Thursday 11 December 2014

பெண் விடுதலை

இயல்பாகவே பெண்கள் மீது ஆண்களுக்கு மரியாதை குறைவாகவே இருக்கிறது. காரணம் பெண் என்பவளை ஒரு சொத்தாக உடைமையாக பார்க்கும் ஆணின் மனோபாவம் இன்று நேற்றல்ல ரொம்ப காலமாக இருந்து கொண்டு இருக்கிறது. அதை அவ்வளவு எளிதில் மாற்றி கொள்ள சுயமாக எல்லா ஆண்களாலும் முடியாது. பரந்துபட்ட பார்வை, ஆழமான புரிதல் உள்ள ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம்.. நிலைமை அப்படி இருக்க பெண் தன் செயல்கள் மூலம் மரியாதை குறையாமல் பார்த்து கொண்டால் தான் உண்டு..

பெண்கள் தங்கள் சுயமரியாதையை எங்கெல்லாம் விட்டு கொடுக்கிறார்களோ, தன் தனித் திறமைகளை வளர்த்து கொள்ளாமல் தான் பெண் என்பதை ஒரு காரணியாகவும், அழகை உணர்வுகளை மூலதனமாகவும், ஆண்களின் பலகீனத்தை சாத்காமக்கி கொள்ளவும் செய்கிறார்களோ அங்கெல்லாம் பெண் தோற்று போவதுடன், பெண்களின் மீது மரியாதையும் குறைக்கிறாள். பெண்மையை சவால்களை சமாளிக்கும் சந்திக்கும் விதமாக வளர்த்து கொள்ளாமல், அப்படி தனித்துவமாக வளரும் பெண்களை போல தாங்கள் இல்லாத தாழ்வு மனப்பான்மையால் சக பெண்ணுக்கே எதிரியாக மாறுகிறாள்.

ஒரு பக்கம் வர்த்தக உலகம் பெண்கள் அழகு என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்துவிடாமல் இருக்க எவ்வளவு வகைகளில் மூளை சலவை செய்ய முடியுமோ அவ்வளவு மூளை சலவை செய்கிறது.. அதன் மாயையில் படித்த படிக்காத என்ற பாரபட்சமே இல்லாமல் எல்லாரும் பலி ஆகி கொண்டு தான் இருக்கிறோம் நம்மை அறியாமல்.

இன்னொரு பக்கம் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களை ஆயுதமாக உபயோகிக்கும் ஆண்கள். தன்னை நம்பாமல் ஆணை தான் அதீத பாதுகாப்பு என்று நம்பும் பெண்கள் கிடைத்த ஆணை தக்க வைத்து கொள்வதிலும் அல்லது அத்தகைய பாதுக்காப்புக்காக ஆண்களை தேடுவதிலும் தங்கள் திறமைகளை சாமார்த்தியங்களை வீணடிக்கும் பெண்கள்.

இந்த இரண்டிலிருந்தும் பெண் விடுதலை ஆகி தன்னை நம்பி தன் திறமைகளை வளர்த்து கொண்டு சமூகத்தில் முன்னேறி ஏற்றம் பெற தொடங்குகிறாளோ அப்போது தான் பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம். அப்போது மட்டுமே பெண் உண்மையாக மதிக்கப்படுவாள். ஆனால் இதெல்லாம் எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை..

No comments:

Post a Comment