Saturday 22 October 2016

பாரபாஸ் - பேர் லாகர்க்விஸ்ட்

”பாரபாஸ்” (Barabbas by Pär Lagerkvist) ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்ட நாவலை தமிழில் க.நா.சுப்ரமணியம் மொழிப்பெயர்த்திருக்கிறார். அன்னம் வெளியீடு. மிகச்சிறிய நாவலான “பாரபாஸ்” ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. 142 பக்கங்கள் மட்டுமே. புனைவு நூல் என்னும்போதும் ஆசிரியர் எந்த கட்டத்திலும் வாசிப்பவரை புனைவு என்ற நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு பாரபாஸுக்குள் வாசிப்பவரை கடத்தி விடுகிறார்.

 

உலகம் முழுவதும் இன்று பரவி இருக்கும் கிருஸ்துவ மதத்தின் ஆதி இயேசு கிருஸ்து காலத்துக்கு நாவல் இட்டு செல்கிறது. பாரபாஸ் ரோமானிய ராஜ்யத்தில் கொள்ளையன்.  எந்த நம்பிக்கைகளும் இல்லாதவன். திருட்டுக்காக சிறையில் தண்டனை  அனுபவித்து கொண்டிருப்பவன். சிறிது நாளில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்க போகிறவன்.

 

ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் அதிர்ஷ்டம் அவன் விடுதலையாகிறான், விடுதலை ஆகி வாழ்நாள் முழுதும் எண்ணச்சிறையில் சிக்கி உழல போவது அறியாமல். அவனுக்கு பதில் சிலுவையில் அறைய ரோமப் பேரரசு இயேசுவை தேர்ந்தெடுக்கிறது. இயேசுவே  திருடனுக்கு பதிலாக தன்னை ஒப்புக்கொடுக்கிறார்.

 

விடுதலைப்பெற்றதை நம்பமுடியாதவனாக பாரபாஸ் சிறையிலிருந்து வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பதிலாக யாரை சிலுவையில் அறைகிறார்கள், தன் விடுதலைக்காக யார் தன்னை ஓப்பு கொடுத்தது  என்று பார்ப்பதற்காக சுலுவை சுமந்து வீதி வழியாக செல்லும் அந்த மரணக்கைதிகளின் பின்னால் இயேசுவின் நம்பிக்கையாளர்கள் அரற்றிக்கொண்டே செல்ல  பாரபாஸ்சும்  உடன் செல்கிறான்.

 

கொல்கோதா மலைக்குன்றின் மீது அறையப்படுகிறார் கடவுளின் மைந்தன். அவரை கடவுளின் மைந்தனாக தான் அவரின் சீடர்கள் சொல்கிறார்கள். சிலுவையில் அறையப்படும் அவரை பார்க்கும் கணத்தில் இருந்து, எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எந்த வரையறையும் இல்லாமல் தன் இஷ்டத்துக்கு வாழும் அவன் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் தொடங்குகிறது. அவரது உயிர் பிரியும் நொடியில் திடீரென இருட்டு உருவாகி பின் வெளிச்சம் வருகிறது. குழப்பமடைகிறான் பாரபாஸ்.

 

பாரபாஸால் கடவுளின் மகனாக அவரை நம்பவும் முடியவில்லை. கடவுளின் மகனாக  இருந்தால் ஏன் அந்த தண்டனையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை என்று சந்தேகம் எழுகிறது.  மிகுந்த சந்தேகத்தோடும் குழப்பத்தோடும் இருக்கும் அவன் இயேசுவின் நம்பிக்கையாளராக அந்த இடத்துக்கு வரும் உதடு பிளந்த ஒரு பெண்ணுடன் ஊருக்கு திரும்புகிறான். தனது சகாக்களை பார்க்கிறான், அவர்கள் இவன் விடுதலையானதை கொண்டாடுகிறார்கள். உதடு பிளந்த பெண் அந்த கூட்டத்தில் ஒட்ட முடியாமல் வெளியேறி விடுகிறாள்.  குடி, பெண்களுடன் சல்லாபம் என மூழ்குகிறான் பாரபாஸ் ஆனாலும் மனதின் ஓரத்தில் அவன் பார்த்த காட்சி ஓடி சித்ரவதை செய்கிறது.

 

இறந்த கடவுளின் மகன் பற்றிய விவரங்களை தேடி ஊருக்குள் அலைகிறான். அப்போது அவரின் நம்பிக்கையாளர்கள் பலரை சந்திக்கிறான். அவர்கள் முதலில் அவனை வெறுக்கிறார்கள் ஆனாலும் கடவுளின் மகனை பற்றிய விவரங்களை கூறுவதுடன், அவரின் சாதனைகளை வானளாவ புகழ்கிறார்கள். இவன் பார்த்த காட்சியை கூட பன்மடங்கு பெரிதாக்கி கூறுகிறார்கள். இவன் அதை மறுக்கிறான். உதடு பிளந்த பெண் கடவுள் உயிர்தெழுந்து வருவாள் என்று கூறுகிறாள் நம்பிக்கையுடன். அவர் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் அதிகாலை பாரபாஸ் சென்று கல்லறை பக்கம் புதர் ஒன்றில் ஒளிந்து பார்க்கிறான். உதடு பிளந்த பெண்ணும் வருகிறாள். ஆனால் அப்படியான அதிசயங்கள் எதுவும் நடக்கவில்லை.. என்ன நடந்திருக்கும் என்று பாரபாஸ் எளிதில் யூகிக்கிறான் ஆனாலும் உதடு பிளந்த பெண்ணின் நம்பிக்கையை சிதறடிக்க விரும்பாமல் அவள் உயிர்பெற்று எழுந்ததாக சொல்வதை ஏற்றுக்கொண்டு மவுனமாக கடக்கிறான்.


இறந்தவரை உயிர்பித்திருக்கிறார் என்கிறார்கள். நம்ப மறுக்கிறான் பாரபாஸ். அவனை அந்த செத்து பிழைத்த மனிதரிடம் அழைத்து போகிறார்கள். அவரிடம் பேசிய பின்னர் மேலும் வெறுமை சூழ்கிறது பாரபாஸ்க்கு. மெல்ல மெல்ல நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும், வெறுமைக்கும், குற்ற உணர்வுக்கும் இடையில் ஊசலாட தொடங்கி நடைபிணமாகிறான்.


எதற்குமே பயப்படாத, எதையுமே நம்பாத பாரபாஸ்சின் நிலையை கண்டு வெறுத்து போகும் அவனின் கூட்டாளிகள் அவனை துரத்த முனைகிறார்கள். ஆனால் பாரபாஸ் தானாகவே அவர்களிடம் இருந்து பிரிந்து செல்கிறான். எங்கெங்கோ அலையும் அவன் அடிமையாக சுரங்க வேலையில் பணி புரிகிறான். அங்கு வேறு ஒரு கைதியான் ஸஹாக் என்பவனுடன் இவன் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். யாருடனும் எதுவும் பேசாமல் யாருடனும் ஒட்டாமல் இருக்கும் பாரபாஸ் ஸஹாக்குக்குடன் கொஞ்சம் பேசுகிறான்.  கடவுளின் மகன் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஸஹாக்கிடம் தான் அந்த மனிதரை பார்த்ததாக கூறுகிறான். இதனால் அவன் பாரபாஸ்சுடன் அதிகம் பேசுகிறான். ஆனால் பாரபாஸ் தனக்கு பதிலாகதான் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை மறுத்துவிடுகிறான். அவரை பார்க்காமலே அவரை கொண்டாடி சிலாகிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான் பாரபாஸ்.

 

அடிமையான ஸஹாக் எழுதப்படிக்க தெரியாத போதும் அவரின் பெயரை தனது கழுத்து அடிமை முத்திரையின் பின் பக்கம் பொறித்து கொள்கிறான். பாரபாஸ்சுக்கும் அதை பொறித்து கொடுக்கிறான். சுரங்கத்தில் கடவுளை நினைத்து ப்ரார்திக்கிறான். பின்னர் சுரங்கத்தில் இருக்கும் அடிமை ஓட்டி ஒருவனால் வயல் வேலைக்கு மாற்றப்படுகிறார்கள் இருவரும். கடவுளால் தான் இது நடந்ததாக கூறும் ஸஹாக் கடவுள் அடிமை தளையை மீட்டெடுக்க கடவுள் வருவார் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான்.

 

ஸஹாக் வேறு யாரையோ ப்ரார்திப்பதை அறிந்து கவர்னர் மாளிகைக்கு பாரபாஸ்சுடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறான்.  விசாரணை நடத்தும்போது பாரபாஸை நீயும் அந்த ஏசுவை நம்புகிறாயா என கேட்க இல்லை என்று பாரபாஸ் மறுத்துவிடுகிறான். ஆனால் ஸஹாக் மரண தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் அவரை கடவுளாக ஏற்பதை கைவிட மறுக்கிறான். அவன் ரோம அரசை கடவுளாக தொழாமல் வேறு ஒரு வரை கடவுளாக தொழுததற்காக கவர்னரால் சிலுவையில் அறையப்படுகிறான்.


பாரபாஸை அரசுக்கு விசுவாசமானவன் என்று வேறு எளிய வேலைக்கு மாற்றிவிடுகிறார்கள். பின்னர் கவர்னருடன் ரோம் நகரம் செல்கிறான். ரோம் நகரின் பகட்டும், பளபளப்பும், சொகுசும் எதாலும் இவன் மனதின் வெறுமையை  துடைக்க முடியவில்லை. பாரபாஸை சுற்றி இயேசுவை கண்மூடித்தனமாக நம்புபவர்கள் இருந்தபோதும் பாரபாஸுக்கு கடைசி வரை நம்பிக்கை இல்லை..இறுதியில் தீ விபத்து ஏற்படுத்தியதற்காக சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறான். இறக்கும் முன் “என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” என்று இறுதியில் சொல்கிறான்.


யாருக்கு அளித்தான் தன் ஆன்மாவை என்ற கேள்வியில் தொக்கி நிற்கும் சிந்தனையில் கிளர்ந்தெழுகிற உணர்வில் தான் நாவல் பயணிக்கிறது.


நாவலில் இயேசு பிறப்பதற்கு முன்னிருந்த ஆட்சிகளில் மன்னர்கள், ஆட்சியாளர்கள், மக்களை அடிமைப்படுத்தி செய்த அநியாயங்கள், கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் மத பூசாரிகள் செய்த அநியாயங்கள், அடிமைப்பட்டு சித்ரவதை பட்டு கிடந்த மக்கள் அரசரை கடவுளாக ஏற்காமல் தங்களை மனிதராக நடத்தும் ஒரு சக்திக்காக காத்திருந்திருந்திருந்திருக்கின்றனர். அப்போது இந்த அநியாயங்களை கண்டு அவர்களுக்காக மனம் இரங்கிய ஒருவரின் பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். அவரை கடவுளின் மகனாக, தங்களை மீட்க வந்தவராக நினைக்கிறார்கள். 


இந்த கதை நாத்திகம் பேசுகிறதா, ஆன்மீகம் பேசுகிறதா? வாசிப்பவன் எந்த பக்கம் செல்ல வேண்டும் எதையும் ஆசிரியர் தீர்மானிக்கவில்லை.. ஆசிரியரே இயேசுவை கடவுளாகவும் இல்லாமல் மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில்  ஊசலாடி இருப்பதை பாரபாஸ் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக தான் பார்க்கிறேன். இதற்கு உதாரணமாக கல்லறையிலிருந்து இயேசு உயிரோடு எழுந்ததாக கூறப்படும் இடத்தில் பாரபாஸ் மூலம் தெரிவிக்கும் யூகம்…


இறுதிவரை பாரபாஸ் யாரையும் நம்பவில்லை. மிகப்பெரிய தத்துவ விசாரம் எதுவுமில்லை நாவலில். ஆனால் குற்ற உணர்வோ, வெறுமையோ, பயமோ, நம்பிக்கையின்மையோ  எது ஒன்றோ மனிதனின் ஆன்மாவை  சட்டென தாக்கி ஆணி அடித்தது போல அவன் சிந்தனைகள் அதனை விட்டு நகராமல் அதனுள்ளே உழன்றால் என்னவாகும்..பாரபாஸ் அப்படியான ஒரு உணர்வில் தான் ஆணி அறையப்படுகிறான். பாரபாஸை அலைக்கழிக்கும் உணர்வு என்ன குற்ற உணர்வா? பயமா?  சாவின் மீதான பயம் அவனை அலைக்கழிக்கிறதா? அனேகமாக எல்லாருக்குள்ளும் ஒரு பாரபாஸ் இருக்கிறான். நாம் பலவற்றின் மூலம் அவன் வெளியே வந்துவிடாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறோம் என்றே தோன்றியது நாவல் வாசித்து  முடிக்கும் போது.


அன்பு, காதலில் நம்பிக்கையற்ற ஒரு பிறவி அவன் என்பது போல தோன்றினாலும், உதடு பிளந்த பெண் உயிருடன் இருந்த போது அவளை பெரிதாக நேசிக்காமல் காமத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தி கொள்கிறான் முதலில். பின்னர் அவளிடம் அவனுக்கு சுரக்கும் உணர்வுக்கு பெயர் என்ன? அவள் கல்லால் அடித்து கொல்லப்பட அந்த தண்டனை தந்தவனை குத்தி கொன்றுவிட்டு அவளின் உயிரற்ற உடலை எடுத்து சென்று அடக்கம் செய்யும்போது பாரபாஸ்சிடம் தோன்றும் உணர்வுக்கு பெயர் என்ன???   


கிருஸ்து நேசிக்க சொன்னதாக தான் அவரின் நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதனின் குற்ற உணர்வு மூலமும் தியாகத்தின் மூலமும் எவரையும் மாற்ற முடியுமா என்ற ஐயப்பாடுக்கு விடை தெரியவில்லை. ஆனால் காந்தி சுதந்திரத்துக்காக போராடியபோது ஆங்கிலேயரின் குற்ற உணர்வை தூண்ட எடுத்த ஆயுதம் அகிம்சை தானே.. குற்ற உணர்வுக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறதா. சரியான விதத்தில் தூண்டப்படும் குற்ற உணர்வு மனிதனை இவ்வளவு அலைக்கழிக்குமா? ஆனால் இறுதிவரை பாரபாஸ்சிடம் ஏற்பட்ட உணர்வு என்ன என்பதை ஆசிரியர் அறுதியிட்டு கூறவே இல்லை. வாசகனின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். பாரபாஸ்சுக்கு இந்த உலகம் வழங்காத கருணையை, இயேசு வழங்காத அமைதியை அவனது இறப்பு தருகிறது…











4 comments:

  1. வாசிக்கும் எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறது உங்கள் வாசிப்பனுபவ உணர்வுகள் ததும்பிய இப்பதிவு. பாராபாஸை சந்தித்து விடுவேன் விரைவில். நன்றி அக்கா.

    ReplyDelete
  2. Really interesting.. very beautifully narrated.. thank u very much Kamali mam! - Prema

    ReplyDelete
  3. பாரபாஸ் பத்தி ஒருவரின் கதாபாத்திரத்தின் பேரில் இவ்வளவும் இருக்கா. வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கனும்ங்க. நல்ல அனுபவ பகிர்வு. அருமை. :)

    ReplyDelete