Tuesday 29 September 2015

வெள்ளை யானை - ஜெய மோகன் புத்தகம் பற்றிய பார்வை

“வெள்ளை யானை” ஆசிரியர் ஜெயமோகன். புனைவு என்ற போதிலும் வரலாற்று வகையாக தான் பார்க்க முடிகிறது. சென்னையாக இப்போது மருவி நிற்கும் மதராசிப்பட்டினத்தின் கதை மதராசிப்பட்டினத்தின் வளமையை சொல்லவில்லை மாறாக இருண்ட பகுதிகளை சொல்லியுள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஐஸ் ஹவுஸ், பக்கிங்க்ஹாம் கால்வாய், சென்னை துறைமுகம், சென்ட்ரல் போன்ற அழகிய கட்டடிடங்களின் பின்னால் புதைந்திருக்கும் அழுகிய வரலாறு மனதை கனக்க செய்கிறது. 1876 – 1878 ஆண்டுகளில் தமிழகத்தில் மதராஸில் ஏற்பட்ட பெரும்பஞ்சம் அப்பஞ்ச்ததில் இறந்து போன பல இலட்சம் மனிதர்களை அவர்களின் அந்த நிலைக்கு காரணமாக அப்போது இருந்த ஆங்கிலேய ஆட்சி அவர்கள் பொருட்களை நம் வளத்தை கொள்ளை அடித்தார்கள் என்றால் அவர்களுக்கு துணையாக நின்றது பேராசை பிடித்த இந்தியர்கள். ஜாதி என்ற ஒன்று எவ்வளவு கோரமான முகத்துடன் அப்போது ஆட்சி புரிந்து பல இலட்சம் உயிர்களை எந்த கருணையுமின்றி கொன்று குவித்தது என்பதை நாவலை வாசிக்கும் போது உணர முடிகிறது.. இந்தியாவின் கால்வாசிப்பேர் பஞ்சம் கொள்ளை நோய்களில் இறந்தார்கள். இறந்து போனவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்..

இந்தியாவின் முதல தொழிற்சங்க போராட்டம் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் நடத்தியது என்கிற வரலாற்று உண்மை. ஆனால் தலித்துகளால் நடத்தப்ட்ட இது இடைநிலை ஜாதி ஆட்களாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் உயர்சாதி குத்தகைக்காரர்க்ளாலும் நசுக்கபட்டதாக திரு. வி .க. அவர்கள் செவிவழிச செய்தியாக கேட்டதை சொல்லியிருக்கிறார்.
எய்டன் பைர்ன் என்ற ஐரீஸகார ஆங்கிலேய பிரபுவின் கீழ் மதராஸப்பட்டினம் இருந்ததாக ஆரம்பிக்கும் நாவல் அவரின் பார்வையிலேயே செல்கிறது.
காலை அலுவலகத்துக்கு குதிரையில் செல்லும் அவர் வழியில் இரண்டு மனிதர்கள் சாட்டையால் அடிக்கபடுவதை பார்த்து நிறுத்தி விசாரிக்க தொடங்க அவரை சாட்டையால் அடிக்கும் கங்காணி நீலமேகம் அவர்கள் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் என்றும் வேலை செய்யாமல் தப்பி ஓடிவந்துவிட்டதற்கு தண்டனை தருவதாக சொல்ல எய்டன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு இல்லை என்று சொல்லி அடிப்பட்டு கீழே கிடக்கும் அவனை தூக்க சொல்கிறார். அவன் தீண்டத்தகாதவன் தொட முடியாது என்று மறுக்க எய்டன் இது என் ஆணை என்று சொல்லும்போதும் எந்த சலனமும் காட்டாமல் நீலமேகம் தொட மறுத்து நிற்கும்போது அப்போதிருந்த தீண்டாமை விஷம் எந்தளவு கொடியது என்பது வாசிப்பவர்களுக்கு மெல்ல மெல்ல உறைக்க தொடங்குகிறது.

இங்கு நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களின் பின் புலம், அவர்கள் ஊரில் எப்படி இருந்தார்கள, அவர்களின் நிலை, இங்கு எப்படி இருக்கிறார்கள என்பதெல்லாம் நாவல் வாசிக்க வாசிக்க தெரிந்து கொள்ள முடிகிறது. கொடுங்கோலாட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இருந்த போதும் அவர்களின் கொடுங்கோலுக்கு கொஞ்சம் கூட குறைச்சலில்லாமல் மனிதாபிமானமில்லாமல் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தி நம் மக்களையே சுரண்டிய கொடுமை அதிகம். ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் மனசாட்சியுடன் நடந்து கொண்ட ஒரு அதிகாரி எய்டன். முதலில் ஜாதி பிரச்சனை ஜாதி பிரிவுகள் புரியாமல் குழம்பிய ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநலத்திற்காக அந்த ஜாதி பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதும் ஆங்கிலேயர்களின் துணையுடன் உயர் ஜாதி இந்துக்களும் இடைநிலை சாதிகாரர்களும் சேர்ந்து தலித்துகள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித இனம் மொத்தமும் மனிதன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்...

அடிப்பட்ட ஐஸ்ஹவுஸ் தொழிலாளி விவகாரத்தில் இறங்கும் எய்டன் அந்த ஐஸ்ஹவுஸ் சென்று பார்க்க அங்கு தலித்துகள் எந்த பாதுகாப்பும் குளிருக்கு குறைந்த பட்ச காலணிகள் கூட இல்லாமல் வேலை செய்வதையும் பார்த்து அதிர்ச்சியாகி விசாரணை தொடங்க அந்த விசாரணை செல்லும் திசை தான் நாவல். அந்த தலித்துகளை பற்றிய விவரங்களை எய்டனுக்கு சொல்லும் காத்தவராயன் மூலம் தலித்துகளின் நிலை எய்ட்னை அதிர்ச்சி கொள்ள செய்ய அவர்கள் இடம் நோக்கி பயணிக்கிறான். கோரைப்புல் குடிசையில் ஈரத்தில் அவர்கள் இருக்கும சேரியை பார்த்து அதிர்ச்சியடையும் எய்டன் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பாதிரியாரை சந்திக்கிறான்.

அவர் சொல்ல செங்கல்பட்டு செல்கிறான் பஞ்சம் பற்றி அறிக்கை தயாரிக்க. வழியில் அவன் காணும் காட்சிகள் நாம் மனிதர்களாக பிறந்து உயிரோடு இருக்க வெட்கப்பட வேண்டிய காட்சிகள் முகத்தில் அறைய மிகுந்த மன உளைச்சலுடன் எய்டன் விவரங்கள் சேகரித்து வருகிறான். அப்போது அவனுக்கு வண்டியோட்டியாக வரும் டேவிட் பேசும் அத்தனையும் பச்சை உணமையாக எய்டன் நெஞ்சில் அறைகிறது.

பஞ்சம் பற்றிய அறிக்கை தயார் செய்து பஞ்சம் தீர ஒரு ஆறு மாதம் இங்கிருந்து எந்த தானியமும் ஏற்றுமதி செய்யாமல் இருந்தால் போதும் என்ற தீர்வுடனும் கவர்னரை சந்திக்க எய்டன் செல்கிறான். ஆனால் அங்கே இருக்கும் அதிகாரிகள் செய்யும் சூழ்ச்சிகள், இந்திய குத்தகைக்காரர்களின் சுயநலம் எல்லாம் அதை செய்யவிடாமல் தடுப்பதுடன் எய்டனையும் வேறு ஊருக்கு மாற்றல் செய்கிறது.

ஆனால் அதற்குள் காத்தவராயன் விருப்பத்துக்கு இணங்க ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை போராட வைக்க எய்டன் எடுக்கும் முயற்சியும், தலித்துகள் முதன் முதலாக உரிமை குரல் எழுப்புவதும் அது முரஹரி ஐயங்கார் என்பவரால் நசுக்கப்படுவதும் அதற்கு அவர் சொல்லும் காரணமும் அப்போது மேட்டுக்குடி மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

காத்தவராயன் அவரிடம் தயவு செய்து எங்களை மனிதர்களாக பாருங்கள் நாங்கள் செத்து அழிந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்ல அவன் எதிரில் நின்று பேசியதே பாவம் என்பது போல பேசும் முரஹரி அவர்கள் கடவுள் உருவாக்கிய சட்டங்களை மீறினார்கள் இதோ நிற்கிறானே இவன் அணிந்திருக்கும் இந்த வெள்ளை உடைக்காகவே இவன் கூட்டத்தை கடவுள் கொன்றழிப்பார். கடவுளுக்கு மனிதர்கள் எங்கே நிற்கவேண்டும் என்று தெரியும் என்று கொதித்து பேச காத்தவராயன் ஆம் கடவுள் இருக்கிறார் என்று தான் நானும் நினைக்கிறேன் இல்லாவிட்டால் மாடுதின்பவர்கள் உங்களுக்கு எஜமானர்களாக வந்திருக்க மாட்டார்கள் உங்கள் பெண்களை அவர்களுக்கு கொடுத்து அறைக்கு வெளியே நீங்கள் கூழைக்கும்பிடு போட்டு நின்றிருக்க மாட்டீர்கள் என்று சொல்லும்போது உறைக்கும் உண்மை கனமானது.

காத்தவராயன் மூலம் தலித்துகளின் அந்த கால வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். மனிதம் செத்த இந்தியர்களும் இருந்திருக்கிறார்கள் மனிதாபிமானத்துடன் இருந்த வெள்ளையர்களும் இருந்திருக்க்றார்கள் என்பதை நாவல் வாசித்து முடிக்கும் போது உணர முடியும்.

காத்தவராயன், டேவிட் இருவர் மூலமும் தலித்துகளின் நிலையை அழுத்தமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். எய்டன், பாதர் பரண்ணன் மூலம் மனிதாபிமானம் உள்ள ஆங்கிலேயர்களின் மனிதத்தையும், மரிஸா மூலம் அப்போது இருந்த ஆங்கிலோ இந்திய பெண்களின் நிலையையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியை நியாயப்படுத்தவில்லை ஆசிரியர் ஆனால் அந்த ஆட்சியில் இருந்த மனிதாபிமானமிக்க அதிகாரியை பற்றி சொல்லி இருக்கிறார்.  அந்த மனிதாபிமானம் எப்படி ஆங்கிலேய அதிகாரிகளாலும், நம் சுயநல முதலைகளாலும் குதறப்படுகிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.. இது ஆங்கிலேயே ஆட்சியை ஆதரிக்கும் நாவல் அல்ல...நாவல் அது சொல்லும் அரசியல், தத்துவம், கோட்பாடுகள் எல்லாம் குறித்து வேறு ஒரு பதிவாக இட வேண்டும்...

2 comments:

  1. Porumaiyaa padichittu solren Kamali....:)...
    - Gayathri Karthik...

    ReplyDelete
  2. நல்ல தெளிவான பார்வையோடு விரிவாக எழுதியிருக்கிறீர்கள் கமலி....

    உங்கள் விமர்சனத்தை வாசித்த பிறகு முழு நாவலையுமே வாசித்தது போல் இருக்கிறது....:)

    ReplyDelete