Saturday 20 July 2013

தாயுமான தந்தை



ஒரு தந்தையின் முழு அன்பில் மூழ்கி திளைத்த எந்த ஒரு பெண்ணுக்கும தந்தையர் தினம் என்று ஒன்று தனியாக எல்லாம் இல்லை...அவளின் எல்லா உணர்வுகளிலும் அப்பா காற்றை போல கலந்து இருப்பார்....பிரித்தே பார்க்க முடியாது..வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அது பெண்ணின் அடியாழத்தில் உறைந்திருக்கும உணர்வு..

தாய் இல்லாத பிள்ளைகளுக்கு தாயுமானவரான பல தந்தைகள் உண்டு..ஆனால் தாய் இருக்கும் போதே தாயுமான தந்தை சிலரே..என் அப்பா தாயுமானவர் மட்டும் இல்லை அதற்கு மேலே....வார்த்தையில் எல்லாம் சொல்ல முடியாது...

முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த நேரம்..வயதின் காரணமாக விபரம் தெரியவில்லை..கரு தரித்ததில் இருந்து வாந்தி, மசக்கை .. எதுவும் சாப்பிடமுடியாது..என் கணவர் வீட்டில் தண்ணீர் கூட செல்லாமல் வாந்தி எடுப்பதை பார்த்து பயந்து என் வீட்டிற்கு தகவல் சொல்ல என் தந்தை வந்து என்னை அழைத்து வந்துவிட்டார்கள்..வீட்டிற்கு வந்த பின் என் தந்தை தான் சாப்பிட வைப்பார்கள் வேண்டாம் பா வாந்தி எடுக்கும் பயமா இருக்கு என்றால் பரவாயில்லை உள்ளே சென்று வெளியே வந்தால் தெம்பு தான் நீ எழுந்திருக்க எல்லாம் வேண்டாம் முற்றத்திலேயே வாந்தி வந்தால் எடு தண்ணீர் ஊற்றினால் போச்சு என்று சொல்லி வாந்தி எடுக்கும் போது என் தலையை பிடித்து கொள்வார்...என் கணவர் வாந்தி எடுப்பதை பார்த்தால் தனக்கும் வாந்தி வரும் என்று தள்ளி தான் நிற்பார்...

மாதுளங்கா ரசம், யார் யார் எதெல்லாம் சாப்பிட்டால் வாந்தி வராது என்று சொல்கிறார்களோ அவ்வளவும் வாங்கி வருவார்...சிறு வயதில் எனக்கு தலையில் அடிப்பட்டதால் தலை வலி வரும்போது வலி நிவாரணி மாத்திரை எடுத்து கொள்வேன், ஆனால் குழந்தை வயிற்றில் சுமக்கும் போது அந்த மாத்திரை எடுத்துகொள்ள கூடாது என்று சொல்லிவிட்டார்கள்..அது மட்டுமல்ல அப்போது கும்பகோணத்தில் பிரபலமாக இருந்த மகப்பேறு மருத்துவர்கள் எனக்கு பிரசவம் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்..பிரசவ நேரத்தில் தலை வலி அதிகம் இருந்தால் பிட்ஸ் வர வாய்ப்பு அதிகம் ரிஸ்க் என்று.. மருத்துவருக்காக என் தந்தை என் கேஸ் ஹிஸ்டரி எடுத்து கொண்டு அலைந்து ஒரு வழியாக சொர்ணலதா என்று அப்போது தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த ஒரு அரசு மருத்துவர் தனியாக கிளினிக் ஆரம்பித்திருப்பவரிடம் பேசி அவர் நான் சொல்லும் அறிவுரைப்படி பிள்ளை பெரிதாகிடும் என்று அக்கம் பக்கம் பேச்சை எல்லாம் கேட்காமல் உங்கள் மகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பதாக இருந்தால் பார்கிறேன் என்று சொன்னார்...சிசேரியன் செய்ய வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் ( 20 வருடம் முன் சிசேரியன் எல்லாம் அரிது) அப்பாவும் சம்மதிக்க அவரின் அறிவுரையின் பெயரில் தான் எல்லாமே..

ஐந்து மாதம் கழித்து வாந்தி குறைந்தது ஆனால் திடீர் திடீர் என்று தலைவலி வரும்..அதுவும் இரவில் மாத்திரைக்கு பழக்கப்பட்ட வலி குறையாது..மண்டையை தூணில் முட்டி கொள்வேன்..என் அப்பா இல்லை என்றால் என் அருகில் யாரும் நெருங்க கூட முடியாது அப்பா பொறுமையாக என்னை முற்றத்தில் ஈசிசேர் போட்டு அதில் உட்காரவைத்து தலை பிடித்து விடுவார்கள் இதமாக தைலம் தேய்த்து என் வலி மறக்க ஏதேதோ கதை எல்லாம் சொல்லுவார்கள்...வலி தாங்கி பழகணும் இதை விட உலகில் எவ்வளவோ கொடிய வலிகள் எல்லாம் இருக்கு என்று என் அப்பா சொல்லும் விதமே தனி... நான் கண்ணயரும் வரை கைவைத்தியமாக சுக்கு உரைத்து பற்று போட, கிராம்பை பாலில் உரைத்து, ஈர துணியை போட்டு போட்டு எடுப்பது தலை லேசாக அமுக்கிவிடுவது என்று பேசிக்கொண்டே செய்வார்கள்...தலைவலி மாத்திரை எடுக்காமலே சமாளித்தேன் என் அப்பாவால்..

அதன் பின் அக்கம்பக்கம் எல்லாம் பிள்ளை தாய்சசி பெண் இப்படி வேலை செய்யாமல் இருந்தால் பிரசவம் கஷ்டம் என்று சொல்ல என் அப்பா சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு முற்றத்தில் இருக்கும் தூணோடு இறுக கட்டி விடுவார்கள்... என்னை சும்மா இருக்கும் போது எல்லாம் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து பெடல் பண்ண சொல்லுவார்கள்... அவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை அல்லது சுவையான ஏதாவது செய்திகளை சொல்லி கொண்டே... நானும் செய்வேன்.. பிள்ளை பிறக்கும் வரை அது மட்டும் தான் எனக்கு தெரிந்து நான் செய்த பிஸிக்கல் வொர்க் அப்போது...

காபிக்கு பழக்கமாகி இருந்த என்னை காலையில் வெறும் வயிற்றில் வெந்திய பொடி மோர் சாப்பிட வைப்பார் அப்பா ப்ளீஸ் பா என்று எவ்வளவு கெஞ்சினாலும் பேசியே எப்படியோ சாப்பிட வைப்பார்.அவரின் பேச்சை மறுக்கவே தோன்றாது... கொதிநீரில் நெய், கஷாயம்,என்னென்ன சாப்பிடனுமோ அத்தனையும் பாட்டி என் அப்பாவிடம் கொடுத்து சாப்பிட வைத்துவிடுவார்கள்.

அந்த நேரத்தில் ஒற்றை சூடு நீர் எங்கள் வீட்டு இரண்டாம் கட்டு முற்றத்தில் (காலவாய் அடுப்பு, நெல் அவித்து ௦ காய வைக்கும் இடம்) குளிக்க தயார் செய்வது அப்பா தான்..தலை நான் சரியாக தேய்க்காமல் எண்ணெயுடன் இருந்தால் தலைவலி வரும் என்று செண்பகவல்லி என்ற வேலை செய்பவரை துணைக்கு வைத்து கொண்டு தலை அப்பா தான் தேய்த்துவிடுவார்..அந்த அம்மாவை தண்ணீர் விட சொல்லி தலையை அலசிவிட்டு பின் தான் செல்வார்...அந்த அம்மாள் நான் குளிக்கும் வரை காவலுக்கு கூடவே இருப்பார்..

நான் குளித்துவிட்டு வருவதற்குள் சாம்பிராணி ரெடியாக வைக்கபட்டிருக்கும் .தலை காயும் வரை தூங்கவே விட மாட்டார்...உள்ளங்காலில் தினமும் விளக்கெண்ணெய் இரவில் தேய்த்துவிடுவார்..சாதாரண வலிக்கு கூட வீட்டில் உள்ளவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல் வண்டிக்காரரை வண்டி (மாட்டு வண்டி தான் அப்போது) கட்ட சொல்லி ஆஸ்பத்திரி கூட்டி சென்று விடுவார்கள்..எனக்கு பிரசவமாகும் வரை வேறு எங்கும் செல்ல கூடாது என்று வண்டிக்காரரிடம சொல்லி இருந்தார்...

ஒரு ஞாயிறு காலை மகாபாரதம் பார்த்து முடிக்கும் போது லேசாக ஏதோ தோன்றியது..ஏற்கனவே சாதா வலிக்கு எல்லாம் நான் ரகளை அடித்து நானே ஓய்ந்து இருந்தேன்..அதனால் சரி பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..மதியம் ஒரு மணிக்கு "நிழல்கள்" திரைப்படம் அப்போது தூர்தர்ஷன்ல தேசிய மொழி படம்..அதை பார்க்கும் போது வலி கூட ஆரம்பித்தது..அப்பா மாலை வருகிறேன் என்று ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்று இருந்தார்கள்..சித்தி வேறு இவளுக்கு இதே வேலை தான் பனிக்குடம் உடைந்த பின் ஆஸ்பத்திரி செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள்..கஷாயம் போட்டு குடிக்க குடுக்க வலி உச்சம் அதற்குள் என் அப்பா வந்துவிட்டார்கள் நன்கு சாப்பிட கூட இல்லை உடனே வண்டி கட்ட சொல்ல என் வீட்டில் எல்லாரும் ராகு காலம் முடிந்த பின் ஆஸ்பத்திரி செல்லாம் என சொல்ல என் தந்தை செம டென்சனாகி அவ வலில இருக்கா ராகுகாலமாவது ஒன்னாவது என்று என்னை வண்டியில் படுக்கவைத்து என் பெரிம்மாவையும், சித்தியையும் துணைக்கு ஏற்றி அனுப்பிவிட்டு சைக்கிளில் பின்னாலே வந்தார் நான் ஆஸ்பத்திர் வருவதற்குள் எனக்கு முன்னால் டாக்டருடன் ஆஸ்பிட்டல் வாசலில் என் அப்பா... 


குழந்தை பெரியதாகவும் என்னுடைய ஒத்துழைப்பு அவ்வளவாக இல்லாததாலும் கிட்டத்தட்ட் மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பின் தான் என் மகன் எட்டரை மணி வாக்கில பிறந்தான்....டாக்டர்கள் சிசேரியனுக்கு தயாராக இருந்த போதும் கடவுள் அருளா இல்லை என் தந்தையின் அன்பா எதுவோ எனக்கு பிரசவ வலி தாங்க முடிந்தது அதனால் அந்த நேரம் தலைவலி, வலியின் அழுத்தத்தால் வருமோ என்று பயந்த பிட்ஸ் வரவில்லை.. நார்மல் டெலிவரியில் என் மகன் பிறந்தான்...மூன்றே முக்கால் கிலோவில் ....

என் தந்தை நான் கத்திய சத்தம் கேட்டு வெளியில் அழவே செய்திருக்கிறார்கள்..என் அம்மாவுக்கு வேறு திட்டு ஐயோ என் பொண்ணு ஒரு குழந்தை உங்க பேச்சை எல்லாம் கேட்டு கல்யாணம் பண்ணினேனே என்று..உள்ளே நான் அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே இருந்தேன்...ஒரு வழியாக டாக்டர் வெளியே வந்தவுடன் என் தந்தையிடம் உங்கள் மகள் நலம், பேரன் பிறந்திருக்கிறான் என்று சொல்லியவர் என் தந்தை முகம் பார்த்து அவரே ஒரு மாதிரியாகி நாங்கள் ஆண்களை லேபர் வார்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்..ஆனால் நீங்கள் உங்கள் பெண்ணை பார்த்தால் தான் நிம்மதி ஆவீர்கள் கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து அங்கு இருந்தவர்களிடம் ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணுங்க, என்று பெட்சீட் எடுத்து என் மேல் போர்த்திவிட்டு ,அவ அப்பா வந்து அவளை பார்க்கட்டும் என்று சொன்னார்..என் தந்தை லேபர் வார்டுக்குள் வந்து என்னை பார்த்தவுடன் அப்பா கால் எல்லாம் வலிக்குது என்று மீண்டும் நான் அழ கண்ணா நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கு எல்லாம் நான் வரகூடாது இன்னும் சற்று நேரத்தில் உன்னை ரூம் மாற்றுவார்கள் நான் கால் வலிக்கு தைலம் தேய்க்கிறேன்... இங்க பார்த்தியா எவ்வளவு அழகு உன் பையன அப்படின்னு என்று ஆறுதல் சொல்லி தலை கோதிவிட்டு தூங்குடா செல்லம் ..என்று சொல்லி வெளியில் சென்றார்கள்.. அதன் பின் நான் மயங்கிவிட்டேன்..

என் அப்பா அந்த நேரத்தில் அங்கு என்னுடன் அறையில் பணிபுரிந்த அத்தனை நர்ஸ்கள் எல்லாருக்கும் அவர்கள் கேட்ட சாப்பாடு, எல்லாருக்கும் இனிப்பு என்று ஏக தடபுடல்..நான் ஸ்பெஷல் ரூமுக்கு வந்த பின் நான் கண் விழித்து பார்த்த போது என் அப்பா என் கால் பிடித்து விட்டு கொண்டு இருந்தார்...என் சித்தி என் குழந்தையை வைத்து கொண்டு இருந்தார்...

அதன் பின்னும் என் பையனை சிறிது காலம் வரை என் தந்தை தான் வளர்த்தார்..நான் சென்னை வரும்வரை..இதோ இன்று நான் வீட்டுக்கு போகிறேன் என்றாலும் எனக்கு என்னலாம் பிடிக்குமோ அதெல்லாம் என் அம்மாவை சமைக்க சொல்லி நான் வரும்வரை சாப்பிடாமல் காத்து இருப்பதில் ஆகட்டும், இன்றும் இரவு பால் குடிக்க வற்புறுத்துவதில் ஆகட்டும்....அந்த அன்புக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது... இப்போது கூட என் கணவர் கிண்டல் செய்வார் என்ன அப்பா ஊட்டி விட்டாங்களா.. ஒரு பொண்ணை எப்படி கெடுத்து வளர்க்கனுமோ அப்படி வளர்த்திருக்கார் என்று...நான் சொல்லுவேன் அதை உங்களுக்கு ஒரு பெண் பிறந்து நீங்கள் வளர்த்தால் தான் உங்களுக்கு சொல்ல தகுதி உண்டு என்று....மறு ஜென்மம் உண்டா இல்லையா தெரியவில்லை ஆனால் அப்படி ஒன்று இருந்தால் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வேண்டும்....என்னுடைய மற்ற எல்லா உறவுகளும் என் அப்பாக்கு பிறகு தான்.....

No comments:

Post a Comment