Monday 27 January 2014

நானும் ஆடைகளும்

நானும் ஆடைகளும்:

ஆடைகளின் அணிவகுப்பு பிறந்தவுடனே தொடங்கி விட்டாலும் எனக்கு நினைவில் ஆரம்பிப்பது பள்ளி பிராயத்து சீருடைகள்..என் முதல் பள்ளி சீருடை”pinafore” என்று அழைக்கப்படும் வகையான உடைகள்.. வெள்ளை அரை கை சட்டையும் அதன் மேல் சிகப்பு ஹாப் ப்ராக்குமாக இருக்கும்.. அதற்கு மேட்சாக வெள்ளை அல்லது சிகப்பு கலரில் முத்து தோடுகள், சிகப்பு ரிப்பன், கருப்பு சூ. ஐந்தாம் வகுப்பு வரை இந்த உடையும் வெள்ளி கிழமை முழு வெள்ளை “Pinafore” தான் அதிகம் அணிந்தது..அதை தாண்டி அப்போது உடை பற்றிய பெரிய நியாபகங்கள் இல்லை..

பின் ஆறாம் வகுப்பு வந்த பின் பச்சை ஸ்கர்ட்டும், மஞ்சள் சட்டையும் எட்டாம் வகுப்பு வரை. எட்டாம் வகுப்பிற்கு பின் கண்டிப்பாக பாவாடை சட்டை. சில பிள்ளைகள் தாவணி அணிந்து வரவேண்டும் என்பது வலுக்கட்டாயமாக சொல்லப்படும்.. அந்த கால கட்டங்களில் தான் உடை பற்றி கொஞ்சம் அக்கறை அப்போது மாடர்ன் ட்ரஸ் எல்லாம் கிடையாது.. பாவாடை சட்டை தான் பெரும்பாலும் பூ போட்ட பாவாடை சட்டை மட்டுமே.. பாவாடை கட்டினால் கயிறு மேலே ஒன்று கீழே ஒன்று இறங்கி சில சமயம் முடிச்சு படு முடிச்சாகி ரொம்ப அவஸ்த்தைப்படுத்தும். அத்துடன் பாவாடை கட்டி கொண்டு சைக்கிள் ஓட்டினால் எதிர் காற்றில் ஒரு கையால் இழுத்து விட்டு கொண்டு மகா அவஸ்தை..

இப்படி இருக்க எங்கள் எட்டாம் வகுப்பில் தான் இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்தது இங்கு பள்ளிகளில் சேர்ந்தது.. அவர்கள் மிடியும், சுடியும் அணிந்து வர எங்களுக்குள்ளும் ஆசை துளிர்விட ஆரம்பித்தது.. வீட்டில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி ஒரு சுடிதார் வாங்கி விட்டேன்.. அதை சும்மா போட்டு சென்றால் அதற்கு மரியாதை உண்டா அதற்காக ஹீல்ஸ் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி ஏற்கனவே குதிரை மாதிரி நடப்பா உங்க பொண்ணு இதில் ஹீல்ஸ் வேற கேக்குதா என்று அப்பாவுக்கு ரெண்டு அர்ச்சனை வேறு..

முதல் முறை சுடிதார் போடும் போது அதில் ஒரு பெருமை மட்டுமே எங்கள் ஊரில் எல்லாரும் பாவாடை சட்டையில் இருக்க நாம் சுடிதார் போடுகிறோம் என்று ஆனால் சைக்கிள் ஒட்டிய போது வாலிபால் விளையாடிய போது தோன்றியது அந்த உடையின் வசதி..ஆனாலும் வீட்டில் ஏதோ ஆசைக்கு வாங்கி கொடுத்தோம் அவ்வளவு தான் பொம்பளை பிள்ளையா லட்சணமா தாவணி போடு என்று குரல் ஓங்கி ஒலிக்க வேறு வழி இல்லாமல் தாவணிக்கு மாறினேன்.. தாவணி அழகு தான் என்றாலும் திரும்ப பாவாடை நாடா அவஸ்தையுடன் மாராப்பை இழுத்து விடும் அவஸ்தையும் தொடங்க உடை ஒரு எரிச்சலாகவே மாறிவிட்டது..

அடுத்து திருமணம். இருபது வருடஙகள் முன் திருமணமாகிவிட்டால் அப்புறம சேலை தவிர வேறு உடை உண்டா அதுவும் கும்பகோணம் போன்ற ஊர்களில்.. எப்படியோ அள்ளி அள்ளி கொஞ்சம் சொருகி வைப்பேன்.. இரவில் சேலையை அவிழ்த்து விட்டு கணவரின் சட்டை அதில் கொஞ்சம் comfort comfort உணர்வேன். இப்படியாக ஏதோ ஒரு போராட்டத்துடன் தான் நானும் உடைகளும்.
    
அதன் பின் சென்னை வந்தேன்.. ஹப்பா முதல் சுதந்திரம் ஆடை சுதந்திரம் தான்.. என் கணவர் உன் விருப்பம், உனக்கு எது சௌகரியமோ அதை உடுத்திக்கோ.. உனக்கு தெரியும் எது போடலாம் எது வேண்டாம் என்று சொல்லி முதல் முறை இரண்டு சுடிதாரும் (அப்போது ரெடிமேட் தான் மெட்டிரியல் எல்லாம் இல்லை.. என் உயரத்துக்கு கிடைக்க அப்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்) இரண்டு நைட்டியும் வாங்கி தந்தார்கள்...சுடிதார் உடுத்த அப்போது அடைந்த ஆனந்தம் இருக்கே வார்த்தையில் சொல்ல முடியாது.. பரபரவென்று இருக்கும் நான் சென்னையில் ஓட சுற்ற வசதியாக இருந்தது..  

அதன் பின் ஆடைகள் என் இஷ்டம் என்று ஆன பின் எனக்கு எதெல்லாம் சௌகரியமாக இருக்கோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க ஆரம்பித்து விட்டேன் சேலை அழகு தான் ஆனால் அவசரத்துக்கு உடுத்த பிரயாணத்தின் போது எல்லாம் சுத்தபப்டாது.. சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ் போன்றவை வேலைக்கும் (இப்போது கொஞ்சம் சேலைகளும் அதிகம் கட்ட ஆரம்பித்திருக்கிறேன்.. காலையில் கிடைக்கும் நேரம் பொருத்து) சென்னைக்கும் என்றும், டைட்ஸ், இன்னும் சற்று மாடர்ன் ட்ரெஸ்கள் டூர் போகும்போதும் என்று வகை பிரித்து  விதவிதமாக உடுத்தி மகிழ்கிறேன்..ஓரளவு ஆடையில் எதெல்லாம் அணிய ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் அணிந்து விட்டேன்... J J J


No comments:

Post a Comment