Tuesday 15 September 2015

கோபி கிருஷ்ணனின் படைப்புகள் ஒரு பார்வை.

    கோபி கிருஷ்ணனின் படைப்புகள் மொத்தமும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. 86 சிறுகதைகள், நான்கு குறுநாவல்கள், சமூகப்பணி சார்ந்த அவரது பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள் நேர்காணல் என்று கோபிகிருஷ்ணனின் படைப்புகள் மூலம் அவரது வாழ்க்கையும் அக உணர்வுகளையும், உளவியல் சிக்கல்களையும், சமூகம் தனி மனிதன் திணிக்கும் நிர்பந்தங்களை அதனால் ஏற்படும் மன அதிர்வுகளை என்று நாம் சாதாரணமாக கடக்கும் நிகழ்வுகளுக்கு பின் இருக்கும் உலகத்தை அவரது பார்வையிலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மூலமும் நமக்கு மிக எளிமையான ஒரு நடையில் தெளிந்த நீரோட்டமாக காண்பித்திருக்கிறார்..

    பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகள், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், மனச்சிதைவுகள் அது குறித்த பலரின் கட்டுரைகள், மனச்சிதைவு மனிதர்கள் மீது சமூகம் காட்டும் புறக்கணிப்பு, மருத்துவர்கள் சிலரின் அலட்சியம், சிலரின் அன்பு அரவணைப்பு என்று மனநோயாளிகளின் உலகை அவர்கள் மேல் காட்ட வேண்டிய அன்பின் அவசியத்தை உணர செய்கிறார் தம் எழுத்துகள் மூலம...

    மத்திய தர மக்களின் ஒண்டு குடித்தன வாழ்க்கையை, அதில் இருக்கும் பிரச்சனைகளை கூட மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்திருக்கும் கோபி சில கதைகளில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருந்தாலும் எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார். பல இடங்களில் அவர் வெறும் பார்வையாளாராக காட்சிகளை அப்படியே விவரித்து செல்லும் போது அந்த காட்சி கண் முன் விரிகிறது..சகல சம்பத்துகள் கதையில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கோவில் செல்லும்போது அவரது பார்வையில் கோயிலை பற்றி விவரித்திருப்பார்.. அந்த கதையை வாசிக்கும்போது ஒரு கோயில் சார்ந்த காட்சிகள் அப்படியே கண் முன் விரியும்..மிகவும் பச்சையான வாழ்க்கை மற்றும சில கதைகளில் ஒண்டி குடித்தனத்தில் குடியிருப்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பிரச்சனைகளை சொல்லும் போது இப்படியும் மனிதர்களா என்று துணுக்குறாமல் இருக்கமுடியாது..

    ஈடன் தோட்டம் தொட்டு இறையுணர்வுக் கூட்டம் ஊடாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை எனற கதையில் காமம் அது சார்ந்த வக்கிரம், பாலியல் உணர்வுகள் நீக்கமற எங்கும் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் . முடியாத சமன் கதையும் வேறு சில கதைகளும் முழுக்க பாலியல் பிரச்சனைகளால் அல்லது ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளால் மன்பிறழ்வுக்கு ஆளான மனிதர்களை பற்றி பேசுகிறது..

    தணிக்கையிலிருந்து தப்பிய கதை வாசித்த போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பிலோமி என்ற பெண்ணின் மூக்கிற்க்காக அவளை காதலிக்கும் ஒருவனின் கதை.. மயிரே துணையில் ஊடாடும் மெல்லிய நகைச்சுவை செம... இது போல நிறைய சிறுகதைகளை அதில் அவர் சொல்லியிருக்கும் யதார்த்த உணர்வுகளை சிறுதிடுக்கிடலோடும், சிறு புன்னகையுடனும், சிறு அதிர்ச்சியுடனும், கொஞ்சம் சிந்தனையுடன் தான் கடக்க முடிகிறது.

    நாவல்களில் காத்திருந்த போது ஒரு தனித்துவமான கதை. ஒன்றுமே இல்லை தன மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் காத்திருக்கும் ஒரு மூன்று மணி நேரத்தில் அவர் காணும் காட்சிகள் சந்திக்கும் மனிதர்கள் என்று அவர் பார்வையில் விவரிக்கும் விதத்தில் அட நாமும் தான் இது போல காத்திருக்கும்போது பார்க்கிறோம் ஆனால் இதில் இப்படி ஒரு கோணம் இருக்கா என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை..
    சுய அலசல்கள் அதில் இருக்கும் நேர்மை. அவரது நேர்காணலில் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் விதம் கட்டுரைகளில் மனபிறழ்வு, மனச்சிதைவு குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு அது குறித்தான புத்தகங்கள் அவை முன்வைக்கும் பார்வைகள் என்று எந்த சமரசமும் இல்லாமல் தொகுத்திருக்கிறார்.
     -------------------------------------------------------

    கோபிகிருஷ்ணனின் படைப்புகள் முழுதையும் ஒரே புத்தகமாக வாசிப்பதில் சில சௌகரியங்களும் சில அசௌகரியங்களும் சேர்ந்தே இருந்தன. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த தடிமனான புத்தகத்தை சுமந்து சென்று படிப்பது கொஞ்சம் கடினம். பிரயாணங்களில் வாசிக்க முடியாது. ஆனால் இவரின் எழுத்துகள் எல்லாவற்றையும் வாசிக்கும்போது இவரின் எழுத்து நடையை அழகாக உள்வாங்க முடிகிறது.

    உளவியல் சார்ந்த தனி மனிதனின் சிக்கல்கள், பொருளாதாரம் சுமத்தும் வாழ்வியல் பிரச்சனைகள் அது பாதிக்கும் தனி மனித உளவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தனிமனிதன் மீது ஏற்படுத்தும் தாக்குதல்கள் என்று கோபி முழுக்க சுய மதிப்பீடுகளை உளவியல் சார்ந்து செதுக்கி இருக்கிறார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாது உண்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தி மிக எளிமையான அசத்தலான நடையில் நம் முகமூடியை கழட்டி நம்மை சுய மதிப்பீடு செய்ய உதவியிருக்கிறார். சற்றேறக்குறைய ஆதவனின் நடையை ஒத்திருந்தாலும் கோபியின் களம் முற்றலும் ஆத்வனில் இருந்து வேறு பட்ட களம். 

    ஒண்டிக்குடித்தனத்தில் வசிக்கும் சாதாரண சராசரி மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பின் இருக்கும் உளவியலை எல்லாம் எழுத்தில் கொண்டுவந்திருக்கும் கோபி எந்த சமாதனங்களும் இல்லாமல் அகம் சார்ந்த பிரச்சனைகளை நுணுக்கமாக விவரித்து செல்கிறார். நாம் சாதாரணமாக கடக்கும் நிகழ்வுகளுக்கு பின் இருக்கும் அசாதாரணங்கள் எல்லாம் வாசிக்கும்போது கோபியை பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

    மனிதனின் உளவியல் அதிகம் தெரிந்துகொள்ள மனிதர்களுடன் நெருங்கி பழகுவது மிகவும் மேலோட்டமாக ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.

    கோபிகிருஷ்ணனின் படைப்புகள் முழுமையாக வாசித்து முடிக்கும்போது மனிதர்களை பார்க்கும் பார்வை நம்மையறியாமல் மாறிவிடும் ..

No comments:

Post a Comment