Thursday 22 January 2015

வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி - புத்தகம் பற்றி

வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதியது. தமிழில் ரா. கிருஷ்ணையா. ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை இயற்கையை ரசித்து கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன் ஒரு நாள் இரவு வீடு திரும்பும் போது கால்வாயின் கிராதியை பிடித்து கொண்டு நிற்கும்  “நாஸ்தென்காவை பார்க்கிறான். நெருங்கி சென்று பார்க்கும் போது அவள் அழுதுகொண்டு இருப்பது தெரிகிறது. 

நாயகன் சென்று விசாரிக்க ஒன்றுமில்லை என்று அவனை கடந்து சென்றுவிடுகிறாள்.ஆனால் கண்டதும் காதல் வயப்படும் நாயகன் அவள் பின் செல்கிறான். வேக வேகமாக செல்லும் நாஸ்தென்கா எதிரே வரும் குடிகார கனவானால் பதட்டமடைய எதிர்பக்கம் அவளை பார்த்தபடியே வந்து கொண்டிருக்கும் நாயகன் ஓடிச்சென்று அவள் கைப்பற்றி கொள்கிறான். இருவரும் பேசி கொள்ள ஆரம்பிக்க நேரமாகிவிட்டது மறுநாள் இரவு சந்திப்பதாக சொல்லி நாஸ்தென்கா விடைபெறுகிறாள். இரவு முழுதும் அறை திரும்பாமல் நாயகன் இன்ப களிப்பில் மறுநாள் இரவுக்காக காத்திருக்கிறான்.

ஒரு நாடகபாணியில் தன்னை பற்றி விவரித்து சொல்கிறான் நாயகன். அமைதியாக கேட்கும் நாஸ்தென்கா பிரமாதமாக பேசுகிறீர்கள் ஆனால் சாதாரணமாக பேச முடியாதா ஏதோ புத்தகத்தில் உள்ளதை வாசித்து காட்டுவது போல இருக்கிறது என்று  சொல்ல மன்னிக்கவேண்டும் எனக்கு வேறு மாதிரி பேச தெரியாது என்கிறான் நாயகன். அவன் கதையை கேட்டு அவனை ரசித்து நட்பாக வரித்து கொள்ளும் நாஸ்தென்கா தன கதையை சொல்கிறாள்.

கண் தெரியாத பாட்டியுடன் வசிக்கும் அவள் வீட்டின் மச்சுக்கு குடிவரும் இளைஞனுடன் அவளுக்கு ஏற்பட்ட காதலை ஒரு வருடமாக அவனுக்காக காத்திருப்பதை சொல்கிறாள். அவர் ஊருக்கு சென்று திரும்பி வரும்போதும் இதே காதலுடன் இருந்தால் பாட்டியுடன் பேசி ஏற்று கொள்வேன் என்று சொல்லி பிரிந்து சென்றதையும் இப்போது வந்துவிட்டார் ஆனால் தன்னை சந்திக்கவில்லை என்பதையும் சொல்கிறாள். இதை கேட்ட நாயகன் நான் வேண்டுமானால் அவரை போய் பார்த்து பேசவா என்று கேட்க பின் அது நன்றாக இருக்காது கடிதம் எழுதி தா அதை சேர்பிக்கிறேன் என்கிறான். தன் உள்ளத்து உணர்வுகளை கொட்டி கடிதம் எழுதி முகவரியும் தந்து அதை சேர்ப்பிக்குமாறு நாயகனிடம் தந்துவிட்டு மீண்டும் மறுநாள் இரவு சந்திப்பதாக சொல்லி செல்கிறாள்.

மூன்றாம் நாள் இரவும் சந்திக்கிறாள். அவள் மனம் துள்ளி குதிக்கிறது சந்தோசத்தால் நீங்கள் என்னை காதலிக்காதவராக நண்பராக தன்னலமற்றவராக இருப்பதால் உங்கள் மேலும் பாசம் பொங்குகிறது. நான் நேசிப்பவரின் மேல் இருக்கும் பிரியத்தை உங்களிடமும் கடைசி வரை கொண்டிருப்பேன் என்று கூறுகிறாள். அதன் பின் நாயகன் அவளை காதலிப்பதை சொல்ல அவள் குழப்பமும் அதே நேரம் சொல்ல முடியா உணர்வில் இருப்பதை அவனுக்கு விளக்குகிறாள். அவள் காதலனை எதிர்ப்பார்த்து வராமல் ஏமாற்றத்தில் அழுகிறாள். கடிதம் கிடைத்திருக்காது என்று சமாதானம் சொல்கிறான் நாயகன்.

மறுநாள் இரவு மழை சந்திக்க விடாமல் போக அதற்கு மறுநாள் நாஸ்தென்காவை சந்திக்கிறான். அப்போதும் அவள் காதலன் வராமல் போக ஏமாற்றத்தில் தவிக்கும் நாஸ்தென்கா இனி அவர் மீது எனக்கு காதலும் இல்லை அவரை நான் மறந்துவிடுவேன் என்று அதற்கு மேல் பேச முடியாமல் அழுகிறாள். மனம் பொறுக்காமல் அவளை தேற்ற வார்த்தைகள் அன்றி நாயகன் வாயடைத்து நிற்கிறான். 
அதன் பின் இருவருக்கும் நடக்கும் உரையாடல் எல்லாமே எல்லாமே சொல்ல வேண்டும். ஆனால் அதை வாசித்து தான் அனுபவிக்க முடியும். அவ்வளவு நுணுக்கமான உணர்வுகளை வார்த்தைகளாக கோர்த்திருக்கிறார் ஆசிரியர். நாஸ்தென்காவின் அந்த உணர்வு சிக்கலும், மனப்போராட்டமும் அந்த உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் அவள் எடுக்கும் நிலையில்லா முடிவும் என்று அநேக பெண்களின் உணர்வுகளின் உருவமாய் இருக்கிறாள் 

அந்த நீண்ட இரவில் நாயகனுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நாளையே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று பேசிவிட்டு வீடு திரும்ப மனமில்லாமல் அவன் கையை பிடித்து கொண்டு வீடு திரும்பும் நாஸ்தென்கா அங்கே காதலனை குரல் கேட்டவுடன் ஒரே வினாடியில் ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டு அவன் அரவணைப்பினுள் பாயும் அதே கணம் திடுக்கிட்டு ஒடுங்கி போய் நின்றிருக்கும் நாயகனை பார்க்கிறாள். உடன் ஓடிவந்து நாயகன் என்ன நடைபெறுகிறது என்று உணரும் முன் அடங்காத ஆர்வத்தோடும், ஆசையோடும் முத்தமிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பவும் அவனிடம் பாய்ந்தோடி  அவன் கைகளை பற்றி அவனை தன்னுடன் அழைத்து செல்கிறாள்.

அதன் பின் அவள் நாயகனுக்கு எழுதும் கடிதம் சொல்கிறது நாஸ்தென்காவின் உள்ளக்கிடக்கை..கடிதத்தை மன்னிக்க வேண்டும், மறவாதிருக்க வேண்டும், காதலிக்க வேண்டும் உங்களுடைய நாஸ்தென்காவை என்று முடித்டிருப்பாள்.. நாயகன் அதை படித்து அழுது பின் தன்னை தேற்றி கொண்டு தனக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் க்ளாஸ். அவளுடன் பேசி கழித்த அந்த இரவை ஆயுட்கால முழுமைக்குமான ஆனந்தமாக வரித்து கொள்கிறான் நாயகன். 

கதை முழுதும் உணர்வுகளால் நிரம்பி வழிகிறது.. என்ன எழுதினாலும் வார்த்தைகளில் கதை கொடுத்த உணர்வை வடித்து விட முடியாது.. மிக நுணுக்கமாக நுண் உணர்வுகளுக்குள் பயணித்திருக்கிறார் ஆசிரியர். .கதையின் தாக்கம் மனதை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது.. மனம் நாஸ்தென்கா என்று அரற்றும் வாசித்து முடித்தவுடன்.....

No comments:

Post a Comment