Saturday, 22 October 2016
Friday, 14 October 2016
அந்நியன் - ஆல்பெர் காம்யூ
”அந்நியன்” ஆல்பெர் காம்யூ எழுதிய ப்ரெஞ்ச் நாவலை ஸ்ரீராம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.
க்ரியா பதிப்பகம் வெளியீடு. இந்நாவலின் கதை
பற்றி ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் மனிதன் என்பவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று
இந்த சமூகம் விதித்திருக்கும் வரைமுறைகளில் இருந்து விலகி செல்பவன் இந்த உலகில் வாழ
தகுதியில்லாதவனாக முடிவு செய்யப்படுகிறான்.
நூற்றி
ஐம்பது பக்கங்களுக்குள் முடிந்துவிடும் இந்த புத்தகம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம்
மிகப்பெரியது என்று தான் சொல்ல வேண்டும். கதை நாயகனான் மெர்ஷோவின் அம்மா இறந்துவிடுகிறாள்,
அவளை காணச்செல்கிறான் மகன் எந்த உணர்வுமில்லாமல், அவனை அவனின் தாயின் மரணம் பாதிக்கவில்லை
. தாயின் மீது வெறுப்பா என்றால் இல்லை. அவன் தாயின் மரணத்தை ஏற்றுகொள்கிறான் அவ்வளவு
தான். அவனுக்கு அழுகை வரவில்லை மிக இயல்பாக இருக்கிறான் இறந்து கிடக்கும் தாயின் அருகில்.மறுநாள்
அவன் தாயின் ஈமச்சடங்கு நடக்கிறது. மெர்ஷோவுக்கு அதெல்லாம் அர்த்தமற்றதாக தோன்றுவதுடன்,
அவை எல்லாம் போலித்தனமாக இருக்கிறது. அந்த இடத்தை விட்டு அகன்றால் போதுமென்று நினைக்கிறான்.
அழாமல் வெகு இயல்பாக இருக்கும் அவனை இந்த சமூகம் விசித்திரமாக பார்க்கிறது.
தாயின்
அடக்கம் முடிந்தவுடன் வீட்டுக்கு வரும் அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லை. வீட்டுக்கு
வருகிறான் நன்கு தூங்குகிறான், சாப்பிடுகிறான், அவன் அறையில் இருந்து தெருவை வேடிக்கை
பார்க்கிறான், பின் மறுநாள் தன் தோழியை வரசொல்லுகிறான். அவளுடன் சினிமாவுக்கு செல்கிறான்,
விளையாட்டுகளில் ஈடுபடுகிறான் விடுமுறை முடிந்து அலுவலகத்துக்கு சென்று வழக்கம்போல
காரியங்களை கவனிக்கிறான்.
நாயகனின்
இந்த போக்கு குழப்பத்தை கொடுத்தாலும், கொஞ்சம் நம் மனதை திறந்து ஆழமாக பயணித்தால் அதிர்ச்சியாக
இருக்கிறது. நாமும் ஓரளவு மரணங்களை கடந்து தான் வந்திருப்போம், அந்த மரணங்களில் துயரங்கள்
இருந்திருக்கலாம், வலி இருந்திருக்கலாம் ஆனால் நிகழ்ந்துவிட்ட மரணத்தின் சடங்கில் நம்
எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை எந்த முகமூடியும் இல்லாமல் அலசி இருக்கிறார்
ஆசிரியர்.
அடுத்து
நாயகனின் தோழி அவனை காதலிக்கிறாள், திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்கிறாள். காதலிக்கிறேன்,
எப்போதும் காதலிப்பேன் என்று எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் நீ விரும்பினால்
நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். பெண்ணின் உடல் இன்பம் தேவையாக இருக்கிறது
ஆனால் காதல் பற்றி எல்லாம் அவனுக்கு பெரிய பிரச்சனை இல்லை. திருமணம் செய்வதும் செய்யாததும்
ஒன்று தான் அவனை பொறுத்த வரை.
மெர்ஷோ
நல்லவனா, கெட்டவனா என்று முடிவுக்குள் வாசிப்பவர்களை இழுத்து செல்லாமல் நாயகனின் போக்கில்
அவன் எண்ணங்களை, அவன் செயல்களை விவரிக்கிறார். அதிகம் யாருடனும் பேசுவதில்லை, பேசுபவர்களுடன்
உண்மையாக தான் பழகுகிறான். எதற்கும் உணர்ச்சி படுவதில்லை. நான் இப்படி என்று காதலி
உட்பட யாரிடமும் அவன் புரியவைக்க முயற்சிக்கவில்லை.
வாழ்க்கையில்
பிடிப்பு இல்லாதவனா என்றால் அப்படியுமில்லை, பெரிய எதிர்பார்ப்போ, பெரிய லட்சியங்களோ
இல்லாமல் அந்தந்த கணங்களில் வாழ்கிறான் இன்னும் சொல்லப்போனால் சந்தோசமாகவே. அவன் குடியிருக்கும்
பகுதியில் இருக்கும் ஒருவன் நண்பனாக ஏற்றுகொள்வதாக கூறி அவனை அழைத்துசெல்கிறான் அவனின்
காதலி துரோகம் செய்துவிட்டதாக புலம்பும் அவன் அவளை அவமானப்படுத்த விரும்புகிறான். ஒரு
கடிதம் எழுத மெர்ஷோவின் உதவியை நாடுகிறான். மெர்ஷோவும் செய்கிறான்.
அதே
குடியிருப்பில், சொறி நாய் ஒன்றை மட்டும் துணையாக வைத்து கொண்டு வாழும் மனிதனுடனும்
அவன் இயல்பாக பழகுகிறான். அவன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டதை பற்றி கேட்கும் போது
எங்கள் இருவருக்குள்ளும் பேச விஷயங்கள் இல்லை, மேலும் எனக்கு மிகப்பெரிய பொருளாதார
வசதியுமில்லை இல்லத்தில் இருந்தால் அவள் வயதையொத்த மனிதர்களுடன் இருப்பதில் வெறுமை
இல்லாமலாவது இருப்பாள் என்கிறான். அவரும் ஆமோதிக்கிறார்.
இந்நிலையில்
புதிதாக நண்பனானவுடன் தன் காதலியுடனும் விடுமுறை நாளை கழிக்க கடற்கரை செல்கிறான். மிக
சந்தோசமாக குடித்து, காதலியுடன் நீந்தி விளையாடி களிப்புற்று இருக்கும் அவன் ஒரு அரேபியனை
எதிர்பாராமல் கொலை செய்துவிடுகிறான். திட்டமிட்டு எல்லாம் அந்த கொலை நடக்கவில்லை. ஒரு
சின்ன தகராறு கொலையில் முடிகிறது. முதல் பாகம் கொலையுடன் முடிகிறது.
இரண்டாம்
பாகம் கொலையான அவன் கைதாகி அவன் மீது நடக்கும்
வழக்கு, விசாரணைகள் , விசாரணையின் முடிவு அவ்வளவு
தான். ஆனால் இந்த அத்தியாயத்தில் இந்த சமூகத்தின் பொதுபுத்தியையும் அதில் இருந்து விலகி
இருப்பவனை சமூகம் பார்க்கும் பார்வையையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதி.
மனம் நம்மை இயக்குகிறது என்று தான் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மனம் மட்டுமா
நம்மை இயக்குகிறது. நம்மை சுற்றியுள்ள புறச்சூழல்களே நம்மை இயக்கிறதோ என்று சந்தேகம்
மெர்ஷோ கொலையானதை நினைத்து பார்க்கும் போது வாசிப்பவருக்கு தோன்றுகிறது.
மெர்ஷோவை
கொலை குற்றத்துக்காக விசாரிக்கிறார்கள் நீதிமன்றத்தில், கொலையை விட்டுவிட்டு மெர்ஷோவின்
குண இயல்புகளை விசாரிக்க தொடங்குவதில் மெர்ஷோ சலிப்படைகிறான். அவன் செய்த கொலை பற்றிய
விசாரணைகளவிட அவன் தாய் இறந்த போது இயல்பாக இருந்தது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
அதற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போதும், அவன் தாய் இறந்த மறுநாளே
பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது, தாயின் மரணத்தில் அழாதது, தாயின் சடலம் அருகில் அவன்
காபி குடித்தது என்று நுணுக்கமாக அவன் சராசரிகளில் இருந்து வேறுபட்டு இருப்பது அலசப்படுகிறது.
தெய்வ நம்பிக்கை இல்லாதவன் என்பதும் அவனுக்கு எதிராக போகிறது. அப்படி இருந்ததாலேயே அவன் மனிதன் இல்லை அவன் கொடூர
மனம் கொண்டவன் என்று அவனுக்கு கொலை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.
சிறை
வாசத்தில் அவன் வாழ்க்கையும், அதனை அவன் எதிர்கொள்ளும் விதமும், அவனது எண்ண ஓட்டங்களும்
விவரித்திருக்கும் விதத்தில் நம்மையும் அறியாமல் நம் சுய அலசலுக்குள் நுழைந்துவிடுகிறோம்.
இறுதி வரை பாவ மன்னிப்பு கேட்க சொல்லும் அவனை சந்திக்க நினைக்கும் பாதிரியாரை சந்திக்க
மறுக்கிறான். சந்திக்கும்போது அவரிடம் நாயகன் முன் வைக்கும் விவாதத்தின் உண்மை நம்மையும்
கேள்வி கேட்க வைக்கிறது. இறுதிவரை கடவுள் நம்பிக்கையை ஏற்க நாயகன் யாராக இல்லை.
நாயகன்
சமூகத்தின் பொதுபுத்தியில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறான். அதுவொன்றே அவனுக்கு
மரண தண்டனை வழங்குவதற்கு போதுமானதாகிறது.
அந்நியன்
உணர்வுபூர்வமாக பாதிக்கும் வகை கதையில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் அந்நியனை நமக்கு
அடையாளம் காட்டுகிறது.
Wednesday, 5 October 2016
சஹீர் = பாவ்லோ கொய்லோ
"சஹீர்" பாவ்லோ கொய்லோவின் நாவலை தமிழில்
குமாரசாமி மொழிப்பெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடு. சஹீர் என்பது ஏதோ ஒன்று
அல்லது யாரோ ஒருவர், அதனுடன் அந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் அது நமது ஒவ்வொரு
எண்ணத்தையும் சிறிது சிறிதாக ஆக்ரமிக்க துவங்கும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்க
முடியாது. அது புனிதமான நிலையாகவோ பைத்தியக்காரத்தனமான நிலையாகவோ கருதிக்கொள்ளலாம்.
இந்த நாவலை அப்படியே கதையாக சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு பிரபல எழுத்தாளரின்
மனைவியான எஸ்தர் (நிருபர்) திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறாள். அவள் காணாமல் போன
பின்னர் தான் அவளை எந்த அளவு நேசித்திருக்கிறோம் என்பதை உணருகிறான். அவளை தேடி பயணப்படுகிறான்.
இறுதியில் அவளை கண்டடைகிறானா இல்லையா என்பதாக கூறலாம். ஆனால் அப்படி கூறமுடியாத அளவு
உணர்வுத்தளங்களுடன், நம் அகத்துக்குள் ஆழமாக பயணிக்கிறது கதை. எஸ்தரான தன் காதல் மனைவியை கண்டடைவதன் மூலம் இந்த உலகின் பேரன்பை கண்டடைகிறான். அவளை புறவயமாக தேடும் பயணத்தில் தன் அகத்தையும் ஆத்மாவையும் உற்று நோக்குகிறான்.
எஸ்தர் காணாமல் போகும் போது சராசரி கணவனின் மனநிலையிலும் அதற்கு சற்று
மேலான மனநிலையிலுமாக மாறி மாறி பயணிக்கிறார் எழுத்தாளர். பத்து வருட தாம்பத்யத்தில்
நடந்தவற்றை அசைபோடுகிறார். முதலில் தானாக விலகி சென்றவளை தான் ஏன் தேட வேண்டும் என்று
நினைக்கும் அவர் நாளாக நாளாக எஸ்தரின் நினைவால் முழுதும் ஆக்ரமிக்கப்படுகிறார். அதை
சஹீர் என்கிறார். எவ்வளவோ முயன்றும் இவரால் அவள் நினைவில் இருந்து வெளியே வரமுடியவில்லை
.
பிரபலமான எழுத்தாளருக்கு பணம், புகழ், அந்தஸ்து எல்லாமிருந்தும் ஏதோ ஒன்று
இல்லாமலிருப்ப்பது போன்ற சிந்தனையால் அலைக்கழிக்கப்படுகிறார். இதனிடையே மேரி என்ற பெண்ணுடன்
உறவு ஏற்படுகிறது. நடிகையான அவர் தனது பக்கத்துவீட்டுக்காரனை தீவிரமாக காதலித்து அதில்
தோல்வி அடைந்தவர். இவர்கள் இருவரும் சந்திக்க இவர்களுக்குள் உறவு வளர்கிறது. ஆனாலும்
எழுத்தாளரின் மனதில் எஸ்தர் ஏன் தன்னை விட்டு விலகினாள் என்ற கேள்வியும் அவளிடம் அது
பற்றி விசாரித்துவிட்டால் தான் அதன் பின் நிம்மதியாக இருக்கலாம் என்றும் முடிவுக்கு
வருகிறார்.
பிரிவதற்கு முன் மிக்காயில் என்ற மொழிப்பெயர்ப்பாளனாக அவளுடன் இருந்த
இளைஞன் ஒருவனை பற்றி எஸ்தர் பேசியது தெரியவர அவனுடன் சென்றிருப்பாளோ என்று சந்தேகப்படுகிறார்.
இதனிடையே கிழிக்கும்காலமிது, தைக்கும் நேரமிது என்ற நாவலையும் எழுதுகிறார். அதில் கையெழுத்திட்டு
அளிக்கும் ஒரு விழாவில் மிக்காயிலை சந்திக்கிறார். அவனிடம் மனைவி இருக்குமிடம் குறித்து
விசாரிக்கிறார். அவன் தோழன் தான் காதலன் இல்லை என்று தெரியவரும்போது ஆசுவாசமடைகிறான். அவனுடனும் இல்லை என்றும் அவள் அவனுடைய ஊரான கஜகஸ்தானில் இருப்பதாக
கூறுகிறான் . அவனுக்கும் தன் மனைவிக்கும் உடல் ரீதியான தொடர்பு பற்றி விசாரிக்க அது பற்றி
கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறும் அவன் அவள் தன் கணவரை நேசிக்கிறாள் என்கிறான்.
அதன் பின் மிக்காயிலின் உலகத்துக்குள் நுழைகிறான். மிக்காயிலின் உலகம்
விவரிக்கப்பட்டிருக்கும் விதம் தத்துவமும், உள்நோக்கிய அகப்பயணமும் சார்ந்தது. மிக்காயில்
மூலம் நாம் பயணிக்கும் இடங்களில் பலவற்றில் நம் அகத்தேடலின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
காக்கா வலிப்பு வரும் மிக்காயில் தன்னை பற்றி சொல்லும் பல விஷயங்கள் அறிவியலுக்கும்,
ஆன்மீகத்துக்கும், உளவியலுக்கும் ஊடாக மாறி மாறி பயணிக்கிறது. மிக்காயில் உலகம் அறியும்
எழுத்தாளர் அவனிடம் ஒரு வழியாக அவள் இருக்கும் முகவரியை, வரைபடத்தை பெற முயல்கிறார்.
அதனை மறுநாள் அவரது வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லி விடைபெறுகிறான். மறுநாள்
ஒரு விருந்தில் கலந்துகொள்ள செல்லும் எழுத்தாளர் விபத்தை எதிர்கொள்கிறார்.
அப்போது மேரி அவரை கவனித்து கொள்கிறாள். இதனிடையே மேரி எழுத்தாளரின் மனதில்
எஸ்தர் தான் இருக்கிறாள் என்று தெரிந்தும் தீவிரமாக அவனை காதலிக்கிறாள். விபத்தில்
ஓய்வில் இருக்கும் எழுத்தாளர் எஸ்தருக்கும் அவருக்குமான பிரிவு எங்கிருந்து தொடங்கியது
என்பதில் தொடங்கி தன் வாழ்வை சுய அலசலில் திரும்பி பார்க்கிறார். அவருக்கும் எஸ்தருக்கும்
இடையில் நடந்தவற்றை அசை போடுகிறார்.
/// நான் மாலை முழுதும் உங்கள் அருகே இருந்தேன். ஆனால் நான் என்ன செய்தேன்
என்பது உங்களுக்கு தெரியாது. நீங்கள் கூறிய ஒன்றை நான் உறுதி செய்ய வேண்டும், உங்களைப்
பற்றிய புகழ்ச்சியான கதை ஒன்றை கூற நான் தேவைப்பட்டபோது என்னிடம் பேசினீர்கள்.
நாம்
இதை காலை பேசலாம்
நான்
இதை வாரங்கள், மாதங்கள் இரு வருடங்களாக செய்கிறேன். நான் பேச முயல்வேன், தவிர்ப்பீர்கள்.
உங்கள் புத்தகங்களில் அன்பின் முக்கியம், மகிழ்ச்சி துள்ளல் பற்றி பேசுகிறீர்கள்.
ஆனால் எனக்கு முன்னால் இருப்பது தான் எழுதுவதையே படிக்காத ஒருவரா? நான் என்ன சொல்கிறேன்
என்று காது கொடுத்து கேட்ட மனிதன் எங்கே?
நான்
திருமணம் செய்த அந்த பெண் எங்கே?
உங்களுக்கு
எப்போதும் ஆதரவு, ஊக்கம் அளித்து வந்த ஒருத்தியை பற்றி பேசுகிறீர்களா? அவள் உடல் இங்கே
தான் இருக்கிறது. ஆனால் அவள் ஆத்மா வாசல் கதவருகே போகத் தயாராகி நின்று கொண்டிருக்கிறது.
நீங்கள்
திருமணம் செய்து கொண்டிருந்த பெண் வாழ்க்கைப்பற்றி குதூகலித்திருந்தாள். ஆசை கற்பனைகளில்
குதியாட்டம் போட்டிருந்தாள். இப்போது அவள் வெறும் இல்லத்தரசியாக மாறிக்கொண்டிருக்கிறாள்////
நடந்ததை
எல்லாம் அசைப்போடும் அவர் மிக்காயிலை சந்தித்து கஜகஸ்தான் போவதை பற்றி சொல்ல செல்கிறார்.
பிச்சைக்காரர்கள் என்று சமூகத்தாரால் பார்க்கப்படும் ஹிப்பிகள் மாதிரியான குழுவினருடன்
எழுத்தாளருக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. அது மேலும் அக வாசல்களை திறக்கிறது. மிக்காயில்
தன்னையும் அழைத்து செல்லுமாறு கோரிக்கை வைக்கிறான். எழுத்தாளர் மறுக்க கெஞ்சுகிறான்.
பின்னர் அவனையும் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார்.
மெல்ல
மெல்ல பிரச்சனையின் மையப்புள்ளி புரிய தொடங்க மேரியிடம் சொல்லி பிரிகிறார். மேரியின்
உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் மிக அருமை. தீவிரமாக எழுத்தாளரை காதலித்தாலும் அவன் மனம்
எஸ்தரிடம் இருப்பதை உணர்ந்து விதியை நொந்து பிரிகிறாள். அப்போது இருவருக்கும் நடக்கும்
உரையாடல்களின் போது மேரி அவளின் காதலையும் , அவஸ்தையையும், ஏமாற்றத்தையும் விவரிக்கும்
இடமும், அடிவிழும் என்றால் விழும், அது என்னை தரையில் சாய்க்கட்டும், என்னை குப்புறத்தள்ளட்டும்,
ஆனால் ஒரு நாள் மீண்டெழுவேன் என்று கூறுகிறாள்.
அப்போது எழுத்தாளர் நீ வேறு யாரையாவது கண்டுபிடிப்பாய் என்கிறான்.
கண்டிப்பாக நான் கண்டுபிடிப்பேன், நான் இளமையாக, அழகாக, புத்திசாலியாக,
ஆசைப்படும்படி இருக்கிறேன். ஆனால் உங்களுடன் சேர்ந்து இருந்து நான் அனுபவித்ததை மீண்டும்
அனுபவிப்பேனா என்கிறாள்.
அவன் நாம் சேர்ந்திருந்தபோது நான் உன்னை காதலிக்கவே செய்தேன் என்கிறான்.
தெரியும், ஆனால் நான் விடைபெறுதல்களை வெறுப்பவள் என்று கூறி பிரிகிறாள்.
அதன் பின்னர் கஜகஸ்தானுக்கு மிக்காயிலுடன் பயணிக்க தொடங்க அந்த ஊரில்
தோஸ் என்கிறவனை சந்திக்கிறான். அதன் பின்னர் எழுத்தாளருக்கு ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும்
அகம் சார்ந்து அவருக்குள் நிகழும் மாற்றங்கள் மதம் குறித்தான பலவும் வாசித்து மட்டுமே
உணர முடியும். இறுதியாக எஸ்தரை சந்திக்க அவள் தங்கி இருக்கும் வீடு வரை சென்றுவிட்டு
எழுத்தாளர் அடையும் உணர்வு போராட்டம், பின் அவளை சந்திக்க அவள் இவனுக்காக காத்து கொண்டிருந்ததையும், தான் எடுத்த முடிவு தவறோ என்று வருத்தப்பட்டு குழம்பியதையும், கருத்தரிப்பதையும் சொல்கிறாள். கருவுக்கு காரணமானவன் வேறு ஒருவன் என்கிறாள். ஊருக்கு அழைக்கிறான் கணவர், வேறு குதிரைக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறான் மிக்காயிலிடம், பின்னர் போர் முனை நிருபர் வேலை வேண்டாம் என்கிறான், வயிற்றில் வளரும் குழந்தை எதிர்காலத்துக்காவது என்கிறான். இந்த குழந்தைக்கு நீங்கள் பொறுப்பில்லையே என்கிறாள். அவளை புரிதலுடன் அணைக்கிறான். இந்த இடத்தில் எப்படி விவரித்தாலும் கதையை முழுவதும் வாசித்தவர்களால் மட்டுமே உணர முடியும். பின் எஸ்தரை ஊருக்கு கூட்டி செல்கிறார்.
ஓஷோவின் பிரதிபலிப்பை இவரது எழுத்தில் பல இடங்களில் உணர்ந்தேன். நான்
சஹீரின் கதையை மட்டுமே மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த புத்தகம் விளக்கும் தத்துவம்,
இது விளக்கும் மனித மனம் மதம், ஆன்மீகம் குறித்த விவரணைகள் எல்லாம் வாசிப்பவர்களால்
மட்டுமே உணர முடியும். இந்த புத்தகம் வாசிக்கும்போது, நம் ஆத்மாவின் பல கேள்விகளுக்கு
விடை கிடைக்கும்.
அவரின் சில வரிகள் கீழே
காட்டில் தீ பரவுகிறது.
இருவர் அதனூடாக ஓடி இறுதியில் தீ இல்லாத பகுதிக்கு வந்து ஆசுவாசமடைகிறார்கள். அருகே
ஆறு ஒடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ஒருவர் முகம் கரி பிடித்து அழுக்காகவும்,
மற்றொருவர் முகம் தெளிவாகவும் இருக்கிறது. இதில் யார் முதலில் முகத்தை கழுவுவார்கள்?
சந்தேகமென்ன
அழுக்கடைந்தவன் தான்.
இல்லை.
அழுக்கானவன் எதிரில் இருக்கும் தெளிவான முகத்தை பார்த்து தானும் அவ்விதம் இருப்போம்
என நினைக்கிறான். ஆனால் தெளிவாக இருப்பவன் அழுக்கானவன் போல இருப்பதாக நினைத்து முதலில் முகம் கழுவ எத்தனிப்பான்.
நான் எல்லா பெண்களிடமும்
என்னை தான் தேடியிருக்கிறேன். அவர்களின் வசீகரமான முகங்களை பார்த்து அதில் நான் பிரதிபலிக்கப்பட்டதாக
உணர்ந்தேன். அதே நேரம் அவர்கள் என் முகத்தில் இருந்த அழுக்கை பார்த்தனர். எவ்வளவு புத்திசாலியாகவும்
தன்னம்பிக்கை உடையவர்களான போதும் என்னில் பிரதிபலித்த அவர்களை பார்த்து தாங்கள் இருப்பதைவிட
மோசம் என நினைத்தனர்.
=======
=======
நான் உங்களை நேசிக்கும் அளவு நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என தெரிந்து
கொள்ள வேண்டும். ஆனால் அதை கேட்கும் தைரியமில்லை. நான் எப்போதும் ஒரு பாசமிகு உறவில்
இருக்க வேண்டும் என உணர்வேன். ஆனால் ஏன் ஆண்களுடன் இப்படிப்பட்ட சலிப்பான உறவு கிட்டுகிறது?
===========
அன்பும் காதலும் மற்றவர்களிடம் தேட வேண்டியது இல்லை. அது நம்மிடம்தான்
இருக்கிறது. அதை அடைவதற்குத்தான் இன்னொருவர் தேவைப்படுகிறார்..
===========
===========
இரு வேறுபட்ட இயல்புகளில் இருந்து காதல் பிறக்கிறது.
முரண்பாட்டில் காதல் வலுவாக வளர்கிறது. எதிர்கொள்தலிலும் உருமாறுதலிலும் காதல் பேணப்படுகிறது.
==========
==========
மனிதச் சித்ரவதைகளிலேயே கொடுமையானது சிலுவையில் அறையப்பட்டு சாகும்வரை
அதிலேயே இருந்து சித்ரவதை அனுபவிப்பது. .ஆனால் இப்போது ஒரு சித்ரவதை கருவியை பார்த்துக்கொண்டிருக்கிறோம்
என்பதை மறந்து மக்கள் அதை தங்களின் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். படுக்கை அறை சுவரில்
மாட்டி வைக்கின்றனர். அதை ஒரு சம்யக்குறியீடாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இப்படித்தான் பல குறியீடுகளை நாம் அறிவோம். ஆனால் அதன் பொருளை நாம் மறந்துவிட்டோம்.
இப்படித்தான் பல குறியீடுகளை நாம் அறிவோம். ஆனால் அதன் பொருளை நாம் மறந்துவிட்டோம்.
நாகரீக மேம்பாடு, மனித உறவுகள், நம்
நம்பிக்கைகள், நம் தேச வெற்றிகள், ஆகியவை திரித்துச்சொல்லப்பட்ட
கதைப்பொருட்கள்.
========
========
பெண்கள் எப்போதும் நிலையான தன்மையையும் நம்பிக்கையும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் நானோ சாகசத்தையும் புதிரையும் எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக
இருக்கிறேன் ஆனால் உன் தோழமையை விரும்புகிறேன்.
என் தோழமையை விரும்புகிறீர்கள். மிக
முக்கியமான விஷயங்களை மறக்கலாம் என்பதற்காக என் தோழமையை எப்போதும் எதிர்பார்க்கிறீர்கள்.
உங்கள் நாடி நரம்புகளில் பரவசம் ஓடிக்கொண்டிருப்பதை உணரவே உங்களுக்கு விருப்பம். ஆனால்
ரத்தம் தான் ஓட வேண்டும் என்பதை மறந்து போகிறீர்கள்.
===========
அடிமைத்தனத்தை போலவே சுதந்திரத்தின் விலையும் மிக
அதிகம். ஒரே ஒரு வித்தியாசம், சுதந்திரத்தை பெறும்போது சந்தோசத்தையும், புன்னகையையும்
கொண்டிருப்பீர்கள். ஆனாலும் அப்புன்னகையின் ஒளியை கண்ணீர் மங்கச்செய்துவிடும்..
===========
சுவாராசியமாக வேறு எதுவும் செய்யமுடியாதிருக்கும் சமயங்களில் பெண்கள்
மனக்கிளர்ச்சியை எதிர்பார்த்திருப்பர், ஆண்கள் சாகசத்தை எதிர்நோக்கியிருக்கும் போது
அது இப்படி முடியும். மறுநாள் எதுவுமே நடந்திராதது போல் இருவருமே பாவனை செய்து கொள்ள
வாழ்க்கை தொடரும்.
மனதில் சோர்வும் தளர்ச்சியும் எவ்வாறு
நேருகிறதோ, இன்னொரு பெண்ணுடன் படுக்கைக்கு செல்லவேண்டும் என்ற தூண்டுதலும் இயல்பாக
நிகழ்கிறது. இந்த நேர்த்தியான இயக்கம், செயல் சிந்தனையில் விளைந்ததோ, ஆசையில் நிகழ்ந்ததோ
இல்லை.
=============
Subscribe to:
Posts (Atom)