Thursday, 28 July 2016

Old man at the bridge.

ஆங்கில மூலக் கதை: எர்னஸ்ட் ஹெமிங்வே Old man at the bridge.


பாலத்தில் ஒரு கிழவன் - தமிழாக்கம்: எம்.நரேந்திரன்


போரின் காரணமாக அனைத்து சொத்துகளையும் தங்கள் சொந்த மண்ணில் விட்டுவிட்டு வெளியேறும் சாமானியர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பெரும் செல்வந்தர்கள் கூட நாடோடி போல தங்கள் கைகளில் எடுத்து செல்ல முடிவதை எடுத்துகொண்டு மிச்சத்தை ஊரிலேயே விட்டு செல்லவேண்டிய நிர்பந்தத்தை போர்கள் ஏற்படுத்துவது பற்றிய உணர்வு வலி மிகுந்தது.

எழுபத்திஆறு வயது முதியவர் ஒருவர் தொங்கு பாலத்தை ஒட்டிய சாலையோரத்தில் தூசி படிந்த ஆடைகளோடு அமர்ந்திருக்கிறார். பாலத்தின் முடிவு வரை சென்று எதிரிகள் எவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறார்கள் என்று பார்த்து வர செல்லும் ஒரு அதிகாரி மேடான சாலையை கடக்க, கோவேறு கழுதைகளுடன் திணறும் மக்களையும்,  அவர்களுக்கு உதவும் இராணுவ வீரர்களை பார்த்தபடி அந்த கிழவரையும் கடந்து பாலத்தின் மறு முனை சென்று பார்த்து வருகிறார்.

அனைவரும் அடி மேல் அடி எடுத்து நகர்ந்து செல்ல கிழவர் மட்டும் உட்கார்ந்த இடத்தில் இருந்து அசையாமல் தூரத்தில் வெறித்து பார்த்தபடி இருக்கிறார். அவரை நெருங்கும் அதிகாரி எங்கிருந்து வருகிறாய் என்கிறார். கிழவர் சான் கார்லோஸில் இருந்து வருவதாக கூறி புன்னகைக்கிறார்.  பின் என்னிடம் இரண்டு ஆடுகள், ஒரு பூனை மற்றும் நான்கு ஜோடி புறாக்கள் இருந்தன அவற்றை பராமரித்து அதனுடன் இருந்து வந்தேன். ஆனால் அவைகளை விட்டுவிட்டு என் நகரத்தை விட்டு வந்துவிட்டேன் . என் நகரத்தில் இருந்து வெளியேறிய கடைசி ஆள் நான் தான் என்கிறார்.

அவைகளை அங்கேயேவா விட்டு வந்தாய். ஏன் என்கிறார்.

அதிகாரிகளால் அப்படி நிர்பந்திக்கப்பட்டேன் என்கிறார்.

பின் அதிகாரி , உனக்கு குடும்பம் ஏதும் இல்லையா என கேட்க, கிழவர் தான் வளர்த்த விலங்குகள் மட்டும் தான் என்கிறார். பூனைக்கு ஒன்றும் நேராது ஆனால் மற்றவை தான் என்று பெருமூச்சுவிடுகிறார்.

அதிகாரி எத்தகைய அரசியல் சார்புடையவன் என கேட்க எந்த அரசியல் கோட்பாட்டையும் சேராதவன் நான் என்கிறார். ஆனால் பனிரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்திருப்பதை சொல்கிறார். இனி நடக்க முடியாது என்கிறார்.

இந்த ஒரு வரியில் கதையில் மொத்த உணர்வும் சொல்லப்பட்டுவிடுவதாக தான் உணர்கிறேன். எந்த அரசியல் கோட்பாடும் இல்லாதவர்கள் கூட அரசியல் கோட்பாடுகள் காரணமாக யாரோ சண்டையிட, அதில் சம்மந்தமே இல்லாதவர்கள் தங்கள் அமைதியை, நிம்மதியை இழந்து அநாதையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை சொல்வதாக தான் ஆசிரியர் உணர்த்துகிறார்.

அதிகாரி நின்று நிதானிக்க இது இடமில்லை , முடிந்தால் வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு செல்லுங்கள் என்கிறார்.

இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துவிட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டிகளெல்லாம் எங்கே போகின்றன என கேட்கிறார்.

பார்சிலோனா என்கிறார் அதிகாரி. அங்கே எனக்கு யாரையும் தெரியாது இருந்தாலும் நன்றி என அதிகாரியிடம் கூறுகிறார். // இந்த வரிகள் சுமந்திருக்கும் வலி நுட்பமானதும் கொடுமையானதும் கூட.

போரினால் யாரும் எதுவும் தெரியாத ஊருக்கு அகதிகளாக குடிபெயரும் வலியை கிழவர் மூலம் ஒட்டுமொத்தமாக வார்த்தைகளே இல்லாமல் உணர வைத்துவிடுகிறார். 

மீண்டும் வெறித்த பார்வையுடன் தான் விட்டு வந்த விலங்குகளுக்காக கவலைப்படுகிறார்.  அதிகாரி எழுந்து கிளம்ப சொல்கிறான். எழுந்து கிளம்ப முயற்சிக்க முடியாமல் கிழவர் கீழே உட்காருகிறார். மெல்ல விலங்குகளை பற்றி முணுமுணுக்கிறார்.

அந்த கிழவருக்காக செய்ய ஒன்றுமில்லை என்பதாக கதை முடிகிறது.

கதை முடியும்போது அந்த அப்பாவி கிழவனின்  உணர்வுக்குள் ஆசிரியர் நம்மை கடத்தியிருப்பார்.



யானை வேட்டை

An elephant shooting - George orwell -

தமிழில் யானை வேட்டை 



இந்த கதை உணர்த்தும் நுட்பமான உணர்வுகள் பல. ஜார்ஜ் ஆர்வெல் ஆட்சி பீடத்தில் இருந்த ஐரோப்பிய மனநிலையயும், அவர்களுக்கு கீழ் அடிமைப்பட்டு கிடந்தவர்களின் மனநிலையும் ஒப்பு நோக்கி இருக்கும் விதமும், அதில் மனசாட்சியுள்ள அதிகாரிகளின் நிலைமையும் நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு காவல் துறை அதிகாரியாக வருகிறார் ஒரு ஆங்கிலேயர். பர்மியர்களின் ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வை எதிர்கொள்ளும் அவர் உண்மையில் ஆங்கிலேயர்களை வெறுக்கும் ஆங்கிலேயராக இருந்தபோதும் பர்மியர்களை பொறுத்தவரை அவர் ஒரு ஐரோப்பியர் என்பதே வெறுப்பதற்கு போதமானதாக இருக்கிறது. பர்மியர்கள் கூட்டமாக கூடும் இடங்களில் எல்லாம் ஐரோப்பியர்களை கேலி செய்வதை ஒன்றையே செய்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி நினைக்கிறார். அவர்களின் செயல்களும் அவ்வாறாக தான் உள்ளது. ஆனால் ஆங்கிலேயர்களை கேலி செய்வதை தாண்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் அளவு கூட தைரியமில்லாத கோழைகளாக தான் பர்மியர்கள் இருப்பதாக நினைக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக இருந்து ஆங்கிலேயரின் அத்தனை நாற்றங்களை அருகில் இருந்து பார்த்ததால் , பல நாட்டு கைதிகளின் பயம் அப்பிய முகங்கள் அவரின் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை தந்தாலும் அவரால் தெளிவான முடிவெடுக்க இயலாமல் அந்த வேலையில் இருந்தும் விடுதலை பெற்று செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணி புரிகிறார். பிரிட்டிஷ் அரசின் ஏகாப்திய கொடுங்கோல் ஆட்சியின் மீது அளவு கடந்த வெறுப்பு அதே நேரம் மகிழ்ச்சி என்பதும் அந்த கொடுங்கோல் மூலம் தான் கிடைப்பதாக என்று இருவேறு மனநிலையால் அலைக்கழிக்கப்படுகிறார்.

இப்படி தெளிவில்லாத சிந்தனையில் காலம் தள்ளிய காவல்துறை அதிகாரிக்கு மதம் பிடித்த யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதாக தகவல் வருகிறது. யானையை தேடி புறப்படுகிறார் தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியுடன். யானை வயலில் இருப்பதாக சொல்ல அதிகாரி அங்கு செல்கிறார். மக்கள் கூட்டம் துப்பாக்கியை பார்த்தவுடன் பெரும் ஆராவரத்துடன் அவரை பின் தொடர்கிறது. உண்மையில் அதிகாரிக்கு யானையை கொல்லும் எண்ணமில்லை பாதுகாப்புக்காக தான் துப்பாக்கியை எடுத்து செல்கிறார்.  யானை இருக்குமிடத்தையறிந்து அங்கே சென்று யானைக்கு சில அடி தூரம் தள்ளி நிற்கிறார்.

யானையை பார்த்தவுடனே அதை சுடக்கூடாது என முடிவு செய்கிறார். அது அமைதியாக புல்லை மேய்ந்து கொண்டிருக்க, இன்னும் சற்று நேரம் கண்காணித்துவிட்டு  பாகன் வந்து பிடித்துகொள்ளட்டும் என்று திரும்பிவிடலாம் என நினைக்கிறார். மீண்டும் யானையை பார்க்க அது அமைதியாக இருக்கிறது. இவர் திரும்ப நினைக்க கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேருக்கும் குறையாத பர்மியர்கள் இவர் யானை சுடப்போவதை வேடிக்கையை காணும் உற்சாகத்துடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரியை பிடிக்காதபோதும் அவர் கையில் இருக்கும் துப்பாக்கியை மந்திரகோலாய் நினைத்து அதை கையில் வைத்திருக்கும் அதிகாரியை நாயகனாய் பார்க்கிறார்கள் என்பது அதிகாரிக்கு புரிகிறது.

இப்போது யானையை சுடவேண்டி அந்த இரண்டாயிரம் பேரின் ஆசைகளும் அவரை அழுத்துவதை உணர்கிறார். ”///// ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன். அவன் அப்போது போலியாகிறான், பயனற்ற ஒரு பொம்மை ஆகிறான், ‘சாகிபு’ என்கிற ஒரு சம்பிரதாய உருவத்தை ஏற்றுக்கொள்கிறான். பின் தன் வாழ்நாள் முழுவதும் உள்ளூர் வாசிகளை திருப்திப்படுத்துவதிலேயும், கவருவதிலேயும் அவன் செலவிடுகிறான். எந்தவொரு நெருக்கடியிலும் அவன் உள்ளூர்க்காரர்கள் சொல்லுவதைச் செய்ய வேண்டும். அவன் ஒரு முகமூடி அணிந்துவிட்டான். அவன் முகமும் அதற்குப் பொருத்தமாக வளைந்து கொடுக்கிறது. நான் யானையை சுட்டே தீர வேண்டும்! ////////

///இத்தனை தூரம் வந்த பின், கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு, சுற்றி இரண்டாயிரம் பேர் வேடிக்கை பார்க்க, ஒன்றுமே செய்யாமல் பின் வாங்கித் திரும்பினால்/// இந்த கூட்டம் சிரித்தே கொன்றுவிடும் என நினைக்கிறார். ஆனாலும் ஏனோ அதிகாரியின் மனம் யானையை சுடுவதை ஏற்க முடியாமல் தடுமாறுகிறார். பல்வேறு யோசனைகளுக்கும் மனப்போராட்டத்துக்கும்  பிறகு யானையை சுட முடிவெடுக்கிறார். யானையை எப்படி சுட்டால் உடனே உயிர் பிரியும் என்பது தெரியாமல் உத்தேசமாக சுடுகிறார். இதனால் யானை சாகாமல் மரண வலியில் போராடுகிறது.

ஒரு பூதாகரமான மிருகம் அவர் கண் முன்னால் நகரவும் தெம்பில்லாமல், சாகவும் சுரத்தில்லாமல், சுருண்டு கிடப்பதையும், அதன் மரண பிளறலும் பார்த்து அதிகாரியின் மனம் நடுங்குகிறது. உடன் தன் துப்பாக்கியால் பல முறை சுடுகிறார். ஆனாலும் யானை இறக்காமல் அதிகாரியை சித்ரவதை செய்கிறது. என்ன செய்ய என்று தெரியாமல் அதிகாரி கிளம்பி விடுகிறார். அரைமணி நேரம் போராடி யானை உயிரை விடுகிறது. ஆனால் முழுதும் இறப்பதற்குள்ளேயே அதன் எலும்பு வரை பர்மியர்கள் மழித்துவிடுகிறார்கள்.

யானையின் சொந்தகாரனான இந்தியன் ஆவேசமாக இருந்தபோதும் அவனால் ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆனால் ஐரோப்பியர்கள் இந்த யானை சுட்டதில் இருவேறு கருத்துகளை வைத்திருந்தார்கள், சுட்டது சரி  என்றும், ஒரு கூலித்தொழிலாளியை யானை கொன்றது என்பதற்காக யானையை சுட்டது அசிங்கம் என்றும், அந்த தொழிலாளியை விட யானை அதிக மதிப்புடையது என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் யானையை சுட்டது தான் பர்மியர்கள் முன் முட்டாளாகிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக எனும் உண்மை தான் யாருக்கும் தெரியாமல் போய்விட்டதாக நினைக்கிறார் அதிகாரி.





Sunday, 24 July 2016

the monkey's paw - W.W. Jacobs

The Monkey’s paw - W.W.Jacobs எழுதியது http://gaslight.mtroyal.ab.ca/mnkyspaw.htm


வொய்ட் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். தந்தையான வொய்ட்டும், அவரது மகனான ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளையாட்டில் மகன் தந்தையை தோற்கடிக்கிறான். தாயும் மகனும் தந்தையை கிண்டல் செய்ய அப்போது விருந்தினராக வொய்ட்டின் ராணுவ நண்பர் மோரிஸ் வீட்டுக்கு வருகிறார்.

மோரிஸ் பல நாடுகள் சுற்றிவருபவர் ஆதலால் அவரது அனுபங்களை கேட்பதில் வொயிட் குடும்பம் ஆர்வமாக இருக்கும். மோரிஸிடம் வொயிட் ஒருமுறை இந்தியாவை சுற்றி பார்த்து வரவேண்டும் என்று கூறுகிறார்.

மோரிஸ் வேண்டாம் என்கிறார்..

ஆனால் வொயிட் அங்கிருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் கேள்விப்பட்டதில் இருந்து  பார்த்தே ஆகவேண்டும் போல உள்ளது. அன்று ஒரு நாள் குரங்கின் பாதம் என்று ஏதோ சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிட்டாயே அதை பற்றி சொல்லு என்கிறார்.

மோரிஸ் உடனே அதை பற்றி தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை விடு என அவசரமாக மறுக்கிறார்..

குரங்கின் பாதமா , வித்தியாசமா இருக்கே என ஆச்சரியத்துடன் வொயிட்டின் மனைவி கேட்க அது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி என்று வைத்துகொள்ளுங்கள் என்று பேச்சை மாற்ற தேநீர் கேட்கிறார்..

ஆனால் கண்கட்டு வித்தை என்றவுடன் அதீத ஆர்வமான வொயிட்டின் குடும்பம் அவரிடம் மேலும் விவரம் கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.

மறுக்க முடியாத மோரிஸ் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாடம் செய்யப்பட்ட  குரங்கின் பாதத்தை எடுத்து வொயிட்டின் மகன் ஹெர்பர்ட்டிடம் கொடுக்கிறார். அதை பார்த்து வொயிட்டின் மனைவி பயந்து பின் வாங்குகிறார்..

அந்த பாதத்தை பார்த்து வொயிட் இதில் என்ன சிறப்பு என்கிறார்.

இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. ஒரு சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் விதிப்படி தான் அமைகிறது, அமையவேண்டும். விதியை மீறி விளையாட நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று உலகுக்கு சொல்ல நினைத்தார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கினார் என்கிறார் மோரிஸ்.

அப்படி என்ன சாபம் என்கிறான் ஹெர்பர்ட்

இந்த பாதம் மூன்று வரங்களை மூன்று பேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்ல்து என்கிறார் மோரிஸ்.

அப்படின்னா நீங்க ஏதாவது கேட்டிருக்கீங்களா கிடைத்ததா என்கிறார் வொயிட்.
கேட்டேன் கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் இது வேண்டாம் என்று என்னிடம் கொடுத்துவிட்டார் என்கிறார்.

நீங்கள் இதில் வரம் ஏதும் கேட்க போகிறீர்களா? எதற்காக வைத்திருக்கிறீர்கள் என் வொயிட் கேட்க . ஒரு நினைவுக்காக என்று சொல்லிய மோரிஸ் சட்டென அதை தூக்கி கணப்படுப்ப அருகில் எரிகிறார். சட்டென பாய்ந்து அதை எடுக்கிறார் வொயிட்.

வேண்டாம் அதை எறியுங்கள் என இரைஞ்சுகிறார் மோரிஸ். ஆனால் உனக்கு தேவையில்லை என்றால் நான் எடுத்து கொள்கிறேன் என்கிறார் வொயிட். வேண்டாம் நான் சொல்வதை கேளுங்கள் , அந்த வரங்களின் மூலம் வரும் விளைவுகள் கொடுமையாக இருக்கும் என்று எவ்வளவோ மன்றாடியும் வொயிட் செவிமடுக்க மறுக்கிறார்..

எப்படி வரம் கேட்க வேண்டும் அந்த பாதத்திடம் என கேட்க மோரிஸ் வழியை சொல்கிறார்.
மோரிஸ் விடைப்பெற்று சென்ற பின் அந்த பாதத்தை வைத்து குடும்பத்தினர் என்ன வரம் கேட்பது என்று வேடிக்கையாக பேசுகின்றனர். பிறகு இறுதியாக இருநூறு பவுண்ட் பணம் கேட்கலாம் என முடிவு செய்து அதே போல வரம் கேட்கின்றனர்.

அப்போது வொயிட்டின் கையை யாரோ முறுக்குவது போலவும், அந்த பாதம் நகர்வது போலவும் தோன்ற வொயிட் அதை குடும்பத்தாரிடம் கூறுகிறார். ஆனால் அது பிரமை என்று கூறுகின்றனர். பின்னர் அனைவரும் உறங்க சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் காலை மகன் தொழிற்சாலை செல்கிறான். பணம் வந்தால் எடுத்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கிண்டல் செய்துவிட்டு. அவன் சென்ற சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து வீட்டு கதவை தட்டுகிறார். வொயிட் கதவை திறக்க அப்போது அவர்கள் மகன் தொழிற்சாலையில் இயந்திரங்களுக்கிடையில் மாட்டி இறந்துவிட்டதை சொல்கிறார். வருத்தம் தெரிவிக்கும் நிறுவனம் நஷ்ட ஈடு தருவதாக சொல்கிறது. வொயிட்டுக்கு ஏதோ உறைக்க எவ்வளவு என்கிறார். இருநூறு பவுண்ட் என்கிறார் ஊழியர். இதை கேட்டு அதிர்ந்து போகின்றனர் அந்த தம்பதியர்.

மகன் இறந்து பத்து நாட்களுக்கு மேலான பின்னும் அந்த துக்கத்திலிருந்து  வொயிட்டின் மனைவி வெளிவர முடியாமல் போராட அவளுக்கு திடீரென குரங்கு பாதத்திடம் தன் மகனை திருப்பி தரும் வரம் கேட்கலாம் என்கிறாள். மூன்றில் ஒன்று தானே கேட்டிருக்கிறோம் இன்னும் இரண்டு மீதம் இருக்கிறது அல்லவா என்கிறாள். ஆனால் கணவர் விபரீத விளைவு வரும் என மறுக்கிறார். அதை காதில் வாங்காத அவள் மனைவி அந்த பாதத்தை கையிலெடுத்து வரம் கேட்கிறாள்.

பின்னர் படுக்கைக்கு சென்று படுத்துவிட நள்ளிரவில் இவர்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகிறது. மனைவியை கதவை திறக்க வேண்டாமென தடுக்கிறார். ஆனால் நம் பிள்ளை தான் வந்திருப்பான் அவனை கண்டு நாமே பயப்படுவதா என அவரை தள்ளிவிட்டு கதவை திறக்க படுக்கையறையில் இருந்து வாசல் நோக்கி ஓடுகிறாள். அவளை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த வொயிட் குரங்கின் பாதத்தை கையிலெடுத்து அவசரம் அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்கிறார். கதவு தட்டப்படுவது நின்றுவிடுகிறது……..

Wednesday, 13 July 2016

மேடம் ப்வாரி - குஸ்தாவ் பிளாபெர்ட்


ப்ரெஞ்சு மொழியில் குஸ்தாவ் பிளாபெர்ட் எழுதிய மேடம்பவாரி (Gustave Flaubert - Madame Bovary) பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் எனினும் எக்காலத்துக்குமான பெண்ணின் உணர்வுகளை பேசுகிறது. இந்நூல் வெளியாகி கலாச்சார காவலர்களால்  ஏக சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி அவர்கள் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீதி விசாரணை எல்லாம் நடைபெற்று வெளிவந்த நூல்.

இந்த நாவல் களம் ப்ரெஞ்ச் என்றாலும், உலகில் இருக்கும் அனைத்து பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகிறது. ஒரளவு இன்று பெண்கள் வேலைக்கு சென்று தங்களின் தனிமையிலிருந்து வெறுமையிலிருந்தும் மீள கற்று கொள்ள தொடங்கிவிட்டார்கள் எனும்போதும் இன்றும் நீளும் பொழுதுகளை செய்வதறியாது பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கிக்கொண்டு மன நோய்மையுடன் காலம் கழிக்கும் பெண்கள் அநேகம். ஆனால் வெளியுலகிற்கு பெண்களின் உணர்வுகள் முழுமையாக தெரிவிக்க முடிவதுமில்லை, தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்பதான வாழ்க்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 


சார்லஸ் பவாரி ஒரு மருத்துவர், தாயின் வற்புறுத்தல் காரணமாக பணத்துக்காக தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். மருத்துவம் பார்க்க கிராமத்தில் ஒரு வீட்டுக்கு செல்ல அந்த வீட்டு பெண் எம்மா மீது காதல் கொள்கிறான்.  சில காலத்தில் மனைவி இறந்துவிட எம்மாவை திருமணம் செய்து கொள்கிறான்.


எம்மா பள்ளிகாலத்திலிருந்து அதிக காதல் புத்தகங்களை வாசித்து தனது வாழ்க்கை குறித்தும் காதல், திருமண வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கனவுகளை வளர்த்து கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறாள். சார்லஸின் சராசரித்தனம் அவளுக்கு திருமணமான சில நாட்களிலேயே சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அவளின் கனவு கோட்டைகள் சரிய சார்லஸை உள்ளுக்குள் வெறுக்க தொடங்குகிறாள்.


அப்போது ஒரு பிரபு வீட்டு விருந்துக்கு டாக்டரும் அவரது மனைவியும் அழைக்கப்பட, தனிமையில் அடைப்பட்டு கிடந்த எம்மாவுக்கு அந்த விருந்து மிகப்பெரும் உற்சாகத்தை தருகிறது. பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்து செல்லும் அவள் அந்த மாளிகையையும் ஆடம்பர வாழ்வையும் பார்த்து தான் கனவு கண்ட வாழ்க்கை அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் சராசரித்தனமும் எதார்த்தமும் முகத்திலறைய மனச்சோர்வுக்கு ஆளாகிறாள்.


எம்மாவின் விருப்பத்துக்காக பக்கத்தில் உள்ள சிறு நகரத்து குடியேறுகிறான் சார்லஸ். அங்கு கர்பிணியான எம்மா ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள். குழந்தை மேல் ப்ரியம் உண்டானாலும் குழந்தையால் அவளின் சூன்யத்தை, வெறுமையை துடைத்தெறிய  முடியவில்லை. 


அந்த சிறு நகரமும் எம்மா கற்பனை செய்த அளவு இல்லை. அப்போது அங்கு லியோன் என்கிற இளைஞனை சந்திக்கிறாள் எம்மா. கவிதைகளும், காவியங்களுமாக உலவும் அவனுக்கு அந்த சிறு நகரத்தில் தன் ரசனையை பகிர ஆள் இல்லா தனிமையில் வாடி வாழ்கிறான். எம்மாவின் அறிவும், கற்பனைவளமும், அழகும் லியோனை ஈர்க்கிறது. இருவருமே மோகித்தாலும், அதை வெளிப்படுத்தும் தைரியமில்லாமல் அவளை அடையவும் முடியாத விரகதாபம் தாங்க மாட்டாதவனாய் லியோன் அந்த ஊரை விட்டு வெளியேறுகிறான்.


லியோனியின் நட்பு மட்டுமே ஆறுதலாக இருந்த அந்த சிறு நகரத்தில் இருந்து அவனும் வெளியேறியதும் மீண்டும் எம்மா சோர்வுறுகிறாள். அப்போது அந்த ஊருக்கு விடுமுறை நாட்களை செலவிட வரும் ரூடால்ப் என்கிற இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். ரூடால்ப் பல பெண்களுடன் பழகும் குணமுடையவன் என்றாலும் எம்மாவின் பால் அதீதமாக ஈர்க்கப்படுகிறான். எம்மாவும் தன் லட்சிய காதலன் இவனாக தான் இருக்கமுடியும் என நம்பி அவனை நேசிக்கிறாள். சில நாட்கள் இன்பமாக அவளுடன் பொழுதை கழிக்கும் ரூடால்ப்க்கு எம்மா சலிக்க தொடங்குகிறாள். ஆனால் எம்மா அவனுடன் அந்த ஊரை விட்டு வெளியேற திட்டமிடுகிறாள். அதற்காக துணிமணிகள், பெட்டி, அங்கி என வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்குகிறாள்.


ரூடால்ப் எம்மாவை அழைத்து செல்லாமல் , பழக்க வழக்கங்களை நிறுத்தி கொள்வோம் என கடிதம் எழுதிவிட்டு தான் மட்டும் சென்றுவிடுகிறான். அவனை மிகவும் நம்பிய எம்மா மனமுடைந்து உடல் நிலையும் மோசமாக பாதிக்கப்படுகிறாள். பிறகு மெல்ல உடல்நிலை தேறி தெய்வ வழிப்பாட்டில் தன்னை நிலை நிறுத்தி தன் வெறுமையை போக்க தலைப்படுகிறாள். 


குடும்பத்திலும், தெய்வ நம்பிக்கையிலும் தன்னை கரைத்துக்கொள்ளும் மனைவி மீது பாசம் மேலிட, அவளுக்கு வெளியே செல்ல பிடிக்கும் என அவளை பக்கத்தில் உள்ள நகரத்தில் நடக்கும் இசைக்கச்சேரிக்கு அழைத்து செல்கிறான் சார்லஸ். அங்கு அவள் மீண்டும் பழைய காதலன் லியோனை சந்திக்கிறாள். லியோனின் மயக்கும் காதல் வார்த்தைகளிலும், அவனின் காதல் உறுதியிலும் அவள் மீண்டும் அவனை நேசிக்கிறாள். அவனை சந்திப்பதற்காக வாரம் ஒருமுறை அந்த நகருக்கு பியோனா கற்று கொள்ள போகிறேன் என சொல்லி வருகிறாள். செலவுக்காக வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்க தொடங்குகிறாள்.


சில நாட்கள் ஆரம்ப மோகம் கலைந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. இருவருக்கும் மன முறிவு வந்து பிரிகின்றனர். எம்மா பலவாறு சிதைகிறாள். அவள் கற்பனையில் வரித்த காதல் என்பது வெறும் கானல் நீர் , நிஜ வாழ்வில் கிட்டவே கிட்டாத ஒன்று என்று உணர தொடங்க, அதை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் வாங்கிய கடனுக்காக வீடு ஏலம் போகும் நிலை வர செய்வதறியாது திகைக்கிறாள். 


லியோனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவன் கைவிரிக்க அப்போது ஊருக்கு திரும்பியிருக்கும் ரூடால்ப்பிடம் சென்று கேட்கிறாள். அவனும் அவளுக்கு அவ்வளவு பெரிய தொகை தர இயலாது என்று கூற வெடித்து பைத்தியம் போல அழுகிறாள். என்னையே கொடுத்தேனே என் மானம் காக்க இந்த பணத்தை உன்னால் தர முடியாதா உன் வீட்டில் உள்ள இந்த தங்க தட்டை எடுத்து கொடுத்தால் கண்ணில்லாதவன் கூட எனக்கு தேவைப்படும் பணத்துக்கு அதிகமாக கொடுப்பான். உனக்கு மனமில்லை என்று வெடித்து அழுது வெளியேறுகிறாள்.


பின்னர் ஒரு வக்கிலை சந்திக்க அவன் அவளை விலையாக கேட்கிறான். ச்சீ என உதறி வரும் அவள் வாழ பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய தனிமையும், வெறுமையும் போக்க நுகர்வுக்கலாச்சாரத்தை நோக்கி ஓடுகிறோம். வாழ்வின் சூனியத்தை பாலியல் மூலம் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். ஆனால் அதுவும் இறுதியில் சலிப்பில் தான் முடியும் என்பதை உணராமலே.  

ஒற்றை வார்த்தையில் கேடு கெட்ட பெண்ணிற்கு இது தான் முடிவு என முடித்துவிடுபவர்கள் தான் அநேகம். ஆனால் ஒரு போதும்  எம்மாவின் தனிமையையும், வெறுமையையும், அவளது கற்பனைகளை வெளிப்படுத்த முடியாத, கனவுகள் சிதறடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது. இன்று வரை எம்மாக்கள் சிதைந்தும், மரித்து போன உணர்வுகளை சுமந்தலையும் உடலை சுமநது கொண்டு வெற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுபோல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எம்மா போன்ற பெண்ணின் உணர்வுகளில் சுகமாக குளிர்காய்ந்துவிட்டு சுயநலமாக பறக்கும் ஆண்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள் 









Sunday, 10 July 2016

" செம்மணி வளையல் " - அலெக்சாந்தர் குப்ரின்

" செம்மணி வளையல் " அலெக்சாந்தர் குப்ரின் எழுதி முகமது செரீப் மொழிபெயர்த்த ருஷ்ய நாவல். நாவல் என்று சொலவதை விட கதை என்று சொல்லலாம். மிகச்சிறிய கதை தான். ஒரு பெண் எதிர்பார்க்கும் காதலை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. சோகமான முடிவு.

ஒரு தலைக்காதல் தான் கதை கரு. சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் தான் வித்தியாசம். இந்த நாவலின் நாயகன் போல நிஜ வாழ்வில் பெண்ணை காதலிப்பவர்கள் இருக்கிறார்களா என்று சந்தேகம் தவிர்க்க முடியவில்லை.

வேரா என்கிற பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகன் அவள் திருமணமான பின்னும் விடாமல் தன் காதலை தொடர்கிறான். அவளின் பிறந்த நாளுக்கு யார் மூலமோ ஒரு கடிதமும் பரிசளிக்க செய்கிறான். எட்டு வருடங்கள் தொடர்ந்து விடாமல் செய்கிறான். அவள் கணவரிடம் அவ்வப்போது இதைப்பற்றி சொல்லி வந்தாலும் இருவருமே பெரிதுபடுத்தாமல் விடுகிறார்கள்.

எட்டாம் வருடம் அவன் விலையுயர்ந்த பொருள் அனுப்ப இதை தொடர்வது நல்லதில்லை முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என கணவரிடம் சொல்ல கணவர் அவள் சகோதரனுடன் சேர்ந்து அவன் முகவரியை கண்டுபிடிக்கிறார்கள்.

நேரில் அவனை சந்தித்து விசாரிக்க அவன் உணர்வை காதலை சொல்கிறான். அவன் உணர்வில் இருக்கும் உண்மை உணரும் வேராவின் கணவன் செய்வதறியாது திகைக்கிறான். அப்போழுது அவன் பேசும் வார்த்தைகள் அனைத்தும் நூற்றாண்டு கால பெண்ணின் காதல் ஏக்கங்கள். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு இனி முற்றிலும் ஒதுங்கி விடுகிறேன் என அனுப்பி வைக்கிறான்.

இறுதியாக ஒரு கடிதம் வேராவுக்கு எழுதிவிட்டு பீத்தோவன் இசையின் சில பகுதியை அவளுக்கு சமர்பித்து தற்கொலை செய்து கொள்கிறான். செய்தி கேட்டு அவனை காண செல்கிறாள். பிணமாக இருக்கும் தலையை இடது கையால் நிமிர்த்தி வலது கையால் அவன் கழுத்தில் கைவைத்து அவனை பார்க்கும்போது ஒவ்வொரு பெண்ணும் கனவு காண்கிற காதல் தன்னை கடந்து போவதை உணர்கிறாள். அவன் நெற்றியில் முத்தம் பதித்து வெளியேறுகிறாள்.

பின் வீட்டுக்கு வந்து பீத்தோவனில் அவன் குறித்த பகுதியை வாசிக்க சொல்லி கேட்க இசையின் ஆன்மாவில் அவன் ஆன்மா ஒலிப்பது உணர்ந்து கடந்து போன காதலுக்கு கதறி அழுகிறாள்.

காதலின் இரு துருவங்களையும். பெண்களின் மனநிலை குறித்தும் பேசும் வேராவின் தாத்தா பகுதி அறிமுகம் இழுவை. ஆனால் பெண்களை பற்றி அவர் வைக்கும் காரணிகள் சில புறம் தள்ள முடியாதவை.

//// ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய நெஞ்சின் ஆழத்தில் ஒரே மனதுடன் எதையும் மன்னிக்க கூடிய, பணிவோடு தன்னை தியாகம் செய்யக்கூடிய அன்புகொண்ட காதலுக்காக கனவு காணலையா?

அது இல்லையென்றால் தான் பெண்கள் வஞ்சம் தீர்க்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் பெண் இணையற்ற சக்தியாக கைவரப் பெறுவார்கள். அவர்களின் ஆசைகளும் உணர்வுகளும் ஆண்களுக்கு சோகமான சட்டங்களாக மாறும். ஏனெனில் பல தலைமுறையாக ஆண்கள் காதலைப் போற்றவும், வழிபடவும் செய்யவில்லை. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இது அமையும். செயலும் எதிர்ச்செயலும் சமத்தன்மைக்கும் எதிர்தன்மைக்கும் இணையானவை.///

Friday, 8 July 2016

ஓசூர் எனப்படுவது யாதெனின் - ஆதவன் தீட்சண்யா

ஓசூர் எனப்படுவது யாதெனின் ஆதவன் தீட்சண்யா எழுதிய புத்தகம். மலைகள் பதிப்பக வெளியீடு.
இது நாவலல்ல. கட்டுரையா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். இலக்கிய சுவை பெரிதும் இல்லை என்றாலும் சாரலாக அங்காங்கே இலக்கியம ஒரு நூலிழை போல பின்னி வருகிறது ஆரம்ப அத்தியாயங்களில். தன்னை தானே பகடி செய்து கொள்வது அவ்வளவு அழகாக வருகிறது இவரது எழுத்துகளில். அநேகமாக வாசிக்கிறேன் என்று இவர் செய்த கூத்துகளை ஆர்வகோளாறில் வாசிக்கும் நிறைய பேர் செய்திருக்க வாய்ப்புண்டு.
////புரிந்ததா, விளங்கியதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் தொகுப்பு நூல்களை எல்லாம் கூட படித்துக்கொண்டிருந்தேன் அல்லது படிப்பதாக காட்டிக்கொண்டிருந்தேன். சில வரிகளுக்கு சிவப்பு மசியால் அடிக்கோடிடுவது, ஓரத்தில் பெருக்கல் குறி இட்டு முக்கியப்படுத்தி காட்டுவது, ஏதாவது சில பக்கங்களின் முனைகளை மடித்து பொறித்து அலட்டி கொண்டதற்கும் பஞ்சமில்லை. ////
ஓசூர் பக்கம் இருக்கும் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஆசிரியரின் பயணமும் ஓசூரின் பயணமும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் தோழராக ஆரம்பிக்கும் ஆதவனின் இளமை பிராயம் ஓசூர் தொழிற்பேட்டையாக முழுமையாக வளர்ச்சியடையும் முன் எப்படி இருந்தது. அப்போது இருந்த அரசியல், 1980 களின் இறுதியில் நடந்த ஆசிரியர் வேலை நிறுத்த போராட்ட வரலாறு அதற்கு ஓசூர் மக்கள் அளித்த ஆதரவு, தொழிற்பேட்டையாய் உருவெடுத்த ஓசூர் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள், புவியியல் மாற்றங்கள், தொழிலாளர் பிரச்சனைகள், அதற்கு தீர்வு காண கம்யூனிஸ்ட் இயக்கம் எடுத்த முயற்சிகள், தொழிலாளரை ஒன்று திரட்டிய முறை அல்லது அவர்கள் ஒன்று சேர்ந்த முறை என்று ஓரளவு இந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாத வாசகன் கூட தெரிந்து கொள்ளுமளவிற்கு விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
ஓசூர் என்கிற இன்டஸ்ட்ரியல் ஏரியாவின் வளர்ச்சி உலக மயமாக்கல் வந்த பின் அடைந்த வீழ்ச்சி, கம்யூனிஸ்ட் தோழர்களின் பின்னடைவு, தொழிளாலர்களின் உளவியல் பிரச்சனைகள், அவர்கள் முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்ட முறை, அங்கிருந்த பூர்வகுடியினரையும், இயற்கை வளங்களையும் அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்க, மலையை கூட விட்டு வைக்காமல் கிரானைட்க்காகவும் கனிமங்களுக்காகவும் எல்லாம் தரை மட்டமாகி இருபது வருடங்களுக்குள் கண் முன் நடக்கும் மாற்றத்தின் வேகத்தை தடுக்கவும் முடியாமல் அதனை ஏற்கவும் முடியாமல் ஆதவனை போலவே நாமும் அதிர்ந்து போக தான் வேண்டியிருக்கிறது..
.
சங்பரிவார் போன்ற அமைப்புகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவ எடுத்து கொண்ட நடவடிக்கைகள், அதனை தடுக்காமல் அவர்களுக்கு சலாம் போடும் காவல்துறை, கள்ள மௌனம் காக்கும் அரசு என்று அவர் வைத்திருக்கும் பார்வை அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
///தொழிற்சாலைகளை வைத்து தான் ஒரு பகுதியை முன்னேறியதாகவோ, பின் தங்கியதாகவோ மதிப்பிடுகிறோம். இந்த மனநிலை காரணமாக யாருக்காக வளர்ச்சி, யாருடைய வளர்ச்சி என்ற கேள்வியை எழுப்பாமலேயே இப்படியான வளர்ச்சியின் பொருட்டு நாட்டின் கனிம வளங்களையும் அழிக்கப்படுவதையும், மக்கள் வாழிடங்களில் இருந்து துரத்தப்படுவதையும், வளர்ச்சியின் பெயரால் மறக்க விரும்புகிறோம்.///
நடுத்தர , மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் தங்களை சார்ந்தே சிந்திக்கிற எல்லாவற்றையும் அணுகுகிற இவர்களின் உளவியல் தான் இன்று உலகமயத்திற்கு துணை போகிறது என்றும இவர்கள் தம் மீது நிகழ்த்தப்படும சுரண்டல் விருப்பபூர்வமாக ஏற்கும் மனநிலைக்கு வந்த இவர்கள் அமெரிக்காவில் போய் வேலை பார்ப்பதை கனவாக கொண்டிருக்கும் இவர்கள் நாளை இவர்கள் நாளை அமெரிக்க ஆட்சி பொறுப்பேற்பதை கூட ஏற்றுக்கொள்வார்கள் என்று சாடியிருக்கிறார்.
கண்டிப்பாக இது படிக்க வேண்டிய புத்தகம். ... அங்காங்கு தொழில் மண்டலம், சிறப்பு பொருளாதார மண்டலம் அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், நம்மை சுற்றி நடப்பவற்றின் பின் நடக்கும் அரசியலையும், சமகால வரலாறையும், நாம் சுரண்டப்படுவதையும் பற்றி அடிப்படையில் சிலவற்றை புரிந்து கொள்ளவும், விழிப்புணர்வு அடையவும் உதவும்...

Thursday, 5 May 2016

“தாசியும் தபசியும்” அனடோல் பிரான்ஸ்


“தாசியும் தபசியும்” அனடோல் பிரான்ஸ் என்பவர் ப்ரெஞ்சு மொழியில் எழுதிய நாவலை தமிழில் எஸ். சங்கரன் மொழிபெயர்த்திருக்கிறார். மதம் மனிதனை எந்தளவு முட்டாளாக்கிவிடுகிறது என்பதை கிண்டலாகவும் அதே நேரம் அதனை விவாதத்துக்கு உட்படுத்தியும் பேசுகிறது நாவல்.

எகிப்தில் கிருஸ்துவம் பரவ ஆரம்பித்த நாட்களில் நடந்த மாற்றங்களும், மக்களின் மனதில் அப்போது இருந்த கடவுள் பற்றிய அபிப்ராயங்களும் அபிப்ராய பேதங்களும் தர்க்க ரீதியாக விவாதிக்கப்படுகிறது. அப்போது இருந்த கிருஸ்துவ மதத்தை அதன் நம்பிக்கைகளை கிண்டலாக சொன்னாலும் அதற்கு பின் இருந்த அரசியலையும் , மக்களின் அறியாமையும் வலுவாக சொல்கிறது நாவல்.

தாயிஸ் என்ற அழகான விபச்சாரியை மீட்டு அவளுக்கு பாவத்திலிருந்து விமோசனம் பெற செய்து அவளை கடவுளுக்கு சமர்பிக்க போவதாக துறவு வாழ்வு வாழ்ந்து வரும் பாப்னூடியஸ் என்ற கிருஸ்துவ மதபோதகர் தாம் தங்கி இருக்கும் பாலைவனத்தில் இருந்து நகரத்துக்கு செல்கிறார்.

தாயிஸ் அந்த நகரத்தின் கனவு கன்னி, நாடக நடிகை, பல ஆண்களின் காதலி, விபச்சாரத்தால் செல்வ செழிப்பாக இருந்தாலும் காதல், காமம், செல்வம் எல்லாம் சலித்து போகிறது. மரணம் பற்றிய பயம் அவளை வாட்டுகிறது.

அந்த தாசியை சந்திக்கிறார் பாப்னூடியஸ், அப்போது அவள் விருந்துக்கு செல்வதால் அவளுடன் வருமாறு அழைக்கிறா தாயிஸ். பாப்னூடியஸும் அவளுடன் செல்கிறார். அங்கு விருந்துடன் மிகப்பெரும் விவாதங்களும், கடவுள் குறித்த, மதம் குறித்த பலவும் சர்ச்சைக்குள்ளாகிறது. குடிபோதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அங்கு நடக்கும் தர்கங்களை பார்த்து பாப்னூடியஸ் கொதித்து போகிறார். தாயிஸ் அங்கு நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருக்கும்போதே அவளை வா இங்கு வேண்டாம் உனக்கு நிரந்தர சுவர்கத்தை காட்டுகிறேன். உனது உடலை இந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கொடுத்தன் மூலம் உண்டான பாவத்திலிருந்து மீட்டு உன்னை கடவுளின் பாதத்தில் சேர்க்கிறேன் என்று கூறுகிறார்.

குழம்பிய நிலையில் இருந்த தாயிஸிடம் அவள் உடமைகள் எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்து தன்னுடன் துறவு வாழ்வுக்கு வர சொல்கிறார். தாயிஸும் சம்மதித்து அவருடன் எல்லாம் துறந்து பயணம் மேற்கொள்கிறாள். சில நாட்கள் பயணித்து கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு மிகுந்த மன திருப்தியுடன் தான் ஒரு பெண்ணை இயேசுவுக்கு அர்பணித்து விட்ட நிறைவில் தன் இடம் செல்கிறார்.

தன் இடம் வந்தவுடன் தான் பாப்னூடியஸ் வெறுமை உணர்கிறார். சில நாட்கள் பழக்கத்தில் தாயிஸ் மீது ஏற்பட்ட காதலும் காமமும் அவரை அலைகழிக்க தொடங்குகிறது. தான் பாவம் செய்துவிட்டதாக தன்னையே தண்டித்து கொள்கிறார். தாயிஸை மறக்க பிடிவாதமாக தியானம், பட்டினி என்று தன்னை தானே தண்டித்து கொள்கிறார். ஆனாலும் தோற்றங்களாக எங்கு பார்த்தாலும் தாயிஸின் உருவமே இவர் மனக்கண்ணில் தோன்றுகிறது.

சரியாக படுக்க கூட வசதி இல்லாத ஒரு தூணின் மீது ஏறி இன்னும் கடுமையாக தன்னை தண்டித்து கொள்கிறார். ஆனால் என்ன செய்தும் அவரால் தாயிஸின் நினைவிலிருந்து மீளமுடியவில்லை. கதறி அழுகிறார். அப்போது அவருக்குள் நடக்கும் போராட்டங்கள் மதம் மனிதன் மீது திணித்திருக்கும் சுமைகளை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கடவுளின் துணையுடன் உடலுணர்ச்சியை அடக்கிவிடுவேன் என்று தன்னை வருத்தியும் முடியாமல் அமைதி இழக்கிறார் பாப்னூடியஸ் . கனவிலும், நினைவிலும் தாயிஸின் முகம் வந்து அவரை வாட்டி எடுக்கிறது. அப்போது சில நாட்களில் கடவுளிடம் சேரப்போகும் மததுறவியான அந்தோணியை சந்திக்கிறார். அப்போது மதத்துறவிக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலில் அவர் எது துறவு என்று உணர்கிறார்.

முட்டாள்தனமாக தாயிஸை சொந்தமாக்கி கொள்ளாமல், இந்த உலகில் அவளை தவிர வேறு ஏதோ இருப்பதாக கடவுளை பற்றியும், அழிவில்லாத வாழ்வு பற்றியும் கனவு கண்டது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் அவள் இல்லாத வாழ்க்கை உயிரற்றது என்று உணர்கிறார். அப்போது அவள் மரணப்படுக்கையில் இருப்பதாக உணர்ந்து அவளை காண செல்கிறார்.

அப்போது அவளை பற்றி அந்த மடத்தின் தலைவி சொல்கிறார். மிக அமைதியாக ப்ரார்த்தனை ஒன்றிலேயே தன்னை கரைத்து கொண்டு இப்போது மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறாள் என்கிறாள். அவளை சாக விட மாட்டேன் என்று அவளருகில் செல்கிறார். அவள் நன்றி சொல்கிறாள் இப்படி ஒரு அமைதியான வாழ்வை கொடுத்தற்கு. ஆனால் பாப்னூடியஸ் செத்து போகாதே என்று அழுது அரற்றுகிறார்.

தாயிஸ் நான் உன்னை ஏமாற்றிவிட்டேன், கடவுள், சுவர்க்கம் என்றெல்லாம் கிடையாது, இந்த உலக வாழ்க்கையும், அன்பையும் அன்றி உண்மையான வேறொன்று கிடையாது, வா என்னுடன் நாம் பறந்து போவோம், நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார். ஆனால் அவள் கடவுளை காண்பதாக சொல்லி இறக்கிறாள்.

இவர் வாம்பயராக மாறுவதாக கதை முடிகிறது.

இந்த நாவல் வாசித்து முடிக்கும்போது கடவுள், மதம் இரண்டும் அந்த காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து மனிதர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும், அதற்கு எதிரான தர்க்கங்களும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாத மனிதனின் உணர்வுகளும், பயங்களும், அவனின் மூடநம்பிக்கைகளும் உண்மையான தேடல் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என்று பல தரப்பட்ட தரவுகளில் செல்கிறது. வாசித்து முடிக்கும்போது மரணம், வாழ்க்கை, கடவுள் குறித்தான எண்ணங்களில் மாற்றம் நிச்சயம்.