Friday 2 December 2016

நாற்பதின் தொடக்கம்

முன்னுச்சியிலும் காதோரத்திலும் நரை
அரும்ப தொடங்கி விட்டது.
முகத்தின் பொலிவும் மெல்ல மங்குகிறது
எப்போது வேண்டுமானாலும் வருவேன்
என் இஷ்டத்துக்கு கொட்டி தீர்ப்பேன்
முடிந்தால் கட்டுப்படுத்திப் பார் என சவால் விடுகிறது
மாதாந்திர உதிரப் போக்கு
உணர்வுகளை மேலும் கீழும் நகர்த்தி
சூறாவளியாய் சுழன்று
சந்தோஷத்தின் உச்சத்துக்கும்
துயரத்தின் விளிம்புக்கும்
வெறுமையின் சூனியத்துக்கும்
அடுத்தடுத்து பயணித்து
ஆட்டம் காட்டுகிறது மனம்
வலியில் துவண்டு விழும்
உடலை கோர்க்கும் வலிமையை
சிதறடித்து கைகொட்டி சிரிக்கிறது வயது.
மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்காமல்
இழுத்தடிக்கிறது இயலாமை
நாற்பதின் ஆரம்பத்தை
அழுந்த பதிவு செய்கிறது காலம்..
வலியில் துவண்டு சரியலாம்
உணர்வுகளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
இழப்பது அறியாமல் இழக்க நேரிடலாம்
வீழ்ந்தாலும் இழந்தாலும்
வீறு கொண்டு எழ தைரியமுண்டு
வெல்லும் ஆற்றலை வளர்க்க
நெஞ்சில் உரமுண்டு.
இதோ மனக்கண்ணில் விரிகிறது
என் பிரபஞ்சம்
பாலினம் கடந்து கைகுலுக்குகிறேன்.
தனித்து பயணிக்க பழகுகிறேன்
குடும்பத்துக்குள் முடக்கிய சிறகுகளை
மெல்ல மெல்ல சீர் செய்கிறேன்.
எனக்கான வெளியை தேடி
பறக்க ஆயுத்தமாகிறேன்.
நரை சிறகுக்கு அழகு சேர்க்கிறது
கைக்குலுக்கும் கரங்கள்
வலுசேர்க்கிறது என் உலகுக்கு
உடலின் தளைகள் அறுபட
ஆசுவாசம் அதிகமாகிறது
எனக்கே எனக்கான உலகு
கை நீட்டி வரவேற்க
கம்பீரமான புன்னகையோடு
பயணப்பட ஆயுத்தமாகிறேன்.......

No comments:

Post a Comment