Wednesday 29 July 2015

உபாரா - அன்னியன் லட்சுமன் மானே அவர்கள் எழுதி எஸ்.பாலசந்திரன் மொழிபெயர்த்த புத்தகம் ஒரு பார்வை

“உபாரா””  அன்னியன் என்னும் நூல் லட்சுமணன் மானே அவர்கள் மராத்தியில் எழுதி தமிழில் எஸ். பாலசந்திரன் அவர்களால் மொழி பெயர்க்ப்பட்ட்து. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

ஆசிரியரின் சொந்த கதை இது. ஜாதி அமைப்பு என்பது எந்த அளவு சமூகத்தில் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட நாடோடி பழங்குடியினியரிடமும் வேரூன்றி இருக்கிறது என்பதை வாசித்து முடிக்கும்போது உணர முடிகிறது.

இந்த பழங்குடியினரை ஆதிக்க சாதியினர் நடத்தும் விதம் மனிதர்கள் விலங்கை வீட கீழானவர்கள் என்று புரிய வைப்பது ஒரு புறம் என்றால் ஜாதி என்ற ஒன்றை விட்டு விடாமல் பற்றி கொண்டு அந்த அமைப்புக்குள் கட்டுப்பட்டு போவதையே அதை தாண்டி வெளியே வர முயற்சிக்காத அப்படியே போராடி முன்னேறி வருபவனையும் ஜாதி எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் படிக்க படித்து முடிக்கும்போது மிக பெரும் அயர்ச்சியை உணர முடிகிறது.

கைக்காடி என்ற நாடோடி பழங்குடியினரின் வாழ்கை பாட்டைஅவர்கள் இனம் சார்ந்த ஒருவரே அவரது மொழியில் பதிவு செய்திருக்கிறார். அவர் சாதாரணமாக அவர்களை பற்றி சொல்லும் செய்திகள் கூட படிக்கும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களையும் கொண்டது தான் இந்த சமூகம் இது தெரியாமல் எவ்வளவு பக்ட்டுகளை கடக்கிறோம் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நம்மை போன்ற சக மனிதர்களை ஜாதியின் பெயரால் பிரித்து வைத்து அவர்களும் தங்கள் ஜாதியை பற்றிய பெருமையை விடாது பிடித்து கொண்டு என்று எல்லா சாதியினரிடமும் தன ஜாதி பற்றிய பீற்றலும் அதை தீவிரமாக பிடித்து கொள்ளும் புத்தியும் இருப்பதை தன் வாழ்வின் மூலம் சொல்கிறார்.

ஊசிப்போன ரொட்டிகளும் பிச்சை எடுத்து கொண்டு வரும் குழம்புகளும் அந்த ஊசிப்போனதை சாப்பிட அதை புளியிலும் உப்பிலும் ஊறவைத்து சாப்பிடுவதும், மனிதர்கள் மலம் கழிக்கும் இடங்களிலும் சுடுகாட்டிலும் தங்கள் இருப்பிடங்களை கூடாரங்களை அமைத்து கொண்டு பருவ நிலை மாற்றத்துக்கு தகுந்தாற்போல் வேலை இருக்கும் இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் வாழ்ந்து வரும் அவர்கள் வாழ்வியலும், வசவுகளை சாதாரணமாக எதிர்கொள்ளுவதும், அடி வாங்குவதும் அவர்கள் கடவுள் நம்பிக்கையும், என்று கதை பயணிப்பது ஒரு வாழ்வியிலில்.

அழகிய எழுத்து நடை, தத்துவங்கள், உவமானங்கள், இலக்கிய மேதமை எதுவும் இல்லாமல் வாழ்வியலின் உண்மையை ஆசிரியர் எழுதி இருக்கிறார்.  அந்த கைக்காடி இனத்தில் பிறந்த ஒருவர் எந்த சந்தர்ப்பத்திலும் படிப்பை நிறுத்த கூடாது என்ற உறுதியுடன் பல அவமானங்களை புறக்கணிப்பை பள்ளியில் சந்தித்தபோதும் வாழ்க்கையுடன் போராடி பட்டப்படிப்பு வரை தொடர்கிறார். பள்ளியில் அவர் அவமானப்படுத்த பட்டாலும் மெட்ரிக் முடித்த பின் நகரத்தின் பள்ளியில் அவர் சேர்ந்தபின் அவ்வளவாக ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பழகும் நண்பர்கள் கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் எல்லா இடத்திலும் யாரோ ஒருவர் அவர் மீது காட்டும் பரிவிலும் நண்பர்களின் தயவிலும் பட்டபடிப்பு முடிக்கிறார்.

இறுதியில் கலப்பு திருமணமும் செய்து கொண்டு அவர் படும் கஷ்டங்கள், அரசாங்கத்தால் பிற்படுத்தப்பட்ட கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் ஜாதியை ஒழிக்க என்று செயல்படும் அமைப்பு ஜாதியை வலுவாக நிறுவுவதை என்று சமூகத்தின் அத்தனை அவலங்களையும் பதிவு செய்திருக்கிறார். ஜாதியின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தங்கள் பெற்றோர்களுக்காக அவர் அழித்து விட முயற்சித்த ஜாதி என்னும் கறை அவர் மேல் எப்படி அடர்த்தியாக படிகிறது என்பதாக ஆசிரியர் முடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment