Thursday 28 July 2016

யானை வேட்டை

An elephant shooting - George orwell -

தமிழில் யானை வேட்டை 



இந்த கதை உணர்த்தும் நுட்பமான உணர்வுகள் பல. ஜார்ஜ் ஆர்வெல் ஆட்சி பீடத்தில் இருந்த ஐரோப்பிய மனநிலையயும், அவர்களுக்கு கீழ் அடிமைப்பட்டு கிடந்தவர்களின் மனநிலையும் ஒப்பு நோக்கி இருக்கும் விதமும், அதில் மனசாட்சியுள்ள அதிகாரிகளின் நிலைமையும் நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு காவல் துறை அதிகாரியாக வருகிறார் ஒரு ஆங்கிலேயர். பர்மியர்களின் ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வை எதிர்கொள்ளும் அவர் உண்மையில் ஆங்கிலேயர்களை வெறுக்கும் ஆங்கிலேயராக இருந்தபோதும் பர்மியர்களை பொறுத்தவரை அவர் ஒரு ஐரோப்பியர் என்பதே வெறுப்பதற்கு போதமானதாக இருக்கிறது. பர்மியர்கள் கூட்டமாக கூடும் இடங்களில் எல்லாம் ஐரோப்பியர்களை கேலி செய்வதை ஒன்றையே செய்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி நினைக்கிறார். அவர்களின் செயல்களும் அவ்வாறாக தான் உள்ளது. ஆனால் ஆங்கிலேயர்களை கேலி செய்வதை தாண்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் அளவு கூட தைரியமில்லாத கோழைகளாக தான் பர்மியர்கள் இருப்பதாக நினைக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக இருந்து ஆங்கிலேயரின் அத்தனை நாற்றங்களை அருகில் இருந்து பார்த்ததால் , பல நாட்டு கைதிகளின் பயம் அப்பிய முகங்கள் அவரின் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை தந்தாலும் அவரால் தெளிவான முடிவெடுக்க இயலாமல் அந்த வேலையில் இருந்தும் விடுதலை பெற்று செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணி புரிகிறார். பிரிட்டிஷ் அரசின் ஏகாப்திய கொடுங்கோல் ஆட்சியின் மீது அளவு கடந்த வெறுப்பு அதே நேரம் மகிழ்ச்சி என்பதும் அந்த கொடுங்கோல் மூலம் தான் கிடைப்பதாக என்று இருவேறு மனநிலையால் அலைக்கழிக்கப்படுகிறார்.

இப்படி தெளிவில்லாத சிந்தனையில் காலம் தள்ளிய காவல்துறை அதிகாரிக்கு மதம் பிடித்த யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதாக தகவல் வருகிறது. யானையை தேடி புறப்படுகிறார் தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியுடன். யானை வயலில் இருப்பதாக சொல்ல அதிகாரி அங்கு செல்கிறார். மக்கள் கூட்டம் துப்பாக்கியை பார்த்தவுடன் பெரும் ஆராவரத்துடன் அவரை பின் தொடர்கிறது. உண்மையில் அதிகாரிக்கு யானையை கொல்லும் எண்ணமில்லை பாதுகாப்புக்காக தான் துப்பாக்கியை எடுத்து செல்கிறார்.  யானை இருக்குமிடத்தையறிந்து அங்கே சென்று யானைக்கு சில அடி தூரம் தள்ளி நிற்கிறார்.

யானையை பார்த்தவுடனே அதை சுடக்கூடாது என முடிவு செய்கிறார். அது அமைதியாக புல்லை மேய்ந்து கொண்டிருக்க, இன்னும் சற்று நேரம் கண்காணித்துவிட்டு  பாகன் வந்து பிடித்துகொள்ளட்டும் என்று திரும்பிவிடலாம் என நினைக்கிறார். மீண்டும் யானையை பார்க்க அது அமைதியாக இருக்கிறது. இவர் திரும்ப நினைக்க கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேருக்கும் குறையாத பர்மியர்கள் இவர் யானை சுடப்போவதை வேடிக்கையை காணும் உற்சாகத்துடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரியை பிடிக்காதபோதும் அவர் கையில் இருக்கும் துப்பாக்கியை மந்திரகோலாய் நினைத்து அதை கையில் வைத்திருக்கும் அதிகாரியை நாயகனாய் பார்க்கிறார்கள் என்பது அதிகாரிக்கு புரிகிறது.

இப்போது யானையை சுடவேண்டி அந்த இரண்டாயிரம் பேரின் ஆசைகளும் அவரை அழுத்துவதை உணர்கிறார். ”///// ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன். அவன் அப்போது போலியாகிறான், பயனற்ற ஒரு பொம்மை ஆகிறான், ‘சாகிபு’ என்கிற ஒரு சம்பிரதாய உருவத்தை ஏற்றுக்கொள்கிறான். பின் தன் வாழ்நாள் முழுவதும் உள்ளூர் வாசிகளை திருப்திப்படுத்துவதிலேயும், கவருவதிலேயும் அவன் செலவிடுகிறான். எந்தவொரு நெருக்கடியிலும் அவன் உள்ளூர்க்காரர்கள் சொல்லுவதைச் செய்ய வேண்டும். அவன் ஒரு முகமூடி அணிந்துவிட்டான். அவன் முகமும் அதற்குப் பொருத்தமாக வளைந்து கொடுக்கிறது. நான் யானையை சுட்டே தீர வேண்டும்! ////////

///இத்தனை தூரம் வந்த பின், கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு, சுற்றி இரண்டாயிரம் பேர் வேடிக்கை பார்க்க, ஒன்றுமே செய்யாமல் பின் வாங்கித் திரும்பினால்/// இந்த கூட்டம் சிரித்தே கொன்றுவிடும் என நினைக்கிறார். ஆனாலும் ஏனோ அதிகாரியின் மனம் யானையை சுடுவதை ஏற்க முடியாமல் தடுமாறுகிறார். பல்வேறு யோசனைகளுக்கும் மனப்போராட்டத்துக்கும்  பிறகு யானையை சுட முடிவெடுக்கிறார். யானையை எப்படி சுட்டால் உடனே உயிர் பிரியும் என்பது தெரியாமல் உத்தேசமாக சுடுகிறார். இதனால் யானை சாகாமல் மரண வலியில் போராடுகிறது.

ஒரு பூதாகரமான மிருகம் அவர் கண் முன்னால் நகரவும் தெம்பில்லாமல், சாகவும் சுரத்தில்லாமல், சுருண்டு கிடப்பதையும், அதன் மரண பிளறலும் பார்த்து அதிகாரியின் மனம் நடுங்குகிறது. உடன் தன் துப்பாக்கியால் பல முறை சுடுகிறார். ஆனாலும் யானை இறக்காமல் அதிகாரியை சித்ரவதை செய்கிறது. என்ன செய்ய என்று தெரியாமல் அதிகாரி கிளம்பி விடுகிறார். அரைமணி நேரம் போராடி யானை உயிரை விடுகிறது. ஆனால் முழுதும் இறப்பதற்குள்ளேயே அதன் எலும்பு வரை பர்மியர்கள் மழித்துவிடுகிறார்கள்.

யானையின் சொந்தகாரனான இந்தியன் ஆவேசமாக இருந்தபோதும் அவனால் ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆனால் ஐரோப்பியர்கள் இந்த யானை சுட்டதில் இருவேறு கருத்துகளை வைத்திருந்தார்கள், சுட்டது சரி  என்றும், ஒரு கூலித்தொழிலாளியை யானை கொன்றது என்பதற்காக யானையை சுட்டது அசிங்கம் என்றும், அந்த தொழிலாளியை விட யானை அதிக மதிப்புடையது என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் யானையை சுட்டது தான் பர்மியர்கள் முன் முட்டாளாகிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக எனும் உண்மை தான் யாருக்கும் தெரியாமல் போய்விட்டதாக நினைக்கிறார் அதிகாரி.





2 comments: