Thursday 18 August 2016

நியாயங்கள்

தூக்கம் பிடிக்காத நள்ளிரவில்
மின்மினிப்பூச்சிகளின் ஒளியில்
சில் வண்டின் இரைச்சலில்
மெல்ல மெல்ல
உயிர்பெற்று எழுகின்றது 
உன்னுடன் கழித்த பொழுதுகள்.
வெளியேறும் வழி தெரியாத
அடர் கானகத்துள் கைக்கோர்த்து
ஒருவருக்குள் ஒருவர் பயணித்த தூரம்
அறியாமல் பிரவேசித்துவிட்டு
பேசவியலா உணர்வுகளை
மனதில் தேக்கியபடி பிரிய முயலுகிறோம்
அறுத்தெறியவும் மனமில்லை
புறந்தள்ளவும் கூடவில்லை
நினைவுகளோடு போராடவும் முடியாமல்
விழி நீரை துடைக்கவும் விருப்பமின்றி
இயலாமையை சுமந்தபடி
வெறிக்கிறேன் இந்த இரவை…

========================== 

நான்..
பிடிவாதக்காரி
பொறாமை பிடித்தவள்
திமிர் பிடித்தவள்
ஆயினும்
உன் ஆழ் மனத்தின் விகாரங்களுக்கும்
கௌரவத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்
என்னைத் தான் இரை கொள்கிறாய்
ஏக்கங்களை கேட்டுவிட்டு
உண்மை அன்புக்கு ஏங்குவதாக கூறி
என் அன்பில் குளிர் காய்ந்து
கனவுகளை கூட விட்டுவைக்காமல்
கபளீகரம் செய்துவிட்டு
எனக்குரியதை தர ஏனோ மறந்து போகிறாய்.
இழப்புகளுடனும் ஏக்கத்துடனும்
கழியும் பொழுதுகள்
இடைவிடாது இம்சிக்கிறது
உன் முகத்து புன்னகையில்
தெரிந்தது
எனை அடைந்த பூரிப்பா
இல்லை
ஆக்ரமித்த அலட்டலா
விடைதெரியாத கேள்வியின்
வெம்மையில் வீழ்கிறேன் எனக்குள்..

=======================

விழி விரித்து
வாங்கிய முத்தத்தில்
வியர்க்கும் உதடுகளின் ஈரத்தை
மார்பில் ஒற்றி எடுக்கிறேன்
தலை கோதும் விரல்களின் ஸ்பரிசத்தில்
கண் மூடி கிறங்குகிறேன்
முற்றுபெறா இரவை 
முடித்துவைக்கிறது உன் நுதல் முத்தம் 

No comments:

Post a Comment