Saturday 14 March 2020

சுளுந்தீ - ஒரு பார்வை

வாழ்ந்து கெட்டவர்களை பற்றி பேசுவதிலும் அதை கேட்பதிலும் பலருக்கும் அலாதியான சுகம் உண்டு. சுளுந்தீ கூடுதலாகவே வாழ்ந்து கெட்ட தமிழ் பண்டுவத்தை, அதை தொழிலாக செய்த நாவிதர்களை அவர்களுக்கு இருந்த மரியாதையை (!) ராஜ தந்திரிகளாக அரண்மனைக்கு சேவை செய்ததையும், அரசியல் சூதால் பலியானதையும், விரிவாக பேசுகிறது நாவல். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் ஆட்சி தான் நாவலின் கதைக்களம். நாவிதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் என்னென்ன வேலைகள் செய்தார்கள்? அந்த வேலையில் இருக்கும் முக்கியத்துவம் , அந்த தொழிலில் மூலம் நடக்கும் அரசியல் கொலைகள் என நாவல் பயணிக்கிறது.
ஆரம்பத்தில் அரச குடும்பத்திற்கு நாவிதம் செய்யும் ராமனின் மகன் மாடனுடன் நடக்கப்போகும் மல்யுத்த போட்டியோடு அவனோடு மோதப்போகும் வங்காரனுடன் தொடங்கினாலும், அடுத்தஅத்தியாத்திலேயே நாவல் இருபத்தைந்து வருடம் பின்னோக்கி பயணிக்கிறது.
மாடனின் தந்தையான ராமன் அரண்மனை நாவிதனாக இருப்பதோடு, பன்றிமலையில் வாழும் சித்தரிடம் சீடனாக பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க பழகுகிறான். இவன் திறமையால் மகிழும் அரண்மனை இவனுக்கு குதிரை வழங்குகிறது. குலத்தொழில் மட்டுமே வழி வழியாக விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நாவிதன் குலத்தில் பிறந்த ராமனுக்கு படை வீரனாகும் ஆசை வருகிறது. அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டாலும், அவனால் படை வீரனாக முடியாது என்று தெரிய வருகிறபோது தனது மகனான மாடனை அரண்மனை படை வீரனாக்கி பார்க்க ஆசைப்படுகிறான். அதற்காக மகனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று தருகிறான். ஆனாலும் அரண்மனை தரப்பில் அனுமதி மறுக்கப்பட, தனக்குள்ளாக குமைந்து வேகிறான். இதனிடையே அரசியல் சூதில் ராமன் பண்டுவ மருந்து தயாரிக்கும்போது இறந்து போகிறான். தந்தை ஊட்டிய ஆசையும், அரண்மனைபடை வீரன் மோகமும் அலைக்கழிக்க அரண்மனை உத்தரவை ஏற்று நாவிதனாக தொழில் செய்ய செல்கிறான். மாடனின் தந்தைக்கு அரண்மனையில் இருக்கும் செல்வாக்கால் ஏற்கனவே கொதித்து கிடக்கும் தளபதி செய்யும் சதியோலசனைகள், மாடனை முடக்கிப்போட , ஒரு கட்டத்தில் ராபின் ஹூட்டாக மாற வேண்டிய சூழலுக்கு மாடன் தள்ளப்படுகிறான். முடிவில் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகிறான். ராமன் மூலமாக சித்த மருத்துவம்மட்டுமல்லாது அப்போதை மக்களின் வாழ்க்கை முறை, அரசாண்டவர்கள், அவர்களுக்கு ஏவல் புரிந்த தளபதி, குடிப்படையினர் சாதாரண மக்கள் மீது ஏவிய அடக்குமுறைகள், அதில் ஒன்றான குலநீக்கம் என்னும் கொடூர சட்டம் என நாவல் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு பயன்படும் மருத்துவ பொருட்களை கொண்டு வெடி பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்ட பின்னர் அந்த பொருட்களை வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், அதையும் மீறி அந்த மூல பொருட்களை வாங்கி குலநீக்கமானவர்களும்,ஊரை விட்டு விரட்டப்பட்டவர்களும் காட்டில் கிணறு முறித்து விவசாயம் செய்து, ஆள்பவர்களுக்கு எதிராக போருக்கு தயாராகும் அரசியலை நாவல் பேசுகிறது. மழையை மட்டும் நம்பியிருந்த மக்கள் மழை பொய்த்த போது கடும் பஞ்சத்தை சந்தித்ததையும், விளைச்சல் இல்லாத போதும் வரி கேட்டு மக்களை கொடுமைப்படுத்திய குடிப்படைகளும், வரிகட்ட முடியாது மறுத்து எதிர்த்தவர்களை குல நீக்கம் செய்ததையும் நாவல் பேசுகிறது. பஞ்ச காலத்தில் புளியங்கொட்டைஉணவாகவும், மருந்தாகவும்,விஷமாகவும் பயன்பட்ட தகவல் ஆச்சரியமூட்டியது. இன்று சாலையோரங்களில் புளியமரங்கள் இருப்பதற்குபின் இருக்கும் வரலாற்றையும் நாவல் பேசுகிறது. சைவம், வைணவம், குதிரையை பயிற்றுவிக்கும் ராவுத்தர்கள், சுல்தான்கள், கிருஸ்துவ சபை இந்தியாவில் காலூன்றிய அந்த நாட்களில் சைவ மடங்கள், குலகுரு ஆகியோர்களின் செயல்பாடுகள் என பதினெட்டாம் நூற்றாண்டின் சமய அரசியலுக்கும் கதையின் ஊடாக வாசகனை அழைத்து சென்றிருக்கிறார் ஆசிரியர் அதே போல செவி வழி கதைகள் பலவற்றையும்ஆசிரியர் ஆங்காங்கு இடைச்செறுகலாக கதையினூடாக சொல்லியிருக்கிறார் நாவலின் கனமும் அதற்காக ஆசிரியரின்மெனக்கெடலும் அசாத்தியமானது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சாதிய படிநிலையில் மேல் அடுக்கில் இருந்தவர்கள் இன்று ஒடுக்கப்பட்டவர்களாக எஞ்சி நிற்கும் அவலத்தையும் நாவல் எடுத்துரைக்கிறது. அதிலும் ராமன் தனது மகனான மாடனுக்கு நாவித தொழில் மேன்மை பற்றி எடுத்து சொல்லி, புரிய வைக்கும் போது வாசகனுக்கும் நிறைய விஷயங்களை தெள்ள தெளிவாக புரிய வைக்கிறார் ஆசிரியர். இந்த நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் சொற்களில் பல நம்மை விட்டு மறைந்தாலும் சில சொற்களை மட்டும் அதன் அர்த்தம் புரியாமல் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். அதிலும்”வெங்கம் பய” என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் காரணப்பெயர் இனி அந்த வார்த்தையைஉச்சரிக்கும் முன் யோசிக்க வைக்கும். திருநங்கைகளுக்கு ”இருபிறவி” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். மிக அழகான வார்த்தை. நாவல் மனிதர்கள் மருத்துவம் மட்டுமல்லாது, ஆடு, மாடு,குதிரை உள்ளிட்ட பல ஜுவராசிகளின் மருத்துவமும் பேசுகிறது. ராமனின்அறிமுகத்தில் இருந்து அடுத்தடுத்து பக்கங்கள் முழுதும் அடுத்தடுத்து சித்த மருத்துவ குறிப்புகள் வாசிக்கும்போது பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது, அப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நாவல் வாசிக்கிறோமோ அல்லது சித்த மருத்துவ புத்தகம் ஏதும் வாசிக்கிறோமா என்ற ஐயப்பாடே எழுந்தது. கதைக்கு தேவையில்லாத விவரங்களை பக்கம் பக்கமாக கொடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இந்த நாவலின் ஊடாக சொல்லப்பட்டுள்ளசெவி வழிக்கதைகளும், சொலவாடைகளும் பலஇடங்களில் பொருந்திப்போனாலும் சில இடங்களில் துருத்திகொண்டு தெரிகிறது. நாவல் வாசிக்கும்போது ஆங்காங்கு நாம் நாவல் வாசிக்கிறோமோ இல்லை ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறோமா என்ற உணர்வு தவிர்க்கமுடியவில்லை. ஆசிரியர் - இரா. முத்துநாகு. ஆதி பதிப்பகம்

No comments:

Post a Comment