Saturday 25 February 2017

மார்க்ஸிம் கார்க்கி - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

மார்க்ஸிம் கார்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு – அகல் வெளியீடு – ரஷ்ய மொழி கதையை தமிழில் மொழிப்பெயர்த்திருப்பவர்கள் பூ. சோமசுந்தரம் & நா. முக்கம்து ஷெரீபு.

பதினான்கு சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில், சில கதைகள் குறுநாவல் என்றே சொல்லலாம். பெரும்பாலான கதைகள் செவி வழி கேட்ட கதைகளாகவும், நாடோடிகளின் வாழ்க்கையை பேசும் கதையாகவும் இருக்கிறது. அந்த கால ரஷ்ய பிரபுத்துவ வாழ்க்கையை சில கதைகள் பிரபலித்தாலும், பெரும்பாலான கதைகள் நாடோடிகள் மற்றும் அடிதட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கிறது.

ஒரு சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை முதல் கதை வாசகரை ஈர்க்குமாறு அமைந்தால், அந்த மொத்த தொகுப்பும் வாசித்து முடிக்கும் வரை எதிர்பார்ப்புகள் இருக்கும். மார்க்ஸிம் கார்கியின் இந்த தொகுப்பில் முதல் கதை என்று இல்லை அனைத்து கதைகளும் வெவ்வேறு தளத்தில் நின்று சாமானியனின் உள்ளத்து உணர்வுகளையும், அவர்கள் சிக்கல்களையும், அடிமை வாழ்க்கை முறைகளையும் பேசுகிறது.

முதல் கதையான ஜிப்சி என்ற நாடோடி இனத்தவரின் வாழ்க்கை முறையையும், அவர்களில் அழகான பெண் ஒருத்தியின் வீரத்தையும், அவள் காதலனை தேர்ந்தெடுக்கும் விதம், அவள் காதல் அவனை கிறங்கடித்து அவன் அறிவை அழித்து அவள் முன் மண்டியிட வைக்கும் என்று சொல்லி காதலித்தாலும் ஏற்க மறுக்கும் ராத்தா, அவளில்லாமல் வாழ முடியாது அவளை அடைந்தாலும் வீரனாக இருக்க முடியாது என்று அவளை கொன்று, அவள் தந்தையின் கையால் மரித்து போகும் லோய்கோ என்று செவி வழி கதையாக கேட்ட ஜிப்சி கதையை இந்த முதல் கதை பதிவு செய்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் ஜிப்சி இனத்தவரின் காதலும், வீரமும் தனித்த ஒரு உணர்வு தளத்தில் வெளிப்பட்டுள்ளது.

இஸெர்கீல் கிழவி கதை பெண் ஒருத்தி தன் வாழ்க்கையை ஒரு நாடோடிக்கு சொல்கிறாள். அவள் வாழ்வில் சந்தித்த காதலன்களை, அவர்களை சர்வ சாதரணமாக சூழலுக்காகவும், தன் சுயநலத்துக்காகவும் கொலை செய்தத ஒருத்தி இறுதியில் ஒருவனிடம் காதல் வயப்பட்டு அவனுக்காக பைத்தியம் போல அலைகிறாள். ஆனால் அவனோ இவள் காதல் மூலம் சிறையில் இருந்து தப்பிவிட்டு பின் இவளை புறக்கணித்து செல்கிறான். இந்த கிழவியின் கதை வாசிக்கும்போது பல்வேறு உணர்வுகள் பெண்ணின் காமம், காதல் சார்ந்து நமக்குள் விதைத்து செல்கிறது. முதலில் கதை கேட்டவன் நம்ப முடியாதது போலவே பல இடங்களில் இப்படியா இப்படியா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

திருடன் கதை, திருட்டையே பிழைப்பாக வைத்திருக்கும் ஒருவனை வாழ்வில் நேர்மையான, கடவுளின் சட்ட திட்டங்களுக்கு பயந்த ஒருவன் சந்திக்கிறான். திருடனுடைய தொழிலில் உதவி செய்கின்ற வேலை என்று தெரியாமலே திருட்டு வேலைக்கு ஒத்து கொள்கிறான். ஒரு நாள் இரவு திருட்டில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்து திருடன் திருடி வர அவனுக்கு துடுப்பு வலிக்கும் வேலைக்காக ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் பேசி திருடனுடன் செல்கிறான் . அவன் திருடும் போது இவனுக்கு தன்னை திருடன் தனது தொழிலுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தன் புனிதம் கெட்டுவிட்டதாக அழுது புலம்பும் இவன் பின்பு திருடிய பொருளை விற்றுகிடைக்கும் பணத்தின் மீது ஆசைப்பட்டு திருடனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். அதிர்ந்து போகும் திருடனின் அக உணர்வும், கடவுளின் பெயரால் ஒழுக்க விதிகளை பின்பற்றும் ஒருவனின் அக உணர்வும் அவர்களுக்குள் இருக்கும் முரணை விவரித்திருக்கும் பாங்கும்,  அந்த திருட்டை அப்போதைய பயணத்தை சாகசத்தை விவரித்திருக்கும் இடம் எல்லாம் வாசகர்களை கதையில் கட்டி போடுகிறது.

சலிப்பை போக்க கதை, ஒரு கிராமத்தில் ரயில் நிலையத்தையும் அதில் பணி புரிபவர்களையும் பற்றி பேசுகிற கதை. ஒரு ரயில் வந்து போகும் போது சில நேர பரபரப்பு மட்டுமே அந்த ஊர் மக்களின் பொழுதுபோக்கு வேறு பொழுது போக வழியில்லாத அந்த கிராமத்தில் ரயில் நிலைய தலைவரின் வீட்டில் பணி செய்யும் அழகற்ற பெண். அம்மை தழும்புகளும், சீரற்ற அங்க அமைப்புகளும் கலந்து அருவெறுப்பான தோற்றத்தின் காரணமாகவே திருமணம் நடக்காமல் இருக்க சமையல்காரியாக அந்த நிலைய தலைவரின் மனைவிக்கு குழந்தைகளை கவனித்து கொள்ளும் சேடியாக வேலை செய்கிறாள் அந்த அழகற்ற பெண் அரினா.

அவளை அந்த ரயில்வே நிலையத்தில் பணி புரியும் இன்னொரு ஊழியனான கமோஸான் கவனிக்கிறான். அவளிடம் தன் சொந்த வேலைகளை ஏவுகிறான். அவளும் ஒரு வித அடிமை போல அதையெல்லாம் செய்கிறாள். ஒரு நாள் பேச்சு வாக்கில் அவள் தனியானவள், அவளின் உருவம் காரணமாக யாரும் நெருங்கவில்லை என்பதெல்லாம் கமோசானுக்கு தெரிய வருகிறது. தன் வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு யாருக்கும் தெரியாமல் வருமாறு அவளை அழைக்கிறான், அவளிடம் கடனாக பெற்ற பணத்தை அப்போது தருவதாக கூறுகிறான். அவளும் செல்கிறாள். விடிந்து தான் திரும்புகிறாள்.

கமோசான் அதன் பின் அவளை அழைக்கவில்லை, அவளிடம் கடனாக பெற்ற பணத்தையும் கொடுக்கவில்லை. தானாகவே அவள் அவனை தேடி போனாள். அவளிடம் இந்த உறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறான். அவள் மூலம் வேறு என்னென்ன வேலைகள் எல்லாம் பெற்று கொள்ள முடியுமோ அத்தனையும் பெற்று கொள்கிறான். அவள் கிட்டத்தட்ட அடிமை போல அவன் இட்ட வேலைகளை செய்தாள். அவன் அவளுக்கு ஏதோ பிச்சை இடுவது போல அவள் அவலட்சணத்தை குத்தி காட்டுவான். அவள் சில நாட்கள் போகாமல் இருந்தால் இன்று வா என்று யாருக்கும் தெரியாமல் முணுமுணுத்துவிட்டு செல்வான். அவளும் உடனே கட்டளைக்கு கீழ்படிந்து செல்வாள்.

இவர்களின் உறவு அங்கு பணி புரியும் ஊழியன் மூலம் தெரியவர ஒரு நாள் அரினா கமோசான் அறைக்குள் இருக்கும்போது பூட்டிவிடுகிறான். அப்படி மாட்டிக்கொண்ட அன்று இரவு கமோசான் திட்டி தீர்க்கிறான் அரினாவை. தன் மானமே போய்விட்டதாக குமைகிறான். மறுநாள் காலை கதவை திறக்கும் ரயில் நிலைய அதிகாரி, ஊழியர்கள்,அனைவருக்கும் தங்கள் சலிப்பை மறக்க ஒரு விஷயம் கிடைத்த சந்தோசத்தில் இருவரையும் கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். ஏற்கனவே கமோசானின் வார்த்தையாலும் அவமானத்தாலும் சுருண்டிருந்த அரினா ஊர் மக்களின் கிண்டல் கேலியால் மேலும் மனதுக்குள் உடைந்து போய் தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிகிறது. 

இந்த கதை என்னை மிகவும் உலுக்கியது.  இதில் பகிரப்பட்டிருக்கும் ஆண் மனதின் ஆதிக்க உணர்வு, ஆதரவற்ற அழகற்ற பெண்ணை உபயோகப்படுத்தி கொள்ளும் ஆண் அவளையே பாவத்துக்கு காரணமானவள் என்று ஏசுமிடம், அழகற்ற தன் உடல் மீதும் ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதை பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளும் பெண் அவன் அடிமையாக மாறும் விதம் அவளின் உணர்வு போராட்டம் ,  பொதுபுத்தி அனைத்தையும் இந்த கதை பேசுகிறது.

நான் சில  கதைகளை மட்டுமே பகிர்ந்தேன் . மார்க்ஸிம் கார்க்கியின் எழுத்துகளின் ஆழம் , அகச்சிக்கல்கள்ளை நுணுக்கமாக பதிவு செய்திருக்கும் விதத்தில் நிறைய இடங்களில் நம் அகத்தை ஒப்பு நோக்கி கொள்ள முடிகிறது. இவரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு இவரின் தாய் புத்தகத்தை வாங்கியுள்ளேன். மார்க்ஸிம் கார்க்கி கண்டிப்பாக தவற விட கூடாத எழுத்தாளர்.





No comments:

Post a Comment