Monday 12 September 2016

மூக்கு - முகம்மது பஷீர்

வைக்கம் முஹம்மது பஷீரின் “மூக்கு” சிறுகதை தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரின் மதில்கள் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மலையாள எழுத்தாளரான பஷீரின் இந்த பதினாறு கதைகளை குளச்சல் மு.யூசுப் மொழிப்பெயர்த்துள்ளார். இவரின் எழுத்து நடையில் தோணிக்கும் ஹாஸ்யமும், அங்கதமும் தனி இலக்கிய சுவை கொண்டது. முதல் கதையான ஜென்ம தினம் படித்த போது எழுத்தாளரின் வறுமையும் அதை அவர் தனது பிறந்த நாளில் எதிர்கொண்ட விதத்தையும் கனமாக பதிவு செய்தாலும் அந்த சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை கதை முழுவதும் விரவியிருக்கிறது.

ஐசுக்குட்டி என்ற கதை ஒரு பெண்ணின் எளிய ஆசையான டாக்டர் வந்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையும், அதற்காக பிரசவ வலியை பொறுத்து கொண்டு அவள் செய்யும் பிடிவாதமும், டாக்டர் வந்து பிரசவம் பார்த்தால் செலவாகும் என அவள் கணவன் இறைஞ்சுவதும் ஆனால் அதை ஏற்காத ஐசுக்குட்டியின் பிடிவாதத்துக்கு பின் இருக்கும், பெருமையாக பிறரிடம் பீற்றிக்கொள்ள என்று சில பெண்கள் செய்யும் செயலின் பின் உள்ள மனநிலையை பஷீர் ஆழமாக பதிந்திருக்கிறார்.

அம்மா கதை கொஞ்சம் சுதந்திரத்துக்கு முன் இருந்த அரசியல் பின்ணணியுடன் பயணிக்கிறது. அப்போதைய இளைஞர்களுக்கு காந்தியின் மீதும், காங்கிரஸ் மீதும் இருந்த அபிமானம், தண்டி யாத்திரைக்காக கல்லூரி இளைஞர்கள் பலர் அடிபட்டது, அந்த நேரம் சுதந்திர தாகத்தால் எழுத்தாளரும் வீட்டுக்கு தெரியாமல் வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது. சிறை அனுபவம் என விரிகிற கதையில் சிறை தண்டனை முடிந்து சில நாட்கள் கழித்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைகிற அவருக்கு அவர் அம்மா சாப்பிட்டியா மோனே என்று சொல்லி தட்டு வைத்து சோறு பரிமாறுகிறாள். சாப்பிட்டு முடித்த பின் நான் இன்று வருவேன் என்று எப்படி தெரியும் என அம்மாவை கேட்க , அவர் அம்மா சர்வ சாதாரணமாக சோறும், குழம்பும் வச்சுகிட்டு தினமும் காத்திருப்பேன் என்று கூறுகிறார். காலங்கள் பல உருண்டோடிய  பின்னும் அந்த தாயிடம் இருந்து வரும் ஒற்றை வார்த்தை உன்னை பார்க்க வேண்டும் என்பதாக கதை முடிகிறது.

மதங்களையும் அவற்றின் மூடநம்பிக்கைகளையும் எள்ளல் செய்திருக்கிறார் புனித ரோமம் சிறுகதையில் . பால்ஷரீஃப் என்ற புனித ரோமம் ஒன்றை காண்பதற்காக இலட்சகணக்கான மக்கள் முண்டியடிப்பதையும் உருவ வழிபாடை நிராகரிக்கும் இஸ்லாத்தில் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சில விஷயங்கள் நடப்பதை பஷீர் விவரித்திருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார்.

பூவன்பழம் கதை என்னை பொறுத்தவரை ஆணாதிக்க கதை. இலக்கியம் அதிகம் ஆண்களால் படைக்கப்பட்டதாலோ என்னவோ அவர்களை அறியாமல் சில கதைகளில் அவர்களின் ஆதிக்க உணர்வை சில எழுத்தாளர்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். பெண் தன்னையறியாமல் அடிமைத்தனமே சுகம் என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கு பின் அவளை அப்படி நம்ப வைப்பதில் ஆண்களின் பங்கு பெரிதாக உள்ளதே என்று கூறலாம்.

திருமணமான இளம் மனைவியான ஜமீலா தனது கணவர் இரவு வீட்டுக்கு வரும்போது பூவன்பழம் வாங்கி வர சொல்கிறாள். கணவர் ஏதேதோ வேலைகளில் முதலில் மறந்துவிடுகிறார். பின்னர் நினைவுக்கு வர கடை கடையாக தேடுகிறார், ஆனால் பூவன்பழம் மட்டும் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த ஆரஞ்சு பழத்தை வாங்கிகொண்டு இரவு வீட்டுக்கு வருகிறார்.

வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட ஆரஞ்சு பழத்தை மூட்டை கட்டி பத்திரமாக பாதுகாத்து மனைவி தனியாக இருப்பாளே என்று மனைவியை காண அந்த ஆற்று வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து இறங்குகிறார். ஒருவழியாக மிகுந்த சிரமப்பட்டு வீட்டை அடையும் அவர் மனைவியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார். உணவிற்கு பின் பூவன்பழம் கிடைக்கவில்லை ஆரஞ்சு தான் கிடைத்தது என்கிறார். மனைவிக்கு கோவம் தான் கேட்டதை வாங்கி வரவில்லையே என்று எனவே அதை நீங்களே சாப்பிடுங்கள் என கூறி படுக்க சென்று விடுகிறார்.

இவர் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து இதை கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிடு என்கிறார். ஆனால் ஜமீலா நான் கேட்டது பூவன்பழம் என்கிறாள். கணவர் கெஞ்சி சாப்பிட சொல்ல மறுக்கிறாள். பின் தின்றே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார். ஜமீலா திங்கலேன்னா அடிச்சே திங்க வைப்பீங்களோ என முறைக்க கணவர் எதுவும் சொல்லாமல் பிரம்பு எடுத்துவந்து அடித்து திங்க வைக்கிறார். பின் அப்படி அடித்தற்காக வருத்தப்படுகிறார். அதன் பின்கிட்டத்தட்ட அவரின் அடிமை போலவே வாழ்ந்து அதன் மூலம் கணவரின் அன்பு கிடைக்க நிறைய பிள்ளைகளை பெற்று இறுதியில் இருவரும் கிழவர் கிழவியாகி இதை நினைத்து சிரித்து பார்ப்பதாக கதை முடிகிறது. கதையில் இலக்கிய சுவையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக என்னால் இந்த கதையை சிலாகிக்க முடியவில்லை. அடித்து புரிய வைக்கும் அன்பை ஏற்கும் பெண்ணை ஜீரணிக்க முடியவில்லை.

நீல வெளிச்சம் கதை எனக்கு மிக பிடித்த த்ரில்லர் கதை. கதை ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை அடுத்து அடுத்து என்று பக்கங்களை விட்டு கண்களை நகர்த்த முடியாமல் கட்டி போட்டிருந்தார் எழுத்து நடையிலும், கதையை விவரித்த பாணியிலும்.

புத்தக தலைப்பான மூக்கு கதையில் மக்களின் முட்டாள்தனத்தை பகடி செய்திருக்கும் விதம் எந்த காலத்துக்கும் பொருந்தும். ஏனோ இந்த கதை வாசித்தபோது பலருக்கு வழங்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டங்களும், திடீரென சிலர் பிரபலமாகும்போது நடக்கும் கூத்துகள் எல்லாம் மனக்கண்ணில் வந்தன. 

பர்ர்ர்ர் !!!! சிறுகதை சாதாரண கதை தான்.. பதின்பருவத்தில் ஒருவனுக்கு ஒரு பெண் மீது இருக்கும் மிகப்பெரும் பிரமை எப்படி உடைகிறது என்பதை சொல்லியிருக்கிறார் பஷீர்.. ஹாஸ்ய நடையில் ....

வைக்கம் முகம்மது பஷீரின் இலக்கிய நயமும், ஹாஸ்யமும் வாசித்து முடித்த பின்னும் கண்டிப்பாக மனதை விட்டு அகலாது. கடவுள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் அதே சமயத்தில் மனிதனின் கையறு நிலையும், தெயவத்திடம் சரணாகதி அடைவதையும் எந்த கொள்கைக்குள்ளும் இல்லாமல் அப்படியே சொல்லி இருக்கிறார். பெரும்பாலான கதைகள் ஆசிரியரின் வாழ்க்கை அனுபவங்கள் என்றாலும், அவர் பார்த்த அவரை பாதித்த விஷயங்களையும் பதிந்திருக்கிறார். முக்ம்மது பஷீர் என்கிற இலக்கியவாதியின் நல்ல அறிமுகமாக இந்த சிறுகதை தொகுப்பை சொல்லலாம் . இந்த தொகுப்புகள் மூலம் ஆசிரியர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், இவரின் எழுத்து நடையும் அனைத்தையும் பகடிக்குள் கைகொணர்ந்திருக்கும் வித்தையும், பஷீரை தேடி தேடி வாசிக்க தூண்டும்.....



No comments:

Post a Comment