Wednesday 8 April 2015

ஆபிரகாம் லிங்கன் - புத்தகம் பற்றிய பார்வை.

"ஆபிரகாம் லிங்கன்" அடிமைகளின் சூரியன் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு.. ஓரளவு வரலாறு, அரசியல் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் என்றால் கிழக்கு பதிப்பகம் நல்ல சாய்ஸ் என்றே நினைக்கிறேன். பாலுசத்யா எழுதிய மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு , ஓஷோவின் வாழ்க்கை வராலாறு எல்லாம் இவரது எழுத்தில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மிக எளிமையாக இருக்கும் இவரது எழுத்து நடை..

பொதுவாக இது மாதிரி தலைவர்கள் வரலாறு, போர் வரலாறுகள் எல்லாம் பெரும்பாலும் பல புத்தகங்களை ரெபரன்ஸ் செய்து அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும். அதனால் பல புத்தகங்களில் உள்ள முக்கிய விஷயங்களை வாசிக்க முடியும் என்பது கூடுதல் ப்ளஸ்.

துண்டு துண்டாக வடக்கு தெற்கு மாகாணங்களாக உள்நாட்டு கலவரங்களால் மோசமான நிலையில் இருந்த நாட்டை யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற இன்றைய வலுவான வல்லரசு அமைய அஸ்திவாரம் அமைத்தவர். இவரது காலகட்டம் 1809 - 1865 வரை.

வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உணவு, உடைக்கே கஷ்டப்படும் இடத்தில் இருந்து வந்தவர். வாழ்வில் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்து வந்தவர். அவர் ஜனாதிபாதியாக இருந்த கால கட்டங்களில் கூட சுகவாசியாக இருக்க முடிந்ததில்லை.

அடிமைகள் பிரச்சனை இவர் மனதை சிறுவயதிலேயே பாதித்தது. குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக வைத்திருந்த பழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடுத்த்தில் இருந்து அடிமைகள் வரலாறு ஆரம்பிக்கிறது. அப்போது அங்கு குடியேறிய ஐரோப்பியர்களுக்கும், போர்சுக்கீசியர்களுக்கும், வேலை பார்க்க ஆட்கள் தேவைப்பட்டார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்க இரண்டு வேலை சோறு, துணிமணிங்க மட்டும் கொடுங்க சாமி நாங்க உழைக்கிறோம் என்ற குரல் ஆப்ரிக்காவிலிருந்து " நீக்ரோ" என்று அழைக்கப்பட்ட பஞ்சத்தில் அடிபட்டு கிடந்த ஆப்ரிக்க கறுப்பின மக்களிடமிருந்து வந்தது.

கேட்டதை தருவதாக சொல்லி அழைத்து வந்த அவர்கள் வஞ்சிக்கப்பட்டு சுரண்டப்பட்டார்கள். உழைப்பு மட்டுமில்லை, உயிர், மானம்  எல்லாம் சேர்ந்தே சுரண்டப்பட்டது. உடல் பழம் இருந்தாலும் கல்வியறிவற்ற சிதறி இருந்த அவர்கள் ஆயதங்களால் அடிபணிய வைக்கப்பட்டார்கள். அடிமைகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக ஆனால் தெளிவாக அழுத்தமாக  ஆசரியர் பதிவு செய்திருக்கிறார். மனதை அழுத்துகிறது நம் மனிதர்களின் வக்கிரம்..

ஆபிரகாம் ஒரு முறை கிராமத்தில் இருந்து நகருக்கு வந்து நகரை சுற்றி பார்த்த போது அடிமை சந்தையில் கறுப்பின மக்கள் விலங்குகளால் பிணைக்கப்பட்டு இருந்ததையும் வெள்ளையர்கள்  அவர்களை சுவுக்கால் விளாசி கொண்டிருந்ததை பார்த்தார். ஒரு நீக்ரோ பெண்ணை ஏலம்விட்ட போது அவளை வாங்க வந்தவர்கள் அவளது அங்கங்களை தொட்டு தடவி, அமுக்கி பார்க்க அதை பார்தது துடித்து போனார் லிங்கன். அடிமை வியாபாரத்தில் கறுப்பின மக்கள் நடத்தப்பட்ட விதம் அவரால் தாங்கி கொள்ள முடியாததாக இருந்தது. அப்போது கூட வந்த நண்பரிடம் இதை ஒழிப்பதற்கு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக ஒழிப்பேன் என்று கூறுகிறார். அப்போது அவர் இருபதுகளில் இருந்தார்.

ஏழ்மையில் இருந்த போதும் வாசிக்க புத்தகங்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்த போதும் இரவல் வாங்கியாவது புத்தகங்கள் வாங்கி தன்னை வளர்த்து கொண்டார். வழக்கறிஞர் தொழில் இவரை பெரிதும் ஈர்க்க அதற்கு படித்து வழக்கறிஞராக வாழ்வை தொடங்குகிறார். பெரிதாக வருமானம் இல்லாத போதும் தேங்காய் மூடிக்கு கச்சேரி செய்வது போல வழக்குகள் எடுத்து நடத்தி காலம் தள்ளுகிறார். திருமண வாழ்வும் அவருக்கு தோல்வியே. தேர்தலில் போட்டியிடுகிறார். அங்கும் தோல்வியை சந்திக்கிறார். பேச்சு திறமையால் மெல்ல மெல்ல அரசியலுக்குள் தோல்விகள் பல சந்தித்து முன்னேறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி பதிவிக்கு போட்டியிட்டு இறுதியில் வெற்றி பெறுகிறார். வெற்றி பெற்றும் அப்போது அமெரிக்காவில் நடக்கும் உட்ப்பூசலால் அதிகம் தோல்விகள் சந்திக்கிறார். ஆனாலும் அமெரிக்காவை ஒன்றாக இணைக்கும் கொள்கையிலும், அடிமை முறையை ஒழிப்பதிலும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெறுகிறார். இரண்டாம் முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஒரு நாடகம் பார்க்க சென்ற போது வெள்ளையர் ஒருவரால் சுட்டு கொல்லப்படுகிறார்.

ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு தன்ன்னம்பிககை புத்தகம். அவரின் ஆளுமை அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று...

No comments:

Post a Comment