Sunday 10 July 2016

" செம்மணி வளையல் " - அலெக்சாந்தர் குப்ரின்

" செம்மணி வளையல் " அலெக்சாந்தர் குப்ரின் எழுதி முகமது செரீப் மொழிபெயர்த்த ருஷ்ய நாவல். நாவல் என்று சொலவதை விட கதை என்று சொல்லலாம். மிகச்சிறிய கதை தான். ஒரு பெண் எதிர்பார்க்கும் காதலை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. சோகமான முடிவு.

ஒரு தலைக்காதல் தான் கதை கரு. சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் தான் வித்தியாசம். இந்த நாவலின் நாயகன் போல நிஜ வாழ்வில் பெண்ணை காதலிப்பவர்கள் இருக்கிறார்களா என்று சந்தேகம் தவிர்க்க முடியவில்லை.

வேரா என்கிற பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகன் அவள் திருமணமான பின்னும் விடாமல் தன் காதலை தொடர்கிறான். அவளின் பிறந்த நாளுக்கு யார் மூலமோ ஒரு கடிதமும் பரிசளிக்க செய்கிறான். எட்டு வருடங்கள் தொடர்ந்து விடாமல் செய்கிறான். அவள் கணவரிடம் அவ்வப்போது இதைப்பற்றி சொல்லி வந்தாலும் இருவருமே பெரிதுபடுத்தாமல் விடுகிறார்கள்.

எட்டாம் வருடம் அவன் விலையுயர்ந்த பொருள் அனுப்ப இதை தொடர்வது நல்லதில்லை முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என கணவரிடம் சொல்ல கணவர் அவள் சகோதரனுடன் சேர்ந்து அவன் முகவரியை கண்டுபிடிக்கிறார்கள்.

நேரில் அவனை சந்தித்து விசாரிக்க அவன் உணர்வை காதலை சொல்கிறான். அவன் உணர்வில் இருக்கும் உண்மை உணரும் வேராவின் கணவன் செய்வதறியாது திகைக்கிறான். அப்போழுது அவன் பேசும் வார்த்தைகள் அனைத்தும் நூற்றாண்டு கால பெண்ணின் காதல் ஏக்கங்கள். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு இனி முற்றிலும் ஒதுங்கி விடுகிறேன் என அனுப்பி வைக்கிறான்.

இறுதியாக ஒரு கடிதம் வேராவுக்கு எழுதிவிட்டு பீத்தோவன் இசையின் சில பகுதியை அவளுக்கு சமர்பித்து தற்கொலை செய்து கொள்கிறான். செய்தி கேட்டு அவனை காண செல்கிறாள். பிணமாக இருக்கும் தலையை இடது கையால் நிமிர்த்தி வலது கையால் அவன் கழுத்தில் கைவைத்து அவனை பார்க்கும்போது ஒவ்வொரு பெண்ணும் கனவு காண்கிற காதல் தன்னை கடந்து போவதை உணர்கிறாள். அவன் நெற்றியில் முத்தம் பதித்து வெளியேறுகிறாள்.

பின் வீட்டுக்கு வந்து பீத்தோவனில் அவன் குறித்த பகுதியை வாசிக்க சொல்லி கேட்க இசையின் ஆன்மாவில் அவன் ஆன்மா ஒலிப்பது உணர்ந்து கடந்து போன காதலுக்கு கதறி அழுகிறாள்.

காதலின் இரு துருவங்களையும். பெண்களின் மனநிலை குறித்தும் பேசும் வேராவின் தாத்தா பகுதி அறிமுகம் இழுவை. ஆனால் பெண்களை பற்றி அவர் வைக்கும் காரணிகள் சில புறம் தள்ள முடியாதவை.

//// ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய நெஞ்சின் ஆழத்தில் ஒரே மனதுடன் எதையும் மன்னிக்க கூடிய, பணிவோடு தன்னை தியாகம் செய்யக்கூடிய அன்புகொண்ட காதலுக்காக கனவு காணலையா?

அது இல்லையென்றால் தான் பெண்கள் வஞ்சம் தீர்க்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் பெண் இணையற்ற சக்தியாக கைவரப் பெறுவார்கள். அவர்களின் ஆசைகளும் உணர்வுகளும் ஆண்களுக்கு சோகமான சட்டங்களாக மாறும். ஏனெனில் பல தலைமுறையாக ஆண்கள் காதலைப் போற்றவும், வழிபடவும் செய்யவில்லை. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இது அமையும். செயலும் எதிர்ச்செயலும் சமத்தன்மைக்கும் எதிர்தன்மைக்கும் இணையானவை.///

1 comment:

  1. என்றோ நான் படித்த "செம்மணி வளையல்" குறுநாவலை இணையத்தில் தேடிய பொழுது தங்களின் blog கிடைத்தது. It's a great review. Thanks for writing about it.

    ReplyDelete