Saturday 27 July 2013

தவமணி

பள்ளியில் இருக்கும் அந்த பெரிய மரத்தடியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் உட்கார்ந்து இருந்தனர்..சில ஆசிரியர்கள் வகுப்பை மரத்தடியில் எடுப்பார்கள்..
 படித்து பெரிய டீச்சர் ஆகணும் டீ என்று தவமணி சொல்லுவாள்.. விமலாவோ பெரிய டாக்டர் ஆகனும் என்ற கனவை சுமந்து கொண்டு இருந்தார்கள்..படிப்பில் விமலா சராசரிக்கு மேல் என்றால் தவமணி சராசரி...
ஒரு நாள் தவமணி தன புத்தகத்தில் இருந்து மடிக்கப்பட்ட அந்த கடிதத்தை எடுத்து வாசித்துவிட்டு நமுட்டு சிரிப்பாய் சிரித்தாள்..என்னடி என்று பக்கத்தில் அமர்ந்திருந்த விமலா கேட்க இவள் கடிதத்தை காட்டினாள்.
 அது ஒரு காதல் கடிதம். முதல் முறையாக அப்படி ஒரு கடிதத்தை அப்போது தான் வாசிக்கிறாள்..லவ் லெட்டர்..வாசித்தவுடன் இது தப்பு இல்லையா டீ என்று கேட்க நான் என்ன பண்ணட்டும் தினமும் நான் வரும் பஸ்ஸில் தான் வருகிறான். கொடுத்தான் நான் யோசிக்கும்முன்னே என் கையில் திணித்துவிட்டு சென்று விட்டான்..என்ன செய்ய என்று தெரியவில்லை. இங்கு வந்து வாசித்தேன்.எனக்கு வந்த முதல் லெட்டர் டீ என்ன செய்றதுன்னு தெரியல என்று தவமணி கிசுகிசுக்க..சரி சரி மதியம் பேசலாம் அப்படியே வை என்று விட்டு பாடம் கவனிக்க (!) தொடங்கினார்கள்.
 மதியம் உணவு முடித்து இருவரும் தனியாக சென்று மீண்டும் வாசிக்க இருவருக்கும் இனம் புரியாத குதூகலம். சரி டீ இதுக்கு பதில் எழுதலாம் என்று இருவரும் திருட்டுத்தனமாக அவனின் ஒவ்வொரு கவிதை வரிக்கும் பதில் எழுதினார்கள். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே.
 அதன் பின் தவமணியும் ஒரு விளையாட்டாக இதை ஒரு தொடர்கதையாக தொடர ஒரு கட்டத்தில் அவன் பள்ளி வாசலுக்கு வர ஆரம்பித்தான். ஒரு நாள் எங்காவது வெளியில் சந்திக்கலாம் என்று அவன் அழைக்க அவளும் சரி என்று சம்மதிக்க துணைக்கு விமலாவையும் கூப்பிட்டாள்.
சந்திக்க இடம் முடிவு செய்து ஒரு நாள் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லி விமலாவும் தவமணியும் சந்திக்க சென்றார்கள்.. அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியாக சென்ற விமலாவின் சொந்தகாரர் பார்த்து வீட்டில் சொல்லிவிட பிரச்சனை வெடித்தது. பள்ளிக்கு தகவல் அனுப்பப்பட்டது. பள்ளியில் இருவரின் பெற்றோரும் வரவைக்கப்பட்டு விவரம் சொல்லப்பட்டது..
வீட்டுக்கு சென்ற தவமணிக்கு சூடு வைக்கப்பட்டு அவள் எவ்வளவோ மறுத்தும்  அவசரம் அவசரமாக அவள் மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்கப்பட்டது... விமலாவின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு அவள் அத்தை ஊருக்கு அனுப்பபட்டாள்..
இப்படியாக இந்த நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நல்ல டீச்சரையும்  ஒரு நல்ல டாக்டரையும்  ஒரு விளையாட்டால் இந்த நாடு இழந்துவிட்டது....






2 comments:

  1. இது உண்மைச் சம்பவம் மாதிரி தெரியுதே மேடம்…! உங்க க்ளாஸ்மேட்ஸா?

    ReplyDelete
  2. ஆம் எனது தோழி பெயர் தவமணி பேரட் ..

    ReplyDelete