Friday 17 April 2015

“ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” - பிரபஞ்சன் எழுதிய புத்தகம் பற்றி ஒரு பார்வை.

“ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” பிரபஞ்சன் எழுதிய சிறுகதை தொகுப்பு. நற்றிணை பதிப்பக வெளியீடு. பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கிய புத்தகம்..பிரபஞ்சனை முதல் முறையாக இப்போது தான் வாசிக்கிறேன். மிக எளிமையான எழுத்து நடை. பெரும்பாலான கதை பின்புலங்கள் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் தான்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் கதை ஒரு அரிசிக்கடை வைத்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி கடன் கொடுத்து வியாபாரம் நொடித்து விட அவனிடம் கடன் வாங்கியவனிடம் சாத்வீகமாக கேட்டு நடையாக நடக்க அவன் காட்டும் அலட்சியம் கடைசியில் இறங்கி குரல் கொடுத்து ஒரு முறை மிரட்ட அதன் பின் பயந்து அவன் கடனை அடைக்க என்ன செய்கிறான் கடனை வாங்கி கொண்டு கிருஷ்ணமூர்த்தி நடந்து கொள்ளும் முறை என்று கதை கிளாசிக் வகை.

பிரும்மம் கதை தான் இந்த தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை. ரொம்ப எளிய ஒற்றை வரி கதை ஆனால் அந்த கதையை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் தான் அழகு. வீட்டுக்கு முன் இருக்கும் ஒரு துண்டு நிலத்தை என்ன செய்யலாம் என்று யோசித்து பலவாறு குடும்ப உறுப்பினர்களால் ஆலோசனை செய்யப்பட்டு பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு கடைசியாக முருங்கை மரம் வளர்ப்பது என முடிவாகிறது. கதை முழுதும் அந்த முருங்கை மரத்தை சுற்றியே பின்னப்பட்டிருக்கும் விதம் முருங்கை குடும்பத்தில் அக்கம்பக்கத்தில் ஒரு அங்கமாக மாறிவிடும் விதம் திடீரென ஒரு புயலில் முருங்கை சாய அந்த வெற்றிடம் மனதுக்கு கொடுக்கும் வெறுமை. சில நாட்களில் விழுந்துவிட்ட அடிமரத்தில் இருந்து இலைகள் துளிர்த்திருப்பதை உயிர் துளிர்த்திருப்பதாக முடித்திருப்பார்.. வெறும் ஒரு முருங்கை மரத்தை சுற்றி இவ்வளவு அழகாக ஒரு கதை பின்ன முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்த கதை.

பகல் நேர நாடகம் அந்த கால கட்டங்களில் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச்சில் வேலைக்காக பதிவு செய்ய போகும் ஒருவனின் பார்வையில் அந்த அலுவலகம் அரசாங்க அலுவலர்களின் அலட்சியமும் அன்றைய இளைஞர்களின் நிலையும் தெள்ள தெளிவாக விவரித்து செல்கிறார்.
அம்மா இந்த கதை படித்து முடித்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. சிறு வயதிலேயே விதவையான அம்மாவை பற்றி வளர்ந்து விட்ட மகன் அவள் ஏன இப்படி இருக்கிறாள் என்று உளவியல் பார்வையோடு சிந்தித்து தன சின்ன வயதில் நடந்த சில சம்பவங்களை வைத்து அம்மாவின் உளவியலை தன் பார்வையில் பார்க்க முயற்சிக்கும் கதை. வித்தியாசமான கதை.

பலி கதை ஐந்து வயது பிச்சைக்கார சிறுமியை பற்றியது. ஒரு காபி க்ளப் வாசலில் பிச்சை எடுக்கும் அந்த சிறுமியின் அழகும் அந்த குழந்தைக்கு துணியும் கடையில் எஞ்சிய சாப்பாட்டை கொடுக்கும் குழந்தைக்கு நீரா என்று பெயரிட்டு அழைக்கும் முதலாளிக்கும் இருக்கும் ப்ரியம் பற்றியது. ஒரு முறை ஒரு வெள்ளைக்கார தம்பதி காபி குடிக்க வர அந்த குழந்தை அவர்களை பார்த்து சிரிக்கிறது. போகும் போது அந்த வெள்ளைக்கார பெண்மணி சாப்பாடு வேண்டுமா என்று வாங்கி கொடுக்க குழந்தை மறுக்கிறது, அவள் காசு கொடுக்க அதையும் மறுத்து அவள் கழுத்தையே பார்க்கிறது அந்த வெள்ளைக்கார பெண்மணி ஒரு மணி அணிந்திருக்க அது வேண்டுமா என்று கேட்டு அந்த பெண்மணி அதை கழுத்தில் மாட்ட சந்தோசமாக அதை தொட்டு பார்க்கும் குழந்தையை தட்டி கொடுத்து அந்த தம்பதியர் சென்றுவிட தூரத்தில் இதை பார்த்து கொண்டிருந்த அந்த பிச்சைக்கார பெண்ணின் தாய் காசு கொடுத்தா வாங்க மாட்டியா பெரிய மகாராணி மணி வாங்கி போட்ட்டுக்கனுமா என்று அந்த குழந்தையை அடித்து மணியை அறுத்தெறிய படிக்கும் நம்மால் நீராவுக்காக அழாமல் இருக்க முடியவில்லை

மீன் கதை வாடிக்கையாக மீன் வாங்கும் ஆனந்தாயிக்கும் அவள் வாடிக்கையாக மீன் வாங்கும் பவுனுக்கும் அவளுக்கும் எப்படி சிநேகம் ஆரம்பிகிறது என்ற கதை. தினமும் மீன் சாப்பிட்டு மீனை கண்டாலே வெறுக்கும் மகன் திருமணம் முடித்து வரும் மனைவியாவது மீன் மேல் அதிகம் விருப்பமில்லாதவளாக இருக்க வேண்டும் என்று நினைத்து முதலிரவிலேயே அவளிடம் அவன் கேட்க அவள் பிடிக்கும் ஆனால் அவ்வளவாக விருப்பமில்லை என்றவுடன் ஆசுவாசமடையும் அவன் மறுநாள் காலை வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது மீன் குழம்பை ரசித்து இட்லிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடும் மனைவியை பார்ப்பதுடன் கதை முடிகிறது.

முறிவு கதை காதலித்து திருமணம் நிச்சியக்கப்பட்டு பத்து நாளில் திருமணம் என்று பத்திரிக்கை எல்லாம் கொடுக்கப்பட்டு கொண்டு இருக்க கல்யாணம் பற்றி ஏகக்கனவுகளுடன் இருக்கிறாள் நாயகி திருமணத்துக்கு பின் எல்லாமே புதுசாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வாங்கும் அவளிடம் காதலன் திருமணத்துக்கு முன் ஒரு முறை சேர்ந்து இருக்க விண்ணப்பம் வைக்க இன்னும் பத்து நாள் தானே எனக்கு எல்லாமே கல்யாணத்துக்கு புதுசா இருக்கணும் அதற்காக எவ்வளவு மெனக்கேடுறேன் என்று மறுத்தும் அவன் வற்புறத்த ஒரு அவனுக்கு தெரிந்த நண்பரின் லாட்ஜில் சென்று தங்குகின்றனர். அதன் பின் அவள் வெறுப்புடன் நடந்து செல்ல நாயகன் எதிர் திசையில் நடக்க தொடங்குவதுடன் கதை முடிகிறது. முடிவை வாசகரின் யூகத்துக்கே விட்டுவிடுகிறார்.

சலிப்பு கதை ஒரு குழந்தையின் அப்பாவின் பார்வையில் தொடங்கி குழந்தையின் பார்வையில் நகர்ந்து குழந்தை அப்பாவை கேட்கும் கேள்வியில் முடிகிறது. வீட்டில் சண்டை நடக்க மனைவியை அடித்துவிட்டு குழந்தையுடன் வெளியே வரும் அவனிடம் ஏம்ப்பா அம்மாவை அடிச்சே என குழநதை கேட்க, கோவத்துல தப்பு பண்ணிட்டேன் பா, யாரா இருந்தாலும் அடிச்சது தப்பு என்று சொல்ல அம்மாவுக்குந்தானே கோவம் அவங்க மட்டும் உன்னை ஏன் அடிக்கல என்று கேட்க அப்பா ஏன் என்று சிந்திப்பதுடன் கதை முடிகிறது.

தலை சாய்க்க கதை வாழ்வின் அடித்தட்டு மனிதரின் ஒரு நாள் இரவு கழிய அதுவும் மழையில் விருந்தினர் வந்துவிட்டால் இருக்க இடம் இல்லாமல் நகரத்தில் சினமா தியேட்டரில் இரவை கழிக்க முற்பட இரவு ஆட்டம் முடிந்த பின் வீட்டுக்கு வந்தும் தூங்க முடியாமல் தூக்கத்துக்கு ஏங்கும் மனிதனின் கதை.
.
சங்கம் கதை ஜாதிகள் எத்தனை வருடமானாலும் போகுமா நம்மை விட்டு என்ற சந்தேகத்தை ஆழமாக விதைத்து செல்கிறது.. ஒட்டக்கூத்தர் கம்பர் எல்லாம் கூட ஜாதியில் சேர்த்து பார்க்கும் கொடுமையை பார்க்கும்போது என்னத்தை சொல்ல என்று தான் தோன்றுகிறது.

பூக்களை மிதிக்க கூடாது, சூரியனைப் பார்க்காமல் இரண்டும் சிறுவர்களின் பார்வையில் அவர்கள் உலகத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.. கண்டிப்பாக நம் குழந்தை பருவம் நிழலாடும் வாசிக்கும் போது.

பிம்பம் ஒருவனின் அகத்தாய்வு பற்றிய கதை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல மாட்டி கொண்டிருக்கும் முகமூடியை கழட்டி கீழே போட்டுவிட்டு இது சிநேகிதனுக்காக இது அம்மாவுக்காக என்று வரிசையாக கழட்டி வீசிய முகமூடிகளை சொல்கிறான். கடைசியாக உன்னுடைய முகம் எது என்ற கேள்விக்கு எனக்கு முகமே கிடையாது என்று சொல்வதாக கதை முடியும். இதை படித்து தான் புரிந்து கொள்ள முடியும்.

பகை கதை ஒரு சொறிநாய்க்கு பயந்து அதை பற்றிய சிந்தனையுடனே இரண்டு நாட்களை கடக்கும் ஒருவன் கடைசியல் அந்த நாய் இறந்துவிட்டது என்று கேள்விபப்ட்டதும் அடையும் துக்கம் என்று வித்தியாசமான ஒரு மன ஓட்டத்தை பற்றியது.
 
விழுது, மாமன் உறவு என்றும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மனிதர்களில் சிலர் கதை. அனேகமாக இது போல வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று ஊரில் சில குடும்பங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . இந்த் கதையும் அதுபோல ஒரு கதை ..

No comments:

Post a Comment