனுக்குள் ஏற்படும் மாற்றங்களும், அவளிடம் பாவ மன்னிப்பு கோருவது போல தன் உள்ளக்கிடக்கு அனைத்தையும் கொட்டி தீர்க்கும் அவன், சோனியா அவனை கொலைக்காக சட்டத்திடம் சரணடையும்படி கூறும்போது ஆவேசமடைகிறான். தான் கொலை செய்தது தவறே இல்லை என்று தனது கொள்கை குறித்து கூறி அவளையும் வெறுக்கும் அவன் அதன் பின் முடிவில் அவள் மீது இருக்கும் காதலை உணரும் இடமும் அழகாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே துனியாவை ஊரில் இருந்தே விரட்டி வரும் மைனர் ஸ்விட்ரிகைகோவ் அவனுக்கும் ரஸ்கோலினிக்கோவுக்குமான சந்திப்பு, அதன் பின் துனியாவை அடைய அவன் எடுக்கும் முயற்சியில் தோற்று இறுதியில் தன்னை தானே சுட்டு கொல்கிறான். அவன் ரஸ்கோல்னிகோவுடனான நீண்ட உரையாடலில் தன்னை பற்றி கூறும் போது பெண்களின் குணநலன்களையும் இயல்புகளையும் ஒரு ஆணின் பார்வையில் பதிவு செய்கிறார். அதில் காதல் உணர்வு ஒரு பெண்ணை எந்தளவுக்கு முட்டாள்தனமாக இழுத்து செல்லும் என்பதை தனக்கு வாழ்க்கை கொடுத்த தனது மனைவி மூலம் உணரலாம் என்கிறான். துனியாவிற்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்பட அவன் அவளிடம் நாடகமாடியதை கூறும் போது ”ஒரு பெண்ணின் இதயம் ஆணுக்காக இரக்கப்பட ஆரம்பித்துவிட்டால் அவள் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள் என்பது அர்த்தம். அவனை காப்பாற்ற போவதாக நினைக்கும் அவள் அவனுக்கு புத்திமதி சொல்லவும், வழிக்காட்டவும் தொடங்கிவிடுவாள்:. அவள் கூறுவதை கேட்பதாக பாசாங்கு செய்தாலே நம்பிவிடுவாள்” அப்படித்தான் உன் தங்கையை நம்ப வைத்தேன் என்று கூறுகிறான். இன்று வரை இந்த உளவியலை பெண்ணின் மீது ஆண்கள் பிரயோகித்து கொண்டுதான் இருக்கிறார்கள் .. இதே போல எக்காலத்துக்குமான உளவியலை நாவல் நெடுக த்த்வஸ்கி வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் விவரிக்கிறார்.

அதேபோல இந்த கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, ரஸ்கோல்னிகோவ் மீது சன்னமாக பிரயோகிக்கும் உளவியல் ரீதியான விசாரணைகள் நாயகனை மேலும் மன நிலை பாதிப்புக்குள்ளாக்க, இறுதியில் போலீஸில் சரணடைகிறான்.

நாவல் நெடுகிலும் ரஸ்கோல்னிகோவ்வின் அகப்போராட்டம் தான் நீடிக்கிறது. மீண்டும் மீண்டும் அகப்போராட்டங்களை நுணுக்கமாக விவரத்திருப்பதில் ஆரம்ப அத்தியாயங்களில் ஆயாசமே அதிகமாக நீள்கிறது. அதிலும் லூசின் சோனியாவை திருடி என்று நிரூபிக்க செய்யும் நடவடிக்கைகள் எல்லாம் அதீத நாடகத்தனமாகவே தோன்றுகிறது. அந்த கால கட்டத்தில் திருட்டு பழியை பிறர் மீது சுமத்துவது போன்றவையெல்லாம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் சமீப காலங்களாக இதை பல்வேறு கதைகள், சினிமாக்கள், சீரியல்கள் என பார்த்து பார்த்து சலித்து போனதால் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதை நாவல் என்று சொல்வதை விட எக்காலத்திற்குமான உளவியல் ஆராய்ச்சி நூல் என்று சொல்ல்லாம், நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களாகட்டும், அவர்களின் காதல், தியாகம் மற்றும் அவர்களின் பல்வேறு அகக்கூறுகளும் எக்காலத்திற்குமானது என்றே சொல்ல தோன்றுகிறது. நாவல் பல அகத்திறப்புகளை காட்டினாலும், பல்வேறு இடங்களில் அகச்சோர்வையே தந்தது.. அந்த சோர்வு குற்ற செயல்களை நியாயப்படுத்த துடிக்கும் நம் மனதின் தர்க்கவாதத்தின் காரணமாக கூட இருக்கலாம்.