Tuesday 8 August 2017

" கிருஷ்ணப்பருந்து” - ஆ.மாதவன்


”கிருஷ்ணப்பருந்து” ஆ.மாதவனின் படைப்பு. ஏற்கனவே இவரின் சிறுகதையின் மொத்த தொகுப்பையும் வாசித்துவிட்ட நிலையில், கிருஷ்ணப்பருந்து அவரின் க்ளாஸ் படைப்பு என்று கூற வாசித்து முடித்தேன். இதை ஒரு குறு நாவல் என்றோ, சற்றே பெரிய சிறுகதை என்றோ கூறலாம்.  வட்டார வழக்கு, மலையாள தமிழில் மனதை அள்ளியது. மாதவனி கதையின் மையமான அதே சாலை கடை பகுதி, இந்த கதையில் சற்றே தள்ளி அந்த சாலைக்கடையை ஒட்டியுள்ள தோப்பு விளை என்னும் பகுதியையும், அதில் வசிக்கும் மனிதர்களையும் சுற்றி கதை நீளுகிறது. கதையின் மையம் மனித மனதில் உறைந்து கிடக்கும் காமவிகாரம் பற்றியது தான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதத்தில் மாதவன் தனித்து தெரிகிறார்.

மனித மனதில் உறைந்துகிடக்கும் காமம், மேலோட்டமாக அவனால் கண்டடையா முடியா ஆழத்தில் தன்னை புதைத்துகொண்டிருப்பது போல தோன்றினாலும், சில கண நேரங்களில் விஷ்வரூபமெடுத்து வெளிப்படும்போது அனைத்து கட்டுகளையும் உடைத்து விடுகிறது.

சுவாமி தான் நாவலின் நாயகன். மத்திம வயதை கடந்து கிட்டத்தட்ட ஐம்பது வயதில் இருக்கும் அவனை சுற்றியே கதை நகருகிறது. தாத்தா, அப்பாக்கள் எல்லாம் ஏகப்பட்ட பரம்பரை சொத்துகள் காரணமாக மைனர் குஞ்சுகளாக, ஆட்டம் போட அந்த சொத்தின் எஞ்சிய பகுதிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழ்க்கை வாழ்கிறான் நாயகன்.

தோப்பு விளையை சுற்றியுள்ள தென்னந்தோப்பு அதில் கிடைக்கும் வருவாய், அந்த விளையிலேயே இருக்கும் ஒரு சிறிய கோவில், அதை சுற்றி வசிக்கும் வசதியற்றவர்கள். அங்கிருக்கும் வீடுகள் மற்றும் தோப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் அதுவே போதுமென்று, புத்தகங்களுடன் வாழ்கிறார்.

மனைவி இறந்துவிட , ஏற்கனவே அப்பாவின் காமகளியாட்டத்தை நேரில் பார்த்ததால்,  தான் அப்படியல்லாமல் நெறியான ஒரு யோக வாழ்க்கையை வைராக்கியமாக வாழ்கிறார். மனைவியுடன் முழுமையான உறவில் இருந்தும், அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. இந்த நேரத்தில் வேலப்பன் என்னும் ஏழு வயது சிறுவன் ஒருவன் அடைக்கலமாக சுவாமியின் வீட்டுக்கு வருகிறான். அந்த வீட்டில் ஒருவனாக சுவாமியை குரு போல ஏற்றுக்கொள்கிறான். அவருடனே வளைய வருகிறான்.

வேலப்பன் வளர்கிறான், அவனை நல்ல இடத்தில் பணிக்கு அமர்த்துகிறார் சுவாமி. அவனுக்கு ராணி என்ற பணக்கார பெண்ணுடன் காதல் வர பல எதிர்ப்புகளுக்கிடையில் அவர்களுக்கு மணம் முடித்து வைக்கிறார். ராணி பணம் அந்தஸ்து அனைத்தையும் உதறி அந்த தோப்பு வளையில் வேலப்பனுடன் குடியேறுகிறாள்.

ஒரு நாள் சுவாமியின் வீட்டில் பார்க்கும் பெண்ணின் அரை நிர்வாணச்சிலை ஒன்றை பார்த்து வேலப்பன் துணுக்குறுகிறான். அவனின் சகவாச தோஷம் அவனை சுவாமியை பற்றிய வேறு கோணத்தை சிந்திக்க வைக்கிறது. அந்த சவகாச தோசத்தால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். குடி அவனை மேலும் வக்கிரமாக சிந்திக்க வைக்கிறது. வளர்கிறான். பால் சொஸைட்டியில் பதவிகள் கிடைக்கின்றன வேலப்பனுக்கும் ஆனால் சிறு பொறியென விழுந்த சுவாமியை  பற்றிய சந்தேகமும், வளர்கிறது. அவருடன் தன் மனைவி ராணியையும் சம்மந்தப்படுத்தி சந்தேகப்பட்டு அவளுடனும் சண்டையிடுகிறான்.

சுவாமி போல பிம்பம் அமைத்து வளைய வந்தாலும், உள்ளுக்குள் காமம் அவரை கீழே இழுக்கிறது. ஒரு கட்டத்தில் ராணியின் பால் இவர் மனம் மையல் கொள்ளுகிறது. காமத்தில் மனம் தகிக்கிறது. ராணி இவரை சுவாமியாக நினைத்து யதார்த்தமாக பழகுகிறாள், வேலப்பன் சண்டையிடும்போதெல்லாம் முறையிடுகிறாள் சுவாமியிடம்.

ஒரு பந்தின்போது அடிப்பட்டு கிடக்கும் சுவாமிக்கு ராணி பணிவிடை செய்கிறாள். அவரை தொட்டு தூக்கி அவள் உதவி செய்ய, நீண்ட நாட்களாக பெண்ணின் ஸ்பரிசம் படாமல் இருந்தவருக்குள் இருக்கும் காம உணர்வுகள் தகிக்க தொடங்குகிறது. உடல் நலம் தேற தொடங்க, ராணி நீங்க இந்த தாடியெல்லாம் மழிச்சுட்டா மாப்பிள்ளை போல இருப்பீங்க என்று கூறிய வார்த்தைகள் அவரை இழுக்க தாடியெல்லாம் எடுத்து ராணி மீது கடும் மையல் கொள்கிறார்.

அப்போது வேலப்பன் குடிபோதையில் கலவரம் ஒன்றில் போலீசாரை கொலை செய்ய முயற்சிக்க, கைது செய்யப்படுகிறான். கட்சியாட்கள் என பலரும் முயற்சித்தும் அவனை வெளியில் கொண்டு வர முடியவில்லை. சுவாமி நினைத்தால் முடியும் என்று சொல்ல ராணி சுவாமியிடம் கதறுகிறாள். ஆனால் சுவாமி மறுக்கிறார். இதனிடையே தன் உளக்கிடக்கை அரசல் புரசலாக ராணியிடம் தெரிவிக்க, தன்னை தர ஆயுத்தமாகிறாள் ராணி.

சுவாமியை நெருங்கி அவரின் மேல் சாய்ந்து அவரின் நெருப்பை தணிக்க முடிவு செய்து அவரிடம் சிருங்காரம் ஆரம்பிக்கும் ராணி எப்படியாவது வேலப்பனை வெளியே கொண்டு வர கோரிக்கை வைக்கிறாள். பொறி தட்டியது போல சுவாமி உலும்பி எழுகிறார். ராணியை விட்டு வெளியேறுகிறார் வேலப்பனை மீட்பதாக என கதை முடிகிறது.

இறுதி முடிவு திணிக்கப்பட்டதாக தான் தோன்றுகிறது. ராணி மீது அவ்வளவு தகிக்கும் காமத்தை சுமந்தலையும் , அவளுக்காக தனது யோக பிம்பத்தை உடைத்தெறியும் சுவாமி இறுதியில் ராணியை உதறி செல்வது செயற்கையான முடிவாக தான் தோன்றியது. அந்த கட்டத்தில் வந்து மனம் மாறுவது சாத்தியமற்றதாக தான் தோன்றுகிறது.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட சுவாமி - ராணி இறுதி உரையாடலுக்கு முன்பு வரை கிருஷ்ணப்பருந்து ஒன்று வருகிறது. அந்த கிருஷ்ணப்பருந்தின் குறியீடு மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் காம விகாரம் தான். மனித மனதின் நெருக்கடிகடிகள், அகச்சிக்கல்கள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க அதன் அடியில் காமம் ஒளிந்து கொண்டிருக்கும், கிருஷ்ணப்பருந்து உயரத்தில் பறக்கும் போதும் அதன் வெண்மையை பார்க்க முடியும் என்றாலும், அருகில் வரும் போது இன்னும் தெளிவாகவே பார்க்கலாம். காம விகாரமும் அப்படியே தான் என்பதாக ஆசிரியர் கூற முனைந்திருக்கிறாரோ..



2 comments:

  1. கதை படிக்காமலே படித்த உணர்வு கமலி. அருமையான விமர்சனம்.
    படிக்கத் தூண்டும் விதமாக இருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போது நானு படித்து விட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி கவிதா

    ReplyDelete