Friday 18 September 2015

இரவு - ஜெயமோகன் நாவல் பற்றிய ஒரு பார்வை.

இரவு ஜெயமோகனின் நாவல். தமிழினி பதிப்பகம். முதலில் இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்பதில் மிகப்பெரிய ஐயம் உண்டு என்ற போதிலும் அப்படி ஒரு உலகத்துள் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவதே இப்படைப்பின் வெற்றி.

மலையாள கரையோரம் ஒதுங்கி, தென்னை கூட்டத்தின் நிழலை, காயலின் அழகை, கடுஞசாயின் சுவையை, புட்டின் மணத்தை, நிசாகநதி பூவின் மணத்தை நுகர்ந்துவிட, அந்த இரவின் தனிமையை அதன் அழகில் நம்மை கரைத்து கொண்டுவிடும் எண்ணத்தை அவர் எழுத்து நடையில் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெயமோகனின் மேற்கத்திய தத்துவத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியை, கிருஸ்துவ மதத்தின் மீதான அவரது எள்ளலை இந்த நாவலிலும் பட்டும் படாமல் தொட்டிருக்கிறார்.

கொஞ்சம் கூர்ந்து கதையை உள்வாங்கினால் திருமூலர் பட்டினத்தார் ஆகியோரின் பெண்கள் பேய்கள் என்ற வாக்கியத்தை ஒட்டியே கிட்டத்தட்ட பயணித்திருக்கிறார்.

ஆனால் மிக ஜாக்கிரதையாக நீலிமா பாத்திர படைப்பை கையாண்டிருக்கும் விதத்தில் யட்சி என்று குறிப்பிட்ட போதிலும் நீலிமாவின் பாத்திரத்தின் யதார்த்த பெண்ணின் உணர்வுகள் அன்பின் ஆழம் வெறுப்பின் ஆழம் போன்ற சிலவற்றை அப்பட்டமாக காட்டும் இடங்களில் அப்பாத்திரத்தித்தை நம்மில் ஊடுருவ செய்கிறார்.

நீலிமா, சரவணன், மேனன், நாயர், தோமா, கமலா, காயல், முகர்ஜி, சுவாமிஜி, பாதிரியார் தாமஸ் என்று எல்லாரின் மூலமும் நம் சிந்தனைக்குள் ஊடுருவி மனிதர்களின் தேடலுக்கு பின் இருக்கும் அபத்தங்களை ஆனால் தேடல் என்பது தவிர்க்க முடியாது சிலரை அலைக்கழிப்பதை சொல்ல முனைந்திருக்கிறார். உண்மைக்கு மிக அருகில் நெருங்கி பார்க்க முனைபவர்கள் சந்திக்கும் ப்ரச்ச்னைகள் ஆபத்தான கத்தி முனையில் நடந்து பழகியவர்களுக்கு சாதாரணமாக நடக்க முடியாமல் போகும் அவஸ்தையை சொல்லியிருக்கிறார்.

சரவணன், சுவாமிஜி, பாதிரியார் தாமஸ், நீலிமா, முகர்ஜி அனைவரும் உண்மையை வேறு வேறு கோணங்களில் அடைய முற்படுபவர்களாக தான் இருக்கிறார்கள். பாதைகள் வேறு வேறு. நீலிமா ஆசிரமத்தோடோ பாதிரியின் கொள்கைகளோடோ தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளாதவளாக காட்டிகொண்டாலும் தன்னை வனங்களில் இருட்டில் உலவும் யட்சியாக கூறிக்கொண்டு அவள் மனத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் நிர்வாணமாக கொட்டி சரவணனை வெறுத்து ஒதுக்குவது போல பேசினாலும் அவனின் அன்புக்கு ஏங்கும் பாத்திர படைப்பாக பெண் உணர்வின் பிரதிபலிப்பாக பார்க்கிறேன்..

சரவணன் நீலிமா காயலில் அந்த இரவின் தனிமையில் புணர்வதை காமம் தாண்டிய ஒரு உணர்வாக சொல்லியிருப்பார். இறுக்கி அணைத்து கொள்ள எல்லா எண்ணங்கள் வடிந்தன. உடல் அதன் புராதனச் சடங்கை செய்ய ஆரம்பித்தது எதற்க்காக அது தன்னை அவ்விதம் திரட்டி உருவம் கொண்டிருக்கிறதோ அதை எதற்க்காக அது உண்கிறதோ, எதற்க்காக உடுத்துகிறதோ, எதற்க்காக உறங்குகிறதோ அதை , எங்கே அது தன்னை உடல் மட்டுமே என உணர்கிறதோ அதை என்று சொல்லும் இடத்தில் மனதின் சிந்தனையோட்டத்தின் ஆழம் உணர முடியும்.

தனியாக காயலில் நடுஇரவில் அவன் தோமாவுடன் பயணிக்கும் போது அவனுக்கு ஏற்படும் உணர்வு நிலை அதற்கு பின் இருக்கும் தத்துவத்தை சுவாமிஜி விளக்குவது, சுவாமிஜிக்கும் சரவணனுக்கும் கமலா வீட்டில் நடக்கும் உரையாடல் அதன் தொடர்ச்சியாக சரவணன் கலந்து கொள்ளும் அந்த இரவு நேர பூஜை, அதற்குள் பிரயாணிக்கும் முழுதாக ஏற்கவோ முழுதாக புறக்கணிக்கவோ முடியாத அவனின் மனநிலை, குழப்பத்தில் அவனுக்கு ஏற்படும் மயக்கம், அதன் பின் முகர்ஜியுடனான தர்க்கவாதம் எல்லாமே அழகாக பின்னபட்டிருக்கிறது.

சரவணனின் சராசரி குழப்பங்களும் மேனன், நாயர், தாமஸ் ஆகியோருடனான தர்க்கவாதத்தின் மூலம் அவன் தெளிந்து தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், இரவு உலகத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு தப்பித்து ஓட முயற்சிப்பதும் பின் திரும்புவதும் என்று சரவணன் பல இடங்களில் நம் உணர்வுகளை ஒட்டியே பயணிக்கிறான்.

சுவாமிஜிகும் கமலாவுக்கும் உள்ள உறவு அதனால் ஆசிரமத்தில் நடக்கும் கொலை, அதற்கு பின் சரவணனின் மனதில் நடக்கும் போராட்டங்கள், நீலிமா அவனை எந்த குற்ற உணர்வும் இன்றி பிரிந்து செல்ல சொல்லி எழுதும் கடிதம், அதை பார்த்த பின் அவனுக்கு ஏற்படும் விடுதலை உணர்வு அவன் எடுக்கும் முடிவு என்று கதையை முடித்திருப்பதில் இரவு தனித்திருக்கிறது..



உண்மைன்னா அது கடல். கடல் மாதிரி அது வந்துட்டே இருக்கிறப்போ நமக்குள்ள இருக்கிற எல்லா பொய்யும் கொஞ்சம் கொஞ்சமா நாமே அறியாம கரைஞ்சு போயிடுதுல்ல அது தான் சரியான வழி. எதுக்கும் அதுக்கான பரிணாம காலகட்டம் இருக்கு அதுக்கான அவகாசத்த நாம கொடுக்கணும் போல இந்த நாவலில் வரும் நிறைய வரிகள் நம் அகத்தேடலை உண்மையை அப்பட்டமாக பேசுகிறது

1 comment:

  1. ஆழமான புரிதல். ஒரு நல்ல வாசக மனநி​லை விமர்சனம்.

    ReplyDelete