Friday 8 July 2016

ஓசூர் எனப்படுவது யாதெனின் - ஆதவன் தீட்சண்யா

ஓசூர் எனப்படுவது யாதெனின் ஆதவன் தீட்சண்யா எழுதிய புத்தகம். மலைகள் பதிப்பக வெளியீடு.
இது நாவலல்ல. கட்டுரையா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். இலக்கிய சுவை பெரிதும் இல்லை என்றாலும் சாரலாக அங்காங்கே இலக்கியம ஒரு நூலிழை போல பின்னி வருகிறது ஆரம்ப அத்தியாயங்களில். தன்னை தானே பகடி செய்து கொள்வது அவ்வளவு அழகாக வருகிறது இவரது எழுத்துகளில். அநேகமாக வாசிக்கிறேன் என்று இவர் செய்த கூத்துகளை ஆர்வகோளாறில் வாசிக்கும் நிறைய பேர் செய்திருக்க வாய்ப்புண்டு.
////புரிந்ததா, விளங்கியதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் தொகுப்பு நூல்களை எல்லாம் கூட படித்துக்கொண்டிருந்தேன் அல்லது படிப்பதாக காட்டிக்கொண்டிருந்தேன். சில வரிகளுக்கு சிவப்பு மசியால் அடிக்கோடிடுவது, ஓரத்தில் பெருக்கல் குறி இட்டு முக்கியப்படுத்தி காட்டுவது, ஏதாவது சில பக்கங்களின் முனைகளை மடித்து பொறித்து அலட்டி கொண்டதற்கும் பஞ்சமில்லை. ////
ஓசூர் பக்கம் இருக்கும் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஆசிரியரின் பயணமும் ஓசூரின் பயணமும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் தோழராக ஆரம்பிக்கும் ஆதவனின் இளமை பிராயம் ஓசூர் தொழிற்பேட்டையாக முழுமையாக வளர்ச்சியடையும் முன் எப்படி இருந்தது. அப்போது இருந்த அரசியல், 1980 களின் இறுதியில் நடந்த ஆசிரியர் வேலை நிறுத்த போராட்ட வரலாறு அதற்கு ஓசூர் மக்கள் அளித்த ஆதரவு, தொழிற்பேட்டையாய் உருவெடுத்த ஓசூர் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள், புவியியல் மாற்றங்கள், தொழிலாளர் பிரச்சனைகள், அதற்கு தீர்வு காண கம்யூனிஸ்ட் இயக்கம் எடுத்த முயற்சிகள், தொழிலாளரை ஒன்று திரட்டிய முறை அல்லது அவர்கள் ஒன்று சேர்ந்த முறை என்று ஓரளவு இந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாத வாசகன் கூட தெரிந்து கொள்ளுமளவிற்கு விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
ஓசூர் என்கிற இன்டஸ்ட்ரியல் ஏரியாவின் வளர்ச்சி உலக மயமாக்கல் வந்த பின் அடைந்த வீழ்ச்சி, கம்யூனிஸ்ட் தோழர்களின் பின்னடைவு, தொழிளாலர்களின் உளவியல் பிரச்சனைகள், அவர்கள் முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்ட முறை, அங்கிருந்த பூர்வகுடியினரையும், இயற்கை வளங்களையும் அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்க, மலையை கூட விட்டு வைக்காமல் கிரானைட்க்காகவும் கனிமங்களுக்காகவும் எல்லாம் தரை மட்டமாகி இருபது வருடங்களுக்குள் கண் முன் நடக்கும் மாற்றத்தின் வேகத்தை தடுக்கவும் முடியாமல் அதனை ஏற்கவும் முடியாமல் ஆதவனை போலவே நாமும் அதிர்ந்து போக தான் வேண்டியிருக்கிறது..
.
சங்பரிவார் போன்ற அமைப்புகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவ எடுத்து கொண்ட நடவடிக்கைகள், அதனை தடுக்காமல் அவர்களுக்கு சலாம் போடும் காவல்துறை, கள்ள மௌனம் காக்கும் அரசு என்று அவர் வைத்திருக்கும் பார்வை அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
///தொழிற்சாலைகளை வைத்து தான் ஒரு பகுதியை முன்னேறியதாகவோ, பின் தங்கியதாகவோ மதிப்பிடுகிறோம். இந்த மனநிலை காரணமாக யாருக்காக வளர்ச்சி, யாருடைய வளர்ச்சி என்ற கேள்வியை எழுப்பாமலேயே இப்படியான வளர்ச்சியின் பொருட்டு நாட்டின் கனிம வளங்களையும் அழிக்கப்படுவதையும், மக்கள் வாழிடங்களில் இருந்து துரத்தப்படுவதையும், வளர்ச்சியின் பெயரால் மறக்க விரும்புகிறோம்.///
நடுத்தர , மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் தங்களை சார்ந்தே சிந்திக்கிற எல்லாவற்றையும் அணுகுகிற இவர்களின் உளவியல் தான் இன்று உலகமயத்திற்கு துணை போகிறது என்றும இவர்கள் தம் மீது நிகழ்த்தப்படும சுரண்டல் விருப்பபூர்வமாக ஏற்கும் மனநிலைக்கு வந்த இவர்கள் அமெரிக்காவில் போய் வேலை பார்ப்பதை கனவாக கொண்டிருக்கும் இவர்கள் நாளை இவர்கள் நாளை அமெரிக்க ஆட்சி பொறுப்பேற்பதை கூட ஏற்றுக்கொள்வார்கள் என்று சாடியிருக்கிறார்.
கண்டிப்பாக இது படிக்க வேண்டிய புத்தகம். ... அங்காங்கு தொழில் மண்டலம், சிறப்பு பொருளாதார மண்டலம் அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், நம்மை சுற்றி நடப்பவற்றின் பின் நடக்கும் அரசியலையும், சமகால வரலாறையும், நாம் சுரண்டப்படுவதையும் பற்றி அடிப்படையில் சிலவற்றை புரிந்து கொள்ளவும், விழிப்புணர்வு அடையவும் உதவும்...

No comments:

Post a Comment