Wednesday 13 July 2016

மேடம் ப்வாரி - குஸ்தாவ் பிளாபெர்ட்


ப்ரெஞ்சு மொழியில் குஸ்தாவ் பிளாபெர்ட் எழுதிய மேடம்பவாரி (Gustave Flaubert - Madame Bovary) பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் எனினும் எக்காலத்துக்குமான பெண்ணின் உணர்வுகளை பேசுகிறது. இந்நூல் வெளியாகி கலாச்சார காவலர்களால்  ஏக சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி அவர்கள் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீதி விசாரணை எல்லாம் நடைபெற்று வெளிவந்த நூல்.

இந்த நாவல் களம் ப்ரெஞ்ச் என்றாலும், உலகில் இருக்கும் அனைத்து பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகிறது. ஒரளவு இன்று பெண்கள் வேலைக்கு சென்று தங்களின் தனிமையிலிருந்து வெறுமையிலிருந்தும் மீள கற்று கொள்ள தொடங்கிவிட்டார்கள் எனும்போதும் இன்றும் நீளும் பொழுதுகளை செய்வதறியாது பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கிக்கொண்டு மன நோய்மையுடன் காலம் கழிக்கும் பெண்கள் அநேகம். ஆனால் வெளியுலகிற்கு பெண்களின் உணர்வுகள் முழுமையாக தெரிவிக்க முடிவதுமில்லை, தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்பதான வாழ்க்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 


சார்லஸ் பவாரி ஒரு மருத்துவர், தாயின் வற்புறுத்தல் காரணமாக பணத்துக்காக தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். மருத்துவம் பார்க்க கிராமத்தில் ஒரு வீட்டுக்கு செல்ல அந்த வீட்டு பெண் எம்மா மீது காதல் கொள்கிறான்.  சில காலத்தில் மனைவி இறந்துவிட எம்மாவை திருமணம் செய்து கொள்கிறான்.


எம்மா பள்ளிகாலத்திலிருந்து அதிக காதல் புத்தகங்களை வாசித்து தனது வாழ்க்கை குறித்தும் காதல், திருமண வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கனவுகளை வளர்த்து கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறாள். சார்லஸின் சராசரித்தனம் அவளுக்கு திருமணமான சில நாட்களிலேயே சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அவளின் கனவு கோட்டைகள் சரிய சார்லஸை உள்ளுக்குள் வெறுக்க தொடங்குகிறாள்.


அப்போது ஒரு பிரபு வீட்டு விருந்துக்கு டாக்டரும் அவரது மனைவியும் அழைக்கப்பட, தனிமையில் அடைப்பட்டு கிடந்த எம்மாவுக்கு அந்த விருந்து மிகப்பெரும் உற்சாகத்தை தருகிறது. பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்து செல்லும் அவள் அந்த மாளிகையையும் ஆடம்பர வாழ்வையும் பார்த்து தான் கனவு கண்ட வாழ்க்கை அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் சராசரித்தனமும் எதார்த்தமும் முகத்திலறைய மனச்சோர்வுக்கு ஆளாகிறாள்.


எம்மாவின் விருப்பத்துக்காக பக்கத்தில் உள்ள சிறு நகரத்து குடியேறுகிறான் சார்லஸ். அங்கு கர்பிணியான எம்மா ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள். குழந்தை மேல் ப்ரியம் உண்டானாலும் குழந்தையால் அவளின் சூன்யத்தை, வெறுமையை துடைத்தெறிய  முடியவில்லை. 


அந்த சிறு நகரமும் எம்மா கற்பனை செய்த அளவு இல்லை. அப்போது அங்கு லியோன் என்கிற இளைஞனை சந்திக்கிறாள் எம்மா. கவிதைகளும், காவியங்களுமாக உலவும் அவனுக்கு அந்த சிறு நகரத்தில் தன் ரசனையை பகிர ஆள் இல்லா தனிமையில் வாடி வாழ்கிறான். எம்மாவின் அறிவும், கற்பனைவளமும், அழகும் லியோனை ஈர்க்கிறது. இருவருமே மோகித்தாலும், அதை வெளிப்படுத்தும் தைரியமில்லாமல் அவளை அடையவும் முடியாத விரகதாபம் தாங்க மாட்டாதவனாய் லியோன் அந்த ஊரை விட்டு வெளியேறுகிறான்.


லியோனியின் நட்பு மட்டுமே ஆறுதலாக இருந்த அந்த சிறு நகரத்தில் இருந்து அவனும் வெளியேறியதும் மீண்டும் எம்மா சோர்வுறுகிறாள். அப்போது அந்த ஊருக்கு விடுமுறை நாட்களை செலவிட வரும் ரூடால்ப் என்கிற இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். ரூடால்ப் பல பெண்களுடன் பழகும் குணமுடையவன் என்றாலும் எம்மாவின் பால் அதீதமாக ஈர்க்கப்படுகிறான். எம்மாவும் தன் லட்சிய காதலன் இவனாக தான் இருக்கமுடியும் என நம்பி அவனை நேசிக்கிறாள். சில நாட்கள் இன்பமாக அவளுடன் பொழுதை கழிக்கும் ரூடால்ப்க்கு எம்மா சலிக்க தொடங்குகிறாள். ஆனால் எம்மா அவனுடன் அந்த ஊரை விட்டு வெளியேற திட்டமிடுகிறாள். அதற்காக துணிமணிகள், பெட்டி, அங்கி என வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்குகிறாள்.


ரூடால்ப் எம்மாவை அழைத்து செல்லாமல் , பழக்க வழக்கங்களை நிறுத்தி கொள்வோம் என கடிதம் எழுதிவிட்டு தான் மட்டும் சென்றுவிடுகிறான். அவனை மிகவும் நம்பிய எம்மா மனமுடைந்து உடல் நிலையும் மோசமாக பாதிக்கப்படுகிறாள். பிறகு மெல்ல உடல்நிலை தேறி தெய்வ வழிப்பாட்டில் தன்னை நிலை நிறுத்தி தன் வெறுமையை போக்க தலைப்படுகிறாள். 


குடும்பத்திலும், தெய்வ நம்பிக்கையிலும் தன்னை கரைத்துக்கொள்ளும் மனைவி மீது பாசம் மேலிட, அவளுக்கு வெளியே செல்ல பிடிக்கும் என அவளை பக்கத்தில் உள்ள நகரத்தில் நடக்கும் இசைக்கச்சேரிக்கு அழைத்து செல்கிறான் சார்லஸ். அங்கு அவள் மீண்டும் பழைய காதலன் லியோனை சந்திக்கிறாள். லியோனின் மயக்கும் காதல் வார்த்தைகளிலும், அவனின் காதல் உறுதியிலும் அவள் மீண்டும் அவனை நேசிக்கிறாள். அவனை சந்திப்பதற்காக வாரம் ஒருமுறை அந்த நகருக்கு பியோனா கற்று கொள்ள போகிறேன் என சொல்லி வருகிறாள். செலவுக்காக வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்க தொடங்குகிறாள்.


சில நாட்கள் ஆரம்ப மோகம் கலைந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. இருவருக்கும் மன முறிவு வந்து பிரிகின்றனர். எம்மா பலவாறு சிதைகிறாள். அவள் கற்பனையில் வரித்த காதல் என்பது வெறும் கானல் நீர் , நிஜ வாழ்வில் கிட்டவே கிட்டாத ஒன்று என்று உணர தொடங்க, அதை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் வாங்கிய கடனுக்காக வீடு ஏலம் போகும் நிலை வர செய்வதறியாது திகைக்கிறாள். 


லியோனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவன் கைவிரிக்க அப்போது ஊருக்கு திரும்பியிருக்கும் ரூடால்ப்பிடம் சென்று கேட்கிறாள். அவனும் அவளுக்கு அவ்வளவு பெரிய தொகை தர இயலாது என்று கூற வெடித்து பைத்தியம் போல அழுகிறாள். என்னையே கொடுத்தேனே என் மானம் காக்க இந்த பணத்தை உன்னால் தர முடியாதா உன் வீட்டில் உள்ள இந்த தங்க தட்டை எடுத்து கொடுத்தால் கண்ணில்லாதவன் கூட எனக்கு தேவைப்படும் பணத்துக்கு அதிகமாக கொடுப்பான். உனக்கு மனமில்லை என்று வெடித்து அழுது வெளியேறுகிறாள்.


பின்னர் ஒரு வக்கிலை சந்திக்க அவன் அவளை விலையாக கேட்கிறான். ச்சீ என உதறி வரும் அவள் வாழ பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய தனிமையும், வெறுமையும் போக்க நுகர்வுக்கலாச்சாரத்தை நோக்கி ஓடுகிறோம். வாழ்வின் சூனியத்தை பாலியல் மூலம் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். ஆனால் அதுவும் இறுதியில் சலிப்பில் தான் முடியும் என்பதை உணராமலே.  

ஒற்றை வார்த்தையில் கேடு கெட்ட பெண்ணிற்கு இது தான் முடிவு என முடித்துவிடுபவர்கள் தான் அநேகம். ஆனால் ஒரு போதும்  எம்மாவின் தனிமையையும், வெறுமையையும், அவளது கற்பனைகளை வெளிப்படுத்த முடியாத, கனவுகள் சிதறடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது. இன்று வரை எம்மாக்கள் சிதைந்தும், மரித்து போன உணர்வுகளை சுமந்தலையும் உடலை சுமநது கொண்டு வெற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுபோல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எம்மா போன்ற பெண்ணின் உணர்வுகளில் சுகமாக குளிர்காய்ந்துவிட்டு சுயநலமாக பறக்கும் ஆண்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள் 









1 comment:

  1. It's a wonderful review. Never read this book, but your writing gives the summary of the book, thanks for writing about it.

    //தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய தனிமையும், வெறுமையும் போக்க நுகர்வுக்கலாச்சாரத்தை நோக்கி ஓடுகிறோம். வாழ்வின் சூனியத்தை பாலியல் மூலம் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். ஆனால் அதுவும் இறுதியில் சலிப்பில் தான் முடியும் என்பதை உணராமலே. // Rightly said, the reasons for unnecessary shopping is well explained.

    ReplyDelete