Friday 24 February 2017

சிதைவுகள் - சினுவ அச்சிபி

சிதைவுகள் – சினுவ அச்சிபி “Things fall apart “ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம். வின்செண்ட் மொழிப்பெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. முதன் முதலில் ஆப்ரிக்க இனத்தின் கலாச்சார, பண்பாட்டு கூறுகளை ஆப்ரிக்கர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலத்தில்.. இந்த நாவலை வகைமைப்படுத்துவது சற்று சிரமம். ஏனென்றால் இலக்கியம் வரையறுக்கும் வரையரைகளுக்கு அப்பால் ஆப்ரிக்க இனத்தவரின் வாழ்விடத்துக்கு நம்மை கூட்டி செல்லும் ஆசிரியர். அவர்களுடனேயே இருத்தி விடுகிறார்.
உலகெங்கும் மிக வேகமாக பரவிய கிருஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும், பழங்குடியினரின் ஆன்மாவை திருகி போட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனைய மதங்கள் மிக எளிதாக ஊடுருவ காரணமாக அமைவது அம்மக்களிடம் இருந்த சில மூடநம்பிக்கைகளும், காட்டு மிராண்டிதனங்களும் தான் என்று தேற்றிக்கொண்டாலும், அவர்களின் காட்டு மிராண்டித்தனத்துக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் நிகழ்த்துகிறது கிருஸ்துவின் பெயரை சொல்லி உள்ளே நுழையும் கிருஸ்துவ மதம்.
ஆப்ரிக்க பழங்குடி மக்களின் ஒருவனான ஓக்கோங்கோ என்ற மல்யுத்த வீரனின் இளமை பருவத்திலிருந்து அவன் இறப்பு வரை நடக்கும் சம்பவங்கள். அவனை சுற்றி உள்ள மனிதர்கள், அவர்களின் சமூக பழக்க வழக்கங்கள், அவர்களின் குடும்ப அமைப்பு, அவர்கள் வழிபடும் தெய்வங்கள், அசைக்க முடியாத நம்பிக்கைகள், கட்டுபாடுகள், என்று ஆசிரியர் நம்மை நைஜீரிய பழங்குடியினருடன் வசிக்க வைக்கிறார் நாவலில்.
வீரமே தங்கள் இனக்குழுவின் முக்கியமாக கருதப்படுவதுடன் அதற்காக போராடுபவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் தான் அந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தாக கருதப்படுகிறது.
ஓக்காங்கோவின் தந்தை உனேக்கா மிக மென்மையான மனதுடையவராக இருக்கிறார். மகனின் பார்வையில் சோம்பேறி. வெறுமனே புல்லாங்குழல் வாசித்து சமூகத்தில் பட்டங்கள் எதுவும் வாங்காமல், கடனாளியாக இறந்து போகிறார். தன் தந்தை போல தான் இருக்க கூடாது என்பது மட்டுமே சிறுவயதிலிருந்து ஓக்காங்கோவின் லட்சியமாக இருக்கிறது. கரடுமுரடாக தான் வளர்கிறார் .வீரத்தால் பட்டங்ககள் வாங்குகிறார். கடினமாக உழைக்கிறார். அந்த இபோ கிராமத்திலும், அவர்கள் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்துக்கு நகர்கிறார். மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி குடிசைகள் தனக்கென் ஆபி என்று வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேறுகிறார்.
இவரின் வாழ்க்கை முறையை விவரிக்கும்போது அம்மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை, பெண்களின் நிலை, அவர்கள் உரிமைகள்,  வைத்திய முறை, பிறப்பு முதல் இறப்பு வரை பின்பற்றப்படும் சடங்குகள , போர்கள், பஞ்சாயத்துகள் அனைத்தும் எளிய முறையில் விவரித்து விடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் எழுத்து நடையால் நாமும் அந்த ஊர் மக்களுடன் நம்மை பிணைத்து கொள்வது எளிதாகிறது. என்னை மிகவும் ஈர்த்தது, அவர்களின் குட்டி குட்டி நாடோடிக்கதைகள், அதில் ஒன்று கொசு ஏன் காதருகே ரீங்காரமிடுகிறது .
ஓக்காங்கோவின் வாழ்க்கை மிக அழகாக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு இறப்பு வீட்டில் அவன் தெரியாமல் செய்துவிடும் ஒரு தவறுக்காக மிகுந்த கடுமையான தண்டனைக்குள்ளாகிறான். ஏழு வருடங்கள் அந்த ஊரை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். தனது தாய்மாமன் கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் குடிபெயருகிறான். இந்த சமூகத்தில் பெண்ணுக்கான இடத்தை ஆசிரியர் மிக அழகாக இந்த இடத்தில் பதிவு செய்கிறார் ஓக்காங்கோவின் தாய் மாமன் மூலம். ஒரு பெண் இறந்துவிட்டாள் அவர்கள் சமூகத்தில் ஏன் பெண்ணை அவளது பிறந்த வீட்டில் புதைக்கிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம்,  அம்மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு மரியாதையை ஏற்ப்டுத்தியது. 
அந்த ஏழு வருடத்திற்குள் கிருஸ்துவ மதம் அவனது இபொ கிராமத்துக்குள் எப்படி நுழைந்து பரவுகிறது என்பது மீதி கதை. வெள்ளையர்கள் கொண்டு வந்த சைக்கிளை இரும்புக்குதிரை என்று அந்த ஊர் மக்கள் பெயரிடுவது, அது போல அவர்களை என்ன காரணத்துக்காக ஊருக்குள் அனுமதிக்கிறார்கள் அனைத்திற்கு நாவல் வாசிக்கும்போது தெளிவு கிடைக்கும்.
ஒக்கோங்கொவின் மூத்த மகன் தங்களது மதத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளாலும், பழக்க வழக்கத்தாலும், மென்மையான மனம் சொல்ல முடியாத துயரத்தில் இருக்க அப்போது கிருஸ்துவ மதத்தினரால் செய்யப்படும் ப்ரார்த்தனையில் நெக்குருகி தன்னை அந்த மதத்தோடு இணைத்து கொள்கிறான். கிருஸ்துவர்களையோ தனது மக்களையோ எவரையும் குறை சொல்லவில்லை, எதையும் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இது தான் நடந்தது என்று ஒரு பார்வையாளனாக அனைத்தையும் நேர்மையாக பதிவு செய்கிறார்.
கிருஸ்துவ மதம் கல்வி, மருத்துவம் என்று ஈர்த்தது, மிக கடுமையான தண்டனைகள் மூலம் அந்த கிராமத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்து கொண்டு தான் உள்ளே நுழைகிறது. பின்னர் படிப்படியாக அந்த மக்களின் கலாச்சாரத்தை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி கொண்டு மிக நேர்த்தியாக ஒரு நியாயம் கற்பித்து கொண்டு அம்மக்களை முற்றிலும் சிதைத்ததை தான் “சிதைவுகள்:” நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வரலாறல்ல . இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கதை தான். நான் நாவலை ஒரே மூச்சில் படித்தேன். எடுத்த புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. விரிவாக எழுதவில்லை. ஆனால் கிருஸ்துவ மதம் பரவும் முறை மிக நுணுக்கமாக வாசிப்பவர் உள்வாங்கும் போதும் நம் நாட்டில் நடக்கும் மதமாற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து நமக்கு புரியாத ஒரு கோணம் புலப்படும்.

No comments:

Post a Comment