Thursday 28 July 2016

Black walls - சீன கதை


Black Walls - Liu Xin Wu

கறுப்பு சுவர்கள் - தமிழில் - தி. இரா. மீனா

கோடைக்காலத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு ஒண்டு குடித்தனக்காரர் செய்யும் செயல் மற்ற குடித்தனக்காரர்கள் மனதில் என்ன விதமான ஊகங்களையும் பயத்தையும் கிளப்பிவிடுகிறது என்பதையும், ஒரு சின்ன சம்பவத்தை அழகான கதையாக தொகுத்து தரமுடியும் என்பதையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஜியோ என்கிற முப்பது வயதிருக்கும் மனிதர் தனியாக பல குடித்தினங்கள் வசிக்கும் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் , அநாவசியமாக யாருடனும் பேசமாட்டார். ஆனால் அதே நேரம் எதிர்படும் எவர் கேட்கும் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் சொல்லுவார். அங்கிருந்த மற்றி குடித்தனக்காரர்களுக்கு ஜியோவின் மீது விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை என்றே பழகி வருகின்றனர்.

நாட்கள் இவ்வாறாக கடக்க ஒரு நாள் காலை அவர் செய்யும் ஒரு செயலால் அந்த வீட்டின் அத்தனை குடித்தனக்காரர்களும் பரபரப்பாகிறார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் வெளியே கிளம்பிவிடுகிறார்கள். அவர்கள் வெளியே செல்வதையும், அங்கிருப்பவர்களின் நிலையையும் ஆசிரியர் சொல்லும் போது சீனாவின் மத்திய தர வர்கத்துக்கும், இந்திய மத்திய தர வர்க்கத்துக்கும் அதிக பேதமில்லை என்பதை உணர முடிகிறது.

ஜியோ தனது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க தொடங்குகிறார். அதை காணும் குடித்தினக்கரார்கள் அதிர்ச்சியும் குழப்பமுமாக அந்த வீட்டில் இருக்கும்  ஜாவோ என்கிற அரசாங்கப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற ஒருவரின் அறையில் நிறைய குடித்தனக்காரர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
ஜாவோவிடம் ஜியோ தனது அறைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். ஜாவோவுக்கு குழப்பமாகவும் அதே நேரம் அனைவரும் தனது வீடு தேடி வந்தது சந்தோசமாகவும் இருக்கிறது. ஏனென்றால் அவர் பணியில் இருந்தபோது அவரை தேடி நிறைய பேர் வந்து புதிய விஷயங்களை சொல்லிவிட்டு போவார்கள். அவர் மனைவியும் ஒரு கமிட்டியில் தலைவியாக இருந்து பரபரப்பாக செயல்பட்டவள். அதனால் இருவருக்கும் இந்த பரபரப்பு பிடித்து போகிறது.

ஆம் கறுப்பு பெயிண்ட் அடிப்பது சரியில்லை என ஜாவோ சொல்ல அவரது மனைவி ஆமாம் என ஆமோதிக்கிறார்.

ஜாவோ வந்தவர்களை அறையில் உட்கார சொன்னதுடன் போலீசுக்கு சொல்லலாம் என்கிறார்.

அவர் பதவியில் இருந்த போது என்றால் இதை ஆலோசனையாக சொல்லாமல் முடிவாக செய்திருப்பார் .ஆனால் மாறிவிட்ட அரசியல் சூழலால் தற்போது போலீஸ் நிலையம் போவதில் அவருக்கு குழப்பமிருக்கிறது.

உடனே ஒருவர் இதை போலீசுக்கு சொல்லகூடாது என்கிறார். ஒருவர் தன்னுடைய அறைக்கு பெயிண்ட் அடிப்பதில் தலையிட நமக்கு என்ன உரிமை என்கிறார்.

அவரை முறைத்து பார்க்கிறார்கள் ஜாவோ குடும்பத்தினர். சாதாரணத் தையல்காரன்!சில வருடங்களுக்கு  முன்பு வாயே திறக்காதவன், எந்த எதிர்ப் பையும் காட்டாதவன் இப்போது எதிர்த்துப் பேசுகிறான். வீட்டிலேயே சிறு வியாபாரம் செய்யும் வசதி வந்திருக்கிறது.கலர் டீவி வீட்டில் இருக்கிறது அதனால் தான் குரல் ஏறுகிறது என்று இருவரும் நினைத்தனர்.. 

ஆசிரியர் ஆட்சி மாற்றத்தால் தொழிலாளர்களின் வசதிகள் கூடியிருப்பதை இந்த கதையின் உள்ளீடாக சொல்கிறார். சீனாவின் அரசியல் மாற்றங்களை கதை நெடுகிலும் பிரதிபலிக்கிறது.

பின்னர் ஜியோவுக்கு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது அதனால் தான் எவரும் செய்ய துணியாத ஒரு செயலை செய்கிறார் என்கிறார்கள். இதற்கிடையே ஒருவர் போய் அவரிடம் கேட்டு வரலாம் என்கிறார்கள். ஆனால் போய் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. இறுதியில் ஜாவோவே சென்று கேட்கிறார். அதற்கு ஜியோ வேலையை முடித்துவிட்டு வந்து பதில் சொல்கிறேன் என்கிறார். இதனால் ஜாவோ தொங்கிய முகத்துடன் தனது அறைக்கு திரும்புகிறார்.

கறுப்பு சுவர் அங்கிருக்கும் அத்தனை குடித்தனக்காரர்களையும் அமைதி இழக்க செய்கிறது. கறுப்பை அடித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், மன அழுத்தத்துக்கு உள்ளானவர் என்று பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் மன உளைச்சலுக்கும் மனஅழுத்தத்துக்கும் ஆளாகிறார்களே தவிர ஜியோ தனது வேலையை ரசித்து செய்கிறார் என்பதை தான் ஆசிரியர் சொல்ல வருவதாக பார்க்கிறேன்.

அப்போது ஜாவோவின் பேரன் லிட்டில் பட்டன் ஜியோவை பற்றி மிக அருமையான மனிதர், என்றும் அவர் என்னவெல்லாம் பேசினார் என்றும் விளக்கிவிட்டு, அங்கிருந்தவர்களிடம் ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிக்கிறார். நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.பிறகு அதைப் பற்றி நீங்கள் எல்லோரும் ஏன் பேச வேண்டும்?” சிரித்துக் கொண்டே அப்பாவித்தனமாகக் கேட்க எல்லாரும் அமைதியாகிறார்கள்…
எல்லோரும் செயல்களை செய்யாமல் ஒரு மனிதன் தனித்தியங்க தொடங்கினாலே அவனை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதாகவும் கொள்ளலாம்.
சிறுவர்களுக்கு தெரியும், அவர்கள் சாதாரணமாக கடக்கும் ஒரு விஷயத்தை பெரியவர்கள் எப்படி பூதாகரமாக்குகிறார்கள் என்பதாகவும் கொள்ளலாம்.
வெறும் காலையில் ஒரு இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களுக்குள் அரசியல், சராசரி மக்களின் மனநிலை என எல்லாவற்றையும் அழகாக சொல்லியிருக்கும் விதம் . இந்த கதையை வாசிக்க வாசிக்க ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கோணம் என பல நுணுக்கங்கள் புரிபட தொடங்குகிறது………




2 comments:

  1. படிக்கனும்னு தோணுது.பெரிய நாவலா?சிறு கதையா?

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete