Saturday 5 November 2016

ஜப்பானிய சிறுகதை - தினம் நகரும் சிறுநீரக வடிவக்கல்


 தினம் நகரும் சிறுநீரக வடிவக்கல் – ஹருகி முரகாமி ஆங்கில மொழிபெயர்ப்பு – ஜே ரூபின் தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்

“ஒரு ஆண் தன் வாழ்நாளில் சந்திக்கும் பெண்களில் மூன்றுபேர் மட்டுமே அவனுக்கு அர்த்தமுள்ள உறவாக, முக்கியமானவர்களாக இருப்பார்கள், அதற்கு அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை” என்று பதின்பருவத்தில் இருக்கும் மகன் ஜூன்பேக்கு அவன் தந்தை கூறுகிறார். தந்தை மீது அளவு கடந்த நேசம் இல்லை எனும்போதும் அவரின் அந்த வார்த்தை ஆழமாக ஜூன்பே மனதில் பதிந்து விடுகிறது.

ஜூன்பே பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். நிறைய பெண்களை சந்திக்கிறான். அதில் ஒருவள் மீது அதிகம் ஈர்க்கப்படுகிறான். அவள் தான் அந்த மூன்று பெண்களில் ஒருவள் என்று  முடிவு செய்யும் அவன் அவளிடம் காதலிப்பதை சொல்லும் முன் அவள் இவனிடம் இருந்து விலகி விடுகிறாள். அவளை தனது மனதிலிருந்து நீக்க பெரும் போராடத்தை சந்திக்கிறான் ஜூன்பே.

அதன்பிறகு ஒவ்வொரு புதிய பெண்ணைச் சந்திக்கும்போதும் அவன் தன்னையே கேட்டுக் கொள்கிறான் இந்தப்பெண் எனக்கு அர்த்தமுள்ள உறவாக இருப்பாளா? என்ற கேள்வி அவன் மனதை ஊசலாடவைக்கும். தனக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகளே இருப்பதால் கவனமாக பெண்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறான். மேலும் முதல் பெண்ணின் விலகல் கொடுத்த வலி மீண்டும் ஏற்படாமல் இருக்க தன்னை தயார் செய்து கொள்கிறான்.

நிறையப் பெண்களுடன் பலவீனமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் பிறகு விலகுவதும் வாழ்க்கை முறையாக்குகிறான். ///ஒரு பெண்ணுடன் பழகி ஆராய்வதும் பிறகு குறிப்பிட்ட தருணத்தில் அந்த உறவு தன்னளவில் தானாக பலவீனப்பட்டு விலகுவதுமாக இருந்தது. ஆனால் எந்த உறவும் பிரச்சனையிலோ அல்லது சண்டையிலோ முடிந்ததில்லை. ஏனெனில், அவன் விலகுவதற்குக் கடினமான பெண்களைத் தேர்வதில்லை. ///

பட்டப்படிப்பை முடித்து வெளியில் வரும்போது அவன் தந்தையுடன் ஏற்பட்ட கடுமையான விவாதத்தால் அவருடனான உறவை முறித்துக்கொள்கிறான். ஆனால் அவரின் ‘மூன்று பெண்கள்’ விதி, அதன் அடிப்படை சரியாக விளக்கப்படாவிட்டாலும் கூட, அவனுள் விடாப்பிடியாக பிடித்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு எழுத்தாளராகி சில கதைகள் எழுதுகிறான். அப்போது அவனது முப்பத்தி ஒரு வயதில் அவனை விட ஐந்து வயது மூத்த பெண்  கிர்ரீ என்பவளை சந்திக்கிறான். அவள் பால் ஈர்க்கப்படுகிறான். அவளுடன் நெருங்கி பழகுகிறான். அவளும் இவனை விரும்புகிறாள். இருவரும் உறவு கொள்கிறார்கள். ஆனால் அவள் உறவு கொண்ட மறுநாள் அதிகாலை இவன் கண் விழிக்கும் முன்னே எழுந்து சென்றுவிடுவாள் ..நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று அவன் யூகத்துக்கே விட்டுவிடுவாள்.

இருவரின் உறவும் தொடர்கிறது. ஜூன்பே அவளை நேசிக்க் தொடங்குகிறான். ஒரு நாள் உறவு முடிந்து உரையாடல் நடக்கிறது. அப்போது நீ வேறு ஒரு பெண்ணை விரும்புகிறாய் தானே என்கிறாள் . ஆமாம் என்கிறான். பிறகு நீளும் உரையாடலில் கிர்ரீ , “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஜுன்பே. நீ என்னைக் கவர்கிறாய், நாம் இவ்வாறு இருக்கும்போது சந்தோஷமாகவும் அமைதியாகவும் உணர்கிறேன். ஆனால் அதன் அர்த்தம் நான் இதை தொடர விரும்புகிறேன் என்பதல்ல என்கிறாள்.

அவன் தலைகோதிவிட்டு கொண்டே ஏன் தொடர விரும்பவில்லையா என்கிறான்

“என்னால் ஒரு முழுமையான உறவில் அன்றாடம் உழல முடியாது. உன்னுடன் மட்டும் என்றல்ல: யாருடனும், நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் முழுமையாக ஈடுபட விரும்புகிறேன். நான் யாருடனாவது வாழ்ந்து கொண்டிருந்தால் – யாருடனாவது உணர்வுபூர்வமான பிணைப்பிலிருந்தால் – என்னால் அதைச் செய்ய முடியாது போகலாம். எனவே இது எப்படியிருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என நான் விரும்புகிறேன்”

ஜுன்பே சில வினாடிகள் யோசித்து, “நீ உன் கவனம் சிதறுவதை விரும்பவில்லையா?”

“ஆமாம், அதேதான்”

“உன் கவனம் சிதறினால், உன் சமநிலை குலையலாம், அது உன் முன்னேற்றத்திற்குத் தடையாகலாம்.”

”மிகச்சரி.”

”எனவே அந்த ஆபத்தைத் தவிர்க்க நீ யாருடனும் வாழ விரும்பவில்லை.”

அவள் தலையசைத்து, “குறைந்தபட்சம் இந்தத் தொழிலில் இருக்கும் வரை”

”ஆனால் அது என்ன வேலை என்று சொல்லமாட்டாய்”

”ஊகித்துச் சொல்”
என்று சொல்கிறாள். ஆனால் கடைசி வரை அவனால் அவள் செய்யும் வேலையை ஊகிக்கவே முடியவில்லை.

அப்போது ஒரு சிறுகதை எழுதி பாதியில் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை பற்றி ஜூன்பே அவளிடம் சொல்கிறான். கதையை பற்றி அவளிடம் பேச பேச அவன் திணறிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து  கதை நகர ஆரம்பித்து விடுகிறது. கதை தன்னை தானே எழுதிக்கொள்கிறது என்கிறார் ஆசிரியர்.

அந்த கதை ஒரு  பெண் மருத்துவர் கோடை விடுமுறைக்காக சுற்றுலா செல்லும் போது ஒரு அழகிய சிறுநீரக வடிவ கல்லை பார்க்கிறாள். அதை எடுத்து வந்து மேஜையில் வைக்கிறாள். அது பேப்பர் வெயிட் போல பயன்படுத்துகிறாள். இரவு அவள் வைத்து செல்லும் இடத்தில் இல்லாமல் மறுநாள் காலை அந்த கல் வேறு ஒரு இடத்தில் இருக்கும். இது அவளை ஆச்சரியப்படுத்துகிறது இத்துடன் நிறுத்தியிருந்த கதையை கிர்ரீயுடன் பேச ஆரம்பித்த பின் கதையை பற்றிய சிந்தனை ஆக்ரமிக்கிறது.

அவள் சென்ற பின் தொடர்ந்து ஐந்து நாட்கள் கதை எழுதுகிறான். இவனது கவனம் கதையிலேயே இர்க்கிறது. எழுத தொடங்கும் போது கதை வேறு தளம் நோக்கி நகர தொடங்குகிறது.  கதையில் அந்த மருத்துவரின் சிந்தனை கல்லை சுற்றியே போக மற்ற எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்குகிறாள். மெல்ல மெல்ல புற உலகிலிருந்து அந்த கல் அவளை பிரிக்கிறது. பின் சட்டென கல் உணர்த்துவது எதை என்பதை உணருகிறாள். பின்னர் அந்த கல்லை ஆழ்கடலுக்குள் தூக்கி எறிந்து வந்துவிடுகிறாள்.

அவள் வாழ்வின் புதிய ஆரம்பம் அது. அந்தக்கல்லை எறிந்ததும் அவளுக்குள் ஒரு மலர்ச்சி உண்டாகிறது. அடுத்த நாள் மருத்துவமனைக்குச் செல்கையில் அந்தக்கல் அவள் மேசையில் அவளுக்காகக் காத்திருக்கிறது. அது எப்போதும் எங்கே இருக்குமோ சரியாக அதே இடத்தில் என்று எழுதி கதையை முடிக்கிறான். முடித்தவுடன் அதை கிர்ரீயிடம் பகிர நினைத்து அவளை அழைக்கிறான். ஆனால் அவள் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

அதன் பின் இவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை தொடர்பு கொள்ளவேமுடியவில்லை. அந்த சிறுகதை பிரசுரமாகிறது. அதை படித்தால் தன்னை தேடி வருவாள், தொடர்பு கொள்வாள் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவள் முற்றிலுமாக விலகிவிடுகிறாள்.

கிர்ரீயின் விலகல் அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமான வேதனையை அவனுக்கு தருகிறது.  அவனுக்கு விருப்பமான இசையோ அல்லது அவன் விரும்பும் எழுத்தாளர்களின் புதிய புத்தகங்களோ அவனை அமைதிப்படுத்தவில்லை.

அதன்பிறகு எதேச்சையாக வானொலியில் அவள் குரலை கேட்கிறான். அது அவள் குரல் என்று அடையாளம் கண்டு பிடிக்கும் போது அவள் ஒரு நேர்காணலில் தன்னை பற்றி சொல்கிறாள். ஆண்கள் செய்யும் ஒரு சாகச வேலை அவளை ஈர்க்க அதை விருப்பத்துடன் அவள் செய்வதை பற்றிய பேட்டி. அந்த பேட்டியில் அவள் தன் மன ஓட்டங்களை சொல்கிறாள். அவளின் காதல் அவள் வேலையில் உள்ளதை சொல்கிறாள். அவளுக்கும் அவள் ஆசையான தொழிலுக்குமிடையில் யாரும் வரமுடியாது என்று சொல்லும் போது பொறாமையாக உணர்கிறான். ஆனால் எப்படி பொறாமைப்பட முடியும் என்று அமைதி கொள்கிறான்.

ஜுன்பே பலமாதங்கள் கிர்ரீ தன்னைத் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கிறான், அவளிடம் பேசுவதற்கென்று அவனிடம் நிறைய விஷயங்கள் இருந்தன, நகரும் சிறுநீரக வடிவக்கல் உட்பட. ஆனால் எந்த அழைப்பும் வரவில்லை, அவனின் அழைப்புகளும் அவளிடம் சேரவில்லை. மற்ற பெண்களின் உறவை ஜூன்பே எப்படித் துண்டித்துக் கொண்டானோ அப்படி அவள் அழகாக துண்டித்து கொண்டதாக நினைக்கிறான். உறவு முடிந்துவிட்டதோ என மருகுகிறான். பின் மீண்டும் ஆறு மாதம் காத்திருக்க முடிவு செய்கிறான். அப்போது சிறுகதைகளாக எழுதி குவிக்கிறான்.

ஜுன்பே அவளின் வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்வான், வேறு எந்தப்பெண்ணிடமும் உருவாகாத ஒரு உணர்ச்சி, ஆழமான உணர்ச்சி, தெளிவான கனமான உணர்ச்சி. இன்னமும் ஜுன்பேவால் அது என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை, குறைந்தபட்சம் எதனோடும் மாற்றிக்கொள்ள முடியாத உணர்ச்சி. கிர்ரீயை அவன் மீண்டும் சந்திக்காமலே போய்விட்டாலும்கூட, இது அவனோடு எப்போதும் இருக்கும். உடலின் ஏதோவொரு மூலையில் – எலும்புகளின் மஜ்ஜைகளுக்குள்ளாக – அவளின் இருப்பில்லாததை உணர்வான். வருட முடிவில் ஜுன்பே தன் மனதைத் தேற்றிக்கொள்கிறான்.

அவளைப் பட்டியலில் இரண்டாவதாக வைத்துக்கொண்டான், அர்த்தமுள்ள உறவை அளித்த மற்றொரு பெண். இரண்டாவது தோல்வி. இன்னமும் ஒன்றுதான் மீதமிருக்கிறது, ஆனால் இப்போது பயமேதுமில்லை. எண்கள் முக்கியமில்லை, இந்த வரிசைக்கும் அர்த்தமேதுமில்லை. இப்போது அவனுக்குத் தெரிந்துவிட்டது, மற்றொருவரை விரும்பி மனதால் முழுமையாக ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம், அதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என்று உணர்கிறான்.

ஒரு நாள் காலையில் அந்தப் பெண்மருத்துவர் தன் மேசையில் சிறுநீரகவடிவக்கல் இல்லாததைக் கவனிக்கிறாள். அவளுக்குத் தெரியும்,  அது மீண்டும் திரும்பி வரப்போவதில்லை.

இதில் சிறுநீரகக்கல் அந்த ஆசிரியரா ஜூன்பேவா ? இல்லை கிர்ரீயா?






No comments:

Post a Comment