Saturday 28 September 2019

உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்



மகாபாரதம் என்னை பொறுத்து வரை ஒரு அமுதசுரபி போல.. பல நூறு கதைகளை உள்ளடக்கிய அந்த இதிகாசத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் அது பேசும் தத்துவங்களும் எக்காலத்துக்குமானது. அந்த கதாபாத்திரங்களை தங்களின் கற்பனைத் திறத்தோடும், அக ஆராய்ச்சியோடும் எப்படி வேண்டுமானாலும் உருமாற்றிக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில் எஸ்.ரா உபபாண்டவத்தில் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய உருவம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மகாபாரத்த்தில் வரும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் தான் அந்த இதிகாசத்தை கட்டி எழுப்புகின்றனர். அவ்வகையில் காந்தாரி, குந்தி, பாஞ்சாலி, மாத்ரி, அம்பை ஆகிய மாந்தர்களை ஆசிரியர் வேறு ஒரு அச்சில் வார்த்திருக்கிறார். புராணக்கதை என்றால் அதை கடினமான மொழியில் தான் கொடுத்தாக வேண்டுமென்று யாரோ அழுத்தமாக எழுத்தாளர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள் போல.. மொழி நடை ஆரம்பத்தில் கொஞ்சம் பக்கங்கள் புத்தகத்துடன் ஒன்ற முடியாமல் செய்தது.. பின் மெல்ல மெல்ல கதைக்குள் இழுத்து கொண்டு விட்டார் எஸ்.ரா..
நிறைய இடங்களில் மூலத்துடன் முரண்படுவதாக வார்த்தை ஜாலம் காட்டி வசீகரிக்க முயன்றாலும், அதிக தூரம் எஸ்.ரா அதில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எஸ்.ராவின் எளிய நடைக்கு பழகிய வாசகர்களுக்கு இந்த வாக்கிய அமைப்புகளும், கடினமான புதிய வார்த்தைகளும் ஆச்சரியப்பட வைக்கவில்லை.. மாறாக ஏமாற்றமே.. மகாபாரதத்தின் மூலத்துடன் ஓப்பிட்டு குழப்பிக்கொள்ளாமல் படிப்பவர்களுக்கு, நவீன எழுத்தின் மற்றொரு படிவமாக உபபாண்டவம் இருக்கும்.

No comments:

Post a Comment