Friday 28 November 2014

பயணம்

ஒட்டி பழகினாலும் ஒட்டாமல் பழகினாலும் மனதில் எஞ்சும் வெறுமையை எதை கொண்டு துடைத்தெறிவது என புரிவதில்லை.

கொடும்பசியில் பலர் மாள, தீராத நோயால் பலர் அவதியுற, குடும்பமே இல்லாத சோகத்தில் பலர் உலவ எல்லாம் இருக்கும் உனக்கென்ன கேடு என்பது போன்ற அறிவார்ந்த பேச்சுக்கும் ஏச்சுக்கும் குறைவில்லை.

கொடும்பசியால் வாடுபவர்களும், தீராத நோயாளிகளும், குடும்பமே இல்லாதவர்களுக்கும் தங்களை மாய்த்து கொள்ளவும் அழுவதற்கும் தங்களை தேற்றி கொள்ளவும் காரணங்கள் இருக்க எந்த காரணம் கொண்டும் விளக்கமுடியா ஊமை உணர்வின் அரற்றல் காதில் விழுவதில்லை. 

ஏற்கனவே மாட்டிகொண்ட கழட்ட முடியாத முக மூடிகளால் மூச்சு திணறி உயிர் பிதுங்கி கொண்டிருக்க மேலும் இரண்டு முகமூடிகளை மாட்டிகொண்டு மௌனமாக கடக்க சொல்லும் அக்கறைக்கும் பஞ்சமில்லை.

நாசூக்காய் உணர்வதை வெளிப்படுத்தி, நல்லவர் என்று பெயரெடுக்கும் வித்தையோ, ஒன்றும் தெரியாத போதும் எல்லாம் தெரிந்ததாக அலட்டிக்கொள்ளும் வித்தையோ கை கூடவில்லை.

என்னை கொன்று தின்னும் உணர்வறியாமல், என் கண் கொண்டு என்னை குத்தி எகத்தாளமாக கைகொட்டி வேடிக்கை பார்த்து சிரித்துச்செல்லும் சிரிப்புக்கு அளவில்லை..

வயிறும், யோனியும் மட்டுமே நினைவில் நிறுத்தி வாழ்க்கையை கடந்துவிடவோ கரைத்திடவோ மனமுமில்லை..

உணர்வு பொய், அறிவு மெய், உடலது பொய், மனமதும் பொய் எல்லாம் மாயையே என்ற ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் தரும் குழப்பங்களிலுருந்தும் விடுபட முடிவதில்லை.

காற்றில் பறக்கும் சிறகாய் எல்லா இடங்களிலும் அமர்ந்தமர்ந்து எங்கு போய் சேர என்ற தெரியாமல் சிறகின் இறக்கைகள் கிழிய மேலே பறக்கவும் முடியாமல் கிழிந்த இறக்கைகளுடன் மேலும் கீழும் அல்லாடி மிச்ச இறக்கைகளும் கிழிந்து வெறும் குச்சியாய் மண்ணில் வீழ்ந்து மக்கிவிட இடம் தேடி பயணிக்கும் பயணம் நின்றப்பாடில்லை..

No comments:

Post a Comment