Sunday 24 July 2016

the monkey's paw - W.W. Jacobs

The Monkey’s paw - W.W.Jacobs எழுதியது http://gaslight.mtroyal.ab.ca/mnkyspaw.htm


வொய்ட் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். தந்தையான வொய்ட்டும், அவரது மகனான ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளையாட்டில் மகன் தந்தையை தோற்கடிக்கிறான். தாயும் மகனும் தந்தையை கிண்டல் செய்ய அப்போது விருந்தினராக வொய்ட்டின் ராணுவ நண்பர் மோரிஸ் வீட்டுக்கு வருகிறார்.

மோரிஸ் பல நாடுகள் சுற்றிவருபவர் ஆதலால் அவரது அனுபங்களை கேட்பதில் வொயிட் குடும்பம் ஆர்வமாக இருக்கும். மோரிஸிடம் வொயிட் ஒருமுறை இந்தியாவை சுற்றி பார்த்து வரவேண்டும் என்று கூறுகிறார்.

மோரிஸ் வேண்டாம் என்கிறார்..

ஆனால் வொயிட் அங்கிருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் கேள்விப்பட்டதில் இருந்து  பார்த்தே ஆகவேண்டும் போல உள்ளது. அன்று ஒரு நாள் குரங்கின் பாதம் என்று ஏதோ சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிட்டாயே அதை பற்றி சொல்லு என்கிறார்.

மோரிஸ் உடனே அதை பற்றி தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை விடு என அவசரமாக மறுக்கிறார்..

குரங்கின் பாதமா , வித்தியாசமா இருக்கே என ஆச்சரியத்துடன் வொயிட்டின் மனைவி கேட்க அது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி என்று வைத்துகொள்ளுங்கள் என்று பேச்சை மாற்ற தேநீர் கேட்கிறார்..

ஆனால் கண்கட்டு வித்தை என்றவுடன் அதீத ஆர்வமான வொயிட்டின் குடும்பம் அவரிடம் மேலும் விவரம் கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.

மறுக்க முடியாத மோரிஸ் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாடம் செய்யப்பட்ட  குரங்கின் பாதத்தை எடுத்து வொயிட்டின் மகன் ஹெர்பர்ட்டிடம் கொடுக்கிறார். அதை பார்த்து வொயிட்டின் மனைவி பயந்து பின் வாங்குகிறார்..

அந்த பாதத்தை பார்த்து வொயிட் இதில் என்ன சிறப்பு என்கிறார்.

இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. ஒரு சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் விதிப்படி தான் அமைகிறது, அமையவேண்டும். விதியை மீறி விளையாட நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று உலகுக்கு சொல்ல நினைத்தார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கினார் என்கிறார் மோரிஸ்.

அப்படி என்ன சாபம் என்கிறான் ஹெர்பர்ட்

இந்த பாதம் மூன்று வரங்களை மூன்று பேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்ல்து என்கிறார் மோரிஸ்.

அப்படின்னா நீங்க ஏதாவது கேட்டிருக்கீங்களா கிடைத்ததா என்கிறார் வொயிட்.
கேட்டேன் கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் இது வேண்டாம் என்று என்னிடம் கொடுத்துவிட்டார் என்கிறார்.

நீங்கள் இதில் வரம் ஏதும் கேட்க போகிறீர்களா? எதற்காக வைத்திருக்கிறீர்கள் என் வொயிட் கேட்க . ஒரு நினைவுக்காக என்று சொல்லிய மோரிஸ் சட்டென அதை தூக்கி கணப்படுப்ப அருகில் எரிகிறார். சட்டென பாய்ந்து அதை எடுக்கிறார் வொயிட்.

வேண்டாம் அதை எறியுங்கள் என இரைஞ்சுகிறார் மோரிஸ். ஆனால் உனக்கு தேவையில்லை என்றால் நான் எடுத்து கொள்கிறேன் என்கிறார் வொயிட். வேண்டாம் நான் சொல்வதை கேளுங்கள் , அந்த வரங்களின் மூலம் வரும் விளைவுகள் கொடுமையாக இருக்கும் என்று எவ்வளவோ மன்றாடியும் வொயிட் செவிமடுக்க மறுக்கிறார்..

எப்படி வரம் கேட்க வேண்டும் அந்த பாதத்திடம் என கேட்க மோரிஸ் வழியை சொல்கிறார்.
மோரிஸ் விடைப்பெற்று சென்ற பின் அந்த பாதத்தை வைத்து குடும்பத்தினர் என்ன வரம் கேட்பது என்று வேடிக்கையாக பேசுகின்றனர். பிறகு இறுதியாக இருநூறு பவுண்ட் பணம் கேட்கலாம் என முடிவு செய்து அதே போல வரம் கேட்கின்றனர்.

அப்போது வொயிட்டின் கையை யாரோ முறுக்குவது போலவும், அந்த பாதம் நகர்வது போலவும் தோன்ற வொயிட் அதை குடும்பத்தாரிடம் கூறுகிறார். ஆனால் அது பிரமை என்று கூறுகின்றனர். பின்னர் அனைவரும் உறங்க சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் காலை மகன் தொழிற்சாலை செல்கிறான். பணம் வந்தால் எடுத்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கிண்டல் செய்துவிட்டு. அவன் சென்ற சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து வீட்டு கதவை தட்டுகிறார். வொயிட் கதவை திறக்க அப்போது அவர்கள் மகன் தொழிற்சாலையில் இயந்திரங்களுக்கிடையில் மாட்டி இறந்துவிட்டதை சொல்கிறார். வருத்தம் தெரிவிக்கும் நிறுவனம் நஷ்ட ஈடு தருவதாக சொல்கிறது. வொயிட்டுக்கு ஏதோ உறைக்க எவ்வளவு என்கிறார். இருநூறு பவுண்ட் என்கிறார் ஊழியர். இதை கேட்டு அதிர்ந்து போகின்றனர் அந்த தம்பதியர்.

மகன் இறந்து பத்து நாட்களுக்கு மேலான பின்னும் அந்த துக்கத்திலிருந்து  வொயிட்டின் மனைவி வெளிவர முடியாமல் போராட அவளுக்கு திடீரென குரங்கு பாதத்திடம் தன் மகனை திருப்பி தரும் வரம் கேட்கலாம் என்கிறாள். மூன்றில் ஒன்று தானே கேட்டிருக்கிறோம் இன்னும் இரண்டு மீதம் இருக்கிறது அல்லவா என்கிறாள். ஆனால் கணவர் விபரீத விளைவு வரும் என மறுக்கிறார். அதை காதில் வாங்காத அவள் மனைவி அந்த பாதத்தை கையிலெடுத்து வரம் கேட்கிறாள்.

பின்னர் படுக்கைக்கு சென்று படுத்துவிட நள்ளிரவில் இவர்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகிறது. மனைவியை கதவை திறக்க வேண்டாமென தடுக்கிறார். ஆனால் நம் பிள்ளை தான் வந்திருப்பான் அவனை கண்டு நாமே பயப்படுவதா என அவரை தள்ளிவிட்டு கதவை திறக்க படுக்கையறையில் இருந்து வாசல் நோக்கி ஓடுகிறாள். அவளை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த வொயிட் குரங்கின் பாதத்தை கையிலெடுத்து அவசரம் அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்கிறார். கதவு தட்டப்படுவது நின்றுவிடுகிறது……..

1 comment:

  1. வித்தியாசமான ஆனால் சுவைமிக்க கதையாக இருக்கின்றதே

    ReplyDelete