Wednesday 23 March 2016

ப்ரியங்களூம் வலிகளும்

உலகையே நேசிக்கும்
உன் ப்ரியத்தில்
எனக்கான ப்ரியங்கள்
எப்போதும் இருப்பதில்லை...

=======

சேமித்த ப்ரியங்கள் 
உள்ளுக்குள்
செல்லரிக்க தொடங்குகின்றன
விழியிடை நீரை
உறையவைத்தபடி,..

=======

விரும்பியோ விரும்பாமாலோ
திணிக்கப்பட்ட
ஆலகால விஷத்தை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
எனக்குள்
சிக்கிகொண்ட பொழுதினில்
மெல்ல மெல்ல
உறுப்புகள் சிதலமடைவதை
ரசிக்கும் குரூரம்
விஷத்தை வலிய திணித்த உன்னிடமிருந்து
எனக்கும் பரவுகிறது
ஆர்பாட்டமாக...


===============


சொல்ல மறந்த வார்த்தையில்
சிதறி கிடந்த காதலை
சுமந்தலைய முடியாமல்
விழி வழி சொல்லிட
எத்தனித்து
தோற்ற பொழுதினில்

முகம் நிமிர்த்தி
இதழ் பதித்த ஈரத்தில்
மெல்ல கரைய தொடங்குகிறது
தவறவிட்ட. வார்த்தைகள்
=========

உடலும் மனமும் பிரிக்கமுடியாது 
முயங்கிய பொழுதில்
உணரமுடியா உணர்வை
நினைவின் கதகதப்பில்
மீட்டெடுத்து
உணர முயல்கிறேன்.

=======
பேசி பேசி தீர்த்தபின்
பேசிய களைப்பு தீர
தோளில் தலை சாய்த்து
விழி மூடி மெளனமாக
கிறங்கிய பொழுதினில்
தோள் சுற்றி கைபடர்ந்து
சேர்த்தணைத்த
மெல்லிய அணைப்பில்
பேசாத உன் வார்த்தைகள்
உயிர்த்தெழுந்து உயிர் தீண்டுகிறது..

==========

குழம்பி சமனமாகும் 
அடி ஆழ சேற்றுக்கும்
மெல்லிய இழையாக ஆரம்பித்து
அடர் பச்சையாக பரவி
மேலே ஆக்ரமித்த
பாசிக்குமிடையே
தெளிவாக சலனமற்று இருக்கிறது எனதன்பு.

===========

இறகிலிருந்து
வலியில்லாமல் பிரிந்த
ஒற்றை சிறகாய்
எந்த பிடிப்புமின்றி
காற்றின் போக்குக்கு
ஒப்புக்கொடுத்துவிட்டு
மெல்ல மெல்ல
பறக்கிறேன்.

திசையறியும் நோக்கமில்லை
சேருமிடம் குறித்து பதட்டமில்லை
வெற்று பார்வையாளயராய்
வெளி எங்கும் காணும் சுகமொன்றே
போதுமானதாய்...

==============

No comments:

Post a Comment